Showing posts with label ஞாயிறு மலர். Show all posts
Showing posts with label ஞாயிறு மலர். Show all posts

Saturday, 8 August 2026

முதலைக் கண்ணீர் வடிப்பதேன்? - செ.ர.பார்த்தசாரதி சென்னை-34

முதலைக் கண்ணீர் வடிப்பதேன்?


'முதலைக் கண்ணீர் வடிக்காதே!' என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். வஞ்சக செயல் செய்துவிட்டு அதற்கு வருந்துவது போல் நடித்தால் இப்படி சொல்லு வார்கள். 


தற்போதைய 'இந்தியா டுடே (மே இதழ்) தமிழ் பதிப்பில் கூட 'வெட்டுத் தீர்மானம்' குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது ‘முதலைக் கண்ணீர்’ என்று தலைப்பிட்டுள்ளது. 


முதலை ஏதாவது உயிரினத்தைக் கொன்று தின்று விட்டால்;  'வருத்தப்பட்டு, கண்ணீர் வடிக்கும்’ என்று ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.


இது உண்மையாக இருக்குமா? ஒருபோதும் இருக்காது! காரணம் முதலை மனிதனைப் போல் சிந்திக்கும் திறனில் மேலோங்கியது கிடையாது. அதற்கு உணவே உயிரி உயிரினங்கள் தான். முதலை நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியது; உயிரைக் கொல்லுவதில் வருத்தப்படுவதாக விருந்தால் நிலத்தில் உள்ள தாவரங்களை ஒடித்து உண்ண வேண்டியது தானே!


பின் எதற்குத்தான் முதலை கண்ணீர் வடிக்கிறது?

நிலத்திலுள்ள மனிதன் உட்கொள்ளும் உப்பின் அளவு ஓரளவு குறைவானது. அந்த உப்புக்களை சிறுநீரகம் வடிகட்டி வெளியேற்றி விடுகிறது. ஆனால், கடலில் வசிக்கும் உயிரினங்களின் சிறுநீரகமோ வளர்ச்சி குன்றியது: இதனால் அவைகளின் உடலில் இருந்து உப்பை வெளியேற்ற முடியாது. அதோடு மட்டுமல்லாமல், கடல்நீரில் உப்பின் அளவு அதிகம். உப்பு உடலில் அதிகமாக சேர்ந்தால் உயிருக்கே ஆபத்து. ஆகையால் உடலில் சேரும் உப்புக்களை வெளியேற்ற உடலில் தனியே ஒரு அமைப்பு கடல்வாழ் உயிரினங்களில் உள்ளது.


மீனுக்கு 'செதில்' பகுதி உப்பை வடித்து வெளியேற்றுகிறது. சில கடல் வாழ் பறவைகளுக்கு மூக்கினுள் இப்பகுதி அமைந்துள்ளது.


''ஆமை', 'முதலை' போன்ற கடல் வாழ் ஊர்வன வற்றின் கண்களின் ஓரத்தில் இச்சுரப்பி அமைந்துள்ளது.


முதலை தான் உண்ட உணவிலும், நீரிலும் உள்ள தேவைக்கு அதிகமான உப்பைக் கண்களின் ஓரத்தில் உள்ள உப்பு சுரப்பியின் மூலம் நீருடன் கலந்து துளித் துளியாக வெளியேற்றுகிறது.


இதை அறியாததால் தான் 'வருத்தப்பட்டு முதலை கண்ணீர் வடிப்பதாக' கூறுகிறார்கள்.


இதேபோல், பச்சை ஆமை யை பற்றியும் ஒரு கதை உண்டு.


பச்சை ஆமைகள் கடலிலேயே உயிர் வாழ்பவை. சில குறிப்பிட்ட காலத்தில் நிலத்திற்கு வந்து (கரையில்) மணலைத் தோண்டி முட்டையிட்டு மூடிவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றன.


அப்படி செல்லும்போது மணலின் மீது கண்ணீரை விட்டு விட்டுச் செல்கின்றன.


இவை உறைந்து உப்பு உப்பாக இருக்கும். இதைப் பார்க்கும் மக்கள் ஆமை முட்டையை விட்டு விட்டுச் செல்வதால் அழுவதாக நம்புகிறார்கள்.


உண்மை அதுவல்ல; ஆமைக்கும் கண்ணின் ஓரத்தில் உப்பு நீர் சுரப்பி இருக்கிறது. அதன்மூலம் எப்போதும் உப்பு நீரை வெளியேற்றிக் கொண்டேயிருக்கும். கடலில் இருக்கும் போது நமக்கு இது தெரிய வாய்ப்பில்லை; நிலத்தில் வரும்போது இதைப் பார்ப்பதால் கண்ணீர் வடிப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. 


உண்மை ஆராயப்படும் போது தான் தெரிகிறது!


- செ.ர.பார்த்தசாரதி சென்னை-34


- விடுதலை ஞாயிறு மலர், பக்கம்-9, 25.6.1995

Friday, 7 August 2026

சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி


சைவமா?-அசைவமா?


மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி                                    

"சைவ உணவு மட்டும் தான் நலன் பயக்கும் உணவு" என்று தவறான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இறைச்சிகளில் தான் நமது உடல் எளிதாக செரிமானம் செய்து கொள்ளக் கூடிய முறையில் சத்துக்கள் உள்ளன.


