Tuesday 29 August 2023

குலக்கல்வியை எதிர்த்து உயிர் விட்ட நுங்கம்பாக்கம் பழனி

“உழைப்பவனைத் தேடிப் பிடித்துச் சேர்த்தால் ஒரு கட்சிக்கு உன்னதமான கட்டுக்கோப்பு உண்டு. கிடைப்பவனைக் கொண்டு நடத்திச் செல்லும் போக்கு சிறந்த கட்டுக்கோப்பை யளிக்காது.’’ நம் அறிஞர் அண்ணா அவர்களின் இந்த மணி வரிகளுக்கு ஏற்ப _ கட்சியின் கட்டுக்கோப்பை வளர்க்கும் தொண்டர் பணியின் முன்அணியில் நின்றவர் _ முகப்பில் நிற்பவர், நுங்கை வட்டத்து செயல்வீரர். பூக்காடாம் திராவிடத்திற்கு தன் கடமை செய்து சாக்காட்டில் புகுந்துவிட்ட வீரன். மாநில மாநாட்டின்போது கடமை உணர்ச்சிக்காக அண்ணாவால் பாராட்டப் பட்ட நெஞ்சுரம் கொண்டோன். நல்இளைஞன். நம் பழம் நீ!

இந்த இளம் விளக்கு _ கொலைகாரர் ஆச்சாரியார் கொண்டுவந்த கல்வி திட்டத்தின் போது களம் கண்டார். கல்வித் திட்டத்தை எதிர்த்து அறப்போரில் ஈடுபட்டார். பாண்டிபசாரில் ஊர்வலம் செல்கிறது. கலையச் சொன்னார்கள் போலீஸ் காரர்கள். கலையவில்லை; தாக்கினார்கள் தாக்கினார்கள், மண்டை பிளந்து மார்பகம் எல்லாம் ரத்தம் வழிய மலபார் போலீசார் தாக்கினார்கள். அப்பொழுதும் ‘புதிய கல்வித் திட்டம் ஒழிக! ஒழிக!’ என்று கூறியபடியே சாய்ந்தார்! சிறைப்பட்டார். சரியான உணவின்றி சிலநாள் வாடினார். கடும்சுரம் அவரை அணைத்துக் கொண்டது. 29.8.1954இல் மாண்டு போனார். ஒரு கொள்கை வீரன் மறைந்து போனான்.

பழம் நீ! தாயகத்திற்கு உழைத்தார்; தொண்டாற்றினார்; கைத்தறித் துணிகளைத் தலையில் சுமந்து விற்றார். இப்படி அவர் நாட்டிற்குத் தந்த உழைப்பு பெரிது. நுங்கை வட்டத்திற்கோ அதனினும் பெரிது. இன்று கல்லறையில் இருந்தபடியே கலங்கரையாக விளங்குகிறார் தொண்டர்களுக்கு. தொண்டர் களுக்கு மதிப்பளிக்கிற இயக்கம் தி.மு.க என்பதால், அந்தக் கடமை வீரருக்கு வணக்கம் செலுத்துகிறோம். அவர் கல்லறைக்கு மரியாதை செய்கிறோம்.

“நானேறுகிறேன் நலிவின்றி நீ இருப்பாய், ஊனெடுத்தோம் என்ன பயன் ஊருக்கு உழைப்போம்!’’ ஆம்! இதைத்தான் அவர் கல்லறை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது!

(தரவு: ‘தென்றல்’ - 04.12.1954)
-உண்மை இதழ்,1-15.8.16

Monday 28 August 2023

பெண்ணுரிமை - கல்வி - ஏழைகளுக்கு எதிரானவர் திலகர் திலகரின் எழுத்துகளிலிருந்தே சான்றுகளை எடுத்து வைக்கிறது பி.பி.சி.

 

 11

மகாராட்டிராவை 1850களில் மகாத்மா ஜோதிபாய் புலே அதன் பிறகு கோவிந்த ரானடே, கோலப்பூர் சாகு மகாராஜ், பீம்ராவ் அம்பேத்கர் போன்றோர் நூற்றாண்டுகளாக சமூகநீதிக்களமாக பயன்படுத்தி மாற்றி அமைத்தனர். 

விவசாயத் தொழிலாளி, மகளிருக்கு அதிகாரம் அளித்தல், அனைவருக்கும் கல்வி மற்றும் தீவிரமான சமூக சீர்திருத்தம் என்ற 4 அடிப்படை கொள்கைகளை முன்வைத்தனர். இந்த நிலையில் தான் 1881 ஆம் ஆண்டில் பத்திரிகையாளராக தனது தொழிலைத் தொடங்கிய திலகர் மேலே கூறிய 4 கொள்கைகளிலும் முற்றிலும் எதிர்மறையாக திகழ்ந்தார்.  அவருடைய வாழ்நாள் முழுக்க அடித்தட்டு மக்களுக்கான உரிமைகள் கிடைப்பதை கண்டு வெறுப்பின் உச்சத்தில் வாழ்ந்தார். 

ஜோதிபா புலே அவரைத் தொடர்ந்து எம்.ஜி.ரானடே மற்றும் சீர்திருத்தவாதிகள் 1884இல் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து நடத்தியபோது திலகர் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றார்.

'த மராட்டா' என்ற மராட்டி இதழில் 1881-1897 காலக்கட்டத்தில் திலகர் தான் அதன் உரிமையாளர் மற்றும் ஆசிரியராக இருந்தார்.  அகில் பாரதிய இந்து மகாசபாவின் தலைவராக இருந்த என்.சி. கேல்கருடன் இணைந்து இணை ஆசிரியராக செயல்பட்டார்.

’கொடூர வட்டிக்கு பணம் தரும் பனியாக்கள் 

விவசாயிகளின் கடவுளாம்’

  1874-1879 காலக்கட்டத்தில் பஞ்சத்தால் சிறு விவசாயிகள் துன்புற்ற போது, டெக்கான் விவசாயிகள் நிவாரண மசோதாவை விவசாயிகள் நல அமைப்பின் சார்பில் எம்.ஜி. ரானடே மற்றும் ஆங்கிலேய நிர்வாகத் தலைவர் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது.

