Monday 16 December 2019

மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் - தமிழ்நாடு பெயர் மாற்றமும் சிறப்புக் கூட்டத்தில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

‘‘தமிழ்நாடு தமிழருக்கே'' என்ற முதல் முழக்கம் தந்தை பெரியாருடையது

‘‘குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்!''

சென்னை, டிச.13 தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.

1.11.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்கள் கட்டளையிட்டார்கள். அதனடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தத் தலைப்பைப் பொறுத்தவரையில், மிக முக்கியமாக பேசப்படவேண்டிய தலைப்பு. இதனை மய்யப்படுத்தி பல்வேறு தகவல்கள் மக்களுக்கு, குறிப் பாக இளைஞர்களுக்கு, புதிய தலைமுறையினருக்குப் போகவேண்டிய ஒரு அவசியம் கண்டிப்பாக இருக்கிறது. அதுவும் அண்மைக்காலமாக தமிழுக்கு திராவிட இயக்கம் என்ன செய்துவிட்டது? பெரியார் என்ன செய்துவிட்டார்? என்று கேட்கக்கூடிய ஒரு கூட்டமும் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான், இந்தத் தலைப்பின் அடிப்படையில் நாம் உரையாடவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இந்த சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இங்கே பேராசிரியர் காளிமுத்து அவர்கள், சில வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொன்னார்.

மதுவிலக்கைக் கொண்டுவந்ததால் பள்ளிக்கூடங்களை மூடுகிறாராம்!

ஆச்சாரியார் ராஜாஜி அவர்கள், இரண்டுமுறை தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக வந்திருக்கிறார். அவர் 1937 ஆம் ஆண்டு வந்தபொழுதும் சரி, 1952 ஆம் ஆண்டிலே வந்தபொழுதும் சரி, அவர் செய்த முதல் காரியம், பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுவதுதான். அதுவும் கிராமப் பள்ளிக்கூடங்களை. அந்தக் கால கட்டத்தில், 1937 ஆம் ஆண்டில் எவ்வளவு கல்விச் சாலைகள் இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அதற்கு அவர் சொன்ன காரணம் இன்னும் வேடிக் கையானது. நான் மதுவிலக்கைக் கொண்டு வந்தேன். அதனால் அரசாங்கத்திற்குப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது. அதனை ஈடு செய்வதற்காகப் பள்ளிக் கூடங்களை மூடுகின்றேன்.

இப்படி சொல்லுகின்றவர் யார் என்றால், உடம்பு முழுவதும் மூளை உள்ளவராம்.

தந்தை பெரியார் அழகாக சொன்னார், ‘‘மூளை இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால்தான் சரியாக இருக்கும்; உடம்பு பூராவும் இருந்தால், கோளாறு என்றுதான் அர்த்தம்'' என்று சொன்னார்.

அப்பொழுதுதான் முதன்முதலாக இந்தியையும் அவர் கொண்டு வந்து திணித்ததும் உங்களுக்குத் தெரியும்.

அப்பொழுது சென்னை மாநிலம் என்பது இப் பொழுது இருக்கின்ற தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திரா வில் சில பகுதிகள், ஒடிசா வரையில் செல்கிறது. கேரளா, கருநாடக மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக் கியதுதான் சென்னை மாநிலம்.

அப்பொழுது இருந்தவருக்கு முதலமைச்சர் என்று பெயரல்ல; பிரதமர் என்றுதான் பெயர். ராஜாஜிதான் முதன்முதலில் இந்தியைக் கொண்டு வந்தார்.

சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்காகத்தான் முதலில் இந்தியைக் கொண்டு வந்தேன்

லயோலா கல்லூரியில் உரையாற்றும்பொழுது ஒரு  உண்மையைச் சொன்னார்.

படிப்படியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற் காகத்தான் நான் இந்தியை முதலாவதாகக் கொண்டு வந்தேன் என்று சொன்னார்.

‘‘கோணிப் பைக்குள் இருந்த பூனைக்குட்டி வெளியில் வந்தது'' என்று விடுதலையில் அந்தக் காலத்தில் எழுதுவதைப்போல, உண்மையைச் சொன்னார்.

அப்பொழுதுதான் தந்தை பெரியார் அவர்கள் வீறுகொண்டு எழுந்தார்.

இந்தித் திணிப்பு என்ற பெயராலே ஒரு கலாச்சாரப் படையெடுப்பு.

மொழியைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார் அவர்களுடைய பார்வை என்பது, எந்த மொழியையும் படிக்கலாம்; ஆனால், இந்தியோ, சமஸ்கிருதத்தையோ திணிப்பது என்பது ஒரு கலாச்சாரப் படையெடுப்பு. ஒரு பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்ற அடிப் படையில்தான் தந்தை பெரியார் அவர்கள் அப்பொழுது வீறுகொண்டு எழுந்தார்கள்.

கட்சி, மதம் இவற்றையெல்லாம் மறந்து, மறைமலை யடிகள் போன்ற சைவ சித்தாந்தத்தில் ஊறியவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களின் தலைமையை ஏற்று, மிகப்பெரிய அளவிலே தமிழ்நாட்டில் ஒரு மொழிப் போரைத் தொடங்கினார்கள்.

தமிழர் பெரும்படை

ஆகஸ்ட் 1, 1938 ஆம் ஆண்டு திருச்சி உறையூரி லிருந்து தமிழர் பெரும்படை புறப்பட்டது. அந்தப் பெரும்படைக்கு தஞ்சை அய்.குமாரசாமி பிள்ளை அவர்கள் தலைமையேற்றார். பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் தளபதியாக இருந்து நடத்தினார்.

அந்தப் படை வழிநெடுக இந்தியை எதிர்த்துப் பிரச் சாரம் செய்துகொண்டே வந்தது. பல இடங்களில் அந்தக் காலத்தில் காங்கிரஸ்காரர்கள்தான் நமக்கு முதல் எதிரி.

அஞ்சாநெஞ்சன் அழகிரி

அழகிரியினுடைய கூட்டங்களில் எல்லாம் கழுதை யின் வாலில் வெடியைக் கட்டிக் கொளுத்தி விடுவார்கள். கல்லால் அடிப்பார்கள். ஒருமுறை அப்படி கல்லால் அடிக்கும்பொழுது, பட்டுக்கோட்டை அழகிரி என்ன செய்தார் என்றால், மேடையை விட்டு கீழே இறங்கி, கொஞ்சம் கற்களை எடுத்து மேடையில் வைத்துக் கொண்டு, ‘‘நான் பல ஊர்களில் பேசியிருக்கிறேன். ஆனால், இந்த ஊரில் இருக்கும் பழக்கம் எனக்குத் தெரியாது. இன்றைக்குத்தான் எனக்குத் தெரிகிறது. பேசுகிறவர்களைக் கல்லால் அடிப்பார்கள்; கேட்கிறவர் களை கல்லால் அடிப்பார்கள் போலிருக்கிறது'' என்று சொல்லி, இவரும் கல்லை எடுத்து வீசிக்கொண்டே இருந்தாராம்.

‘‘கேளு கழுதை கேளு!''

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்  இப்படிப்பட்ட விசயங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. கூட்டத்தில் விரட்டி விடப்பட்ட கழுதையை மேடைக்குப் பக்கத்தில் கட்டி வைத்துவிட்டு, ‘‘கேளு கழுதை கேளு'' என்று இடையிடையே சொல்லிக்கொண்டு கருத்துகளைச் சொல்வாராம்.

அந்தப் பெரும்படை சென்னைக்கு வரும்பொழுது, ஒரு பெரிய வரவேற்புக் கூட்டம் சென்னை கடற்கரையில் நடைபெற்றது.

அந்தக் கடற்கரைக் கூட்டத்தில்தான் தந்தை பெரியார் அவர்கள், ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற ஒரு உரத்த குரலை வரலாற்று ரீதியாக எழுப்பிய இடம் - அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே, சென்னை கடற்கரையிலே என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

ஆனால், தமிழ்நாடு என்று நாம் சொன்னாலும்கூட, தமிழ்நாடு எப்படி இருந்தது என்றால், ‘‘சென்னை மாநிலம்'' என்றுதான். அப்படித்தான் அறியப்பட்டதே தவிர, ‘‘தமிழ்நாடு'' என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற் கான தகுதி, யோக்கியதை நமக்கு இல்லாமல் இருந்த காலகட்டத்தில்தான், நாடு சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்டதற்குப் பின்னாலே, மொழி வழி மாநிலங் கள் உருவாகவேண்டும் என்று ஒரு கருத்து வெளியிலே வந்தது.

