Tuesday 30 April 2019

மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? எது தொழிலாளர் தினம்?

பெல் ம. ஆறுமுகம்




உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஆர்.எஸ்.எஸின் சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கம் மட்டும் மே தினம் தொழிலாளர் தினம் அல்ல. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

மே தினத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் வைக்கும் முழக்கம் உலகத் தொழிலாளர்களே! ஒன்று படுங்கள் என்பதாகும். தொழிலாளர்கள் ஒன்று பட்டால் தான் அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும். ஆதிக்க சக்திகளின் எதேச்சாதிகாரத்தை முறியடித்து பாட்டாளி சமுதாயத்தை அமைக்க முடியும் என்பது இதன் பொருள். ஆனால் பிஎம்எஸ் என்ன சொல்கிறது தெரியுமா?

தொழிலாளர்களே, உலகை ஒன்று படுத்துங்கள் என்று சொல்கிறது. (ஆதாரம் : பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001)

இதனுடைய நோக்கம் என்ன? தொழிலாளர்கள் ஒன்று பட்டுவிடக் கூடாது. அப்படி ஒன்றுபட்டு விட்டால் முதலாளிகளுக்கும், ஆதிக்கசக்திகளுக்கும் அது மிகப் பெரிய தொல்லையாகிவிடும். அதனால் தொழிலாளர்களை ஒன்று சேர விடாமல் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தால்தான் தங்கள் சுரண்டலை தாராளமாகச் செய்ய முடியும் என்பதுதான் அதன் நோக்கம்.

பிஎம்எஸ் சும், சங் பரிவாரும் அமைக்க விரும்பும் சமுதாயம் இந்து சமுதாயம் ஆகும். அந்த இந்து சமுதாயம் எப்படி இருக்கிறது? பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு தொழிலைச் செய்பவனும் ஒவ்வொரு ஜாதி;.

அந்தத் தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உதாரணத்திற்கு செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர் ஜாதிக்காரருக்குத்தான் செருப்புத் தைத்துத் தர வேண்டுமே தவிர தனது காலிலே அணிந்து கொண்டு வீதிகளிலே நடமாடக் கூடாது. வெயிலில் வெந்து சாக வேண்டும். கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அவன் நடக்க அவதிப்பட வேண்டும்.

அதுபோல ஒரு விவசாயி நன்றாக மாட்டை வளர்த்து பாலையும், நெய்யையும், தயிரையும் உயர் ஜாதிப் பார்ப்பனருக்குக் கொடுத்து விட்டு தான் அய்ந்துக்கும் பத்துக்கும் மற்றவர் கையை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்.

ஒரு தொழிலாளியும் இன்னொரு தொழிலாளியும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது. கொள்வினை கொடுப் பினை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக் கூடாது என்று தொழிலாளர் சமு தாயத்தைப் பிரித்து வைத்தது இந்து மதம்.

உதாரணமாக தீண்டத்தகாதவர்களே ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ண மாட்டார். பெண் கொடுக்க மாட்டார். பெண் எடுக்க மாட்டார். ஒரு சலவைத் தொழிலாளியும் நாவிதரும் ஒன்று சேரக்கூடாது. ஒரு தச்சரும் குயவரும் ஒன்று சேரக்கூடாது. இப்படி எல்லா ஜாதியினரையும் பிரித்து வைத்து அவர்கள் உழைப்பையெல்லாம் சுரண்டி உயர்ஜாதியினர் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த உல்லாச வாழ் வுக்கு கேடு வந்துவிடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்று சேரக் கூடாது என்று பிஎம்எஸ் சொல்கிறது.

நாங்கள் ஏன் கீழ் ஜாதியாக இருக்க வேண்டும்? என்று கேட்டால் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவம், உங்கள் தலையெழுத்து, விதி என்றெல்லாம் காரணம் காட்டுவர். நீங்கள் மட்டும் எந்த உழைப்புமின்றி எங்கள் உழைப்பிலே உல்லாச வாழ்வு வாழ்கிறீர்களே! என்றால் அது எங்கள் முன்னோர் செய்த புண்ணியம் என்பார்கள்.

தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். 'பாவம்', 'புண்ணியம்', 'தலைவிதி' என்ற இந்த ஏமாற்று வேலை எடுபடாது. தங்கள் உல்லாச வாழ்வு ஒரு நொடியில் பறிபோய்விடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்றுபடக் கூடாது என்கிற தத்துவத்தை ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கிறது.