எப்படி பென்றால், உயிரினங்கள் உண்டவுணவை கடினப்பட்டு செரிமானம் செய்து தனது உடலில் சேர்த்து வைக்கின்றன. அதை நாம் எளிதாக உண்டு விடுகிறோம்.


எளிதான முறையில் உள்ளதால் நமது உடல் செரிமானம் செய்து சேர்த்து வைத்துக் கொள்கிறது. நாம் மிகுதியாக சாப்பிடுவதால் மிகுதியாக சேர்த்து வைத்துக் கொள்கிறது, இதனால் நோய் வருகிறது.


ஆகையால் சரியான அளவில் உணவை உண்டால் நலமாக இருக்கலாம்.


சிலர் கடவுள் மனிதனை சைவ விலங்காகதான் படைத்தான், அதனால்தான் விலங்குகளுக்கு உள்ள குத்திக் கிழிக்கும் வளைந்த பற்களை மனிதனுக்கு கொடுக்க வில்லை என்கின்றனர்.


ஒருசிலர் 'மனிதன் 'சைவ' விலங்கு', அதனால் தான் இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு உள்ளது போல் வளைந்த குத்திக் கிழிக்கும் பற்கள் இல்லை. 'மனித இனத்தை சேர்ந்த குரங்கும் சைவ உணவையே உண்கிறது' என்று கூறுகின்றனர்.

[குத்திக் கிழிக்கும் பற்கள் உள்ள தாவர உண்ணியான நீர்யாணை]


கடவுள் பெயரால் சொல்லப்படும் காரணம் முழுக்க முழுக்க பொய்யே!


இப்பொழுதுதான் கட வுள்களுக்கு கெல்லாம் "சைவ வேடம்’ போடப்படுகிறது.


வேதங்களில் கடவுள்களுக்கு உயிரினங்களை வெட்டிப் படைப்பதை தான் முக்கியத் தொழிலாக சொல்லப்படுகிறது. வேதப் படி பார்ப்பனர்கள் அனைவரும் ஆடு, மாடு, கோழி, குதிரை என்று அனைத்தையும் வெட்டித்தான் உண்டிருக்கின்றனர்.


கவுதம புத்தரின் கொள்கை பரவுதல் காரணமாக தாக்குபிடிக்க முடியாமல் இடையில் பார்ப்பனர்கள் 'சைவ' வேடம் போட ஆரம்பித்துவிட்டனர்.


மனிதன் சைவ விலங்கா?


உயிரினங்களுக்கு அதனதன் பழக்கவழக்கங்களுக்கு உறுப்புகள் உள்ளன' என்பது உண்மைதான்.


அந்த அடிப்படையில்தான் பற்களும் அமைந்துள்ளன.


பற்கள் குத்திக்கிழிக கூடிய முறையில் இல்லாததால், இறைச்சிகளை சீரணிக்க முடியாமலா இருக்கிறான் மனிதன்.


அனைத்தையும் சீரணிக்கக் கூடிய வகையிலேதானே மனிதன் உள்ளான்.


விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவன் தோன்றுவதற்கு அடிப்படையான உயிரினங்கள் இறைச்சியை குத்திக் கிழித்து உண்ணும் உயிரினங்களாகத்தான் உள்ளன.


“எந்த ஒரு உறுப்பையும், எந்த ஒரு விலங்கும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அந்த உறுப்பு காலப்போக்கில் வளர்ச்சி குன்றி பிறகு மறைந்து கூட போய்விடும்" இது அறிவியல் உண்மை


"மனிதனுக்கு குத்திக்கிழிக்கும் அவசியம் இல்லாமல் போய்விட்டதால், மனிதனின் பற்களும் வடிவ மாற்றம் பெற்றுவிட்டன” என்பதுதான் உண்மை.


சைவ உணவால் கொழுப்பு சேராதா?


கொழுப்பு பொருள்கள் உடலில் மிகுதியாகச் சேர்வதால் உடலில் சில கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது 'மாரடைப்பு' நோய்’ ஆகும். இந் நோய்தான் பெரிய அளவில் அச்சுறுத்துகிறது.


'சைவம்' என்று சொல்லப்படும் பால், வெண்ணெய், நெய், எள், நிலக்கடலை, தேங்காய் மற்றும் பலவகை பருப்புகளில் கொழுப்பு நிறைந்துள்ளது. சில வகை காய்கறிகளில் மட்டுமே கொழுப்பு குறைவாக உள்ளது.


ஆகையால் 'சைவ உணவு சாப்பிட்டால் மட்டும் கொழுப்பு இதயக் குழாய்களை அடைக்காது' என்று சொல்வது தவறானதாகும். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதை என்னால் காண்பிக்க முடியும்!


அதோடு, ‘புல்'லை மட்டுமே தின்னும் செம்மறி ஆட்டின் உடலில் எப்படி கொழுப்பு சேர்கிறது!

அதற்கும் சில அடிப்படைக் காரணம் உள்ளன.