ஆந்திராதான் முதலில் அந்த வேலையைத் தொடங்கினார்கள். பொட்டி சிறீராமுலு என்பவர் கடும் உண்ணாவிரதம் இருந்தார். அதற்குப் பின்னால்தான், ஆந்திரா முதன்முதலாகப் பிரிக்கப்பட்டது. அதற்குப் பின்னாலே, மற்ற மாநிலங்களும் மொழி வாரி அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

தட்சணப்பிரதேசம் தொடர்பாக

பெங்களூருவில்  ஒரு ஆலோசனை கூட்டம்

ஆனால், இந்தக் கருத்துக்கு விரோதமாக இருந்த வர்கள் யார் என்று கேட்டால், பார்ப்பனர்கள். அதற்கு ஒரு காரணம் இருந்தது. விரிந்த இடத்தில் இருந்தால், அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்; ஒரு குறைந்த இடத்தில் இருந்தால், அவர்களுக்கு ஆபத்துதான். ஆகையால்தான் திடீரென்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். மொழிவாரி மாநிலங்கள் வேண்டாம்; இந்தியாவை அய்ந்து பிரிவாகப் பிரித்து ஆட்சி அமைக்கலாம் என்ற ஒரு கருத்தை அவர்கள் உருவாக்கி, தட்சணப்பிரதேசம் தொடர்பாக பெங்களூருவில்  ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பிரதமர் ஜவகர்லால் நேரு, காமராசர், சி.சுப்பிரமணியம் போன்ற அகில இந்திய தலைவர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். அந்தக் கூட்டத்திற்குத் தந்தை பெரியார் ஒரு தந்தி செய்தியை அனுப்பினார்.

தந்தை பெரியாரின் தந்தி செய்தி!

எப்படி காமராசர் அவர்கள், தமிழ்நாட்டின் முதல மைச்சராக இருந்து, அந்தப் பதவியைவிட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சென்ற பொழுது, தந்தை பெரியார் அவர்கள் தந்தி கொடுத்தார்,

‘‘நீங்களாகவோ அல்லது மற்றவர்களுடைய ஆலோ சனையின் பேரிலோ, தமிழகத்தினுடைய முதலமைச்சர் பதவியை நீங்கள் துறப்பது, உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும், தமிழ்நாட்டிற்கும் தற்கொலை ஒப்பந்தம்.''

பெரியார் சொன்னது, காமராசர் வாழ்க்கையில் அப்படியே நடந்தது.

தேர்தல் முடிந்த பிறகு, குடந்தையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காமராசர் பேசினார், நானும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன்.

பெரியார்கூட சொன்னார், அதேபோல நடந்து போச்சு என்றார்.

அதேபோல, பெங்களூருவில் தட்சணப்பிரதேசம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பெரியார் அவர்கள் ஒரு தந்தி கொடுத்தார்.

இது தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமானது; தற் கொலைக்கு ஒப்பந்தம் என்றார் பெரியார்.

காமராசரின் மறுப்பும் -

சி.சுப்பிரமணியத்தின் அதிர்ச்சியும்!

நேருவிற்கும் அந்தத் தந்தி செய்தி போயிற்று. அதைப் பார்த்ததும், காமராசர் அவர்கள், தட்சணப் பிரதேச திட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

சி.சுப்பிரமணியத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. இராஜாஜியின் சீடர் அவர். இராஜாஜியும், தட்சணப் பிரதேசம் வரவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தவர்.

காமராசர் இப்படி சொன்னவுடன், சி.சுப்பிரமணியம், காமராசர் அவர்களை சந்தித்து, ‘‘தொடக்கத்தில் ஆதரவு தெரிவித்தீர்கள்; இப்பொழுது மாற்றி பேசுகிறீர்களே'' என்று கேட்ட நேரத்தில்,

காமராசர், ‘‘அன்றைக்கு சரி என்று பட்டது; இன் றைக்கு சரி என்று படவில்லை'' என்று சொன்னார்.

அதோடு அந்தப் பிரச்சினை கைவிடப்பட்டது.

ம.பொ.சிவஞானம்

தட்சணப்பிரதேசம் சம்பந்தமாக ம.பொ.சி. ஒரு கூட்டம் கூட்டினார். தந்தை பெரியாரையும் அழைத்தார்.

அப்பொழுது தந்தை பெரியார் என்ன சொன்னார் என்றால், ‘‘வெறும் தட்சணப்பிரதேசத்தோடு முடிக் காதீர்கள். தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்; இந்தியை எதிர்க்கவேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள் ளுங்கள்'' என்றவுடன், அவர் சென்றுவிட்டார்.

தந்தை பெரியார் இல்லாமல், ஒரு கூட்டம் நடத்தப் பட்டது. அதில் என்ன வேடிக்கை என்றால், அந்தக் கூட் டத்தில், பெரியார் சொன்ன தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இப்படி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நடந்தது.

இந்த முறையில், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து பல வடிவங்களில் நடை பெற்றுக் கொண்டிருந்தது.

12 கோரிக்கைகளை முன்வைத்து சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம்!

விருதுநகர் சங்கரலிங்க நாடார், காங்கிரசுக்காரர். 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். வெறும் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக மட்டுமல்ல; கவர்னர் பதவி கூடாது; ஜனாதிபதி பதவி கூடாது என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணா அவர்கள், உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரை போய் சந்தித்தார்.  இதில் என்ன வேடிக்கை என்றால், அண்ணா அவர்கள் முதலமைச்சராக ஆன பிறகுதான், சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

கடைசி நேரத்தில், சங்கரலிங்கனார் சொன்னார், ‘‘நான் இறந்தால் என்னுடைய உடலை கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்'' என்றார்.

கே.டி.கே.தங்கமணி அவர்களும், ஜானகி அம்மையார்  அவர்களும் முன்னிருந்து சங்கரலிங்கனா ரின் உடலை அடக்கம் செய்தார்கள்  என்ற வரலாறு உண்டு.

நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்த  பூபேஷ் குப்தா

அதேபோல, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்ற ஒரு கருத்தொலி கிளம்பியது. தமிழ்நாட்டில் இருந்த ஒருவர்தான் முன் மொழிவதாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு அவர் செல்ல இயலாத நிலையில், அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர், பொதுவுடைமைக் கட்சியினுடைய மூத்த தலைவர் பூபேஷ் குப்தா.

அண்ணா அவர்கள் அப்போது மாநிலங்களவை உறுப்பினர். பூபேஷ் குப்தா அவர்கள், தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று தீர்மானத்தை முன் மொழிந்தவர். பூபேஷ்குப்தா அவர்கள் சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயர் பெற்றவர். அவர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார், ஆனால், ஆதரவு பெரிய அளவிற்கு இல்லை. அண்ணா அவர்கள், ஆதரித்துப் பேசினார்.

அப்பொழுது காங்கிரஸ்காரர்கள், தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால், என்னவாகிவிடப் போகிறது என்று அவர்களுக்கே உரித்தான முறையில் பேசினார்கள்.

உடனே அண்ணா அவர்கள், பார்லிமெண்ட் என்று இருந்ததை லோக் சபா என்று  மாற்றினீர்கள்; ஸ்டேட் ஆஃப் கவுன்சில் என்று இருந்ததை ராஜ்ய சபா என்று மாற்றினீர்கள்; அதனால் உங்களுக்கு என்ன வந்தது? என்று கேட்டார்.

காங்கிரஸ்காரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி பல கட்டங்கள் தாண்டித்தாண்டி, தி.மு.க. 1967 ஆம் ஆண்டிலே ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகுகூட, ஒருமுறை அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபொழுது, ஒரு தீர்மானத்தைக் கொண்டு சென்றார்கள், அது தோற்கடிக்கப்பட்டது. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு தோழர், இன்னொரு காலகட்டத்தில், இந்தத் தீர்மா னத்தை முன்மொழிந்தபோது, அந்தத் தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக

பதவியேற்ற பின்....

இப்படியெல்லாம் இருந்துவிட்டு, 1968 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகுதான்,  அது நடந்தது. முதன்முதலாக சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயரை சூட்டியவர் அண்ணா - சூட்டிய ஆளுங்கட்சி தி.மு.க. என்ன வேடிக்கை என்றால், அனைவரும் ஒருமனதாக ஆதரித்தார்கள், காங்கிரஸ்காரர்கள் உள்பட.

