Showing posts with label சிபிஎஸ்சி. Show all posts
Showing posts with label சிபிஎஸ்சி. Show all posts

Thursday, 9 March 2023

‘சூத்திரன் ஏவலாளி மட்டுமே!' சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு பாடத்திட்டம் சொல்கிறது இதுதான் ஒன்றிய அரசின் புதியகல்விக் கொள்கையின் லட்சணம்


சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு வரலாறு - சமூக அறிவியல் பாடத்தில் வர்ணாஸ்ரமம் குறித்த பாடம் சூத்திரர்கள் ஏவலாளிகள் மட்டுமே, அவர்களுக்கு கல்விகற்க (வேதங்கள்) அனுமதியில்லை என்றும். வர்ணாஸ்ர மத்திற்குள் வராதவர்கள் ஊருக்கு வெளியே வசித்து மலம் அள்ளவும், செத்த மாடுகளை எடுப்பதுமே அவர்கள் பணி என்று கூறப்பட்டு, மேலும் இவர்கள் தூய்மையில்லாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆண்டிமுத்து இராசா  எம்.பி., அவர்கள் மனுதர்மத்தினை தோலுரித்துக் காட்டியதும், ஒட்டுமொத்த பார்ப்பனர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதும் சர்சூத்திரர்களும் பொங்கிக் கொண்டு எழுகின்றனர். இந்த விவகாரத்தை எப்படி திசைதிருப்பலாம் என்று பலவழிகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றனர். 

பா.ஜ.க.வின் தமிழ்நாடு பார்ப்பனப் பிரமுகர்கள், ‘‘மனுவில் எழுதப்பட்டுள்ளது. எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் உள்ள நடைமுறைகள் இப்பொழுது எல்லாம் அவை இல்லை. திராவிட அமைப்புகள் தான் ஹிந்துக்களின் மீதான வெறுப்பிலும், ஆபிரகாமிய மதங்களிடம் வாங்கிய பணத்திற்கும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகின்றனர். 

இப்போது எல்லாம்  சரி சமமாகப் பார்க்கத் துவங்கி விட்டோம். ‘‘ஹிந்து மதம் என்பது சாத்வீகம், சாந்தம், அன்பு, சகிப்புத்தன்மை, வாழ்வியல் பயிற்சி'' என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.  ஆனால், இவர்கள் இப்படி முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே ஒன்றிய அரசு பாடத் திட்டத்தில் வரும் ஒரு பாடம்.   அதில் வர்ணாஸ்ரமம் குறித்து தெளிவாக படத்தோடு குறிப்பிட்டுள்ளனர்.  

முதலாம் இடத்தில் பார்ப்பனர்கள், படத்திலேயே நன்றாக தெரிகிறது - அனைத்து வசதிகளோடு குதுகலமாக இருப்பதுபோல் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு அடுத்து சத்திரியர்கள், பிறகு வைசியர்கள் - இன்று உள்ள மார்வாடி களை மனதில் வைத்துப் படம் போட்டுள்ளனர். 

ஆனால், சூத்திரர்களுக்கு கோவணம் மட்டுமே, வறண்ட தேகத்தோடு படம் வரைந்துள்ளனர். நல்ல வேளை கோவணம் கொஞ்சம் நீளமாகக் கொடுத்துள்ளனர்.    இதில் பெண்கள் படம் இல்லை, பெண்கள் பார்ப்பன குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரனுக்கும் கீழேதான்.   ஆனால், பஞ்சமனுக்கும் மேலே! சூத்திரனுக்காவது வேதங் களை கற்கத்தான் அனுமதியில்லையாம்.  பஞ்சமர்களை மனிதனாய்க் கருதவே இடமில்லையாம்.  காரணம், அவர்கள் அழுக்காக இருப்பார்களாம்! மாணவர்களுக்கு வரலாற்றை உள்ளபடி சொல்வதில் ஏதும் ஆட்சேபனை இல்லை. இன்று சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் என்று எவருமில்லை என்று அரசு குறிப்பே சொல்கிறது.

 பொருத்துக என்று கேட்டிருக்கிறார்கள்,   இத்தகைய அடுக்குகள் சரியா - உன் கருத்தை எழுது என்கிறார்கள்.  

இதற்கு ஒரு பார்ப்பன மாணவன் என்ன பதில் எழுது வான்?  அவனுடைய வீட்டில் என்ன சொல்லிக் கொடுப் பார்கள் ? குறைந்தபட்ச அறத்துடன் இது மிகத் தவறானது, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது என்று அந்தப் பாடத்தில்  எழுதியிருக்க வேண்டுமல்லவா? 