60 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை கொழுப்பு சத்துக்கள். உடலில் உள்ள பல சுரப்பிகளின் மூலமாக குடலிலும் கல்லீரலிலும் தயாரிக்கப்படுகிறது. மீதிதான் உணவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொழுப்புச் சத்தை சாப்பிட்டால்தான் உடலில் கொழுப்பு சேரும் என்பதல்ல; எதைச் சாப்பிட்டாலும் உடலே கொழுப்பை உண்டாக்கிக் கொள்ளும் என்பதுதான் உண்மை.


அதனால்தான் புல்லை மட்டுமே தின்னும் ஆடும், மாடும் கொழுகொழுவென கொழுப்புடன் இருக்கின்றன.



கொழுப்பால் உடல் பாதிக்குமா?


கொழுப்பால் உடல் பாதிப்படையாது. கொழுப்பு உடலுக்கு தேவையே! அளவை மீறும் போது தான் கோளாறு வருகிறது.


கொழுப்பின் வகைகள்


கொழுப்பில் நான்கு வகை உண்டு. இதில் முக்கியமானது (1) குறைந்த அடர்த்தி கொழுப்பு, (2) மிகு அடர்த்தி கொழுப்பு என்பவையாகும்.


இதில் குறைந்த அடர்த்தி கொழுப்பு மற்ற கொழுப்பு சத்துக்களை உடல் முழுக்க எடுத்துச் சென்று அணுத் திசுக்களுக்கு ஊட்டுகின்றன. திசுக்களுக்குள் சென்ற குறைந்த அடர்த்தி கொழுப்பை மிகு அடர்த்தி கொழுப்பு ஈர்த்து கல்லீரலுக்கு எடுத்துச் சென்று சிதைவடைய வைக்கிறது.


ஆனால், இரத்தத்தில் குறைவு அடர்த்தி கொழுப்பு 160 மி.லி. கிரா முக்கு மேல் இருந்தாலும் 'மிகு அடர்த்தி கொழுப்' பின் அளவு 35 மி.லி. கிராமுக்கு குறைவாக இருந்தாலும் திசுக்களிலேயே குறை அடர்த்தி கொழுப்புகள் தங்கி; இரத்த நாளங்களில் படிந்து அடைக்க ஆரம்பித்துவிடும்.


மிகு அடர்த்தி கொழுப்பைப்பற்றிய கவலையே தேவையில்லை. அது கல்லீரலில் சிதைவடைந்துவிடும். 


 இரண்டு வகை கொழுப்புமே உடலுக்குத் தேவை தான், ‘அளவு சரியாக இருக்க வேண்டும்’

என்பதுதான் முக்கியம். 


இறைச்சி வகைகளில் மிகுதியாக, குறைவு அடர்த்தி கொழுப்புகளே உள்ளன. ஆகையால் இறைச்சியை அளவோடு சாப்பிட வேண்டும்.


மற்ற இறைச்சி வகைகளை விட கோழி இறைச்சியில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. 


ஆகையால் கோழி இறைச்சியை மற்ற இறைச்சியைவிட தாராளமாகச் சாப்பிடலாம்.


உற்சாகமூட்டும் கோழி!

அதோடு கோழி இறைச்சியில் 'டைரோசின்' என்ற அமினோ அமிலம் இருப்பதால் மூளையில் டோபா மைன், நாராஃபிறெய்ரைன் என்ற வேதிப் பொருள்களின் அளவை மிகுதியாக்கும். இவை மனதிற்கு உற்சாகத்தையும் செயல்பாட்டில் வேகத்தையும் அளிக்கிறது. 


அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி முடிவு, ''டைரோசின் உடலுக்கு சக்தி தந்து பதற்றமான நிலைமைகளை சமாளிக்கும் திறனை தருகிறது" என்று கூறுகிறது.


புற்றுநோயைத் தடுக்கும் மீன்


மீன் உணவில் மிகுதியாக அடர்த்தி மிகுந்த கொழுப்பே இருக்கிறது. அடர்த்தி மிகுந்த கொழுப்பு: அடர்த்தி குறைந்த கொழுப்பை கரைக்கும்; இதனால், மாரடைப்பு வருவது தவிர்க்கப்படுகிறது. ஆதலால் மீனை மிகுதியாக உண்ணலாம்.


மீன் உணவு கொழுப்பை கரைப்பதோடு அல்லாமல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.


நிலத்திலுள்ள உணவு பொருள்களில் 'அயோடின்' சந்து மிகமிகக் குறைந்த அளவே உள்ளது. ஆனால், கடல்வாழ் உயிரினங்களில் 'அயோடின்' சத்து நிறைந்துள்ளது. ஆகையால் மீன் உணவை உண்பதால், அயோடின் குறைவால் ஏற்படும் 'தைராய்டு அழற்சி. நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.


மூளை வளர்ச்சிக்கு மீன்


'ஸ்பெயின் நாட்டு ஊட்டச்சத்து நிபுணர்கள், மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது' என்கின்றனர். ஆகையால் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு மீன் கொடுத்துப் பழக்க வேண்டும். குறைந்தது வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். 


கருவுற்ற தாய்மார்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் மீன் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


உற்சாகமூட்டும் புரதம்


தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு 'கார்போ அய்ட்ரேட்' நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில், அவர்களுக்கு களைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு மாறாக புரதம் நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில் அவர்களுக்கு உற்சாக மேற்பட்டது; என்றும் சத்துணவு ஆராய்ச்சியாளர் 'போலி ஸ்ப்ரிங்' என்பவர் கூறுகிறார்.