அப்பொழுது அண்ணா அவர்கள், ‘‘தமிழ்நாடு'' என்று மூன்று முறை ஒலித்து, உறுப்பினர்கள் எல்லாம் ‘‘வாழ்க, வாழ்க'' என்று குரல் கொடுத்த ஒரு அதிசயம் நடந்தது.

அண்ணா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான ஒரு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு மருத்துவர்கள் செல்லவேண்டாம் என்று அண்ணாவை தடுத்தார்கள். அதையும் மீறி, அண்ணா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு செய்தியை சொன்னார்.

‘‘என்னுடைய தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுகின்ற விழாவில் கலந்துகொள்ளாமல், இந்த உடல் இருந்து என்ன பயன்?'' என்று உருக்கமாக அண்ணா அவர்கள் அந்தக் கூட்டத்தில் பேசினார்.

இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டுகொண்டிருக்கிறார்!

அப்பொழுது மூன்று செய்திகளை சொன்னார்,

‘‘இன்றைக்கு என்னை ஆட்சியிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் விரும்பு கிறார்கள். அவர்கள் நினைத்தால் முடியும், அவர் களிடத்தில் அதிகாரம் இருக்கிறது.

ஆனால், ஒன்று. இந்த அண்ணாதுரை காலத்தில் குறுகிய காலத்தில் மூன்று காரியங்கள் நடைபெற்று இருக்கின்றன.

ஒன்று, என்னுடைய தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர்.

இரண்டு, சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி யாகும்.

மூன்று, இந்திக்கு இடமில்லை; இருமொழிக் கொள் கைதான்.

இந்த மூன்றிலும் கைவைக்கக்கூடிய துணிவு உங்களுக்கு இருந்தால், செய்து பாருங்கள்; கைவைக்க முடியாதவரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டுகொண்டிருக்கிறான்'' என்று அவருக்கே உரித் தான முறையிலே அண்ணா அவர்கள் பேசிய வரலாறும் இருக்கிறது.

பொதுவாக, இன்றைக்கு இருக்கின்ற பாரதீய ஜனதா ஆட்சியைப் பொறுத்தவரையில், மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களுடைய அடிப்படைக் கொள்கை.

கோல்வால்கர் எழுதிய ‘‘ஞானகங்கை!''

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் எழுதிய ‘‘ஞானகங்கை'' என்ற நூலில் அவர் சொல்கின்ற கருத்து,

மாநிலங்கள் இல்லாத ஓர் ஆட்சிதான் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை என் பதை அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அறிக்கை யில்,

ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்தி, கூட்டாட்சி முறையை ஒழித்து, இந்திய நாடு ஒரே நாடு என்று பிரகடனப்படுத்துவோம்.

அன்றைக்கு ஜனசங்கம்; இன்றைக்குப் பாரதீய ஜனதா.

இன்றைக்கு ஒரே நாடு என்று சொல்வதன் காரணம் இதுதான். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என்று அவர்கள் சொல்வதெல்லாம் இந்த அடிப்படையில்தான் சொல்கிறார்கள் என்பதை நாம் இந்த நேரத்திலே எண்ணிப்பார்க்கவேண்டும்.

1960 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள், தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப் படத்தை எரித்த ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.

ஆக, தமிழ்நாடு என்ற சொல், அந்தக் குரல், திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடைமைக் கட்சிக்கும் மிகுந்த ஈடுபாடுடைய ஒரு பெரிய கொள்கையே!

தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்கள், தமிழைப் பற்றி சொல்லுகின்றபொழுது, ‘‘உன்னுடைய தமிழ் கோவிலில் இடம்பெற்று இருக்கிறதா? நீங்கள் பேசுகின்ற தமிழ் ஏன் கோவிலில் வழிபாட்டு மொழியாக இருக்க வில்லை? தமிழன் கட்டிய கோவிலில், ஏன் தமிழன் ஒரு வன் அர்ச்சகனாக இருக்க முடியாது? இவையெல்லாம் இல்லாமல் வெறும் ‘‘தமிழ்நாடு என்று பெயர் வந்து விட்டால் மட்டும் போதுமா?'' என்று தந்தை பெரியார் அவர்கள் கேள்வி எழுப்பினார்.

'தீக்கதிர்' நாளிதழில்

வெளிவந்துள்ள கட்டுரை!

இன்றைக்குத் ‘தீக்கதிர்' நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அந்தக் கட்டுரையை தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள்தான் எழுதியிருக்கிறார்.

சென்னை ஆங்கிலத்தில் இருந்தால் என்ன?

தமிழ்நாடு என்று இருந்தால் என்ன? திராவிடத்தில் தான் இருக்கப் போகிறது என்று பெரியார் பேசினார் என அந்தக் கட்டுரையில் உள்ளது.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எந்த அடிப்படையில் இவர் எழுதுகிறார்? தந்தை பெரியார் இதற்காக கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருக் கிறார்கள். கட்சிக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு இருக்கின்றன.

ஜனாதிபதியாக இருந்த இராஜேந்திரபிரசாத் தமிழ் நாட்டிற்கு வந்தபொழுது, இந்த அடிப்படையில், அவ ருக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டு இருக்கிறது. தமிழ் நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில், அவர் தமிழ்மீது அக்கறை இல்லாமல் இருந்தது கிடையாது. அவர் எண்ணமெல்லாம், இன்னும் நீங்கள் புராணத் தையும், இதிகாசத்தையும் கட்டிக்கிட்டு, எப்படி தமிழை வளர்க்கப் போகிறீர்கள்? என்பதுதான் அவருடைய கவலை. மொழியை விஞ்ஞான மொழியாக்கவேண்டும். இன்னும் பெரியபுராணத்தையும், திருவிளையாடல் புரா ணத்தையும், ஸ்தல புராணங்களையும் நாம் சொல்லிக் கொண்டிருந்தால், தமிழ் எங்கே போய் முடியும்?

தமிழிலிருந்து புராண, இதிகாசங்களை நீக்கிவிட்டால், மீதி இருப்பது பூஜ்ஜியமாகத்தான் இருக்கிறது என்ற அடிப்படையில்தான் தந்தை பெரியார் அவர்கள் தமிழைப்பற்றி சொன்னார்.

சங்கராச்சாரியார் மாதிரி தமிழை நீஷ பாஷை என்று சொல்லவில்லை. பூஜை வேளையில் தமிழ் மொழி பேசி விட்டால், சங்கராச்சாரியார் ஸ்நானம் பண்ணிவிட்டுத் தான் மறுபடியும் பூஜை செய்வார் என்று சொல்லு கிறார்கள். அதுபோன்று தந்தை பெரியார் நினைக்க வில்லை.

‘துக்ளக்' சோ. ராமசாமியின் பதில்!

கோவில்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் ஏன் இல்லை? என்ற ஒரு கேள்விக்கு, ‘துக்ளக்' சோ.இராமசாமி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழில் வழிபாடு செய்யலாம்; அப்படி வழிபாடு செய்தால், அதில் பொருள் இருக்கும். ஆனால், சமஸ் கிருதத்தில் சொல்கிறமாதிரி அருள் இருக்காது என்றார். காரணம், சமஸ்கிருதத்தினுடைய ஒலி அப்படிப்பட்டதாம்.

இவ்வளவுக்கும் கடவுள் ஆசாபாசம் அற்றவர் என்கிறார். அவர் ஒலிக்கு மயங்குகிறாராம்!

தமிழ், செம்மொழியாக வந்தால் என்னாகும்? என்று தினமலர், வாரமலரில் கேட்கப்பட்ட கேள்விக்கு,

உணவே இல்லாத வீடுகளுக்கு பிரியாணி பொட் டலம் வரும். காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் என்று பதில் வெளியிடுகிறது.

‘‘மொழி நக்சலிசம்''

என்று எழுதியது ‘துக்ளக்'

ஒரு காலத்தில் சென்னை மேயராக இருந்த மா.சுப்பிர மணியம் அவர்கள், கடை விளம்பரப் பலகைகளில் தமிழ் மொழி முதலில் இருக்கவேண்டும் என்று சொன் னார்.

அதற்கு துக்ளக்கில், ‘‘மொழி நக்சலிசம்'' என்று எழுதியது.

இப்படி ஒரு பக்கம் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழைப் படித்தால், சட்டி சோறுதான் மிச்சம் என்று துக்ளக்கில் எழுதுகிறார்கள்.