சிறு விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், அவர்கள் வருவாய் உயரும் போது  கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறைகள் கொண்டதாகவும் அந்தத் திட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தையும், வங்கிகளையும் திலகர் விமர்சித்தார்.

வட்டி முதலாளிகள் 'விவசாயிகளின் கடவுள்' போன்றவர்கள் என்று அவர் கூறினார். கடன் கொடுத்தவரின் பணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், சிறு விவசாயிகளை சிறையில் தள்ளும் வகையிலான சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக பிரிட்டீசார் தங்களது நிர்வாகத்தின் கீழ் வங்கிகளை  கொண்டுவருவது இல்லை, அவை பனியாக்களின் கைகளிலேயே இருக்கட்டும் என்று 1885இல் அரசு முடிவு செய்தது. இது திலகருக்கு கிடைத்த முதலாவது வெற்றியாக அமைந்தது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க உருவான டெக்கான் சபாவை நோயுற்றவர்களின் அமைப்பு என்று திலகர் கூறினார். ரயத்வாரி நிலப் பகுதிகளுக்காக தனியாக ஓர் இயக்கத்தை அவர் நடத்தினார். வட்டிக்கு பணம் தருபவர்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்  (The Mahratta, 25 பிப்ரவரி 1900, Suspension and Remission of Revenue, தலையங்கம்).

தன்னுடைய கல்வி செயல் திட்டம் முழுக்க தொடர்ச்சியாக திலகர் கடைப்பிடித்து வந்த ஜாதிய முறைகளை ஆதரிக்கும் வகையிலும், அவருடைய சிறு விவசாயிகளுக்கு எதிரான அணுகுமுறை தொடர்பிலும் இருந்தது. `சிறு விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் படிக்க, எழுத, வரலாறு, புவியியல் மற்றும் கணிதம் கற்றுத் தருவதால் நடைமுறை வாழ்க்கையில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை' என்பது திலகரின் வாதமாக இருந்தது.

அது `அவர்களுக்கு நல்லதைவிட அதிக கெடுதலையே செய்யும்' என்பது அவருடைய கருத்தாக இருந்தது. பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு `தச்சு, பொற்கொல்லர், மேஸ்திரி, தையல் வேலை, வாழ்க்கையில் அவர்களின் நிலைக்கு ஏற்ற மிக சாதாரணமான தொழில்களை' கற்றுத்தர வேண்டும் என்று அவர் கூறினார். அதுதான் `கல்வியில் அறிவார்ந்த முறையாக இருக்கும்' என்று திலகர் கூறினார்.

1881ஆம் ஆண்டில் அரசாங்கம் 200 பேர் வாழும் அனைத்து கிராமங்களிலும் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்க வேண்டும் என்று பூனா சர்வஜனிக் சபா கோரிக்கை விடுத்தது. அதை திலகர் எதிர்த்தார். `சிறு விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பது பணத்தை வீணடிக்கும் செயல்' என்று அவர் கூறினார். அனைவருக்கும் கல்வி என்று ரானடே தொடர்ந்து வலியுறுத்துவதை திலகர் எதிர்த்தார். `அரசுப் பணம் என்பது வரி செலுத்துபவர்களின் பணம். அந்தப் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை வரி செலுத்துபவர்களுக்கு தான் உள்ளது' என்று அவர் கூறினார் (The Mahratta, 15 May 1881, Our system of Education-A Defect and a Cure).

நிலவுடைமை உள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி தரவேண்டும் என்றார் திலகர்

பம்பாய் பல்கலைக்கழகத்தில் பார்ப்பனர் அல்லாதோர் அதிக எண்ணிக்கையில் சேர உதவும் வகையில், நுழைவுத் தேர்வுக்கான பாடத் திட்டங்களை நீக்க வேண்டும் என்று ரானடே மேற்கொண்ட முயற்சிகளையும் திலகர் எதிர்த்தார் (The Mahratta, 7 August 1881, Our University I).. ஆங்கிலக் கல்வியை திலகர் எதிர்க்கவில்லை. `ஆங்கிலக் கல்வியை நாட்டில் அறிமுகம் செய்வதற்கு முன்பு நாம் அறியாமையில் இருந்த கூட்டமாக இருந்தோம்' என்று அவர் நம்பினார். நிலவுடைமை உள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப்பட வேண்டும்,  என்று அவர் விரும்பினார் (The Mahratta, 21 August 1881, Our University III). அவருடைய விமர்சனங்கள் பார்ப்பனர் அல்லாதோர் எதிர்ப்பை சம்பாதித்தது.

எனவே 1891இல் தேசத்தின் கட்டமைப்புக்கு ஜாதி அமைப்பே அடிக்கல் என்று அவர் வாதிடத் தொடங்கினார். கல்வி கற்ற பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் இடையில் வேறுபாடு கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. இப்படி இருந்தால் புரட்சி வெடிக்கும் என்று அவர் கூறினார் (The Mahratta, 22 March 1891, What shall we do next? Editorial).

ஜாதிக்கு மட்டுமே சக்தி உள்ளது' என்ற தலைப்பில் எழுதிய அவருடைய தலையங்கத்தில் (10.5.1891) `ஜாதியத்தின் தாக்கம் இல்லாமல் போயிருந்தால் நமது ஹிந்து தேசம் என்பது நீண்ட காலத்துக்கு முன்பே காணாமல் போயிருக்கும்; ரானடே போன்ற சீர்திருத்தவாதிகள் `ஜாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். தேசத்தின் உயிர்த்துடிப்பை அழிக்கப் பார்க்கிறார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.

மத அடையாளங்கள் இல்லாத கல்வி முறை `மத அடிப்படைகளை மறுக்கும்' கருத்தை விதைப்பதாகக் கூறி அதை திலகர் நிராகரித்தார். பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் மத அடிப்படையிலான கல்வி `மறுக்கக் கூடாத தூய்மை மற்றும் எளிமையைக் கொண்டதாக இருக்க வேண்டும். கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று பள்ளிக்கூட மாணவர்களிடம் சொல்ல வேண்டும். அதற்கு எந்த மாணவராவது கண்ணால் காணும் ஆதாரம் கேட்டால், அவரை பிரம்பால் அடித்து மவுனமாக்கிவிட வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார் (The Mahratta, 3 July 1904, Religion Education, Editorial).