அது உயர் ஜாதியினருக்கான அமைப்பு. தொழி லாளர் மத்தியில் அந்த சிந்தனையை அடிமை மனப்பான் மையை வளர்க்கத் தான் பிஎம்எஸ்ஸை ஆர்எஸ்எஸ் துவக்கியது. அதனால்தான் ஆர்எஸ் எஸ்ஸால் இயக்கப்படும் பிஎம்எஸ் "உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்" என்ற முழக்கத்தை முன் வைக்கும் மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

மே தினம் தொழிலாளர் தினம் அல்ல என்பவர்கள் விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறார்கள். அந்த விஸ்வகர்மா தினம் எது என்றால் செப்டம்பர் 17 என்கிறார்கள். இந்து மதத்தில் எந்த ஒரு கடவுளர் பிறப்பும் குறிப்பிட்ட நாளில் வராது. திதி நட்சத்திரம் ஆகியவற்றை வைத்துத்தான் அந்தப் பண்டிகை வரும். கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, கந்தர் சஷ்டி என்பதும், தீபாவளி ஆவணி அவிட்டம் போன்ற பண்டிகைகளும் அப்படித்தான். ஆனால் இந்த விஸ்வகர்மா மட்டும் செப்டம்பர் 17 அன்று பிறந்தான் என்பது அவர்களது சூது மனதைக் காட்டுகிறது.

அந்த செப்டம்பர் 17தான் பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய், வாயிருந்தும் ஊமையாய், கண்ணிருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்க் கிடந்த மக்களுக்கு மானமும் அறிவும் ஊட்டி சுயமரியாதை உணர்வூட்டி மனிதராய் மாற்றிய மகத்தான மனிதர் தந்தை பெரியார் பிறந்த நாளாகும். அந்த நாளுக்குரிய சிறப்பைக் குலைக்கவே இந்த செப்டம்பர் 17 அய்த் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் அதனை அறிவுப்பூர்வமாக மறுக்க வக்கற்று நாம் ஏதோ இந்த அய்ந்தொழிலாளர் எனப்படும் விஸ்வ கர்மாத் தொழிலாளர்களுக்கு எதிரானவர் என்பதுபோல அவர்களை நமக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள்.

விஸ்வகர்மாவைக் கொண்டாடுவது அந்த கை வினைத் தொழிலாளர்களைச் சிறப்பிக்க அல்ல. மாறாக அவர்களையும் சூத்திரர் என்று சொல்லி அவர்கள் அணியும் பூணூலுக்கும் பார்ப்பனர் அணியும் பூணூலுக் கும் வேறுபாடு உள்ளது. பார்ப்பனர் அணியும் பூணூல் தான் உயர்ந்தது, பார்ப்பனர்தான் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை நிலைநாட்டத்தான் என்பதால்தான் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி என்கிற நயவஞ்சகத்தை எதிர்க் கிறோம்.



அதற்கு உதாரணம் என்னவென்றால் இத்தமிழ் மண்ணில் முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரிதான் பதவிக்கு வந்த உடன் இந்த அய்ந்தொழிலாளர்களான விஸ்வகர்மாத் தொழிலாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக்கூடாது, ஆசாரி என்றுதான் போடவேண்டும் என்று உத்தரவிட்டவர். அது ஏனென்றால் ராஜாஜியும் ஆச்சாரி என்று போடுகின்றார். இந்த விஸ்வகர்மாத் தொழிலாளியும் ஆச்சாரி என்று போடுகின்றார் என்றால் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும் என்பதால் இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக் கூடாது என்றார்.

அத்துடன் பாரதீயர்களுக்கு லட்சியம் மோட்சம் அடைவதுதான். ஆனால் பிற நாட்டினருக்கோ அதிக சொத்து சேர்ப்பதுதான். நமக்கு புண்ணிய பாபங்களுக்கு வேறுபாடு தெரியும். பிற நாட்டவருக்கு பாவ தத்துவம் மட்டுமே தெரியும். புண்ணிய தத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம். நமது கலாச்சாரத்தை நாம் மதித்துப் புகழ வேண்டும்  என்று ஒரே சிந்தனை என்ற தலைப்பில் ஜெயதேவ்ஜி என்பவர் ஆற்றிய உரையை பிஎம்எஸ் சங்க மடல்  அக்டோபர் 2001 கூறுகிறது.

