Tuesday 25 May 2021

கேரளாவில் கோயில்கள் நிர்வாகத்துக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அமைச்சராக நியமனம்


திருவனந்தபுரம்,மே22-  கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் உட்பட   21 அமைச்சர்கள்  புதிய  அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகிய  கே.ராதாகிருஷ்ணனுக்கு முதல்முறையாக தேவசம்போர்டு துறை வழங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கோயில்களில் அர்ச்சகராக பணியாற்ற முதல்முறையாக கேரள மாநில பினராயி விஜயன் அரசு உத்தரவிட்டது. இந்த முறை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தேவசம் போர்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான பாரம்பரியக் கோயில்கள், சபரிமலை அய்யப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு கே.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Thursday 20 May 2021

பல பகுதிகளின் சொற்கள் ஒன்றிணைந்து உருவானதே தமிழ்

சேர நாட்டில் வழங்கப்பட்ட சொற்களில் பல சோழ, பாண்டிய பகுதிகளில் புழக்கத்தில் இல்லை. இதே போல் பாண்டிய நாட்டில் வழங்கப்பட்ட சொற்களில் பல சேர, சோழ பகுதிகளில் புழக்கத்தில் இல்லை. இதே போல் தான் ஒவ்வொரு பகுதியின் நிலையும். இலக்கியங்களை படைப்பவர்களுக்கு மட்டுமே இவற்றை பற்றி தெரியும். அதனால் பல பகுதி சொற்களை கையாள்வர். தொல்காப்பியர் கேரளாவை அதாவது சேர நாட்டை சேர்ந்தவராதலால் தொல்காப்பியத்தில் சேர நாட்டில் புழக்கத்தில் இருந்த சொற்கள் சிலவற்றை கையாண்டிருப்பார். சோழ, பாண்டிய பகுதிகளில் புழக்கத்தில் இல்லாத சொற்கள் என்பதால் அவற்றை தமிழ் சொற்கள் கிடையாது என சொல்லமுடியாது. தொல்காப்பியரை தமிழர் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. முற் காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் வழங்கிவந்த்து. இதேபோல் நமக்கு தெரியாத பல சொற்கள் இந்தியா முழுவதும் இருந்த தமிழில் இருந்திருக்கலாம். வட பகுதியில் இருந்த தமிழ் மாற்றமடைந்து பிராகிருதம் என மாறியது. அதிலிருந்து பாலி தோன்றியது. இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த சந்தசு என்ற மொழியுடன் பிராகிருதம், பாலி போன்றவற்றை கலந்து சமசுகிருதம் என்று ஒன்றை உண்டாக்கினர். இதனால் தான் பல தமிழ் சொற்களை வடமொழி என சொல்லிக்கொண்டுள்ளோம். வெள்ளம் என்றால் நீர் இதை திருவள்ளுவர் கையாண்டுள்ளார். ஆனால் தமிழ் நாட்டில் வழங்கப்படுவதில்லை, ஆனால் மலையாளத்தில்(கேரளம்) புழக்கத்தில் உள்ளது. வெள்ளம் தமிழ்ச் சொல் இல்லை என சொல்லமுடியுமா? திராவிடமும் வட பகுதி தமிழ்ச் சொல்லே!

Monday 17 May 2021

நவபாரத சிற்பிகள் 'சி.என்.அண்ணாதுரை' நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்  ‘பப்ளிகேஷன் டிவிஷன்’ ‘நவபாரத சிற்பிகள்’ என்ற தலைப்பில் முக்கிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட்டு வருகிறது, அந்த வரிசையில் சி.என்.அண்ணாதுரை என்ற பெயரில் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை பி.சி. கணேசன் என்பவரை கொண்டு எழுதி நூலாக வெளியிட்டு உள்ளது.

பக்கங்கள் : 226

நூலாசிரியர் காங்கிரசை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல வண்ணமே நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், பெரியார், அண்ணாவைப் பற்றி  எழுதியுள்ளார்.

ஆனால் தந்தை பெரியார் பற்றி சரியான புரிதலின்றி எழுதியுள்ளார். மேலும் சில தவறான தகவல்களையும் எழுதியுள்ளார்.

ஈ.வெ.கி. சம்பத் பெரியாரின் தம்பி மகன் என்று எழுதியுள்ளார். அவர் தந்தை பெரியாரின் அண்ணனான ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஆவார்.