இந்தியர்களை ஹோம் ரூல் லீக் பார்ப்பனர்கள் ஆள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். `நால்வர்ணம் என்ற ஜாதிய முறை பிரிட்டிஷ் ஆட்சியில் சிதைந்துவிட்டது' என்று கூறி ஹோம் ரூல் முறையை அவர் வலியுறுத்தினார்.

 ஜம்காண்டி நகரின் பார்ப்பனர் அல்லாத தலைமை நிர்வாகியை கோல் இல்லாத கூனுள்ள கிழவன் என்று திலகர் விமர்சித்தார் (The Mahratta, 21 April 1901, Non-Brahmin Craze, Editorial). பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையைக் கொண்டுவந்த கோலாப்பூர் மகாராஜாவுக்கு `புத்தி பேதலித்துவிட்டது' என்று அவர் ஏளனம் செய்தார்(The Mahratta, 15 November. 1903). 

பெண் கல்வி என்ற முயற்சிக்கும் இதேபோல திலகரிடம் இருந்து பலமான எதிர்ப்பு எழுந்தது. ரானடே புனேவில் தொடங்கிய பெண்கள் பள்ளிக்கூடத்தில் வழக்கமான பாடத் திட்டங்கள் இருந்தன. அதனால் பெண்களால் உயர் கல்வி கற்க முடிந்தது. `தேசத்தில் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு பெண் கல்வி அவசியம்' என்று ரானடே வலியுறுத்தினார்.

பெண் கல்விக்கு எதிர்ப்பு

மராத்தா, குன்பி, சோனார், மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தார்கள். அவர்களில் பலரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சில உயர்ஜாதி பெண்களுடன் தாழ்த்தப்பட்ட ஜாதிப்பெண்கள் ஒன்றாக சேர்ந்து கல்வி பயில்வது குறித்து திலகர் விமர்சித்தார். "பெண்கள் கல்வி கற்பதால் என்ன பயன்? இதனால் பெண்களின் மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கை அழிவை நோக்கிச் செல்கிறது" என்று திலகர் கூறினார் (The Mahratta, 28 September 1884).

"பெண்களுக்கு தேவைப்பட்டால் தையல், சமையல், இதர வீட்டு அழகு வேலைப்பாடுகள்' மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காலை அல்லது மாலையில் தினமும் 3 மணி நேரம் மட்டுமே பள்ளிக்கூடம் நடத்த வேண்டும். எனவே, பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க நேரம் கிடைக்கும்  (The Mahratta, 18 September 1887 Curriculum of the Female High School, Is It In The Right Direction?) என்றும் அவர் கூறினார். `பாடத் திட்டத்தை உடனடியாக சரி செய்யாவிட்டால்,கணவரை மதிக்காத பெண்கள் உருவாகி பின்னர் உரிமைகளைக் கேட்பார்கள்" என்று திலகர் எச்சரிக்கை விடுத்தார்.

1890ஆம் ஆண்டில் 30 வயதான கணவர் ஹரி மைத்தி என்ற பார்ப்பனருக்கு 10 வயதான சிறுமி புல்மோனி என்பவரைத் திருமணம் செய்துவைத்தனர். அந்த சிறுமியோடு வலுக்கட்டாயமாக அவர் உடலுறவு கொண்டதால் கடும் உதிரப்போக்கு ஏற்பட்டு அந்தச்சிறுமி மரணமடைந்தார்.

இது தொடர்பாக எழுதிய திலகர் ஹரிமைத்தி சமூகத்தில் கற்ற மரியாதைக்குரிய இளைஞர் அவர் - ஏற்கெனவே மனைவியை இழந்திருக்கிறார் ஆகையால் `அவர் மீது குற்றம் சொல்ல வேண்டாம்' என்று மக்களை திலகர் கேட்டுக் கொண்டார்  (The Mahratta, 10 August 1890, The Calcutta Child-Wife Murder Case, Editorial).

1900 ஆண்டுக்குப் பிறகு தேசியத் தலைவராக மதிக்கப்படும் நிலையில் திலகரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதா? அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. "சிறு விவசாயிகளை நில உடைமையாளர்கள் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களிடம் இருந்து விடுவித்துவிட்டது" என்று காலனி ஆதிக்க அரசின் மீது திலகர் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார் (The Mahratta, 8 November 1903, Inamdar's Grievances, Editorial).

இனாம்தார்கள் மற்றும் கோட்கள் போன்ற பெரிய நில உடைமையாளர்களை அவர் தீவிரமாக ஆதரித்தார். சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதை எதிர்த்தார் (The Mahratta, 27 September 1903. The Khoti Bill, Editorial). 1915இல் டி.கே. கார்வே புனேவில் பெண்கள் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியபோது திலகர் எதிர்த்தார். `சராசரி இந்துப் பெண்ணை தன் கணவரின் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆற்றவேண்டிய சிறப்புக் கடமைகளைக் கொண்ட ஒரு மருமகளாகத் தான் பார்க்க வேண்டும்' என்பது திலகரின் வாதமாக இருந்தது. `சமையல், வீட்டுப் பொருளாதாரம், குழந்தை பராமரிப்பு' என்ற விடயங்களை மட்டும் பாடத் திட்டமாக வைக்க வேண்டும் என்று கார்வேயை திலகர் கேட்டுக் கொண்டார்  (The Mahratta, 27 February 1916, Indian Women's University). பெண்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, திலகரின் The Mahratta  இதழும், நகராட்சியில் அவருடைய ஆதரவாளர்களும் அதை எதிர்த்தனர் (The Mahratta 17 August 1919, Free and Compulsory Education in Poona).