அந்த பாவ புண்ணிய தத்துவம்தான் நமது மக்களை ஏழைகளாகவும் தொழிலாளிகளாகவும் கீழ்ஜாதியாகவும் அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறது.

பாடுபடாத சோம்பேறி பணக்காரனாகவும் உயர் ஜாதியாகவும் முதலாளியாகவும் இருக்கப் பாடுபடும் நீ ஏன் ஏழையாக இருக்கிறாய் என்று கேட்டால் மக்களிட மிருந்து வரும் பதில்  எல்லாம் அவன் செய்த புண்ணியம் - நாங்கள் செய்த பாவம் என்கின்ற  பதில் வரும்.  இந்த பாவ - புண்ணிய தத்துவம் என்பது உழைக்கும் மக்களையே தங்களது இழிநிலைக்குக் காரணம் தாங்கள் தான் - தங்களை சுரண்டிப் பிழைக்கிற  உயர்ஜாதியினரோ, பணக்காரர்களோ, முதலாளிகளோ அல்ல என்கின்ற ஒரு சிந்தனையை உருவாக்கி சுரண்டல்வாதிகளுக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்கி வைத்திருக்கிறது.

அந்த பாவம் - புண்ணியம் என்கிற சிந்தனையைப் பாதுகாத்து காலா காலத்துக்கும் தொழிலாளர்களை ஏழைகளாகவும் கீழ்ஜாதியாகவும் வைத்திருந்து சுரண்டல்வாதிகளைப் பாதுகாப்பதுதான் பிஎம்எஸ் சின் கொள்கை அதுபோல ஏழைகள் கீழ்ஜாதியினர் உயர்ஜாதியினர்களுக்கு குறிப்பாக பார்ப்பனர்களுக்கு சேவை செய்வதன் மூலமாகத்தான் அடுத்த பிறவியில் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும் என்கிறது அவர்கள் கூறுகின்ற அந்த மதம். அதுதான் இந்து மதம். அந்த இந்துமதம்தான் தொழிலாளர்களுக்கும், அதாவது சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடையாது. அவர்கள் சொர்க்கம் அடைய வேண்டும் என்றால் இந்தப்பிறவியில் 'பிராமணர்களுக்கு' தொண் டூழியம் செய்வதன் மூலம் அடுத்த பிறவியில் 'பிராமணராக'ப் பிறப்பார்கள். அதன்பிறகே அவர்கள் மோட்சத்தைஅதாவது சொர்க்கத்தை அடைவார்கள் என்கிறது.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் இந்த ஆத்மா மோட்சம் நரகம் பிதிர்லோகம் மறுபிறப்பு ஆகிய வற்றைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்பு கிறவன் மடையன். அவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன் என்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் இந்த ஆத்மாபற்றியும் சொர்க்கம் நரகம் பற்றியும்  என்ன கூறுகிறார் என்றால்  "இறந்தபிறகு ஆத்மாவுக்கு என்ன ஆகும்? என்ன ஆகாது? என்று வியாக்கியானம் செய்யும் மதம் பணக் காரர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். அவர் களும் சாவகாசமாக உட்கார்ந்து அந்த மதத்தைப் பற்றி நினைத்து நினைத்து தங்கள் பொழுதுகளைப் போக்கிக் கொள்ளலாம். வாழும்போது அனைத்து விதமான உல்லாசங்களிலும் ஊறித் திளைத்தவர்களுக்கு செத்த பிறகும் அதே உல்லாசத்தோடு வாழ மேலே ஒரு லோகம் காத்துக் கிடக்கிறது என்று ஆசை காட்டும் மதம்தானே  ஒரு மதமாகத் தெரியும்? ஆனால் அந்த மதத்தில் இருப்பதனாலேயே மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டவர்களும், உணவு உடை மறுக்கப்பட்ட வர்களும், மனிதர்களாகக்கூட நடத்தப்படாதவர்களும், உலகியல் நோக்கில் மதத்தை அணுகாமல் கண்களை மூடி வானம் பாரத்து வணங்குவார்கள் என்று எதிர் பார்;க்க முடியுமா? இந்தப் பணக்கார சோம்பேறிகளின் வேதாந்தங்களினால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று கேட்பதன் மூலம் இந்த மோட்சம் நரகம் பாவம் புண் ணியம் என்ற தத்துவத்தை சோம் பேறிகளின் வேதாந்தம் என்கிறார்.

