25.02.1940 அன்று சென்னை 10ஆவது வட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத் திறப்பு விழா பாரிஸ்டர் சுப்ரமணியம் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. பாசுதேவ் சங்கத்தைத் திறந்து வைத்தார். பெரியார் பேசும்போது திராவிடர்கள் தங்களது நாடு, கலை, நாகரிகம் ஆகியவைகள் முன்னேற வேண்டுமானால் முதலில் பார்ப்பனியம் தொலைந்தாக வேண்டும் என்றார். 26.02.1940 அன்று சென்னையில் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிருவாகக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. பெரியார் கலந்து கொண்டு பேசினார். சென்னை ஆளுநர் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு மேல் தம்மை வந்து பார்க்கும்படி பெரியாருக்கு அழைப்பு அனுப்பி உள்ளார். 01.03.1940 இல் வரலாமா என்று பெரியார் கேட்டுள்ளார். உதகமண்டலத்தில் 26.04.1940 அன்று பெரியார், ஆளுநர் சர்.ஆர்தர் ஹோப் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

ராஜகோபாலாச்சாரியாரின் காங்கிரஸ் அமைச்சரவை 1939 இறுதியில் பதவி விலகிவிட்ட நிலையில், மாற்று அமைச்சரவை அமைக்குமாறு கவர்னர் ஜெனரல்களும், கவர்னர்களும் அன்றையப் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பெரியாரை வேண்டினர். ஆச்சாரியாரும் நேரில் வந்து கேட்டுக் கொண்டார். இனி பதவிகளில் அமரமாட்டேன் என சூளுரைத்து 29 பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்த பெரியார் 1940 மற்றும் 1942 ஆகிய இருமுறையும் தேடி வந்த பதவியை மறுத்து, வாழ்நாள் முழுவதும் பதவிக் பக்கமே செல்லாமல் தொண்டு செய்து வந்தார்.

- தமிழ்நாடு சட்டப்பேரவை

புதிய கட்டடத்திறப்பு விழா மலர் - 2010