மறுபக்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்பு

 1885ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகம் எங்கும் சமத்துவச் சித்தாந்தம் கம்யூனிஸ்ட் பெயரில் பரவ அதனை தின்று ஜீரணிக்க தானும் ஒரு கம்யூனிஸ்ட் போல் காட்டிக்கொண்டார்.  பிரிட்டனில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய உறுப்பினர்களுடன் திலகர் நெருங்கிய தொடர்பில் இருந்தார். லெனினை, ரஷ்யப் புரட்சியை அவர் புகழ்ந்தார். திலகரை பெருமைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரராக சோவியத் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் வரலாற்றாளர்கள் கருதும் அளவிற்கு கம்யூனிச ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்வதில் வெற்றி பெற்றார். அவரது இந்த கம்யூனிச வேடத்தின் பின்னால் விவசாயிகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான, ஜாதி அமைப்புக்கு ஆதரவான செயல்பாடுகள் மறைந்து போனது. 

நூற்றாண்டு கடந்துவிட்டது இன்றும் மகாராட்டிராவில் விவசாயிகள்  தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஜாதிய மத மோதல்கள் தீவிரமாக உள்ளது, பெண்கள் கொல்லப்படுகின்றனர், கல்வி மறுக்கப்படுகிறது. புலே கையிலெடுத்து அம்பேத்கர், சாகுமகராஜ் போன்றோர் விட்டுச்சென்ற மிகவும் துடிப்பான மகாராட்டிராவை  மோசமாகப் பிளவுபட்ட மகாராட்டிராவாக விட்டுச் சென்றுள்ளார்.

சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்

 

 3

இளமைக் காலந் தொட்டே சுதந்திர உணர்ச்சி யோடு விளங்கிய பெரியார். 1910-1919 ஆண்டுக் காலத்தில் பல்வேறு பொது நல அமைப்புகளில் பங்கு கொண்டு, 29-க்கும் மேற் பட்ட பதவிகளிலிருந்தார்.

சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்:

1. 1915 -1919 ஈரோடு - வியாபார சங்கத் தலைவர்

2. தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினர்.

3. அய்ந்து ஜில்லாகளுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்

4. ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி.

5. பழைய மாணவர் சங்க செக்ரட்டரி

6. ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி

7. ஹைஸ்கூல் போர்டு தலைவர்

8. 1914 - கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி

9. பத்து ஆண்டுகள் ஆனரரி மாஜிஸ்ரேட்

10. ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடென்ட்

11. ஈரோடு முனிசிபல் சேர்மன்

12. ஜில்லா போர்டு மெம்பர்

13. வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி

14. பிளேக் கமிட்டி செக்ரட்டரி

15. கோவை ஜில்லா 2ஆவது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரி - 10 ஆண்டு

16. கோவை ஜில்லா தேவஸ்தான கமிட்டி வைஸ் பிரசிடெண்ட்

17. கோவை ஜில்லா தேவஸ்தான கமிட்டி பிரசிடென்ட், 1920 வரை

18. 1918 உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்.

19. 1918-யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசி கண்ட்ரோலிக் டிஸ்ரிபியூட்டிங் ஆஃபீசர்.

20. கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி.

21. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி.

22. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.

23. காதி போர்டு ஃபவுண்டர், அமைப்பாளர்

24. காதி போர்டு தலைவராக 5 ஆண்டுகள்

அவர்தம் இளமைப் பருவம் முதற்கொண்டே பெரியார் ஜாதி, சமய வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்காதவர். பெரியார் அவர்கள் ஈரோடு நகராட்சி மன்ற தலைவராக இருந்த காலத்தில், காங்கிரசில் புகழோடு திகழ்ந்த திருவாரூர் வி.கல்யாணசுந்தர முதலியார், சேலம் நகராட்சி மன்றத் தலைவர் சி.இராஜகோபாலச்சாரியார், சு. வரதராஜூலு நாயுடு ஆகியோரின் விருப்பத்துக்கிணங்க பெரியார் தம்மைக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். சில காங்கிரஸ் மாநாடுகளில் பங்கு கொண்டும், காங்கிரசுக்குள்ளே சென்னை மாகாண சங்கத்தில் சேர்ந்து பார்ப்பனரல்லாதாருக்கு பதவிகளில் விகிதாச்சாரம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தும் பணியாற்றிய பெரியார், 1919-ஆம் ஆண்டுதான் காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்தார்.

'ஹிந்தி' யாருக்குத் தாய்மொழி?

  

ஹிந்தியை எப்படியாவது இந்தியாவின் தேசிய மொழியாக. உள்ளிட்ட எந்த இந்தியாவின் ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட எந்த வடநாட்டாருக்கும் 'ஹிந்தி' தாய்மொழி அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் தாய்மொழியும் கீழே தரப்பட்டுள்ளன.

தமிழ்நாடு: தமிழ்மொழி

கேரளம்: மலையாள மொழி

ஆந்திரா, தெலங்கானா: தெலுங்குமொழி

கருநாடகா: கன்னடம், துளு மொழி

மகாராட்டிரா: மராத்தி, கொங்கணி மொழி

குஜராத்: குஜராத்தி மொழி

பஞ்சாப்: பஞ்சாபி மொழி

ராஜஸ்தான்: ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி மொழிகள்

அரியானா: அரியானா மொழி

இமாசலப்பிரதேசம்: மஹாசு. பஹாரி. மண்டேலி. காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி மொழிகள்.

ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரி. டோக்ரி. பாடி. லடாக்கி மொழிகள் 

உத்தராகண்ட்: குடவாலி, குமோனி மொழிகள்

உத்தரப் பிரதேசம்: பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி, போஜ்புரி, பந்தேலி. பகேலி மொழிகள்

பீகார்: போஜ்புரி, மய்திலி மொழிகள்

ஜார்கண்ட்: சந்தாலி மொழி

சதீஸ்கர்: கோர்பா மொழி

மத்தியப்பிரதேசம்: மால்வி, நிமதி, பகேலி மொழிகள்

மேற்கு வங்கம்: வங்க மொழி

ஒடிசா: ஒடியா மொழி

வடகிழக்கு மாநிலங்கள்: அசாமி, போடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி,கொக்பராக், மணிப்பூரி மொழிகள்

இப்படி யாருக்கும் தாய்மொழியாக இல்லாத ஹிந்தி மொழியை எந்தவித இலக்கண, இலக்கியத் தொன்மையும் இல்லாத ஒரு மொழியை யாருக்காகத் திணிக்க முயல்கின்றனர்? எதற்காகத் திணிக்க முயல்கின்றனர்? இந்தியாவின் பொதுமொழியாக ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? 