அப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு ஆதரவாக இருப்பதற்காக உழைக்கும் மக்களைத் தயார் படுத்துவதே பிஎம்எஸ் ஆர்எஸ்எஸ்சின் கொள்கை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனருக்கு அடிமை யாக்கி பார்ப்பனர்களே நாட்டை ஆள வேண்டும். அவர்களுக்குக் கீழே தொழிலாளர்கள் உழைத்துப் போட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பிஎம்எஸ்சும் ஆர்எஸ்எஸ்சும் செயல்படுகிறது.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அதில் இருப்பது அவமானம் மட்டுமல்ல; அடிமைத்தனம்.  எனவே, உண்மையான தொழிலாளர் தினம் மே தினமே. அதனை சிறப்பாகக் கொண் டாடுவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுப்போம். உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவுவோம்.

- விடுதலை நாளேடு, 30.4.19

Monday 29 April 2019

கோத்ரேஜ் நிறுவன ஊழியர் வ.வசந்தி பணி நிறைவு பாராட்டு!



சென்னை, ஏப்.29 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் 37 ஆண்டுகள் பணி யாற்றி 11.4.19ல் பணி ஓய்வு பெற்றார்..

அவரை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி  முன்கூட்டியே 10.4.19 பிற் பகல் 3.30 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் சார்பிலும், அலுவலர்கள் சார்பிலும் தொழிற் சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. .

கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் த.ரமேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி பொருளாளர் க.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர் கோ.குமாரி  ஆகியோரால் சால்வை அணிவிக்கப்பட்டு, அன்பளிப்புடன் பாராட்டு கேடயமும் வழங்கப்பட்டது. சங்க துணைச் செயலாளர் ம.கருணாநிதி நூல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தொழிற் சாலை, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசேகர், சங்க செயற்குழு  உறுப்பினர் பா.இயேசுராஜா மற்றும் தொழிலாளர்களும் அலுவலர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 -  விடுதலை நாளேடு, 29.4.19 

Saturday 27 April 2019

உலக முதன் மொழி தமிழ்! முதல் தோன்றிய இனம் தமிழினம்!

உலக முதன் மொழி தமிழ்! முதல் தோன்றிய இனம் தமிழினம்! அப்படி என்றால் உலக ஒட்டு மொத்த மனித இனமே தமிழினம் தான்! ஆனால் தற்போதைய அறிஞர்(தந்தை பெரியார் உட்பட)கள், அன்றிலிருந்து இன்றுவரை தொன்மை தமிழிலிருந்து(திராவிடம்) வளர்ச்சி பெற்ற செந்தமிழ் வரை பேசிக்கொண்டு நடந்து கெண்டு வருபவர்கள் தமிழர்கள்.தொன்மை தமிழிலிருந்து (திராவிடம்) செந்தமிழுக்கு முன்பாக மாற்றம் பெற்ற திரிந்த மொழியாக மாறிய மொழிகளை(மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,துளு,பிராகுயி மற்றும் பல)பேசிக்கொண்டு நடந்து கெண்டு வருபவர்கள்யும்,தமிழர்களையும் சேர்த்து திராவிடர்கள் என பகுத்தனர்.

- 27.4.2014 முகநூலில் நான் பதித்தது.

Monday 22 April 2019

மோடி ஆட்சியில் தொழிலாளர்களுக்கு இழைத்த அநீதி



1) இந்தியப் பிரதமர், முதலீட்டாளர்கள் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய - மாநில அரசுகள் பங்கேற்கும் தொழிலாளர்கள் நிலை பற்றி விவாதிக்கும் இந்திய தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference)ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. மோடி ஆட்சியில் கடந்த நான்காண்டுகளாக நடைபெற வில்லை . -

2) பணமதிப்பிழப்பு செய்ததால் 234லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டு 5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

3) மத்திய தொழிற்சங்கங்கள் பல்வேறு சமுகப் பாதுகாப்புத் திட்டங்களை உள்ளடக்கிய 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங் கள் நடத்தியும், கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் மத்திய தொழிற்சங்கங்களை அழைத்துப்பேசிடவில்லை. தொழிற்சங்கங்களை உதாசீனப்படுத்தும் நிலையை உருவாக்கியதோடு தொழிலாளர் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.