தமிழ்நாடு பாஜகவினரும், ஹிந்துத்துவ வன்முறைக் கூட்டங்களும் ஒன்றிய சிபிஎஸ்இ பாடத்தில் இதனைக் கொண்டுவந்தவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும். ஆனால், இவர்கள் தந்தி அனுப்பியவரை விட்டுவிட்டு தந்தியைப் படித்துக்காட்டியவரை எதிர்த்து வன்முறையில் இறங்குகின்றனர். 

மனுநீதி அடிப்படையிலான வர்ணாஸ்ரம கருத்துகளை கல்விக் கூடத்திலேயே பரப்புகிறது... படிக்கும் குழந்தை களின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறது.. சக குழந்தை களிடம், ‘‘நீ பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவன்'' என்று சொன்னால் அக்குழந்தையின் மனது என்னாகும் என யோசியுங்கள். இதனால் தான் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை வேண்டாம் என்று நாம் கூறுகிறோம்.

Thursday, 28 January 2021

சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் நடைபெற்ற மதிப்பெண் ஊழல்


சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் நடைபெற்ற மதிப்பெண் ஊழலை கண்டித்து உரையாற்றுகிறார் ஆசிரியர். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அம்ர்ந்துள்ளனர்

30.6.1992 அன்று சென்னை பெரியார் திடலில்  சி.பி.எஸ்.ஈ மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் செய்யப்பட்ட ஊழலை எதிர்த்து பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் சார்பாக கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மாணவர்கள் ஊர்வலத்தைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினேன். மேலும், கழகத்தின் சார்பில் சிபிஎஸ்ஈ மாணவர்கள் தமிழகக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தசாமி அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது.

“சி.பி.எஸ்.ஈ மண்டல இணை இயக்குநர், இந்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் தொழில் கல்லூரியில் சேருவதற்கான பாடங்களுக்கான மார்க்குகளில் 10 மார்க்கை கூடுதலாக போடுமாறு உத்தரவு இட்டிருக்கிறார். கடந்த ஆண்டு இந்தப் பள்ளிகளில் இந்தப் பாடப் பிரிவில் 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள் 22 பேர்தான். இவ்வாண்டு கூடுதலாக மதிப்பெண் போடப்பட்டதால், 90 சதவிகித மதிப்பெண்களை 187 பேர் பெற்றுள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் படித்தவர்களும், சமூக ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களும் பாதிப்புக்குள்ளவார்கள். எனவே, கூடுதலாக போடப்பட்ட, இந்த 10 மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் என்றும், இது மோசடிக் குற்றம் என்றும், இந்த மோசடிக் குற்றத்தில் ஈடுபட்ட சி.பி.எஸ்.ஈ பள்ளிகளுக்கான மண்டல இணை இயக்குநர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மாநில காவல்துறை இயக்குநரும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி கோவிந்தசாமி அவர்கள் 30.6.1992 அன்று இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தமிழகக் கல்லூரிகளிலும், தொழில் கல்லூரிகளிலும் சி.பி.எஸ்.ஈ மாணவர்களையே சேர்க்கக் கூடாது என்று (Interim Injection) தமிழக அரசுக்கும், தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு நடத்தும் அமைப்பின் செயலாளருக்கும் உத்தரவிட்டார்.

-அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.2.21

16.7.1992 அன்று கடிதம் ஒன்று வந்தது. அதில் “சி.பி.எஸ்.ஈ மார்க் ஊழலை வெளிக்கொணர்ந்த சீரிய செயல்’’ என்று எனக்கு டாக்டர் ஆர்.எஸ்.சிறீதர் அவர்கள் கீழ்க்கண்ட கடிதம் எழுதியிருந்தார்கள்.

சி.பி.எஸ்.ஈ. மார்க் ஊழலை வெளிக்கொணர்ந்த சீரிய செயல்

பொதுச்செயலாளருக்கு ஒரு டாக்டரின் கடிதம்

Dr.R.S.Sridhar, M.B.B.S.,
General Physician and Film Maker,
P.42, 6th Avenue, Anna Nagar, Madras - 600 040
Telephone: 614409  Date: 9.7.1992

பெருமதிப்பிற்குரிய திரு.வீரமணி அவர்கட்கு, வணக்கம்.

தங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. எனினும் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனது தாய் வழிப் பாட்டனார் திரு.துரைசாமி (கவுண்டர்) தனது இன்வாழ்வை தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஈந்தவர். வடஆர்க்காடு பெரியார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.

அமெரிக்காவில் சில ஆண்டுகள் இருந்து விட்டுத் திரும்பியுள்ள எனக்கு சி.பி.எஸ்.ஈ. மார்க் ஊழலை வெளிக் கொணருவதில் தாங்கள் செய்துவரும் சிறப்பான பணி, என் மனதை பேருவகை கொள்ளச் செய்தது.