இந்த நூலில்  “பெரியார் முழுக்க முழுக்க சமுதாய சீர்திருத்தவாதி. முரட்டு சுபாவம் உடைய பகுத்தறிவு வாதியான அவர் மனிதர்களையும் செயல்களையும் கணிக்கும் போது மனித உறவுகளில் காரண காரியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு பிரச்சினைகளையும் மனிதாபிமான கோணத்திலேயே அண்ணா பார்த்தார். அண்ணாவும் பகுத்தறிவுவாதி தான் ஆனால் ஓர் இயக்கத்தை வளர்க்கும் போது மனித உறவுகளுக்கும் இருதரப்பு அன்பிற்கும் முக்கியப் பங்கு இருப்பதாக அவர் நம்பினார். நாத்திகவாதியான பெரியார் இடத்தில் கலைக்கும் இலக்கியத்துக்கும் இடம் இருந்ததில்லை. தொன்மையான கலை இலக்கியங்களை தூக்கி எறியும் அளவிற்கு அவரின் பகுத்தறிவு தீவிரவாதம் அமைந்து இருந்தது. ஆனால் அண்ணாவோ இலக்கிய மாணாக்கரும் கலைகளின் ரசிகருமாக எல்லா உயர்ந்த விஷயங்களையும் விரும்பினார்.

 பெரியாரைப் பொருத்தவரை மதமும் கடவுளும் வெறுமனே சுரண்டல் கருவிகள். மக்களின் சொந்த சுகங்களுக்காக சூழ்ச்சி நிறைந்த பூசாரிகளும் இவற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்ததாக அவர் நம்பினார். இந்த சுரண்டலுக்கு முடிவு கட்ட கடவுள் கருத்துக்களையும் மதக்கோட்பாடுகளையும் ஒழிக்க வேண்டும் என்பது அவசியம் என்று பெரியார் கருதினார். எனவே இவைகளின் மேல் உள்ள பெரியாரின் எதிர்ப்பு நேரடி ஆனதும் தீவிரமானதுமாகும். ஆனால் இலக்கிய கல்வியாலும், வரலாற்று அறிவிலும் நன்கு பதப்படுத்தப்பட்ட அண்ணா ஆக்கப்பூர்வமாக இப்பிரச்சினையை அணுகினார். கடவுள் மதம் கலை இலக்கியம் மூலமாக உயர்ந்த குலத்தவர் சமுதாயத்தை தமது இறுக்கமான பிடியில் வைத்துக் கொள்ளும் போது அதனை சமணப்படுத்துவது என்பது அதே கலை இலக்கியம் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று அவர் கருதினார். அதே நோக்கோடு வரலாற்றின் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு - தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைக் கண்டெடுத்து பிறகு சமுதாய அமைப்பை தங்களின் கட்டுக்கோப்பில் வைத்துக் கொண்டு அதற்கு மேல் குடியினர் எத்தனை வழிமுறைகளை மேற்கொண்டார்கள் என்பதை மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகங்களாக உருவாக்கினார். அண்ணாவின் பிரச்சார உத்திகளை வெளிப்படையாகவே பெரியார் விமர்சித்தார். இருவரும் ஒத்துப் போகாத சூழ்நிலை உருவாகும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது” - இவ்வாறு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது

“கடவுளை மற, மனிதனை நினை” என்று சொன்ன பெரியாருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்கிறார். முரட்டுசுவாபம் உள்ளவர் என்கிறார். இயக்கத்தின் தலைவர் பெரியார். அனைத்திற்கும் பொறுப்பு அவரே ஆவார். கம்பிமேல் நடப்பது போன்றது. மனிதாபிமானம் இருந்தால்தான் தன் சொந்த செலவில் இயக்கத்தைக் கட்டி தன்னலம் பாராமல், உடல்நலம் பாராமல், ஓயாமல் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார். அவ்வளவும் மக்கள் நலனுக்காகத் தான்!

பெரியாரிடம் இருந்த காலமே வசந்த காலம் என்று அண்ணாவே கூறியுள்ளார்.

பெரியாருக்கு இலக்கிய ரசனை இல்லை என்கிறார். இக்கருத்து அவரது அறியாமையை அல்லது காழ்புணர்ச்சியையோ காட்டுவதாகும். நல்ல இலக்கியம்தான் தேவையென்றார் பெரியார். திருக்குறளை மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார். இலக்கிய ரசனை இருந்தால்தானே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை உடன் வைத்திருந்தார். நாடகங்களை விரும்பாமலா எம். ஆர். ராதா வை உடன் வைத்திருந்தார். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; மருந்து தடவ வேண்டிய இடத்தில் மருந்து தடவ வேண்டும்!

