Friday 19 April 2019

2018ஆம் ஆண்டே சமஸ்கிருதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம்- நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?

மேற்கண்ட கேள்வியைக் கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியிருந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பதவிகளில் இந்துக்களை மட்டுமே நியமிக்கும் முயற்சிக்கும் இக்கேள்வி முட்டுக்கட்டை போட்டது. வழக்கின் சாரம் இதுதான். 2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commision) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப்படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும் (Diploma in Epigraphy) முடித்திருந்த திரு. நல்லா முகமது என்பவர் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.

விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற காரணம் குறிப்பிடப்பட்டு, தேர்வாணையம் நல்லா முகமதுவின் விண்ணப்பத்தை நிராகரித்தது. கல்வெட்டாய்வாளர் அல்லது தொல்லியல் அலுவலர் பதவிக்குச் சமயம் தடையாக இருப்பின், நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் (Curator) என்ற பதவிக்காவது தனது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்வாணையத்தைக் கோரியிருந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, திரு. நல்லா முகமது அவர்கள் தனக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்கு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க முடியாது என்று கூறியது. இதைத் தொடர்ந்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, மேற்கண்ட கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர்.

சமஸ்கிருதம் என்ன, யாராலுமே கற்றுக்கொள்ள இயலாத ஒரு மொழியா? அல்லது இந்துக்களைத் தவிரப் பிற மதத்தவர்கள் கற்றுக்கொள்ள ஏதாவது தடை இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16இல் 1ஆவது பிரிவு அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அரசுப்பணிகளில் சம உரிமையை உறுதியளித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு மட்டும் தனது பதவிகளுக்கு இப்படியொரு நிபந்தனையை விதிக்கும் உரிமை எங்கிருந்து கிடைத்தது என்று சாடியிருக்கிறது நீதித்துறை. அது மட்டுமின்றித் தன் கண்டனத்தைக் கீழ்க்கண்ட வாசகங்களால் பதிவு செய்துள்ளது.

“The authorities cannot make it appear that the department of archaeology is a wing of the Hindu Religious and Charitable Endowment (HR&CE) Board... There are other religions such as Buddhism, Jainism, Christianity and Islam, which also had their own sway over the political and geographical boundaries in the areas now known as Tamil Nadu. Therefore, when authorities called for applications for the posts of archaeologists or epigraphists, they ought not to have made blanket reservation in these posts for candidates belonging to Hindu religion alone.”

இந்து சமய அறநிலையத்துறையின் பிரிவு போன்று தொல்லியல் துறை செயல்படாமல் இருக்க வேண்டு மானால், பிற மதங்களுடனும் சாதிகளுடனும் நல்லிணக்க மாகச் செயல்படும் பக்குவம் அத்துறையின் அதிகாரி களுக்கு இருக்கவேண்டும். குறிப்பாக இத்தகைய பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் கொண்ட உயரதிகாரி களுக்கு வேண்டும். தன் மதத்தின்மீதும் சாதியின்மீதும் பற்றுக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்பற்று பிறர் மீதான வெறுப்பாக மாறக்கூடாது. இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். புத்தம், சமணம், கிறித்தவம், இசுலாமியம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் சுதந்திர நாடு என்பதை மறந்து, இந்துக்களின் நாடு இந்தியா என்ற கொள்கையை ஆதரிப்பதில் முன்னணியில் நிற்பவர்களாலும் மதத்தின் பெயரால், மதவழித் தேசியத்தின் அடிப்படையில் தனிநாடு வேண்டும் என்று கோருபவர்களாலும்தான் இவ்வாறு நல்லிணக்கமாகச் செயல்பட முடியாது.

பிற மதத்தவரை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் வெறுப்பு கடுகளவேனும் அடிமனதில் குடிகொண்டிருக்கும். ஒரு மனிதன் தனது தனிப்பட்ட வாழ்வில் இத்தகைய கொள் கைகளைப் பின்பற்றுவது அவனுடைய உரிமை. ஆனால், அத்தனிமனிதன் அரசு அதிகாரியாக ஆகும் போது, அதுவும் பிற மதத்தவர்களும் அத்தனிமனிதனை வேலைக்கு அமர்த்தியிருக்கும் அரசாங்கத்தின் அங்கம் எனும்போது, தனது தனிப்பட்ட கொள்கைகளை விலக்கி வைப்பதே நேர்மையான அதிகாரிகளுக்கு அழகு. எப்படி ஒரு வரலாற்றாய்வாளர் தனது ஆய்வின் முடிவுரையை எழுதும்போது தனது மொழி, அரசியல், மதச்சார்புகள் அம்முடிவைப் பாதிக்கக்கூடாதோ, அவ்வாறே ஓர் அரசு அதிகாரியும் துறை சார்ந்த முடிவு களை எடுக்கும்போதோ, அம்முடிவுகளைச் செயல் படுத்தும் நோக்கில் பிறப்பிக்கும் உத்தரவுகளிலோ தனது மொழி, அரசியல் மற்றும் மதச்சார்புகள் குறுக்கிடக்கூடாது. தொடர்புடைய அதிகாரிகள் புரிந்து நடந்தால் தமிழக வரலாறு வளம் பெறும்.

- சரவணா ராசேந்திரன்

- விடுதலை நாளேடு, 16.4.19

No comments:

Post a Comment