'கார்போ அய்ட்ரேட்' எனப்படும் மந்தமாக்குகிற மாவுச்சத்து பொருள் தாவர வகை உணவுகளில் தான் நிறைந்துள்ளது.


ஆனால், உற்சாகமூட்ட கூடிய புரதப் பொருள் இறைச்சி வகைகளிலே தான் நிறைந்து உள்ளது.


இறைச்சியில் இரும்பு

இறைச்சியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இறைச்சியை புறக்கணித்தால் இரும்பு சத்து குறைவு ஏற்படும். உடலில் இரும்பு சத்து மிகுதியாக தினமும் 85 கிராம் இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


இறைச்சியை முழுமையாகத் தவிர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை. தீமையே மிகும்!


- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 3, 12.4.1998




Thursday, 6 August 2026

சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி


சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! 

- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி


இலங்கை நாட்டில் நுவரெலியா என்ற இடத்தில் ‘சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.

இக்கோவிலை 1982 ல் ரூ.10 இலட்சம் செலவில் பெரிய அளவில் எடுத்துக் கட்ட தமிழ் அமைச்சர் (அப்போதைய) இராஜதுரை அவர்கள் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதுவரை அத்திட்டம் நிறைவேறாமல் இருந்தது. 

ஆனால், தற்போது இலங்கை அரசு, வெளிநாட்டு பயணிகளை கவர சீதை அம்மன் கோயிலை புதுப்பித்து பெரிய அளவில் கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கேட்டவுடன் இரண்டு பக்கமிருந்தும் வலிமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒரு பக்கம் புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள்; 'இந்து மத, கோயிலை பெரிய அளவில் விளம்பரப் படுத்த கூடாது' என்றும்; மறுபக்கம் இலங்கை நாட்டின் தொல்குடி மக்களான தமிழர்கள்; இராவணனை இணையற்ற வீரனாக கருதுவதால், 'இராவணனின் எதிரி யான 'இராமன்' சம்பந்தப்பட்ட கோயிலை பெருமைப் படுத்த கூடாது’ என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இக்கோயிலைப் பற்றி அலசுவோம்!'குட்டித்தீவை எட்டிப்பார்த்தேன்' என்ற நூலில் இருந்து) 

“நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கி இறங்கு முகமாக செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தில் 'சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் இக்கோயில் உள்ளது.

இது, தம் ஊர் கிராமக் கோயில்கள் போல் சிறிய கோயில், அது சமீபத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். பார்த்தால் மூன்று மலைகள் தெரிகின்றன. நடுவில் இருக்கும் மலை நல்ல உயரம்: இரு புறமும் சிறிய மலைகள்.

அந்த உயரமான மலையில் தான் இராவணன் சீதையை சிறை வைத்து இருந்தான் என்று சொல்லப்படுகிறது.

அந்த மாலைக்கு ‘சீதா எலியா’ என்று பெயர். சிங்கள மொழியில் ‘எலியா’ என்றால் மலை, சீதை சிறையில் இருந்த மலை என்பதால் ‘சீதா எலியா' என்று பெயர் ஏற்பட்டது.

சீதையை அசோகவனத்தில் சிறை வைத்ததாக நாம் படித்து இருக்கிறோம். ஆனால்; இந்த மலையில் அசோக மரமே கிடையாது. வேறு மரங்களும் இல்லை. ஆட்கள் செல்ல வசதியும் இல்லை” 


                                     அசோக மரம்

மேற்கண்ட செய்திகள் 'இராணி' வார ஏட்டின் ஆசிரியர் குரும்பூர் குப்புசாமி (அ.மா.சாமி) அவர்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து 'குட்டித் தீவை எட்டிப்பார்த்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும். 

ஆட்கள் செல்ல வசதி இல்லாத, மரங்களே இல்லாத ஒரு மலையைக் காட்டி ‘இங்குதான் சீதை'யை சிறை வைத்தனர்; என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்! குரும்பூர் குப்புசாமி அவர்களுக்கு மனசாட்சி உறுத்தியதால் உண்மையை எழுதியுள்ளார். 

இராமாயணத்தில் அரண்மனையை ஒட்டியுள்ள அசோகவனத்தில் சீதையை சிறை வைத்ததாகத்தான் உள்ளது. ஆனால் இலங்கையில் ஒரு மொட்டையான மலையைக் காட்டி: இதுதான் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் என்கிறார்கள் என்பதிலிருந்து; இராமாயண கதையை உண்மை என்று காட்ட, தற்காலத்தில் இட்டுக் கட்டப்பட்ட இடமே  நுவரெலியாவும்  ‘சீதை அம்மன்' கோயிலும் ஆகும் என்பதை அறிய முடிகிறது.

- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் V , 18.4.1999



Wednesday, 5 August 2026

பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள் - செ.ர.பார்த்தசாரதி

பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள்

கி.வா.ஜெகன்நாதன் அவர்கள் எழுதிய 'தமிழ் பழமொழிகள்' என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

1. அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர் -38

2. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?-39

3. அக்கிரகாரத்து நாய் அபிமானத்திற்கு செத்தது-40

4. அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?- 41

5. அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல - 42

6.அச்சி வீடு தீ பிடித்தால் பட்டர் முண்டு தோளில் 162

7. அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும் -204

8. அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும். (வடமன் - பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்)-206

9. அழுகின பழம் அய்யருக்கு -1392 

10. ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்கிறேன், என்னை ஆற்றுக்கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு -1745

11. ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு -1761

12. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்காருக்கு மூன்று கொம்பு-1816

13 ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?- 2072

14 ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம் (பஞ்சநதம் திருவையாறு) 2105

15 ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு (பார்ப்பானுக்கு) அதுவும் இல்லை - 2122 

16 ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்- 2133

17 ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல - 2143

18 ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா? -2611

19 ஆற்றுக்குப் போன ஆசார பாப்பாத்தி, துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம் -2615.

20 ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணூல் - 2667

21 ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலி (முதலை)யை விடு -2684.

22 ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கள் - 2703.

23 அய்யர் என்பவர் துய்யர் ஆவர்-5806.

124 அய்யர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை - 5807

25 அய்யர் தின்னும் பருப்பு அய்ந்து குடி கெடுக்கும் -5808.

26 அய்யர் பாதி, அரண்மனை பாதி (புதுக்கோட்டை மில்)-5809

27 அய்யர் வரும் வரை அமாவாசை  காத்திருக்குமா? -5810

28 காசிக்குப் போயும் மூடத்தவசி காலில் விழுகிறதா? - 7744

29 கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம் - 8371

30 உழவுக்கும் அக்கினி ஹோத்திர(த்திற்கும் வெகு தூரம். - 4288 

31 ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு? -4646

32 எல்லோரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச் சரிந்து விழுந்தார் - 5264

33 அய்யங்கார் அம்மானையில் சறுக்கினார் 5791

34 அய்யங்காரும் தத்துக் கொடுத்தார்- 5792

35 அய்யர் இடம் கொடுத்தாலும்; அடியாள்கள் இடம் கொடார்கள் 5803.

36 அய்யங்காரை கெடுத்தவள் அய்யங்காரிச்சி; தாதச்சியை கெடுத்தவன் தாதன்- 5794

37 அய்யர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான் 5804,

38 அய்யர் உருள; அம்மை திரள 5805

39 உணவை தின்பான் திவசப் பிராமணன்; சூத் துக்கு நிற்பான் வீர முஷ்டி. -4027

40 உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல 4108.

41 செக்கானிடம் சிக்கிய மாடும்; பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்பட மாட்டார்கள் - 11208

42 செத்தவன் இருக்க சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்-11316

43 செத்துப் போன பசுவைக் கெட்டுப்போன பார்ப்பானுக்கு தாரை வார்த்த கதை- 11350 

44 செத்துப் போன பார்ப்பானுக்கு செட்டிப் பெண்ணைக் கொடுத்தானாம் - 11353

 45 தட்சணை இல்லாவிட்டால் (குறைத்தால்) அப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம். (மலையாளப் பார்ப்பான் கூற்று)-11828

46 தில்லை அந்தணர் கூடுவது எப்போது; ஓடுவது எப்போது - 12804

47 தென் திசை பார்ப்பான் வடதிசைக்கு ஏகின், நடை திருந்திப் பார்ப்பான் ஆவான். (கபிலர் அகவல்) - 13166

தகவல்:

செ.ர.பார்த்தசாரதி

(தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர்)

- விடுதலை ஞாயிறு மலர்




Saturday, 31 May 2025

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி



காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

விடுதலை ஞாயிறு மலர்

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். ‘புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?’’. ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்’ என்று சிலர் கூறிவருகிறார்கள்.

எதை கணிப்பதாக இருந்தாலும் ஒரு எல்லை, ஒரு தொடக்கம், ஒரு முடிவு அல்லது ஒரு பொருள் தேவை. எடையை கணிக்க ‘நீர்’ அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.

நீரின் ‘லிட்டர்’ அளவும், ‘கிலோ’ அளவும் ஒன்று தான். 1 ஒரு லிட்டர் அளவுள்ள நீர், ஒரு கிலோ எடை இருக்கும். இதை அடிப்படையாக வைத்து;  மற்ற பொருள்களின் எடையை, அதாவது அடர்த்தியை வைத்து கணிக்கிறார்கள்.

வெப்ப நிலையை கணிக்க, செல்சியஸ் அளவு பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியின் உருக தொடங்கும் நிலையை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து வெப்பநிலையை கணிக்கிறார்கள். அதாவது பனிக்கட்டி உருகத்தொடங்கும் வெப்பநிலை சுழியம் டிகிரி செல்சியஸ் (0°c) ஆகும். நீள, அகலங்களை அளக்க சாண், அடி, முழம் என மனித உறுப்புகளை மய்யமாக வைத்து அளக்கப்பட்டது. கணக்கு போட எண்களை அமைக்க மனிதனின் கைகளில் உள்ள பத்து விரல்களை மய்யமாக வைத்து கணிக்கப்பட்டது. இதற்கு ‘10 அடி மானம்’ என்று பெயர். கணினி ஆன் / ஆப் (இயங்கு நிலை / இயங்கா நிலை) என்ற முறையில் இயங்குவதால், இரண்டடி மானத்தில் இயங்குகிறது.