இன்னொரு இடத்தில் பெரியாரை சர்வாதிகாரி என்கிறார்.

கொள்கைக்கு தலைவரும் அவரே; இயக்கத்திற்கு தலைவரும் அவரே; நிர்வாக செலவுக்கும் தலைவர் அவரே! அப்படி இருக்கும் போது அவர் சொல்வதை தானே கேட்கவேண்டும்! சர்வ அதிகாரமும் உடையவர் சர்வாதிகாரி தானே!

மேலும் ஒரு அவதூறை பரப்புகிறது.

தொண்டர்கள் இடத்தில் அன்பு இல்லாதவர், பாரதிதாசனுக்கு கூட உதவி செய்யாதவர், அண்ணாதான் உதவி செய்தார் என்று கூறுகிறார். உதவி செய்ததைக் கூட பெரியார் கண்டித்ததாக கூறுகிறார்.

ஆனால் திராவிடர் கழக மாநாட்டில் பாரதிதாசனுக்கு நிதி திரட்ட வேண்டும் என்று தீர்மானம் போட வைத்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் ஏற்பாட்டில் தான் அண்ணா மூலமாக பாரதிதாசனுக்கு நிதி வழங்கப்பட்டது என்பது உண்மை. இப்படி அரசு வெளியிட்டுள்ள புத்தககத்தில் பல இடங்களில் பெரியாரை தவறான புரிதலுடன்  விமர்சித்து எழுதியுள்ளது வருந்தத்தக்கதாகும்.

செ.ர.பார்த்தசாரதி,

மாவட்டச் செயலாளர்,

திராவிடர் கழகம், தென்சென்னை

கருப்பு கம்யூனிஸ்டுகள்


இன்றைய கருஞ்சட்டைகளே தத்துவ பரிணாமத்தின் நாளைய செஞ்சட்டைகள்

பெரியாரியல் என்பது மார்க்சியமே..!

பகுத்தறிவின் எல்லை எது? என பெரியாரிடம் கேட்கப்பட்டது.

பகுத்தறிவின் எல்லை பொதுவுடமை என்றார் பெரியார்.

பொதுவுடமைதான் இலக்கு எனில், இச்சமூகத்தில் கருஞ்சட்டைகளின் பணிதான் என்ன?

அதையும் தெளிவாகச் சொன்னார் பெரியார்!

“நாங்கள் (கருஞ்சட்டைகள்) இன்பேண்ட்ரீஸ்”

(In-fantrys) என்றார்.

ஏன் கருஞ்சட்டைகளை இன்பேண்ட்ரீஸ் என்றார் பெரியார்?

இராணுவம் மீட்புப் பணியிலோ, போரிடவோ செல்கையில், தங்குதடையின்றி இராணுவம் வேகமாக முன்னேற வழியில் இடற்தரும் கற்கள், முட்கள், பள்ளம், மேடு, காடு என அனைத்தையும் சீர்படுத்தி வழி ஏற்படுத்தும் ஓர் இராணுவப் பிரிவே இன்பேண்ட்ரீஸ்.

இச்சமூகத்தில் ஏற்படப்போகும் நாளைய பொதுவுடமை புரட்சிக்கு தடையாக இருக்கும் ஜாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், பிற்போக்கு கருத்தியல்கள் அத்தனையும் ஒழித்து போராளிகளுக்கு வழி உண்டாக்குவதே கருஞ்சட்டைகளாகிய இன்பேண்ட்ரீஸ்களின் பணி!

சரி, இப்போது மற்றொரு கேள்வி வரும்

நாளை உண்மையான போராளிகள் புரட்சிக்கு அணியுமாகி விட்டால்...! வழி ஏற்படுத்தியதோடு உங்கள் வேலை முடிந்ததா?

இல்லை, முடியாது

இச்சமூக இழிவுகளாகிய ஜாதி மத பிற்போக்கு களைந்த சமூகத்தில் எங்கள் சட்டையிலும், கொடியிலும் உள்ள கருப்பு மறையும், கொடியின் நடுவேயுள்ள புரட்சியின் (சிகப்பு) நிறமே கொடி முழுக்க வியாபிக்கும்!

அதன் பொருள்?

நாங்களும் கம்யூனிஸ்டுகளாய் புரட்சியின் நடுவில் போராளிகளாய் நிமிர்ந்து நின்றிருப்போம்.

