Saturday 31 December 2016

தந்தை பெரியார் அன்றே சொன்னார்!


யாரோ சில பிராமணர்கள், பெரியார் ராமசாமி நாயக்கர், இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள் என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை _- திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல- _ திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் _ திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவ தெல்லாம் _ நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டும் என்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது.அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை.அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும், பிராமணர்களுக்கும் நமக்கும் பிரதான பேதம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அனுசரிக்கின்ற சில பழக்க வழக்கங் களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும், அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கின் றோம்.ஒரு தெருவிலே நடக்கின்றோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கி றோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்துவிட்டது. இந்த நிலைமையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக் கொருவர் சமமாகவும், சகோதர  உரிமை யுடனும் இருக்க வேண்டும் என்பதற் காகத்தான் நான் பாடுபடுகின்றேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத் காரம் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு.

எப்போதுமே காலம் ஒன்றுபோல் இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறு மைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகின்றது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழக பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் சிறீனிவாச ராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது, பிராமணர்களும் காலதேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது. சென்னை ராயப்பேட்டை பார்ப்பனர்களின் அமைப்பான லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் -_ -தந்தை பெரியார் 5.1.1953

புல்லேந்தியவர்கள், வாளேந்தினால்- வாளேந்தியவர்கள் என்ன ஏந்து வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! விரல் உரல் ஆனால், உரல் என்னவாகும்? அப்புறம் உங்கள் கதி என்னவாகும்? என்பதையும் நினைத்துப் பாருங்கள். அனுதினமும், பார்ப்பனர் தாம் திராவிடர்களுக்குத் தொல்லை கொடுத்து வருவது என்பதை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ள வேண் டும். பார்ப்பனர்கள் வாழை இலைகள்! திராவிடர்கள் முட்செடிகள். வாழை இலை முள்ளின்மீது மோதினாலும், முள் வாழை இலைமீது மோதினாலும் வாழை இலைதான் அழிந்துவிடும். அதுபோல், பார்ப்பனர்கள் திராவிடர் கள்மீது மோதினால் அவர்கள்தான் அழி வார்கள். திராவிடர்கள் பார்ப்பனர் களை மோத ஆரம்பித்தார்களோ- _ அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந் நாட்டில் இருக்காது. இதைப் பார்ப் பனர்கள்உணரவேண்டும். பார்ப்பனத் தோழர்களே! எங்களை முட்டாள் களென்று கூறி உங்களைப் புத்திசாலி கள் என்று பெருமையடித்துக் கொள் ளாதீர்கள்.ஆணவப்பட்டு அழிந்து போகாதீர்கள். புத்திசாலிகளானால், புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொள்ளுங்கள்.

_ -தந்தை பெரியார்: 1948இல்

-விடுதலை ஞா.ம.,5.7.14

Wednesday 21 December 2016

வருங்கால வைப்பு நிதிப் பலன்கள் 60 வயதுக்கு மேல் கூடுதல் ஓய்வூதியம்

புதுடில்லி, ஜூன் 23  வருங்கால வைப்பு நிதிப் பலன்களை 60 வயதுக்குப் பிறகு பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் தொழிலாளர் களுக்கு ஓய்வூதியத்தில் 8.16 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தெரிவித்துள்ளது.

அதேபோல், 59 வயதுக்குப் பிறகு வைப்பு நிதி பலன்களைப் பெற விருப்பம் தெரிவிப்பவர் களுக்கு ஓய்வூதியம் 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களில் இணைய விரும்புபவர்கள், சம் பந்தப்பட்ட அலுவலகங்களில் அதற்காக விண்ணப்பிக்க வேண் டும் என்று இபிஎஃப்ஓ அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 58 வயது பூர்த்தி யடைந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரு கிறது. அந்தப் பலன்களை ஓரிரு ஆண்டுகள் கழித்துப் பெற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு மட் டுமே புதிய சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது.

-விடுதலை,23.6.16

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*

🌺 *பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*
 
    *பட்டா :*

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை  அளிக்கும் சான்றிதழ்.

*சிட்டா :*

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*அடங்கல் :*

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*கிராம நத்தம்*

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

*கிராம தானம் :*

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

*தேவதானம் :*

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

*இனாம்தார் :*

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு.

நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது.

ஷரத்து= பிரிவு.

இலாகா = துறை.

*கிரயம்*

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

*வில்லங்க சான்று*

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின்  விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் = நில அளவை எண். (Survey number)

இறங்குரிமை =
வாரிசுரிமை (succession)

*தாய்பத்திரம்*
(Parent deed)

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

*ஏற்றது ஆற்றுதல்*

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)

*அனுபவ பாத்தியம்*
( possessory right)

நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.

*சுவாதீனம் ஒப்படைப்பு*

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி =  வருவாய்தீர்வாயம்.

நன்செய்நிலம் =
அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம் =
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

*குத்தகை*
(Lease)

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
                 🍁🙏🌺🍁

Friday 9 December 2016

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக 15 ஜாதிகள் சேர்ப்பு

புதுடில்லி, டிச.9 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிதாக 28 ஜாதிகளை சேர்த்து  திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (என்சிபிசி) பரிந்துரை செய்திருந்தது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை யில் குறிப்பிடப்பட்ட 28 ஜாதிகளில் 15 புதிய ஜாதிகளை மட்டும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதில், பீகாரின் கதேரி/இடாபரோஷ், ஜார்கண்ட்டின் ஜோரா, காஷ்மீரின் லபனா ஆகிய 3 ஜாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற 9 ஜாதிகள் ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளின் உட்பிரிவுகளாகும். மீதியுள்ள 3 ஜாதிகள் திருத்தத்தின்மூலமாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 15 ஜாதிகளைச் சேர்ந்த மக்கள், தற்போதுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று பலனடைவார்கள். அத்துடன் மத்திய அரசு நலத்திட்டங்களின் பலன்களையும் பெற முடியும்.
-விடுதலை,9.12.16