ஆண்டு கணக்கு பொதுவாக தற்போது கிறிஸ்து பிறப்பை (கிறிஸ்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பது வேறு செய்தி) மய்யமாக வைத்து கி.மு./ கி.பி. என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.

தமிழர்களின் ஆண்டு ‘சுறவம்’ (தை) மாதத்தில் முதல் நாள் தொடங்குகிறது. அதாவது சூரியன் தென் திசை பக்கமாக இருந்து வடதிசை பக்கமாக செல்லும் நிலையை மய்யமாக வைத்து ஆண்டு தொடங்குகிறது.

அப்போது ஆடு போன்ற ஒத்த வடிவம் உடைய விண்மீன் கூட்டம், வானில் தெரிய தொடங்குவதால் யாரு – ஆடு – ஆண்டு என்ற பெயரும் வந்தது. இந்த குறிகளை மய்யமாக வைத்து, தமிழ் ஆண்டு கணிக்கப்பட்டது.

இயந்திரங்களில், மோட்டார் இயங்கு திறனை, குதிரையின் இழு திறனை மய்யமாக வைத்து, ஒரு குதிரை திறன்; இரு குதிரை திறன்  (Horsepower) என்று கணிக்கப்பட்டது. இதே போல் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்த அளவுகள் சிலவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெப்பநிலையை கணிக்க செல்சியஸுக்கு (°c)  பதிலாக, பாரன் ஈட் (°F) முறை பயன்படுத்தப்படுகிறது. அடிக்கு பதிலாக மீட்டர். லிட்டருக்கு பதிலாக கிலோ. ஏ.எம்./ பி. எம். முறைக்கு பதிலாக கிரீன் விச் நேரம் ( GMT ). மயில் என்பதற்கு பதிலாக கிலோமீட்டர். குதிரை திறனுக்கு(HP) பதிலாக கிலோ வாட்சு (KW) என்று பலவற்றை குறிப்பிடலாம். கி.மு./ கி.பி. என்பதற்கு பதிலாக பொ.மு./ பொ.பி. என மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த மாறுதல் அனைத்துமே நமது பயன்பாட்டு முறைக்கு எளிதாகவும், ஏற்றால் போல் இருப்பதற்காகவும், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

செல்சியசில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், பாரன் ஈட்டில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது; ஒரே விடை தான் வரும். அளக்கும் முறையில் தான் வேறுபாடு, கிறிஸ்தவர்கள் கணித்துள்ள கி.மு. / கி.பி. ஆண்டு கணக்குப்படி (கிரிகோரியன் ஆண்டு) தந்தை பெரியார் பிறந்தது கி.பி. 1879 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆகும். தமிழ் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி, தந்தை பெரியார் பிறந்தது தி.பி 1910, புரட்டாசி மாதம். இறந்தது கி.பி. 1973 டிசம்பர், தி.பி. 2004 மார்கழி என்று வரும்.

கிரிகோரியன் ஆண்டு படி கணக்கிட்டாலும் திருவள்ளுவர் ஆண்டு படி கணக்கிட்டாலும் தந்தை பெரியார் வாழ்ந்த ஆண்டுகள் 95 என்று தான் வரும். புத்தர், திருவள்ளுவருக்கு முன்னால் பிறந்திருந்தாலும்; திருவள்ளுவர் ஆண்டின்படி, புத்தர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.

அதே போல் தான், புவியின் சுழற்சியை கொண்டு, ஞாயிற்று (சூரிய) குடும்பத்தின் வயதை  கணக்கிடும் முறையும் ஆகும். அதாவது ‘ஒளி ஆண்டு’ என்கின்ற அளவை வைத்து கணக்கிடுகின்றனர். புவி  ஞாயிற்றை ({சூரியன்) சுற்றி வரும் காலம், ஓர் ஆண்டு ஆகும். இந்த ஓர் ஆண்டில், ஒளி எவ்வளவு தொலைவு பயணிக்கிறதோ, அது ஓர் ‘ஒளி ஆண்டு தொலைவு’ ஆகும். இந்த பயணத் தொலைவு ஏறக்குறைய 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் (5.88 டிரில்லியன் மைல்) ஆகும்.

புவியின் சுழற்சி வேகம் மாறுபட்டால் ஒழிய, கணக்கில் பிசகு வராது. அப்பொழுதும் கணக்கில் மாற்றம் செய்து கணக்கை சரிப்படுத்தி விடலாம்.

காலத்தையும் அளவையும் நமக்காகத்தான் பயன்படுத்துகிறோம்! வேற்றுக் கோளில் உள்ளவர்களுக்குமா பயன்படுத்துகிறோம்! அப்படியே பார்த்தாலும் ஈடுகட்டிவிடலாம்,

நிலவின் ஈர்ப்பு விசை, புவியின் ஈர்ப்பு விசையை விட 6 மடங்கு குறைவு. ஒரு மனிதனின் எடை புவியில் 60 கிலோகிராம் என்றால், நிலவில் அவரின் எடை 60/6 = 10 கிலோகிராம் இருக்கும்.

இந்த வகையில் அனைத்தையும் கணித்து விடலாம். இருக்கும் அளவுகளே போதுமானவை தான்.