(நன்றி: 'முகம்' - நவம்பர் 2022)


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது.

 29

25



"தகைசால் தமிழர்" விருது மட்டுமல்ல, இதுவரை உலக அளவில் அவர் பெற்ற பெற்ற விருதுகள் எத்தனை, எத்தனையோ!

கி. வீரமணி பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது.

•  1993ஆம் ஆண்டு நாகை பெண்கள் மாநாடு 'இனமானப் பேரொளி' என்ற பட்டத்தினை வழங்கியது.

•  1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய. 'தந்தை பெரியார் சமூக நீதி விருது'.

•  2000ஆவது ஆண்டில் புதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் வழங்கிய, 'பாரத் ஜோதி' விருது.

• 2003ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் தமிழ்ச்சங்கம் வழங்கப்பட்ட ‘ஆக்ஸ்போர்டு தமிழ் விருது'.

•  2003ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம்.

•  2003ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் வழங்கிய, ‘பேரறிவாளர்' விருது.

•  2009ஆம் ஆண்டு மலேசிய திராவிடர் கழகம் வழங்கிய கருத்துக் கனல் விருது.

•  2009ஆம் ஆண்டு முரசொலி அறக்கட்டளை வழங்கிய, ‘கலைஞர் விருது'.

•  2010ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய, ‘பெரியார் ஒளி விருது'.

•  2010ஆம் ஆண்டு கோவை கே.ஜி. அறக்கட்டளை வழங்கிய, 'ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது'.

•  2011ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் பி.எஸ்.ஏ.சாமி அறக்கட்டளை வழங்கிய ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது'.

•  2012ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி வழங்கிய “வாழ்நாள் சாதனையாளர் விருது''. 

2019ஆம் ஆண்டு "அமெரிக்க மனித நேய சங்கம்" வழங்கிய "மனித நேய வாழ்நாள் சாதனையாளர்' விருது.

•  2019ஆம் ஆண்டு காஞ்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய, ‘தந்தை பெரியார் விருது'.

•  2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயங்கும் மகாராஷ்டிரா ஃபவுண்டேஷன் சார்பில் "நரேந்திர தபோல்கர் விருது".

•  2022ஆம் ஆண்டு உலக திராவிட மகளிர் மாநாட்டில் "பகுத்தறிவுப் போராளி" என்ற பட்டம்.

•  2022ஆம் ஆண்டு கனடா டொராண்டோவில் வழங்கப்பட்ட 'வாழ்நாள் சாதனையாளர் விருது'. 

2023ஆம் ஆண்டு காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட, ‘பொதுவாழ்வில் நேர்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.

இந்த வரிசையில் 25.06.2023 அன்று டெல்லியில் சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைப் போராட்டக் கல்வி தொடர்பான தொடர் பணிக்கான ’வாழ்நாள் சாதனையாளர்  விருது-2023’ தலைநகர் டில்லி பிரகதி திடலில் உள்ள ‘சி.ஜி. ஸ்மார்ட் ஹாபிடேட் பவுண்டேசன்’ அமைப்பு மற்றும் 'டி ஆர்க்  பில்டு அமைப்பு' வழங்கியது.

''...க்குத் தெரியுமா கற்பூர வாசனை? - கவிஞர் கலி. பூங்குன்றன்'' என்கின்ற கட்டுரையின் ஒரு பகுதி ( )


Friday 4 August 2023

ஜாதி ஒழிப்புப் போராட்டம் கடந்து வந்த பாதை - 1795 முதல் 2019 வரை


மொழியாக்கம்: 
எம்.ஆர்.மனோகர் 

7

இந்திய வரலாற்றில், 225 ஆண்டுகளில் ஜாதிக்கு எதிரான சட்டங்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளும் கடந்து வந்த பாதைகளை மனோஜ் மித்தா (MANOJ MITTA) அவர்கள் 2023இல் எழுதி வெளியாயின.

“CASTE PRIDE” என்ற நூலிலிருந்து மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது.

மனோஜ் மித்தா புதுடி¬ல்லியில் பணிபுரிந்து வரும் இதழியலாளர். சட்டம், மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி சார்ந்த பிரச்சினைகள் மீது தீவிரமாக கவனம் செலுத்திவரும் எழுத்தாளர் இவர்.

1795 முதல் 2019 வரை. கடந்த 225 ஆண்டுகளில் ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள் பல சட்டச் சிக்கல்களையும், மாற்றங்களையும், தீர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளன. ஆண்டுவாரியாக பட்டியலிட்டால் நீதித்துறை எத்தனை விதமான வர்ணஜாலங்களை, சமூகநீதிக்கு அடிப்படையான ஜாதி ஒழிப்புப் போராட்டம் எத்தனை மைல் கற்களைக் கடந்து வந்துள்ளது என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. 

1795 உயர்ஜாதிக்காரர்களை திருப்திப்படுத்திக் கவரும் நோக்கத்தில் கிழக்கு இந்தியக் கம்பெனி பனாரஸ் வாழ் (இன்றைய வாரணாசி) பார்ப்பனர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்தது.

1816 தாழ்த்தப்பட்ட ஜாதி குற்றவாளிகளுக்கு, சிறு குற்றங்களுக்குக் கூட கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. கால்கள் மட்டும் நீட்டிக்கொள்ளும் வகையில் துளைகள் இடப்பட்ட ஒரு மரப்பலகையுடன் அவர்களைக் கட்டி வைக்கும் மிருகத்தனமான தண்டனை அது.

6

1817 வாரணாசி பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்று மறுபடியும் சட்டரீதியான மாற்றம்.

1829 உடன்கட்டை ஏறும் ‘சதி’ என்னும் மூடப்பழக்கம் வில்லியம் பென்டிங்கால் ஒழிப்பு. மீறி நடந்தால் தண்டனை அறிவிப்பு.

1850 குறிப்பிட்ட ஜாதி எதையும் சாராத ஹிந்துக்களுக்கு சொத்துரிமை தல்ஹவ்ஸி பிரபுவால் கிடைத்தது.