தங்களுக்கு ஒரு (முக்கியமான) வேண்டுகோள்:

ஜூலை 8 அன்று நடந்த வழக்கு மன்ற விவாதத்தில் சி.பி.எஸ்.ஈ. தேவையின்றி அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை ஏற்றியதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால், சி.பி.எஸ்.ஈ. வழக்குரைஞர்கள் சி.பி.எஸ்.ஈ. மதிப்பெண்களை ஏற்றியதால், கல்லூரி நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர்களைச் சேர்த்திட வேண்டும் என்று கூறியது. சி.பி.எஸ்.ஈ.யின் தவறுக்காக, தமிழ்நாடு மாநில கல்வி அமைப்பு மாணவர்களைப் பலிகடா ஆக்கும் செயலாகும் இது. சி.பி.எஸ்.ஈ.யின் தவறுக்கு சி.பி.எஸ்.ஈ. மட்டுமே பொறுப்பேற்றிட வேண்டும்! இதனால் சி.பி.எஸ்.ஈ. மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு பொறுப்பு சி.பி.எஸ்.ஈ. தானே தவிர, தமிழ்நாடு மாணவர்களல்லர். பிளஸ் டூ.வில் தமிழ்நாட்டு அரசு கல்வி அமைப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அங்கீகரித்து அவர்களை அம்மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியில் சேர்த்திட வேண்டும்! இதைத் தடுக்க முயலும் சி.பி.எஸ்.ஈ.யின் சூழ்ச்சியினைத் தாங்கள் உறுதியாகத் தடுக்க வேண்டும்!

மேலும் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் அந்தந்த மாநில மொழியினை இரண்டாம் மொழியாக அனைத்துப் பள்ளிகளும் கற்பிக்க வேண்டும், அனைத்து மாணவர்களும் (சி.பி.எஸ்.ஈ., மெட்ரிகுலேசன் மாணவர்கள் உள்பட) கற்றாக வேண்டும் என்று சட்டம் இருப்பது போன்று தமிழ்நாடு அரசும், தமிழ் மொழியினை அனைத்து மாணவர்களும் தமிழ்நாட்டில் கற்றாக வேண்டும், தமிழ் மொழியினை குறைந்த பட்சம் இரண்டாம் மொழியாகப் பயின்றிருந்தால்தான் தமிழகக் கல்லூரிகளில் அனுமதி தரப்படும் என்று அறிவிக்க வேண்டும். இதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இதை அரசு செய்யாவிட்டால் இதற்காகத் திராவிடர் கழகம் போராட வேண்டும். ஆந்திரரும், கன்னடரும் ஏற்கெனவே சட்டமாக வைத்திருப்பதை தமிழ்நாடும் பின்பற்றுவதில் தடை என்ன?

தங்களது திராவிடப் பணிக்கும், செயல் மேன்மைக்கும் என் வாழ்த்து!

அன்பன்,

ஆர்.எஸ்.சிறீதர். 

18.7.1992 அன்று “சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளே கூடாது’’ என்கிற கிளர்ச்சி வெடிக்கும்! வெடிக்கும்! என்று முக்கிய அறிக்கை ஒன்று ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில், பொய்யான தகவல்களைக் கூறியும், மிரட்டும் பாணியிலும் எழுதிய பார்ப்பன ஏடு, இன்று திடீரென்று ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’வான “இந்து’’ ஏட்டில் அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு முடிவுகளைத் தொகுத்து நீதிமன்றத்திற்கு அளித்ததில் ஏதோ மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக பெரிய புழுதிப் புரளியை பார்ப்பனர்களுக்கு உரிய மிரட்டல் தன்மையோடு உண்மைக்கு மாறாக அசல் புரட்டு வேலையைச் செய்துள்ளது.

முதலில் கூடுதல் மதிப்பெண்களே போடவில்லை என்று சி.பி.எஸ்.ஈ தரப்பில் கூறப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில், ஆம்! மதிப்பெண்கள் போடப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு, அதற்குப் பல பெயர்களும் வியாக்கியானங்களும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டன.

‘மார்க் மாடரேஷன்’ (Mark Moderation), ‘ஸ்டாண்டர்டிசேஷன்’  (Standardisation) என்றெல்லாம் கூறப்பட்டது.

இதுபற்றி விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களது உள்நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. இன்னொரு நுழைவுத் தேர்வு வேறு யாரோ தனியார் ஏஜென்சியால் நடத்தப்பட வேண்டுமாம். இப்படி பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்குப் போட்ட ஒவ்வொருவரும் கேட்டால் நிலைமை என்னவாகும்? என்று ‘இந்து’ ஏட்டின் செய்தியை சுட்டிக்காட்டி அந்த அறிக்கையில் விளக்கியிருந்தோம்.

அப்படிப்பட்ட சி.பி.எஸ்.ஈ.தான் இன்று ‘நீட்’ தேர்வு நடத்துகிறது என்பதிலிருந்து ‘நீட்’ தேர்வு எப்படிப்பட்ட மோசடித் தேர்வு என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

-அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-29.2.20