இப்படி ஒரு பக்கம் தமிழைப்பற்றி கொச்சைப்படுத்து கின்ற, கேவலப்படுத்துகின்ற போக்கும் நடந்து கொண் டிருக்கின்றது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்றைக்கு ஒரு அவல நிலை என்னவென்றால், தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர்கள் இல்லை.

நாங்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத் தும்பொழுது, அதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் பெயர்களைக் கேட்போம். கடைசியில், அவர்களுடைய பெயரில் ‘ஷ்' என்று முடியும்.

அதற்கு என்ன பொருள் என்று அவர்களுக்குத் தெரியாது. தமிழ்மீது நமக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால், தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர்கள் இல்லை.

இந்தப் பார்ப்பன கலாச்சாரம், சமஸ்கிருத கலாச்சாரம் எந்த அளவிற்கு இந்த சமுதாயத்திலே ஊடுருவி இருக்கிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு

ஒரு மாற்றம்

1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு மாற்றம் வந்தது.

முன்பெல்லாம் அக்கராசனபதி அவர்களே என்று தான் சொல்வார்கள். பிறகுதான் தலைவர் அவர்களே என்று மாறிற்று.

உபந்நியாசம் என்பது சொற்பொழிவு என்று மாறிற்று.

நமஸ்காரம் என்பது வணக்கம் என்று மாறியது.

வந்தனோபச்சாரம் என்பது நன்றி அறிவிப்பு என்று மாறியது.

அதன் காரணமாக, வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைக்கக்கூடிய ஒரு உணர்வு ஏற்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த  நாராயணசாமி, நெடுஞ்செழியனாக மாறினார்.

இராமய்யா என்பது அன்பழனாக மாறியது.

சோமசுந்தரம்தான் மதியழகனாக மாறினார்.

அரங்கசாமிதான், அரங்கண்ணலாக மாறினார். இப்படி பெரிய பட்டியல் இருக்கிறது. அதற்குப் பின்னால் தான், தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

குடந்தையில் எஸ்.கே.சாமி என்ற ஒரு கழகப் பேச்சாளர் மிகவும் தாமாஷாக பேசுவார். பெயர் வைத் திருக்கிறீர்களே, ஏதாவது பொருள் புரிகிறதா? கேசவன் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே, அதனுடைய பொருள் என்னவென்று தெரியுமா? என்று கேட்பார் கூட்டத்தில். யாராவது கேசவன் என்று இருந்தால் கோபித்துக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்.

கேசவன் என்றால், மயிரான் என்று பொருள்.

ஆதிகேசவன் என்றால், பழைய மயிரான் என்று பொருள் என்றெல்லாம் பேசுவார்.

பொருள் என்னவென்று தெரியாமலேயே நம்மு டைய மக்கள் தமிழ் மக்கள், தாய்மொழியை தமிழ் என்று சொல்லுகின்றவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறார்கள். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதி லேயே ஒரு பார்ப்பன பண்பாட்டு கலாச்சாரப் படை யெடுப்பு நடந்திருக்கிறது.

நம்முடைய வீட்டுப் பிள்ளைகளுக்குத்

தமிழில் பெயர் வையுங்கள்!

இன்றைக்கும் அந்த நிலைமை இருக்கிறது. அதை ஒரு இயக்கமாக நடத்தவேண்டும் என்கிற ஒரு அவசியம் இருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள், அவருக்கே உரித்தான முறையில்,

அறிவுக்கொடி என்று பெயர் வைத்தார். இது எந்த இலக்கியத்தில் இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப் போம். அவரே உருவாக்கிய பெயர்.

அறிவுக்கொடி, அன்புமதி என்று தந்தை பெரியார் அவர்கள் பெயர் வைப்பார். பின்னாளில், ஒரு கொள் கைக்காக, ஸ்டாலின் என்றும், லெனின் என்றும், மாஸ்கோ என்றெல்லாம் பெயர் வைத்தார்.

தமிழ் உணர்வு வந்தால்தான்

இன உணர்வு வரும்!

அப்பொழுது பெரியாரிடம் கேட்டார்கள், ‘‘மாஸ்கோ'' என்று ஊர் பெயராயிற்றே, அந்தப் பெயரை வைக்கிறீர் களே? என்று.

சிதம்பரம் என்றும், பழனி என்றும் நீங்கள் பெயர் வைக்கிறீர்களே, நான் மாஸ்கோ என்று பெயர் வைப்ப தில் என்ன தவறு என்று கேட்டவுடன், அடங்கினார்கள்.

தமிழ் உணர்வு என்பது, அந்தத் தமிழ் உணர்வு வருகின்றபொழுதுதான், இன உணர்வும் வருகிறது. அந்தத் தமிழ் உணர்வும், இன உணர்வும் தேவைப்படு கின்ற ஒரு காலகட்டத்தில்தான் இன்றைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக இன்றைக்கு இருக்கின்ற புதிய தலை முறையினருக்கு இந்த உணர்வுகள் இருக்கிறதா? என் பது ஒரு கேள்விக்குறி. என்றாலும்கூட, நாம் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சாரங்களை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

நான் ஒரு வீட்டிற்குச் சென்றால், குழந்தைக்கு என்ன பெயர் என்று கேட்பேன்; நீங்களே ஒரு பெயர் வையுங் கள் என்பார்கள், நானும் பெயர் வைத்துவிடுவேன்.

எந்த ஒரு பார்ப்பனருக்காவது

தமிழில் பெயர் இருக்கிறதா?

இதை ஒரு இயக்கமாக நடத்தவேண்டும். எந்த ஒரு பார்ப்பனராவது, பரிதிமாற்கலைஞரை தவிர, தமிழில் பெயர் வைத்திருக்கிறார்களா?

அவர்கள் தெளிவாக, உறுதியாக இருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலமாக இந்த வரலாற்றினை சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.

அந்த முறையில், இந்த நிகழ்ச்சி நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள், நம்முடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். ஆசிரியர் சொன்னவுடன், இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஏனென் றால், அவர்களுக்கு இதில் முக்கியமான பங்கு இருக்கிறது என்று சொன்னார்கள், அந்த அடிப்படையில்தான் அவரை அழைத்திருக்கின்றோம்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்  உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு 13 12 19

Saturday 14 December 2019

1922 முதலே தமிழ்நாடு என்ற பெயரை தந்தை பெரியார் பயன்படுத்தியுள்ளார்!

‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் - தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' சிறப்புக் கூட்டத்தில்
பேராசிரியர் ப.காளிமுத்து உரை
சென்னை, டிச.14 தந்தை பெரியார் ‘தமிழ்நாடு' என்ற பெயரை 1922 ஆம் ஆண்டு முதலே பயன்படுத்தி வருகிறார் என்றார் முனைவர் பேராசிரியர் ப.காளிமுத்து.
1.11.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் காளிமுத்து அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும்
தமிழ்நாடு பெயர் மாற்றமும்''
அன்பிற்குரிய தலைவர் அவர்களே, தோழர்களே  உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்வையாளனாக வந்த என்னை, உரையாற்றுமாறு பணித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றாலும், என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம் இருக்கிறது. என்றாலும், எனக்குத் தெரிந்த செய்திகளை மட்டும் உங்கள் முன் வைக்க நான் விரும்புகிறேன்.
1922 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை பெரியார் பயன்படுத்தி இருக்கிறார்
தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் என்று தெரிகிறது. பல இடங்களில், தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை அய்யா அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்.
ஓரிடத்தில், தமிழ்நாடு என்பது 12 மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். வஞ்சகமாக இதை ‘‘மதராஸ் மாநிலம்'' என்று மாற்றுவதற்கு முயற்சி செய் கிறார்கள் என்று கடுமையாக அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்.
இப்படி பல நேரங்களில் தந்தை பெரியார் தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை வலியுறுத்தி, தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி பல இடங்களில் அய்யா அவர்கள் பேசியிருக்கிறார்.
1938 ஆம் ஆண்டு ‘‘தமிழ்நாடு தமிழருக்கே'' என்ற முழக்கத்தை எல்லாம் அய்யா அவர்கள் முன்வைத்ததை எல்லாம் நாம் அறிவோம்.
அதற்குப் பின்னால், 1950 ஆம் ஆண்டிற்குப் பின்பும் அய்யா அவர்கள் அதனை வலியுறுத்தியிருக்கிறார். இதைப்பற்றியெல்லாம் நம்முடைய தலைவர்கள் இங்கே உரையாற்றுவார்கள்.
அதுபோலவே, மொழிவாரி மாநிலம் அமைப்பதற் கான செயல்பாடுகள் நடந்தபொழுது, தட்சணப்பிரதேசம் என்ற அமைப்பை அய்யா அவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார். இதெல்லாம் வரலாற்றில் பதிவான செய்திகள்.
இன்றைக்குத் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தை சூறையாட முயற்சி
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நான் உங் களுக்குச் சொல்ல வந்த செய்தி என்னவென்றால், இன் றைக்குத் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தை சூறையாடுவதற்கு இன்றைக்கு இருக்கின்ற பார்ப்பன அரசு கடுமையான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.
அன்பிற்குரிய நண்பர்களே, இங்கே வரலாறு படித்த நண்பர்கள் இருக்கலாம். 2000 ஆண்டுகளாக தமிழ கத்தை ஆண்ட அரசர்கள், மக்களுக்காக ஒரு பள்ளிக் கூடத்தைக்கூட கட்டி வைக்கவில்லை என்ற துயரமான வரலாற்றை நாம் படிக்க நேர்கிறபொழுது, மனம் மிகவும் வருந்துகிறது.
அத்தனை பள்ளிக்கூடங்களையும் பார்ப்பனர்களுக் காகவே நம்முடைய மன்னர்கள் கட்டி வைத்தார்கள். எந்த இடத்திலும், ஒரு பள்ளிக்கூடத்தைக்கூட அரசு கட்டி வைக்கவில்லை.
மன்னர்கள் காலத்தில் அரசு அலுவலர்களுக்குக்கூட தமிழ் தெரியவில்லை
இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுகளை வெளியிட்டவர்கள் பிற்கால சோழர்கள். பிற்கால  சோழர்கள் கல்வெட்டுகளைப் படித்துப் பார்த்த டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள், மிகுந்த வருத்தத்தோடு ஒரு செய்தியை பதிவு செய்கிறார்.
சோழ மன்னர்கள் காலத்தில் அரசு அலுவலர் களுக்குக்கூட தமிழ் தெரியவில்லை என்கிற ஒரு துயரமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்.
ஆகவே, பிற்கால சோழர் ஆட்சி, பொற்கால ஆட்சி என்று சொல்வது பித்தலாட்டம்.
அதற்குப் பின்னால் வந்த நாயக்க மன்னர்களும், பாண்டியர்களும்கூட மக்களுக்காக எந்த ஒரு பள்ளியையும் நிறுவவில்லை.
நாயக்க மன்னர்களுக்குத் தமிழே தெரியவில்லை என்று தேவநேசன் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதி யிருக்கிறார். அவர்கள் முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.
History of the Nayakas of Mejura
மதுரையில் மட்டும் 10 ஆயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் படித்தார்கள்; அந்த 10 ஆயிரம் மாணவர்களும், பார்ப்பன மாணவர்கள். அந்த 10 ஆயிரம் மாணவர் களுக்கும் உடை, உணவு, உறைவிடம் அத்தனையும் இலவசமாக நாயக்க மன்னர்கள் வழங்கினார்கள். இதை சத்தியநாத அய்யரே எழுதியிருக்கிறார்.  பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ tலீமீ ழிணீஹ்ணீளீணீs ஷீயீ விமீழீuக்ஷீணீ என்ற புத்தகத்தில், அவரே குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தச் செய்தியை முதன்முதலாக வெளிக் கொண்டு வந்தது ராபர்ட் டி நொபலி என்ற கிறித்துவ பாதிரியார். அவர்தான் ரோமாபுரிக்குக் கடிதம் எழுதினார், மதுரை யில் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதைப்பற்றி.
ராபர்ட் டி நொபலி கடிதம் எழுதிய பிறகுதான், அந்த உண்மை உலகிற்குத் தெரிந்தது. சத்தியநாத அய்யர் அதை மறைக்கவில்லை, அந்த உண்மையை அப்படியே எழுதியிருக்கிறார்.
ஏனென்று சொன்னால், கல்வி என்பதும், உயர்கல்வி என்பதும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது என்று சத்தியநாத அய்யர் எழுதுகிறார்.
ஆக, இப்படி வரலாறு முழுக்க, மக்களுக்காக எந்தப் பள்ளிக்கூடத்தையும், நம்மை ஆண்ட முன்னோர்கள், நம்மை ஆண்ட அரசர்கள் யாரும் பள்ளிக்கூடம் கட்டி வைக்கவில்லை என்கிற செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
99.9 விழுக்காடு தற்குறிகளாக இருக்கின்ற
ஒரு சமூகத்தைப் பார்த்து ‘கல்வி சிறந்த தமிழ்நாடு'' என்று பாரதியார் பாடியது எப்படி?
இப்படி இருக்கிறபொழுது, பாரதியார் பாடினான், ‘கல்வி சிறந்த தமிழ்நாடு'' என்று. எந்தக் கருத்தில், அந்த ஆள் இப்படி பாடினான் என்று எனக்குத் தெரியவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தற்குறிகளாக இருந்திருக்கிறார்கள். எங்களுடைய பகுதி யில் முதன்முதலாக உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும், கல்லூரிக்கு வந்ததும் நான்தான். என்னுடைய அப்பா விற்கும், தாத்தாவிற்கும் படிக்கத் தெரியாது, கைரேகை தான்.
தாத்தாவிற்குப் படிக்கத் தெரியவில்லை, முப்பாட் டனுக்கும் படிக்கத் தெரியவில்லை. வரிசையாக எல் லோரும் கைரேகைதான். இப்படி இருக்கும்பொழுது, நூற்றுக்கு 99.9 விழுக்காடு தற்குறிகளாக இருக்கின்ற ஒரு சமூகத்தைப் பார்த்து, ‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு'' என்று பாரதியார் பாடியிருக்கிறான். அதைத்தான் எல்லா பள்ளிக்கூடங்களிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இது ஒரு பெரிய வேடிக்கையான செய்தியாகும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கக்கூடாது
ஆகவே, இந்த நூற்றாண்டில், இந்தக் காலத்தில் நாம் ஏமாந்துவிட்டால், எதிர்கால தலைமுறை அத்தனையும் பாழாய்ப் போய்விடும். நம்முடைய எதிர்கால குழந்தை களுக்காக நாம் அத்தனைத் தியாகங்களையும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், இந்தக் கல்விக் கொள்கையை ஆதரிக்கக்கூடாது. எதிர்த்து ஒழிக்க வேண்டிய தலையாய பணி நம்முடைய பணி என்பதைத் தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு பேராசிரியர் ப.காளிமுத்து அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை நாளேடு,14.12.19

Thursday 12 December 2019

வரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா


அ.ப. நடராசன், உடுமலை   

பழைய மரபு

அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும், நாடார் என்னும் ஜாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது.

இராமநாதபுரம் ஜமீனைச் சேர்ந்த கிராமம் கமுதி. அங்கே மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. நாடார்கள் அந்தக் கோவிலுக்குள் புகுந்தார்கள். மற்றவர்கள் அதைத் தடுத்தார்கள். இதனால் ஒரு கலகமே உண்டாயிற்று.

தம்முடைய ஜமீனைச் சேர்ந்த கிராமம் ஆகையால், பழைய மரபை மாற்றக் கூடாது என்கிற எண்ணத்தைக் கொண்ட அரசர், அவ்வாறு கோவிலுக்குள் புகுந்த நாடார்கள் மீது ஒரு வழக்குப் போட்டார். பல காலமாக இருந்துவந்த பழக்கத்தை மாற்றுவதால் தமக்குப் பழி வரலாம் என்கிற எண்ணத்தில் அவ்வாறு செய்தார். அவருக்கே பல நாடார்கள் நண்பர்களாய் இருந்தார்கள். என்றாலும், நட்பை உத்தேசித்து மரபை மாற்றக்கூடாது என்கிற உறுதியான எண்ணம் உடையவராக இருந்ததால் அந்த வழக்கைப் போட்டார்.

மதுரை சப்_கோர்ட்டில் விசாரணை நடந்தது. டி.வரதராவ் என்பவர் அப்போது சப்_ஜட்ஜாக அங்கே இருந்தார். ஆசிரியப் பெருமானை அங்கே வந்து சாட்சி சொல்ல வேண்டுமென்று சொன்னார்கள். மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களே, “நீங்கள் வந்து சாட்சி சொன்னால் எனக்கு மிகவும் பலமாக இருக்கும்’’ என்று கேட்டுக்கொண்டார். ஆசிரியப் பெருமான் (உ.வே.சா) அப்படியே போய், சாட்சி சொன்னார். நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாது என்று வற்புறுத்தினார். அதன் பிறகு சப்_ஜட்ஜ் தீர்ப்புக் கூறினார். அந்தத் தீர்ப்பில் ஆசிரியரைப் பற்றிச் சிறப்பாக அந்த நீதிபதி சொல்லியிருந்தார்.