1855 லண்டனில் இயங்கிவந்த சட்ட வல்லுநர்கள் குழு ஒன்று ராஜபுதன வம்சாவளியினர் வர்ணப் பிரிவுப்படி சத்திரியர்கள்தான் என்று ஒப்புதல் வழங்கிற்று.  பரசுராமனால் அழிக்கப்பட்டவர்கள் சத்திரியர்களாக இருக்க முடியாது என்னும் பார்ப்பனர் வாதம் அந்தத் தீர்ப்பால் முறியடிக்கப்பட்டது.

1858 திருவிதாங்கூர் சமஸ்தான திவான் மாதவராவ் தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் தோள் சீலை அணிந்து பொது இடங்களுக்கு வரக் கூடாது என்று உத்தரவிட்டார்.

1859 எதிர்ப்புகள் வலுப் பெற்ற நிலையில் பின்வாங்கிய திவான், தோள் சீலை அணிந்து கொள்ள அனுமதி வழங்கி, உயர் ஜாதிப் பெண்களுக்கு நிகரான அலங்காரம் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தார்.

1862 உயர்ஜாதியினரின் வாதங்களுக்குச் செவி சாய்த்து, பிரிட்டிஷ் அரசு உடன்கட்டை ஏறுதல் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகக் கருதப்படும் என்று அறிவித்தது.

1868 ஜமீன்தார்களின் குடும்பங்களில் நிகழும் சுவீகாரம் அங்கீகரிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு அதைச் சார்ந்து சில நிபந்தனைகள் சட்ட நிபுணர் குழுவால் விதிக்கப்பட்டன.

1887 சமூகச் சீர்திருத்தக் குழுவான அய்.என்.எஸ்.ஸி. அமைப்பின் தலைவராக திவான் மாதவராவ் நியமனம்.

1890 ஜோதிபா பூலே அறிமுகப்படுத்திய சத்திய ஷோகக் திருமண முறையை அங்கீகரித்த மும்பை உயர்நீதி மன்றம், சடங்குகள் மறுக்கப்பட்ட அத்தகைய திருமணங்களுக்கு நட்ட ஈடாக பார்ப்பனப் புரோகிதர் களுக்கு எதுவும் வழங்கப்படக் கூடாது என்று அறிவித்தது.

1898 வைசியர்கள் பூண்டோடு அழிந்து விட்டார்கள் என்னும் பார்ப்பனர் கருத்தை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.ரானடே நிராகரித்து தீர்ப்பளித்தார்.

1908 தாழ்த்தப்பட்ட ஜாதியினர் ஆலய விதிகளை மீறி உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டால் ஆலய அறங்காவலர் குழுவே பொறுப்பேற்க நேரிடும் என்று சட்ட நிபுணர் குழு அறிவித்தது.

1913 நெருப்பில் ஒரு பெண் தவறி விழுந்தாள்; உடன்கட்டை ஏற்றப்படவில்லை என்று ஒரு குற்றவாளி கூறியதை அலகாபாத் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்து அந்த நபருக்கு தண்டனை வழங்கிற்று.

1916 தீண்டாமை ஒழிப்புக்காக போராடி வந்த சமூக ஆர்வலர் மானக்ஜி தாதாபாய் என்பவர் பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை எடுக்க ஒரு சட்ட நிபுணர் குழுவை வற்புறுத்தினார்.

1918 விட்டல்பாய் பட்டேல் ஹிந்துக்களுக்கு ஜாதி மறுப்பு திருமண உரிமை வழங்கும் மசோதாவை நிறைவேற்றி வைத்தார்.

1919 சில உயர்ஜாதி வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட ஜாதி குற்றவாளிக்கு அளிக்கப்பட்டு வந்த காட்டுமிராண்டித்தனமான தண்டனையை ஒழித்தது.

1919 வங்க தேசத்தில் வாழும் காயஸ்தர் இன மக்கள் சூத்திரர்களாக கருதப்பட்டாலும், ஹிந்தி மொழி புழங்கும் மற்ற பகுதிகளில் அவர்கள் க்ஷத்திரியர்கள் என்ற வினோத அறிவிப்பை அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்டது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.சி.ராஜா முதல் சட்டமன்ற உறுப்பினரானார். தாழ்த்தப்பட்ட தன் வகுப்பினர் முன்னேற வழிவகுக்க வேண்டும் என்று கவர்னருடன் வாதாடினார்.

1920 நாக்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு, பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தீர்மானம் நிறைவேற்றியது. தீண்டாமைக் குற்றம் ஹிந்துக்கள் மீதே சுமத்தப்படுவது சரியல்ல என்றும் அந்தக் கூட்டம் வலியுறுத்தியது.

1921 தீண்டத்தகாதவர்கள் உட்பட பார்ப்பனர் அல்லாதார் அனைவருக்கும் ஒதுக்கீடுகள் வழங்க பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் அளித்தது.

1922 காங்கிரஸின் நிதி உதவியுடன் தீண்டத்தகாதவர் களுக்கென தனியாக கிணறுகள் வெட்டப்பட்டு பராமரிக்கப்படவும் வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

1923 தீண்டத்தகாதவர்கள், குடிநீர் வசதிகள் உள்ள இடங்கள் உட்பட, சில குறிப்பிட்ட பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடலாம் என்று  மும்பை மாநில சட்டமன்றக் குழு அறிவித்தது.

1924 மலபார் கல்பத்தி பகுதியில் நடந்த ஒரு விழாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் கலந்து கொண்டதை எதிர்த்து பாலக்காட்டுப் பார்ப்பனர்கள் சென்னை சட்டமன்ற குழுவைக் கண்டித்து போராடினார்.

1926 தீண்டாமைக் குற்றத்தை எதிர்த்து சென்னை சட்டமன்றக் குழு மசோதா ஒன்றை நிறைவேற்றியது. வீரய்யன் என்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.சி. இதை நிறைவேற்ற வற்புறுத்தி வந்தார்.

1926 புரோகிதச் சடங்குகளின்றி திருமணங்கள் நடந்தாலும் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு கட்டணம் அளிக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத விதியை மும்பை சட்டமன்றக் குழு ரத்து செய்தது. அதற்குத் தடை விதித்தது.