4) தொழிலாளர்களுக்கு பாதுகாப்புத் தரக் கூடிய 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4சட்டங்களாக்கி தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த உரிமைகளை பறித்ததுடன் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.

5) மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் லாபம் ஈட்டினால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவித்து ஊதிய உயர்வு மறுக்கப் படுகிறது.

6) வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.அய். திட்டத்தை விருப்புரிமை அடிப்படையில் பிடித்தம் எனக்கூறி தொழி லாளர்கள் பெற்று வந்த சலுகைகளை, சமூகப் பாது காப்பை புறக்கணித்துள்ளது.

7) வருங்கால வைப்பு நிதித் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளது. இதனால் ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதியத்திற்கு உத்திரவாதம் இல்லாமல் உள்ளது.

8) மோட்டார் வாகன சட்டத்திருத்தம் செய்து, சாலைப் போக்குவரத்து தொழிலை கார்ப்பரேட்டிற்கு தாரை வார்க்கும் முடிவால் மோட்டார் தொழிலை அழித்திடும் நிலையும் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில் செய்வோரும் தொழிலாளரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

9) மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து உருவாக்கிய ஒப்பந்தங்களை ஏற்க மறுப்பதால் தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

10) மத்திய அரசு துறையிலுள்ள காலிப் பணியிடங் களையும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள, காலிப்பணியிடங்களையும் நிரப்பாமல் உள்ளது.

11) மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தங்களை உருவாக்க கட்டுப்பாடு - விதித்து ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல் இருப்பதால் ஊழியர்கள்ஊதிய உயர்வு கிடைக்காமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

12) தொழிலாளர்கள் தொழிலகங்களில் பெற்று வந்த நிரந்தரத் தன்மையை மாற்ற குறிப்பிட்ட காலவேலை (Fixed Term Employment) என நிர்ணயித்து நிரந்தர வேலையினை ஒழிக்க முற்பட்டுள்ளது.

13) மின்சார சட்டம் கொண்டு வந்து மின்துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளது.

14) அங்கன்வாடி, ஆஷா, மத்திய உணவு திட்ட பணியாளர்களுக்கான தொழிலாளர் (Scheme Worker)தரம்  தர மறுப்பது.

15) இந்திய தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டசமவேலைக்கு சம ஊதியம் என்ற திட் டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது.

16) குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 தரப்பட வேண்டும் என்கிற தொழிற்சங்க கோரிக்கையை ஏற்க மறுப்பது.

17) புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுப்பது.

18) NEEM (National Employability Enhancement Mission) NETAP (National Employment Through Apprenticeship Programme) போன்றவை மூலம் நிரந்தரப் பணியாளர்களை ஒழிக்கும் செயலை மேற்கொள்வது.

19) தமிழகத்தில் ராஜாஜி முதலமைச்சராகயிருந்த போது கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை "தொழிற்கல்வி என்ற பெயரில் மறைமுகமாக குலத் தொழிலை செய்யும் நிலையை உருவாக்குவது.

20) குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாமல் இருப்பது.

21) வேலைவாய்ப்பை உருவாக்காமல் நாளுக்கு நாள் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்துதல்.

இவை மோடி அரசால் தொழிற்சங்கங்களுக்கும் - தொழிலாளர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகள் -சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்நிலை மாறிட வேண்டுமானால் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்து - வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

-  விடுதலை ஞாயிறு மலர், 13.4.19

Friday 19 April 2019

2018ஆம் ஆண்டே சமஸ்கிருதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம்- நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?

மேற்கண்ட கேள்வியைக் கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியிருந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பதவிகளில் இந்துக்களை மட்டுமே நியமிக்கும் முயற்சிக்கும் இக்கேள்வி முட்டுக்கட்டை போட்டது. வழக்கின் சாரம் இதுதான். 2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commision) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப்படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும் (Diploma in Epigraphy) முடித்திருந்த திரு. நல்லா முகமது என்பவர் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.

விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற காரணம் குறிப்பிடப்பட்டு, தேர்வாணையம் நல்லா முகமதுவின் விண்ணப்பத்தை நிராகரித்தது. கல்வெட்டாய்வாளர் அல்லது தொல்லியல் அலுவலர் பதவிக்குச் சமயம் தடையாக இருப்பின், நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் (Curator) என்ற பதவிக்காவது தனது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்வாணையத்தைக் கோரியிருந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, திரு. நல்லா முகமது அவர்கள் தனக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்கு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க முடியாது என்று கூறியது. இதைத் தொடர்ந்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, மேற்கண்ட கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர்.