அதற்கு கம்யூனிஸ்ட்களாகவே இருக்கலாமே.., ஏன் திராவிடர் கோட்பாட்டில் இயங்க வேண்டும்?

பொது உரிமை வராத நாட்டில் பொதுவுடமை வந்தால் மீண்டும் ஆதிக்கக்காரன் கைக்கே பொதுவுடமை போய் விடும் என்று மிகத் துல்லியமாக சொன்னார் பெரியார்

1925 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக இந்தியாவில் வந்துவிட்டது. ஆனால் 1931 ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழி பெயர்க்கவில்லை.

பெரியார் தான் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதை நூலாகவும் வெளியிட்டார்.

ஏழெட்டு வாரம் தொடர்ச்சியாக ‘குடிஅரசி’ல் வெளியிட்டு விட்டு பிறகு புத்தகமாகவும் வெளியிட்டார் முன்னுரையில் பெரியார் எழுதினார். அதை எழுதும் போதே சொன்னார், “இல்லையில்லை இந்த நாட்டில் பொதுவுடமை அப்படியே வந்து விடாது. இங்கே மக்களை பிரிப்பதற்கு பாட்டாளிகளை பிரிப்பதற்கு ஜாதிமுறை இருக்கிறது. அதை எடுத்துவிட்டு அதற்கு அடிப்படையான இந்து மதத்தை ஒழித்து விட்டுதான் இங்கு பொதுவுடமை வரும்” என சொல்லிவிட்டுதான் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

மேலும்.., சதி செய்வதற்கு என்றே ஒரு ஜாதி இல்லாத இரஷ்யநாட்டில் லெனின் வெற்றிப் பெற்று விட்டார்- என்று சொன்னார். இங்கு அப்படி வெல்ல முடியாது என்றார். சதி செய்வதற்கென்று ஒரு ஜாதி அதற்கென்று ஒரு அமைப்பு இங்கிருக்கிறது. அதை தடுக்க பொது உரிமையோடு கூடிய பொதுவுடமை வேண்டும் என்றும் பெரியார் சொன்னார்.

ஆகவேதான்...

திராவிட கோட்பாட்டில் என்று பொது உரிமையை பெறுவதும் அதன் அடிப்படையிலான சமூகத்தில் பொதுவுடமை காண புரட்சியை வித்திடுவதும் கருஞ்சட்டைகளின் ஆகப்பெரிய பொறுப்பாகும்

வாக்கு அரசியல் நிலைப்பாடுகள் தேர்தல் ஆதரவு எதிர்ப்பு என்பதெல்லாம் தற்காலிகமானதே!

இம் மண்ணில் உண்மையான பொதுவுடமை மலர தன் நெடிய பயணத்தை மிகச் சரியான இலக்குடன் கொண்டு செல்லும் மார்க்சியவாதிகள் கம்யூனிஸ்டுகள் கருஞ்சட்டையினரே என உறுதியாகக் கூறலாம்.

பெரியாரியலாளர்களே! கருஞ்சட்டைக்குள்ளிருக்கும் செஞ்சட்டை போராளிகள் என்கிற தத்துவ உண்மையை ஒவ்வொரு பெரியாரிஸ்டுகளும் உணர வேண்டும்

மாமேதை மார்க்சின் பிறந்தநாளில் உண்மையான பொதுவுடமைக்காகப் போராடும் கருஞ்சட்டைகளாகிய செஞ்சட்டைகளுக்கு வாழ்த்துகள்!

       - மு.தமிழ் மறவன்

Sunday 2 May 2021

இராமானுஜர் சாதி ஒழிப்புப் போராளியா?




இப்போது ராமானுஜரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால் தற்போது ராமானுஜரின் ஆயிரமாவது அவதார விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஸ்ரீபெரும்புதுரில் நடைபெறும் இந்த விழாவுக்கு நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களிலும் மின்தடை ஏற்பட்டு விடக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்திரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கத் துப்பில்லாத அரசு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், கார்ப்ரேட் சாமியார்களின் பணம் கொழிக்கும் மடங்களுக்கும், மக்களிடையே மூட நம்பிக்கையைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் வழங்க உத்திரவிடும் அயோக்கியத்தனத்தைச் சுட்டிக்காட்டத்தான். அத்தோடு தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பன கும்பலின் புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தவும் தான். 