1927 வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ள மகத் குளம் சத்தியாகிரகம் அம்பேத்கர் தலைமையில் நடந்தது. பொதுவான ஒரு குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தீண்டத்தகாதவர் களுக்கு இதன் மூலம் உரிமை கிடைத்தது.

1928 மேட்டுக் குடியினராக வாழும் மராட்டியர்களை சத்திரியர்களாகவோ சூத்திரர்களாகவோ ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1929 தீண்டாமைக்கு எதிரான முதல் தேசிய மசோதா அம்பேத்கரால் உருவாயிற்று. தீண்டத்தகாதவர்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று 1908இல் சட்ட நிபுணர் குழு ஒப்புக்கொண்டதை அம்பேத்கரின் இந்த மசோதா கண்டித்தது. ஆலயப் பிரவேச உரிமை தீண்டத்தகாதவர்களுக்கும் உண்டு என்பதை அது வலியுறுத்தியது.

1930 அம்பேத்கரின் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் ஆர்.கே.சண்முகம் செட்டி என்னும் உறுப்பினர் அதனை வலியுறுத்தினார்.

1932 தீண்டத்தகாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை காந்தியார் சமர்ப்பித்த தீர்மானத்தால் கிடைத்தது. எனினும் ஆலயப் பிரவேச உரிமை வழங்கப்படவில்லை.

1933 உயர் ஜாதிக்காரர்களின் ஆட்சேபனைக்கு உட்படாத சில ஆலயங்களில் தீண்டத்தகாதவர்கள் பிரவேசித்து வழிபடலாம் என்ற மசோதா சி.எஸ்.ரங்கா அய்யர் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது.

1936 பிறப்பு அல்லது மதம் சார்ந்து எந்த ஒரு ஹிந்துவுக்கும் ஆலயப் பிரவேச உரிமை மறுக்கப்படக் கூடாது என்று திருவிதாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் அறிவித்தார்.

1937 ஆரிய சமாஜ் விதிகளுக்கு உட்பட்டு ஹிந்துக்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரு மசோதா சட்ட வடிவம் பெற்றது.

1938 உயர் ஜாதியினர் ஆட்சேபிக்காவிட்டால் சில ஆலயங்களுக்குள் தீண்டத்தகாதவர்கள் பிரவேசிக்கலாம் என்று காந்தியார் கூறியதை ஏற்க மறுத்து, எல்லோரும் ஆட்சேபனைகளை மீறி பிரவேசிக்கலாம் என்று மும்பையில் பிரிட்டிஷ் அரசு உறுதிப்படுத்தியது.

1938 மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்படும் நாட்டில் தீண்டாமையும் நிலவக் கூடாது என்பதை வலியுறுத்தி எம்.சி.ராஜா ஒரு மசோதா தாக்கல் செய்தார்.

1939 தீண்டாமைச் சார்ந்த குற்றங்களைத் தடுக்கத் தவறிய காவல் துறையையும் காங்கிரஸ் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளையும் கண்டித்து அம்பேத்கர் போராடினார்.

1939 தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த தொண்டர்களை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தடையை மீறி பிரவேசிக்க வைத்தார் ராஜாஜி. தண்டனையிலிருந்து அவர்களுக்கு விலக்கு கிடைக்கவும் வழிவகுத்தார்.

1946 தீண்டாமையை குற்றமாகக் கருதி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1946 ஹிந்து மதச் சட்டப்படி கோத்திரங்கள் மாறி திருமணம் செய்து கொள்வது தவறல்ல என்று கோபால்ராவ் தேஷ்முக் தாக்கல் செய்த மசோதாவை பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது.

1947 தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆலயங்களுக்குள் செல்லவிடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்தது. தண்டனை கடுமையாக இருக்கும் என்று மும்பை உயர்நீதிமன்றமும் அறிவித்தது.

1948 அரசமைப்புச் சட்டக் குழுவினர் தீண்டாமைக்கு எதிராக உள்ள பிரிவை ஆதரித்து “மகாத்மா காந்தி வாழ்க” என்று குரலெழுப்பினர். அந்தக் குழுவில் இருந்த ஒரே தாழ்த்தப்பட்ட பெண்மணி தாட்சாயணி வேலாயுதன் மட்டும் எதிர்த்தது வியப்பளித்தது.

1948 பூரி ஜகந்நாதர் ஆலய அறங்காவலர் குழு எல்லோருக்கும் ஆலயப் பிரவேச உரிமை உண்டு என்றும் எவ்விதமான பாரபட்சமும் இருக்கக் கூடாது என்றும் சட்டமாக்க ஒடிசா அரசை வற்புறுத்தியது.

1948 மும்பையில் சுவாமி நாராயண் குழு என்னும் அமைப்பு ஹிந்துக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அவர்களின் ஆலயங்களில் பிரவேசிக்கலாம் என்று விதி அமைத்திருந்தது. ஒடிசாவில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் அந்த விதிக்குத் தடை விதித்தது.

1949 ஹிந்து மதச் சட்டத்தின் கீழ் கலப்புத் திருமணங்களுக்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைத்தது.

1950 தீண்டாமை ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைச் சார்ந்த குற்றங்களுக்கு தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.

1953 பார்ப்பனர் அல்லாதாரின் திருமண முறைகள் சார்ந்து பெரியார் உருவாக்கிய விதிகளை மதராஸ் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

1954 தாழ்த்தப்பட்டோரை பிரதான வாசல் வழியாக வர அனுமதிக்கலாமா, கடவுள் சிலைகளைத் தொட அனுமதிக்கலாமா போன்ற கேள்விகள் எழுந்து வாரணாசி, காசி விஸ்வநாதர் ஆலயமே போர்க் களமாயிற்று. மோதல்கள், விவாதங்கள், கூச்சல்கள் விண்ணைப் பிளந்தன.

1955 தீண்டாமை ஒழிப்பு மசோதாவில் அம்பேத்கர் அவர்களுக்கு உடன்பாடில்லாத சில அம்சங்கள் இருந்தன. ஆனால், அவற்றை நீக்காமலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது.