Saturday, 10 May 2025

வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம் - செ.ர.பார்த்தசாரதி

புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் வடமொழியில் எழுதப்பட்ட ‘வால்மீகி இராமாயணம்’ தான் முதல் இராமாயணமாக கருதப்பட்டு வருகிறது.

நம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நிலப்பரப்பு, சுற்றிலும் கடல் சூழ்ந்து உள்ளது. இந்தப் பகுதியில் ‘இராமநாதசுவாமி கோயில்’ என்று ஒன்று பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கட்டடக்கலையை வைத்து கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்த இராவணனை இராமன் கொன்றுவிட்டு, ‘புஷ்பக விமானம்’ மூலம் அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இறங்கி, இராவணனை கொன்ற ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்குவதற்காக, இராமன் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ததாகவும்; அதுவே பிறகு இராமநாதசுவாமி கோயில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.


‘பிரம்மஹத்தி தோஷம்’ என்றால் என்ன?

பிராமணர்கள் எனப்படும் பார்ப்பனர்கள் பிரம்மாவின் தலை பகுதியில் இருந்து தோன்றியவர்களாம்!

மற்றவர்கள் பிரம்மாவின் மற்ற பகுதிகளில் இருந்து தோன்றியவர்களாம்!

பார்ப்பனர்கள் மட்டுமே அனைத்து உரிமைகளும், தகுதியும் பெற்றவர்களாகவும்

மற்றவர்கள் விலங்குகளை போன்றவர்களாகவும் வேதங்கள் சித்தரிக்கின்றன.

ஆகையால் சூத்திரர்களைக் கொன்றால் எந்த பாவமும் கிடையாது. அதாவது ஒரு உயிரை கொன்றதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் பார்ப்பானை கொன்றால் உயிரைக் கொன்றதாக ஆகிவிடும். அதனால் கொன்றவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ என்ற பாவம் சூழ்ந்து விடும்.

இந்த பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்களை ‘பிரம்ம ராட்சஷ பிசாசு’ என்ற பிசாசு பின் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வரும். இந்த தோஷம் நீங்க வேண்டுமானால் அதற்கான நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும்.

இந்தப்படி தான் (புராணப்படி) பிராமணனான இராவணனை இராமன் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை உண்டாக்கி அதற்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

பல மதங்கள் தோன்றி பிறகு 6 மதங்களாக நிலைத்தன. (சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், காணாபத்தியம்)

இந்த ஆறு மதங்களும் தங்கள் தங்கள் மதங்களுக்கு ஒருவரை முழுமுதற் கடவுளாக பரிந்துரைக்கின்றன. அதாவது பரப்பிரம்மம்(மகாதேவ்).

இதில் சைவமும் வைணவமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என

இன்று வரை போட்டி போட்டுக் கொண்டுள்ளன.

சைவ புராணங்களில் வைணவத்தை இகழ்ந்தும்; வைணவ புராணங்களில் சைவத்தை இகழ்ந்தும் எழுதப்பட்டுள்ளன.

‘சிவன் தான் முழு முதற்கடவுள். இராமனே சிவனை வழங்கினான்’. என பரப்புவதற்காக தான் இந்த இராமேஸ்வர இராமநாதசுவாமி கோயில் கதை ஆகும்.

வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ‘இராமேஸ்வரத்தை பற்றியோ! ‘இராமன் சிவலிங்கத்தை வணங்கினான்’ என்பதை பற்றியோ குறிப்பு கிடையாது.

இராமன் ‘மகேந்திர கிரி’ (மகேந்திர பர்வதம்) மலையின் மேலிருந்து, மலையின் அடிவாரத்தை கடலின் அலைகள் தொட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததாகவும். பிறகு அடிவாரத்திற்கு வந்து, பாலத்தைக் கட்டி இலங்கை சென்றதாகவும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது.

இராமேஸ்வரத்தில் எந்த மலையும் கிடையாது. இராமேஸ்வரத்தில் மட்டுமல்ல இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எந்த மலைகளும் கிடையாது. இந்த ‘மகேந்திர கிரி’ என்ற மலை, ஒடிசாவில் உள்ளது.

ஒடிசாவை பற்றி கூறிய கதையை தமிழ்நாட்டில் நடந்ததாக கூறுவதே ஒரு பெரிய புரட்டாகும்.

இராவணனை கொன்றுவிட்டு இலங்கையிலிருந்து ‘புஷ்பக விமானம்’ மூலம் ‘அயோத்தி’ திரும்பிய போது, நடந்த நிகழ்வுகளின் இடங்களை சீதைக்கு காட்டிக் கொண்டே வருவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகிறது. இடையில் இராமேஸ்வரத்தில் இறங்குவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படவே இல்லை.

காளிதாசர் இயற்றிய ‘இரகு வம்சம்’ என்ற காவியத்திலும் ‘இலங்கையில் இருந்து அயோத்தி நோக்கி இராமரை சுமந்து கொண்டு புறப்பட்ட புஷ்பக விமானம், இடையில் எங்கும் இறங்காமல் அயோத்தியில் தான் இறங்கியது.’ என்று கூறப்பட்டுள்ளது.