ராமானுஜரை ஒரு சாதிய எதிர்ப்பாளனாகக் காட்ட அவரது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களைச் சொல்கின்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் ‘குரு பரம்பரை’ என்ற நூலில் குறிப்பிடப்படுகின்றது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் 16 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழக வைணவர்களிடையே உள்ள வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. இந்நூலில் உள்ள கதைகள் நம்பமுடியாதனவாய் உள்ளன என்பதை இந்நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் தன்னுடைய முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தக் குருபரம்பரை கதையில் கூறப்பட்ட ராமானுஜர் பற்றிய செய்திகள் அனைத்தும் வாய்மொழி அடிப்படையில் எழுதப்பட்டதாகும். அதற்கு எந்தவித அடிப்படை சான்றும் கிடையாது. ராமானுஜர் எழுதியதாக சொல்லப்படும் எந்த நூலிலும் மேற்படி பார்ப்பன அடிவருடிகள் சொல்லும் எந்தக் கதையும் கிடையாது.

ஒரு நாள் தனது இல்லத்திற்கு சாப்பிட தனது குரு திருக்கச்சி நம்பியை ராமானுஜர் அழைத்திருக்கின்றார். அதை நம்பி அவரும் ராமானுஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டிருக்கின்றார். ஆனால் ராமானுஜர் மனைவி அவர் சாப்பிட்ட இலையைக் கையால் எடுக்காமல் கோலால் தள்ளி அவர் உட்கார்ந்த இடத்தை சாணத்தால் மொழுகி சுத்தப்படுத்தி இருக்கின்றார். இதைப் பார்த்த ராமானுஜர் கொதித்துப்போய் அவர் மனைவியை அவரது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு துறவறம் மேற்கொண்டார் என்று சொல்கின்றார்கள். இந்தக் கதையில் எங்கே சாதிக்கு எதிரான குரல் ஒலிக்கின்றது எனத் தெரியவில்லை. ராமானுஜம் தன் மனைவியிடம் “நீ எப்படி அவர் இலையைக் கோலால் தள்ளிவிடலாம், அதுவும் எனக்கு சாதி மீது நம்பிக்கை கிடையாது என உனக்குத் தெரியாதா, இதைப் பார்த்தால் ஊர் உலகம் என்னுடைய சாதி எதிர்ப்பு கருத்தைப் பற்றி கேலி பேசாதா” என சொல்லி அவரின் மனைவியைத் திட்டியதாக எந்தக் குறிப்பும் இல்லை.ஆனால் இதை எல்லாம் வைத்துக்கொண்டு ராமானுஜர் ஒரு சாதிய எதிர்ப்பாளர் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும்? சம்மந்தப்பட்ட ராமானுஜர் சாதிக்கு எதிராகப் பேசியதாக ஒரு வார்த்தை கூட கதையில் பதிவாகவில்லையே.

 அதுமட்டும் அல்லாமல் ராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யத்தில் ஆன்ம விடுதலை என்பது அந்தணர், வைசியர்,சத்ரியர் என்ற மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. அது சூத்திரர்களுக்கு என்றும் கிடையாது என்று கூறியிருக்கின்றார். எனவே ராமானுஜர் அடிப்படையில் தான் ஒரு சாதி வெறியன் என்பதை அவரே அவருடைய நூலில் ஒப்புக் கொண்டிருக்கின்றார். 

அடுத்து அவரை சோழ மன்னனான முதலாம் குலோத்துங்கச் சோழன் கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் செய்தியைப் பார்க்கலாம். இது ராமானுஜர் திருவரங்கம் கோயிலில் வாழ்ந்த போது நடந்ததாக சொல்லப்படுகின்றது. முதலாம் குலோத்துங்கன் ஒரு ஏட்டில் “சிவாத் பரதரம் நாஸ்தி” (சிவத்தைக் காட்டிலும் மேலானது எதுவும் இல்லை) என்று எழுதி அதில் பண்டிதர்கள் அனைவரையும் கைச்சாத்து இடும்படி கட்டளையிட்டதாகவும், வைணவரான ராமானுஜர் அதில் கைச்சாத்து இடாமல் தனக்குப் பதில் தனது சீடரான கூரத்தாழ்வாரை தன்னைப்போலவே வேடமிட்டு அனுப்பி வைத்தாகவும் அவர் அங்கு சென்று “குருணிக்கு மேல் பதக்கு உண்டு” என்று எழுதி கைச்சாத்து இட்டதாகவும், ஆனால் குருணி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு ஒன்று படி போல ஒரு முகத்தல் அளவை, மற்றொன்று சிவன் என்பதாகும். இந்த அறிய உண்மையைக் கண்டுபிடித்த மன்னன் கூரத்தாழ்வானின் கண்களை பிடிங்கிவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய சந்நியாச ஆடைகளைக் களைந்து வெள்ளை உடை தரித்து ராமானுஜர் கர்நாடகத்திற்குத் தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகின்றது.