1956 ஆலயப் பிரவேச உரிமை அனைவருக்கும் வழங்க மாட்டோம் என்று சுவாமி நாராயண் அமைப்பு முரண்டு பிடித்தது. மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

1959 ஜாதி அடையாளம் என்பது பிறப்பு என்ற விபத்தைச் சார்ந்தது அல்ல என்று வி.வி.கிரி வாதிட்டார். அதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

1966 சுவாமி நாராயண் குழுவினர் தாங்கள் ஹிந்துக்களே அல்ல என்றும், அதனால் ஆலயப் பிரவேச மறுப்புக்கு தங்களுக்கு உரிமை உண்டு என்றனர். உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது.

1967 அறிஞர் அண்ணாவின் அரசு சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்கிற்று.

1968 கீழ்வெண்மணி ஜாதிக் கலவரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 42 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

1969 அம்பேத்கர் உருவாக்கித் தந்த சீர்திருத்த முறைகளை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்றம் அவற்றின்படி தீண்டாமை ஒழிப்பை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது.

1973 செல்வந்தர்கள் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றம் கீழ்வெண்மணி கலவரக் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்து விட்டது.

1976 1954இல் அம்பேத்கர் செய்த சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கேற்ப தீண்டாமைச் சட்டத்தில் இந்திரா காந்தி அரசு சில திருத்தங்களைச் செய்தது. 

1977 குஜராத்தில் பெல்ச்சி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் எட்டு பேர் கொல்லப்பட்டனர். மொரார்ஜி தேசாய் அரசு அது ஜாதிக் கலவரம் அல்ல என்று மூடி மறைத்தது. தாழ்த்தப்பட்ட சமூக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துப் போராடினர்.

1982 பெல்ச்சி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 

1983 தாழ்த்தப்பட்ட மக்கள் இருவரைக் கொன்ற மஹாவீர் மஹதோ தூக்கிலிடப்பட்டான் - பெல்ச்சி வழக்கின் முடிவில்.

1987 உடன்கட்டை ஏறும் கொடுமை எங்கேனும் நிகழ்ந்தால் அது கொலைக் குற்றமாகவே கருதப்படும் என்று ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு அறிவித்தது.

1989 தாழ்த்தப்பட்ட மக்கள் துன்புறுத்தப்பட்டால் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.

1990 கீழ்வெண்மணிக் கலவரக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

1991 ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

1992 தீண்டாமை சார்ந்த குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்திற்று.

1996 தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இருபது பேர் பீகாரில் படுகொலை செய்யப்பட்டனர். ரண்வீர் சேனா என்ற அமைப்பினர் செய்த இந்தப் பாதகச் செயலை அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் “நாட்டுக்கே மிகப் பெரிய தலைகுனிவு” என்று வர்ணித்தார்.

1997 ரண்வீர் சேனாவைச் சேர்ந்த வெறியர்கள் பீகாரில் 58 தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்று குவித்தனர். இது “தேசிய அவமானம்” என்றார் குடியரசுத் தலைவர்.

1997 மும்பை ரமாபாய் நகரில் சில விஷமிகள் அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியதைக் கண்டித்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போராடினர். அவர்களுள் பத்துப் பேரை மும்பை காவல் துறையினர் சுட்டு வீழ்த்திய கொடுமை நிகழ்ந்தது.

1998 ரமாபாய் நகரில் பத்து தாழ்த்தப்பட்ட சமூகத் தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின் நீதி விசாரணை நடந்தது. உதவி ஆய்வாளர் மனோகர் சுட உத்தரவளித்தது மிகப் பெரிய தவறு என்று விசாரணைக் குழு அறிவித்தது.

1999 மீண்டும் ரண்வீர் சேனா ரவுடிகள் பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்கள் 23 பேரைக் கொன்றுக் குவித்தனர். 24 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

2002 அரியானாவில் காவல் நிலையம் ஒன்றின் அருகிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் அய்ந்து பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கயவர்கள் சுமத்திய ஆதாரமற்றப் பழி - பசுவதை. காவல்துறை வேடிக்கைப் பார்த்தது.

2006 மகாராட்டிராவில் கைர்லஞ்சி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நான்கு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டு கால்வாயில் வீசப்பட்டனர். 17 வயது இளம் பெண் ப்ரியங்காவின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. குற்றத்தை மூடி மறைக்கும் முயற்சி நடைபெற்றது.

2009 ரமாபாய் நகர் துப்பாக்கிச் சூடு வழக்கைச் சார்ந்து காவல்துறை உதவி ஆய்வாளர் மனோகருக்கு கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிற்று. மும்பை உயர்நீதிமன்றம் உடனே அவருக்கு பிணையில் விடுதலை வழங்கி விட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சமூக அநீதி!

2010 அரியானாவில் ஏழு பேரைக் கொன்றவர்களுக்கு அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதே தெரியாதாம் என்று வாதிட்டனர் வழக்குரைஞர்கள். எனினும் ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

2012 பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்த 23 பேருக்கு பாட்னா கீழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டது.

2013 லஷ்மண்பூர் என்னும் பீகார் சிற்றூரில் தாழ்த்தப் பட்ட மக்கள் பலரை படுகொலை செய்த 26 குற்றவாளிகளையும் பாட்னா உயர்நீதிமன்றம் விடுவித்து விட்டது.

2014 ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரைக் கொன்று குவித்த 53 குற்றவாளிகளை உயர்நீதிமன்றம் விடுவித்துவிட்டது.

2015 பீகாரில் 1999இல் தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்த 24 குற்றவாளிகளை போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி கீழ் நீதிமன்றமே விடுவித்துவிட்டது.

2018 1850ஆம் ஆண்டின் ‘ஜாதி தகவின்மை’ (சிணீstமீ பீவீsணீதீவீறீவீtவீமீs) சட்டத்தை நரேந்திர மோடி அரசு ரத்து செய்தது.

2019 மகாராட்டிராவில் 2006இல் நடந்த படுகொலை குற்றவாளிகள் எட்டு பேருக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. எனினும் அது ஜாதிப் பாகுபாட்டால் நடந்தது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜாதிகள் அழியாத வரை தீண்டாமையை ஒழிக்க முடியாது என்ற கசப்பான உண்மை தெளிவாகிறது.

நன்றி: மனோஜ் மித்தாவின் நூல் ‘CASTE PRIDE’