“இந்தச் சாட்சியை அளித்தவர் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறவர். தமிழில் உள்ள பழைய நூல்கள் பலவற்றை ஆராய்ந்து பதிப்பித்துக் கொண்டிருக்கிறவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி ஆகியவற்றைப் பதிப்பித்திருக்கிறார். அந்நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். டாக்டர் போப் துரை முதலியவர்கள் அவருடைய புலமைத் திறத்தையும், அவரது பெருமையையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய சாட்சி இந்த வழக்குக்கு மிகவும் தகுதியானதாய் இருக்கிறது. அவர் நடுநிலைமை பிறழாமல் உண்மையை உணர்ந்து சொல்கிறார். ஆகையால் அவருடைய சாட்சி மிகவும் கவனத்திற்குரியதாய் இருந்தது. இத்தகைய சிக்கலான விஷயங்களில் அத்தகைய பெரியவர் சாட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது’’ என்று விரிவாக எழுதினார்.

ஆதாரம்: ‘என் சரித்திரம்’ -உ.வே.சா - தன் ஆசிரியர் பற்றி கி.வா.ஜகந்நாதன், பக்கம்: 793-794

சூத்திரர்கள் இடம்’ என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது!

உங்களுக்குத் தெரியுமா?

பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட  தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’ என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

-  உண்மை இதழ், 16-31. 8. 19

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரம், கருநாடகம், கேரளா பிரிந்த பிறகும் சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாதது ஏன்?

தந்தை பெரியார் எழுப்பிய கேள்வி முக்கியமான கேள்வி!

‘‘மொழிவாரி மாநிலம்'' சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

சென்னை, டிச.11 மொழிவாரி மாநிலம் உருவாக்கப் பட்டதைத் தொடர்ந்து, ஆந்திரர், மலையாளிகள், கன்னடர் பிரிந்த பிறகும், தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல், சென்னை மாநிலம் என்ற பெயர் நீடிப்பது ஏன்? என்று  தந்தை பெரியார் எழுப்பிய வினாவைச் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

1.11.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும்

தமிழ்நாடு பெயர் மாற்றமும்!''

கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

அதுபோல், என்றைக்கும் நம்மோடு இணைந்து போராட்டக் களமானாலும், பிரச்சாரக் களமானாலும் இணைந்திருக்கக்கூடிய அன்பிற்குரிய தோழர் முத் தரசன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அவர்களே,

இங்கே உரையாற்றிய நம்முடைய பேராசிரியர் முனைவர் காளிமுத்து அவர்களே,

பெருங்கவிக்கோ போன்ற தமிழறிஞர் பெருமக்களே, சான்றோர்களே, நண்பர்களே, கழகக் குடும்பத்தவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேறொரு திருமண நிகழ்ச்சிக்கு அண்ணா நகர் பகுதிக்குச் சென்றுவிட்டு வந்ததால், கொஞ்சம் காலதாம தமாக வந்ததற்கு நீங்கள் பொறுத்தருளவேண்டும் என்று கேட்டு,

என்னுடைய உரை என்பது மிக சுருக்கமான உரை யாக இருக்கும். இரண்டு பேர் இன்றைக்குத் தெளிவு படுத்திவிட்டார்கள். சில செய்திகளை தெளிவுபடுத்த வேண்டும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இருவருமே அழகாக விளக்கமாக பல்வேறு பழைய வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டக் கூடிய வகையில், சிறப்பாக இங்கே உரையாற்றி இருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து சில செய்திகள்.

சங்கரலிங்கனார் போன்றோரின் தியாகத்திற்கு நம்முடைய வீர வணக்கம்!

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதற்கு முன்பு சங்கரலிங்கனார் போன்றோரின் தியாகத்திற்கு நாம் வீர வணக்கம் செலுத்தவேண்டும். அப்படிப்பட்டவர் களுடைய தியாகத்திற்குப் பிறகுதான் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதற்காக, அவரைப் போன்ற தியாகிகளுக்கு நம்முடைய வீர வணக்கத்தை செலுத்தி என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன்.

வரலாற்றுப் பிழைகளை செய்யக்கூடிய அளவிலே, திட்டமிட்டு திரிபுவாதங்களை செய்யக்கூடிய நிலையில், இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் பல பேர். அதிலும் சிலர் முகவரியை முன்னாலே நிறுத்த முடியாதவர்கள்கூட இப்படி ஒரு வீண்வம்பு பேசினால் அதற்குப் பதில் சொல்வார்கள்; அதற்கு முன்னாலே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கின்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நான் யார் பெயரையும் உச்சரித்துப் பழக்கம் இல்லை.

கருத்துகள் தவறாக எடுத்து வைக்கின்றபொழுது, ‘‘எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்'' என்பதுதான் மிகவும் முக்கியம். யார்யார் என்பதில், மேலேயும் இருக்கு, கீழேயும் இருக்கு, விளம்பரம் தேடுகிறவர்களிலும் இருக்கு, தேடாதவர்களிலும் இருக்கிறது; ஆகையால், ஊடகங்களும் இங்கே வந்திருக்கின்றன. ஊடகங்கள்கூட இந்தத் தவறை சில நேரங்களில் தெரிந்தோ, தெரியா மலோ அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு விளக்கங்கள் சொல்லுகின்ற வகையில்தான் என்னுடைய உரை இருக்கும்.

ஜூலை மாதம், 1968, 18 ஆம் தேதிதான்

தமிழ்நாடு உதயமான நாள்

இந்த நாள் (நவம்பர் 1) என்பது இருக்கிறதே, இது தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு உரிய நாளா என்று சொன்னால், இல்லை. அதை சரியாகக் கொண்டாடவேண்டுமானால், பேரறிஞர் பெருந் தகை எப்படி ஜூலை மாதம், 1968, 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்களோ, அதுதான் தமிழ்நாடு உதயமான நாள். இந்த நாள் என்பது, மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாள்.

மொழி வழி மாநிலங்கள் பிரிந்த நாள் என்பதற் காக இந்த நாளைக் கொண்டாடலாம்.

இதுபோன்ற சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம். அதற்காகத்தான் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

சென்னை ராஜ்ஜியம் என்றுதான் பிரிந்தது. தொலைக் காட்சிகளில், பத்திரிகைகளில் ‘‘கதையல்ல, வரலாறு'' என்றெல்லாம் சொல்லக்கூடிய நிலையில்கூட, இரண்டு, மூன்று செய்திகளை தெரிந்தோ, தெரியாமலோ விட்டுவிடுகிறார்கள். அல்லது மாற்றிச் சொல்லுகிறார்கள்.

சுப்பையா பிள்ளை

‘மதராஸ் மனதே' என்று தெலுங்கர்கள் தங்களுடைய உரிமையைக் கோரினார்கள். அந்த நேரத்திலே, தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், ஆச்சாரியார் அவர்களும், ம.பொ.சி. அவர்களும் அத்தனை பேரும் சேர்ந்து, நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர் லிங் சாலையில் ஒரு வீடு. அதற்குத் தமிழகம், தமிழ்நாடு,  தாயகம் என்பதுபோன்ற ஒரு பெயரை வைத்துக் கொண்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலா ளராக இருந்தவர் சுப்பையா பிள்ளை அவர்கள். சிறந்த தமிழின உணர்வாளர். தந்தை பெரியாருக்கு, அண்ணா விற்கு, மற்ற அனைத்துத் தலைவர்களுக்கும் மிகவும் வேண்டியவர்.

இன்னும் அந்த வீட்டிற்குச் சரியான அடையாளம் சொல்லவேண்டுமானால், வடபாதி மங்கலம் வி.எஸ். தியாகராஜ முதலியாரின் வீட்டிற்குப் பக்கத்து வீடு.

எல்லோரும் சந்திக்கவேண்டும் என்பதற்காக ஒரு பொது இடம் தேவைப்பட்டது. மீரான் சாகிப் தெரு என்றால், மற்றவர்களுக்குச் சங்கடம், அண்ணாவிற்குச் சங்கடம். இருவரும் பிரிந்து இருந்த காலகட்டம் அது.