(ரகுவம்ச மஹா காவ்யம்,13ஆவது சர்க்கம்)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்படாத ஒரு நிகழ்வை, ‘மகாவிஷ்ணுவிற்கே ஈஸ்வரன் தான் கடவுள்’ என்று சொல்வதற்காக சைவர்கள், பிற்காலத்தில் சில புராணங்களை இயற்றி அதில் இராமாயணத்தை புகுத்தி சில திருத்தங்களை செய்து விட்டார்கள்.

சிவமகா புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் என்கின்ற சிவனை புகழும் புராணங்களில் இந்த புகுத்தல் வேலை நடைபெற்றுள்ளது.

பத்ம புராணத்தில் ‘பூர்வ கல்ப இராமாயணம்’ என்ற பெயரிலும், பிரம்மாண்ட புராணத்தில் ‘அத்தியாத்ம இராமாயணம்’ என்ற பெயரிலும் இராமாயணங்கள் உள்ளன.

இந்தப் ‘பூர்வ கல்ப இராமாயணத்’தில்

இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இராமன் இறங்கி, இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக, சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது.

(பத்ம புராணம், பூர்வ கல்ப இராமாயணம், பக்கம்-424, தாமரை நூலகம் வெளியீடு)

ஆனால் அதே ‘பத்ம புராணத்தில்’

‘மனிதர்கள் மோட்சம் அடைவதற்கான வழிகள்’ என்று விரதங்களையும் யாகங்களையும் பற்றி கூறும் போது, ‘பிராமணனை கொல்ல நேர்ந்ததைப் பற்றி சிறீ ராமபிரான் வருத்தம் அடைதல்’ என்ற தலைப்பில் (பக்கம்-364) ‘இராமன் பிராமணனான இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்க என்ன வழி’ என்று அகத்தியரை கேட்டதாகவும்; அகத்தியர், ‘அஸ்வமேத யாகம் நடத்தினால் பாவம் போகும்’ என்று கூறியதாகவும்; அதன்படி அஸ்வமேத யாகத்தை இராமன் நடத்தியதாகவும்’ உள்ளது.

ஒரு இடத்தில் இராவணனை கொன்ற பாவம் தீர, இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை நிறுவி சிவ வழிபாடு செய்ததாகவும், அதே புராணத்தில் இன்னொரு இடத்தில் ‘அஸ்வமேத யாகம்’ நடத்தி, இராவணனை கொன்ற பாவத்தை போக்கிக் கொண்டதாகவும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்படுகிறது.

‘அத்தியாத்ம இராமாயணத்’தில் இராமேஸ்வரத்தின் கடற்கரையில் சிவலிங்கத்தை வழிபட்டுவிட்டு தான், இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(அத்தியாத்ம இராமாயணம், நான்காவது சர்கம், பக்கம்-467, தாமரை நூலகம் வெளியீடு)

அதேபோல் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் புறப்பட்டு அயோத்தி செல்லும் வழியில் சீதைக்கு, தான் நிறுவிய சிவலிங்கத்தை காட்டிச் சென்றதாக, கூறப்பட்டுள்ளது.

சிவமஹா புராணத்தில், ‘சிறீ ராமர் பெற்ற வரமும் இராமேஸ்வரம் மகிமையும்’ என்ற தலைப்பிலான பகுதியில், தெற்கு கடற்கரை(இராமேஸ்வரம்)யில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு, சிவனிடமிருந்து, வலிமையானவனான இராவணனை கொல்ல வரம் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(சிறீ சிவமஹா புராணம், முதற் பாகம், பக்கம் -248, பிரேமா பிரசுரம் வெளியீடு)

கந்தபுராணத்தில் பார்வதி நாதரை பூஜித்து பாசுபதாஸ்திரத்தை வரமாக பெற்றுக்கொண்டு இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.

(சிறீ கந்தபுராணம், இரண்டாம் பாகம், உபதேச காண்டம் பக்கம்- 454, பிரேமா பிரசுரம்)

இராமன் (மகாவிஷ்ணு) கடவுள் அல்ல, சிவன் தான் கடவுள் என்று நிறுவுவதற்காக சைவர்களால் உண்டாக்கப்பட்டது தான். இராமேஸ்வர இராமநாதசாமி கோயில் கதையும், அதற்கு ஆதாரமாக புனையப்பட்டதே பத்ம புராணமும், பிரம்ம புராணமும், சிவமகா புராணமும் ஆகும்.

இது ஒரு புறம் இருக்க பராசக்தியை முழு முதல் கடவுளாக (மகாதேவ்) கூறும் ‘சாக்த மதத்’தின் புராணமான ‘தேவி பாகவதம்’ என்ற புராணத்தில் ‘மகாவிஷ்ணுவே (இராமர்) பராசக்தியை வழங்கினார்’ என்று சொல்வதற்காக இராமர் கிருஷ்கிந்தையில் துக்கப்பட்டு கொண்டிருந்தபோது, நாரதர் பராசக்தியை வணங்கி ‘நவராத்திரி விரதம்’ இருக்க கூறுகிறார். அதன்படி நவராத்திரி விரதம் மேற்கொண்டு, பராசக்தி இடம் இருந்து, போருக்கு உடந்தையாக இருக்க ‘சக்தியம்சத்’தை வரமாக பெற்றதாக’ கூறப்படுகிறது.


Published May 10, 2025, விடுதலை ஞாயிறு மலர்

- எனது கட்டுரை