சமஸ்கிருதம் என்ன, யாராலுமே கற்றுக்கொள்ள இயலாத ஒரு மொழியா? அல்லது இந்துக்களைத் தவிரப் பிற மதத்தவர்கள் கற்றுக்கொள்ள ஏதாவது தடை இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16இல் 1ஆவது பிரிவு அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அரசுப்பணிகளில் சம உரிமையை உறுதியளித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு மட்டும் தனது பதவிகளுக்கு இப்படியொரு நிபந்தனையை விதிக்கும் உரிமை எங்கிருந்து கிடைத்தது என்று சாடியிருக்கிறது நீதித்துறை. அது மட்டுமின்றித் தன் கண்டனத்தைக் கீழ்க்கண்ட வாசகங்களால் பதிவு செய்துள்ளது.

“The authorities cannot make it appear that the department of archaeology is a wing of the Hindu Religious and Charitable Endowment (HR&CE) Board... There are other religions such as Buddhism, Jainism, Christianity and Islam, which also had their own sway over the political and geographical boundaries in the areas now known as Tamil Nadu. Therefore, when authorities called for applications for the posts of archaeologists or epigraphists, they ought not to have made blanket reservation in these posts for candidates belonging to Hindu religion alone.”

இந்து சமய அறநிலையத்துறையின் பிரிவு போன்று தொல்லியல் துறை செயல்படாமல் இருக்க வேண்டு மானால், பிற மதங்களுடனும் சாதிகளுடனும் நல்லிணக்க மாகச் செயல்படும் பக்குவம் அத்துறையின் அதிகாரி களுக்கு இருக்கவேண்டும். குறிப்பாக இத்தகைய பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் கொண்ட உயரதிகாரி களுக்கு வேண்டும். தன் மதத்தின்மீதும் சாதியின்மீதும் பற்றுக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்பற்று பிறர் மீதான வெறுப்பாக மாறக்கூடாது. இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். புத்தம், சமணம், கிறித்தவம், இசுலாமியம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் சுதந்திர நாடு என்பதை மறந்து, இந்துக்களின் நாடு இந்தியா என்ற கொள்கையை ஆதரிப்பதில் முன்னணியில் நிற்பவர்களாலும் மதத்தின் பெயரால், மதவழித் தேசியத்தின் அடிப்படையில் தனிநாடு வேண்டும் என்று கோருபவர்களாலும்தான் இவ்வாறு நல்லிணக்கமாகச் செயல்பட முடியாது.

பிற மதத்தவரை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் வெறுப்பு கடுகளவேனும் அடிமனதில் குடிகொண்டிருக்கும். ஒரு மனிதன் தனது தனிப்பட்ட வாழ்வில் இத்தகைய கொள் கைகளைப் பின்பற்றுவது அவனுடைய உரிமை. ஆனால், அத்தனிமனிதன் அரசு அதிகாரியாக ஆகும் போது, அதுவும் பிற மதத்தவர்களும் அத்தனிமனிதனை வேலைக்கு அமர்த்தியிருக்கும் அரசாங்கத்தின் அங்கம் எனும்போது, தனது தனிப்பட்ட கொள்கைகளை விலக்கி வைப்பதே நேர்மையான அதிகாரிகளுக்கு அழகு. எப்படி ஒரு வரலாற்றாய்வாளர் தனது ஆய்வின் முடிவுரையை எழுதும்போது தனது மொழி, அரசியல், மதச்சார்புகள் அம்முடிவைப் பாதிக்கக்கூடாதோ, அவ்வாறே ஓர் அரசு அதிகாரியும் துறை சார்ந்த முடிவு களை எடுக்கும்போதோ, அம்முடிவுகளைச் செயல் படுத்தும் நோக்கில் பிறப்பிக்கும் உத்தரவுகளிலோ தனது மொழி, அரசியல் மற்றும் மதச்சார்புகள் குறுக்கிடக்கூடாது. தொடர்புடைய அதிகாரிகள் புரிந்து நடந்தால் தமிழக வரலாறு வளம் பெறும்.

- சரவணா ராசேந்திரன்

- விடுதலை நாளேடு, 16.4.19