ஆகையால், எல்லோரும் சந்திக்கக் கூடிய இடமாகத் தேர்வு செய்தார்கள். ஏ.சுப்பையா அவர்களுடைய வீட்டில் கூட்டம் போட  முடிவு செய்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற் றினார்கள்.

அந்தத் தீர்மானம் என்னவென்றால்,

சென்னையை எக்காரணம் கொண்டும் மற்றவர் களுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது. சென்னை என்பது தான் இந்த மாநிலத்தினுடைய தலைநகராக இருக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதில் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றார்கள்.

ஒரு தவறான செய்தி!

இது ஒரு செய்தி, பதிவு செய்யப்படவேண்டிய செய்தியாகும்.

அதற்கு அடுத்தபடியாக, ஒரு தவறான செய்தி என்னவென்றால், தமிழ்நாடு பெயர் மாற்றத்தைப்பற்றி பெரியார் அவர்களோ, மற்றவர்களோ கவலைப்படாமல் இருந்தார்கள். தேவிக்குளம், பீர்மேடு இவைகளைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள் என்கிற ஒரு தவறான தகவலை இன்றுவரையில் சிலர் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள்.

பெரியார், ம.பொ.சி.க்கு எழுதிய கடிதங்கள், ம.பொ.சி., பெரியாருக்கு எழுதிய கடிதங்கள்!

ம.பொ.சி. அவர்களுடைய பங்கு ஓரளவு இருந்தது. திருத்தணியைப் பெற்றுக்கொள்வது உள்பட. ஆனால், அய்யா அவர்கள், எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும் என்று ‘விடுதலை' ஆசிரியர் குருசாமி அவர்களின் மூலமாக முயன்று, எல்லோரும் சேர்ந்த நேரத்தில், ஒரு பிரச்சினை ஏற்பட்டதினால், ம.பொ.சி. அவர்கள் சரியான ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை. அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ‘விடுதலை'யில் செய்தியும் வெளிவந்திருக்கிறது. கடிதங்களும் இருக் கின்றன.

பெரியார், ம.பொ.சி.க்கு எழுதிய கடிதங்கள், ம.பொ.சி., பெரியாருக்கு எழுதிய கடிதங்கள் இவை அத்தனையும் மிகத் தெளிவாக இருக்கின்றன. ‘விடுதலை'யில் வெளியிட்டும் பல செய்திகள் வந்திருக்கின்றன.

தேவிக்குளம், பீர்மேடு போன்ற பிரச்சினைகளுக்காக நாம் போராடலாம்; எல்லைப் போராட்டத்தில் என்று சொன்னபொழுது, தந்தை பெரியார் ஒரு செய்தியை சொன்னார், அதுதான் மிகவும் முக்கியமானது.

காமராசருடைய ஆட்சி மிகத் தெளிவாக வேரூன்றி விட்டது என்று சொன்னவுடனே, இராஜாஜி அவர்கள், அந்த ஆட்சியை எப்படியாவது அகற்றவேண்டும் என்று முயற்சிக்கிறார். அவரால் அது முடியவில்லை. அதற்காக ஒரு குறுக்கு யோசனை திடீரென்று அவருக்கு வருகிறது.

அது என்னவென்றால், சென்னை ராஜ்ஜியம் பிரிந்த பிற்பாடு, இது சின்ன ராஜ்ஜியம், கேரளா, கருநாடகம், தமிழ்நாடு இவை அத்தனையும் சேர்ந்து தட்சணப் பிரதேசம் என்ற ஒரு பிரதேசத்தை, ஒரு மாநிலத்தை உருவாக்கலாம் என்று சொன்னார்கள்.

தந்தை பெரியார் எழுதிய

‘‘வரவேற்கிறேன்'' தலையங்கம்!

அதற்கு முன்பு தந்தை பெரியார் ‘விடுதலை'யில் எழுதினார். மாநிலத்தைப் பிரித்துவிட்டீர்கள். நான் வரவேற்கிறேன், மொழிவாரியாக.

பெரியார் புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறார்.  ‘‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?'' நூலில் அதனை இணைப்பாகக் கொடுத்திருக்கிறோம்.

அதில், ‘‘தமிழ்நாடு பெயர் மாற்றமும், தமிழர் உரிமைக் காப்பும்'' என்று எடுத்துச் சொல்கின்றபொழுது,

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தியது திராவிடர் கழகமே!

சென்னை மாநிலம் என்ற பெயர் கூடாது என்று பிற இயக்கங்கள் கூறுமுன் தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தியது திராவிடர் கழ கமே. பலருக்கும் தெரியாத ஒரு வரலாற்று உண்மை.

இதுகுறித்து 11.10.1955 அன்று பெரியார் வெளியிட்ட முக்கிய அறிக்கை.

மொழிவாரி நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கை யைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது.

பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர் நாடகமும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று-கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும் பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள்.

இரண்டு - அவர்கள் இருவருமே மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்கு தங்கள் நாடு அடிமை யாய் இருப்பதுபற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை.

ஆகவே,     இவ்விரு   துறையிலும்  நமக்கு எதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள்; எதிரிகள் என்றே சொல்லலாம்.

மூன்றாவது - இவர்கள் இருநாட்டவர்களும் பெய ரளவில் இரு நாட்டவர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை ராஜ்யம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார் கள்.

1. சென்னை

2. செங்கல்பட்டு

3. வட ஆர்க்காடு

4. சேலம்

5. கோவை

6. நீலகிரி

7. திருச்சி

8. மதுரை

9. ராமநாதபுரம்

10. திருநெல்வேலி

11. தஞ்சை

12. தென் ஆர்க்காடு

13. தென்கன்னடம்

14. மலபார்

அப்படி 14இல்  7 இல்  ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொரு ளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்துகொண்டு இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்று கூட சொல்வதற்கு இட மில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

இதை நான் ஆந்திரா பிரிந்ததுமுதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம் பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப்போகலாம் என்றே எனக்குத் தோன்றி விட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனிநாடாக ஆகிவிட்டால் நமது சமய, சமுதாய, தேசீய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்குப் பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன்.

பார்ப்பான் (ஆரியன்) வந்து நானும் தமிழன் தான் என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்!

நிற்க! இந்தப் பிரிவினை அமைப்பு  ஏற்பாட்டில்    எனக்கிருக்கும்  சகிக்க   முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும் மொழியி னுடையவும் இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கின்ற குறை பாட்டு ஆத்திரம்தான். நம்நாட்டுக்கு, சமுதாயத் திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர். அது தமிழல்ல என்பதானாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும் ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலி யுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கருநாடக, கேரள நாட்டுமக்கள்  அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்ததால் அதை வலியுறுத்துவதில்  எனக்கு  சிறிது சங்கடமிருந்தது அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும் திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து நானும் தமிழன் தான் என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.

இந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய் வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இப்போது மற்றொரு மாபெரும் தொல்லை நெஞ்சில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றி இருக்கிறது.

அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ் நாட்டை விட்டு ஆந்திரர், கருநாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புகூட, மீதி உள்ள யாருடைய ஆட்சேபனைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு  என்ற பெயர் கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும் வடநாட்டானும்  சூழ்ச்சி செய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரியவருகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழ னானாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டி ருக்கமாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவ னாக இருக்கிறேன்.

இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் மேல்சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன்.

மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புலவர்கள், பிரபுக் கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும், முயற்சிக்கும்படி அதுபோலவே வேண்டிக்கொள்ளு கிறேன்.

தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சிசெய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்கு ஆக இருக்கவேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என் பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். நம்நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால் பிறகு தமிழன் எதற்கு ஆக உயிர் வாழவேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டுவிடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும்  உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

- ஈ.வெ.ரா, 11.10.1955

14 மாவட்டங்கள் இருக்கின்றன சென்னை ராஜ்ஜியத்தில். அதில் தென் கன்னடம் - மலபார்; மலையாளிகளுடைய ஆதிக்கம் தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது.

அவரவர்கள் அவரவர்களுடைய பங்கை அனுபவிக்கவேண்டும். நம்முடைய நாட்டில் என்ன பழிமொழி தெரியுமா? அய்யா அடிக்கடி அந்தப் பழமொழியை மேடைகளில் சொல்வார்.

தாயும், பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும்,

வாயும், வயிறும் வேறு என்பதுதான் அந்தப் பழமொழி.