திருவரங்கம் கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்த எண்பது கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆனால் அதில் ஒரு கல்வெட்டில் கூட இந்தச் செய்தி பதிவாகவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள செய்தி எல்லாம் கோயிலுக்குச் சொந்தமான நிலம், தங்கம், கால்நடைகள் பற்றியும் வழிபாட்டிற்கான செலவுகள் பற்றியுமே உள்ளது. மேலும் இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்கனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றது. ‘கோயில் ஒழுகு’ என்ற நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார், ராமானுஜரைக் கொல்ல முதலாம் குலோத்துங்கன் முயற்சி செய்தான் என்பதை மறுத்துள்ளார். இதனால் குழம்பிப் போன வரலாற்றுப் பொய்யர்கள் உடனே முதலாம் குலோத்துங்கன் கிடையாது, இரண்டாம் குலோத்துங்கன் என கதைவிட ஆரம்பித்து விட்டார்கள்.

ராமானுஜர் 1017இல் பிறந்தார் என்பதை பொதுவாக வைணவ வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். ராமானுஜர் 120 வயதுவரையும் வாழ்ந்ததாகவும், தன்மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பிக்க அவர் கர்நாடகா தப்பிச்சென்று அங்கே 12 ஆண்டுகள் வாழ்ந்தாகவும், பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி அவர் தன்னுடைய சாதிய எதிர்ப்புப் பணியை செவ்வனே செய்ததாகவும், பிறகு தன்னுடைய 120வது வயதில் மண்டையைப் போட்டதாகவும் நம்புகின்றார்கள். இதிலே கேலிக்கூத்தானது என்னவென்றால் 1133இல் தான் இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி பொறுப்புக்கு வருகின்றான். அதன் படி பார்த்தால் ராமானுஜருக்கு வயது 116. தள்ளிவிட்டாலே செத்துப்போகும் நிலையில் இருந்த ஒரு கிழவனை இரண்டாம் குலோத்துங்கன் கொலை செய்ய முயற்சித்தான் என்பதும், அதற்குப் பயந்து அந்தக் கிழவன் கர்நாடகம் தப்பிச் சென்றான் என்பதும், பிறகு 12 ஆண்டுகள் கழித்து திரும்ப வந்தான் என்பதும் குமாரசாமி கணக்கைவிட மோசமான கணக்காகும். இருந்தாலும் இங்கிருக்கும் பார்ப்பன அடிவருடி கும்பல்கள் இதே கதையைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப சொல்லி மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 அவர் கூறிய வாழ்வியல் நெறி என்னவென்றால் “இறைவன், உயிர், பொருள் ஆகிய மூன்றும் உண்மை. அதே வேளையில் இம்மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு ஒன்றில் இணைந்துள்ளன. அந்த ஒன்றே பிரும்மம் என்பது. எனவே தனிமனித ஆன்மா ஒரு நாளும் பிரம்மமாக முடியாது என்றாலும் பிரம்மத்தை சரணடைவதன் மூலம் மோட்ச நிலையை அடைய முடியும்" என்பதுதான் சாரமாக ராமானுஜரின் கருத்து. தினம் தினம் உழைத்துச் சோறு தின்னக்கூடிய மக்களால் எளிதில் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் நாள் கணக்கில், வருடக்கணக்கில் உழைக்காமல் ஓசியில் உண்டகட்டி வாங்கித் தின்பவராக இருக்க வேண்டும். அதனால் இராமாஜர் கண்டுபிடித்த அந்த உண்மையைப் பற்றி ஆழமாக நாம் உள்ளே போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்திய சமூகத்தில் அறிவியல் சிந்தனை காயடிக்கப்பட்டதற்குச் சங்கரருக்கு எந்த அளவிற்குப் பங்குண்டோ அதே அளவிற்கு இந்த ராமானுஜர் என்ற பார்ப்பனனுக்கும் பங்குண்டு.

- செ.கார்கி
பாலமுருகன் முகநூல் பதிவு, 2.5.21