ஒரே ரத்தம்தான்; அண்ணன், தம்பியாக இருந்தாலும், பாகப் பிரிவினை என்று வரும்பொழுது. இதை சட்டப்பூர்வமாக அனுபவித் திருக்கின்றோம்.

நானும், இவரும் நண்பர்கள் என்று சொல்லி, அவருடைய பாக்கெட் டில் கை வைத்தால், எவ்வளவு நாளைக்குத்தான் அவர் பொறுத்துக் கொண்டிருப்பார்.

முதலில் அமைதியாக சொல்வார்; இரண்டாவது நட்பாக சொல்வார்.  பாக்கெட் என்னுடையது, கை உங்களுடையது என்பதை ஞாபகப்படுத் துவார் அல்லவா!

தமிழ்நாட்டில் மலையாளிகளுடைய

ஆதிக்கம் அதிகம்!

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மலையாளி களுடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று காமராசர் அவர் களுடைய ஆட்சியை ஆதரித்துக்கொண்டே, கடுமையாக ‘விடுதலை' யில் எழுதுகிறார்.

அந்தக் காலகட்டத்தில், இந்த இரண்டு மாவட்டமும் பிரிகிறது. தனியே தமிழ் மாநிலங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு ஸ்டேட், சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரில் வரக்கூடிய சூழல் வந்தவுடன், அதனை வரவேற்கிறேன் என்று பெரியார் அவர்கள் எழுதியவுடன்,

மிக சாமர்த்தியமாக இராஜகோபாலாச்சாரியார் மேலே ஏற்பாடு செய்துவிட்டு, தட்சிணப்பிரதேசத்தை உருவாக்கலாம் என்று சொன்னால், தமிழ்நாடு போய்விடும்; தட்சிணப்பிரதேசத்தில் யார் முதலமைச்சராக இருப்பார்கள்? கேரளத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்; கருநாடகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் முதலமைச்சராக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

- தொடரும்

- விடுதலை நாளேடு 11 12 19

தட்சணப்பிரதேச ஆபத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் தந்தை பெரியார்

‘‘மொழிவாரி மாநிலம்'' சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

சென்னை, டிச.12 தட்சணப்பிரதேச ஆபத்தை முதன் முதலில் சுட்டிக்காட்டியவர் தந்தை பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

1.11.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தமிழ்நாட்டு மக்களுக்கு முதன்முதலாக எடுத்துச் சொன்ன தலைவர் தந்தை பெரியார்!

இந்த தட்சணப்பிரதேச ஆபத்தை, தமிழ்நாட்டு மக்களுக்கு முதன்முதலாக எடுத்துச் சொன்ன தலைவர் தந்தை பெரியார்; எடுத்துச் சொன்ன ஏடு ‘விடுதலை' ஏடு.

தமிழர்களை ஒழிப்பது என்பது மற்றொரு பக்கம்; முதலில் காமராசர் ஆட்சியை ஒழிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

இதில் பிரச்சினை வந்தவுடன், தேவிகுளம், பீர்மேடு என்பது சின்னக் கோடு போன்று ஆனது.

அதுவரையில் இணைந்து போராடலாம் என்று ஒப்புக்கொண்டு எல்லோரும் ஒன்று சேர்கிறார்கள். அப்போது பெரியார் அய்யா சொல்லி அனுப்பினார்.

தட்சிசணப்பிரதேசத்தை, நம்முடைய போராட்டத்தில் முக்கியமாக, முதன்மையாகப் போடவேண்டும். தேவிக் குளம், பீர்மேடு என்பதை அதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், முக்கியமான பிரச்சினை என்னவென்றால், தட்சணப்பிரதேசம் ஆபத்தானது. அதனைக் கருவி லேயே அழிக்கவேண்டும் என்று அந்த யோசனையை சொன்னார்.

ம.பொ.சி. பின்வாங்கி விட்டார்!

எனக்கு அது முக்கியமல்ல, தேவிக்குளம், பீர்மேடு, திருத்தணிதான் முக்கியம் என்று ம.பொ.சி. சொல்லி, பின்வாங்கி விட்டார்.

பெரியார், தட்சணப்பிரதேச எதிர்ப்புப்பற்றி கடுமை யாகப் பேசினார். இவை அத்தனைக்கும் ஆதாரமாக கடிதப் போக்குவரத்துகள் கையில் இருக்கின்றன. யாருக்காவது சந்தேகம் இருந்தால், அதனை நாங்கள் தெளிவுபடுத்தத் தயாராக இருக்கிறோம்.

அடுத்தபடியாக, ஏ.சுப்பையா பிள்ளை அவர்கள் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எல்லோரும் சேர்ந்து ராஜாஜி உள்பட சென்னையைக் காப்பாற்றி விட்டார்கள்.

‘மதராஸ் மனதே' என்று குரல் கொடுத்தார்களே தெலுங்கர்கள் அதனைத் தோற்கடித்தார்கள். சென்னை தான் இதனுடைய தலைநகரம் என்று வந்தவுடன், சென்னை ராஜ்ஜியம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று கொண்டுவரக் கூடிய அளவிற்கு வந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பொழுதுபோக்கு என்னவென்றால், தமிழ் அகராதியைப் புரட்டிக் கொண் டிருப்பார். அவருடைய படுக்கையில் தமிழ் அகராதி இருக்கும். மதுரை தமிழ்ப் பேரகராதியைப் படித்துவிட்டு, தலையங்கம் ஒன்றை ‘விடுதலை'யில் எழுதினார்.

சென்னை மாநிலம் என்ற பெயர்  கூடாது; தமிழ்நாடு என்றுதான் பெயர் வைக்கவேண்டும் என்றார்.

கோவை மாநாட்டுத் தீர்மானங்கள்!

02.12.1956 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மலையாளிகளின் ஆதிக்கத்தையும், கன் னடத் தெலுங்கர்களின் ஆதிக்கத்தையும் கண்டித்து தமிழர்கள் வரவேண்டும் என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதைக் கீழ்க்கண்ட மாநாட் டுத் தீர்மானங்கள் விளக்குகின்றன.

தமிழ் நாட்டிற்கு மலையாள கவர்னர் கூடாது

சென்னை மாநிலத்திற்கு கவர்னராக மலையாள பிரமுகராகிய ஏ.ஜெ.ஜான் நியமனத்தை எதிர்த்து மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது. தமிழ்நாடு கவர் னர் பதவிக்கு தமிழரை நியமிக்கும்படி மத்திய சர்க் காரை கேட்டுக் கொள்கிறது.

சர்க்காருக்கு எச்சரிக்கை

சென்னை மாநிலம் என்ற பிரிவால் அமைக்கப் பட்ட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயரை அளிக்கும்படி சர்க்காருக்கு மாநாடு எச்சரிக்கிறது.

கேரள, கன்னட அதிகாரிகளை அவர்கள் நாட் டிற்கே திருப்பி அனுப்புக. சென்னை மாநிலத்திலுள்ள கேரள (மலையாள), கன்னட அதிகாரிகளை அவர்கள் நாட்டிற்கு மாற்றி அனுப்புவதோடு அவர் கள் உத்தியோகம் வகிக்கும் இடங்களில் தமிழ் அதிகாரிகளை நியமிக்கும்படி சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது. சென்னை மாநிலத்தில் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வரும்படி சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

கோவையில் 02.12.1956 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற கோவை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாநிலங்கள் பிரிந்தபொழுதே முதல் குரல் பெரியாருடைய குரல். இது வரலாற்றில் சரியாகப் பதிவாகவில்லை. தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர் தந்தை பெரியார்தான் என்ற தகவல் பல பேருக்குத் தெரியாது.

மெட்ராஸ் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?

மெட்ராஸ் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதற்கு இதுவரையில் யாரும் எவ்விதமான ஆதாரமும் காட்டவே இல்லை. சென்னை நகர சபை வரலாற்றுச் சுருக்க வெளியீட்டிலுங் கூட மெட்ராஸ் என்ற பெயரின் காரணம் புதிராகவே இருக்கிறது என்று தந்தை பெரியார் எழுதிய அறிக் கையில் இருக்கிறது.

அண்மையில் நான் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதில் ஆ.க.பெருமாள் என்று சொல்லக் கூடிய நண்பர் ஒருவர், தமிழறிஞர் பெருமகன் என்று ஒரு தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்.

நரசிம்ம நாயுடு

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் அந்த நூல் வெளிவந்திருக்கிறது. அதில் பல அறிஞர்களைப்பற்றி செய்திகளைத் தொகுத்திருக்கிறார்.

அதில் நரசிம்ம நாயுடு என்பவர், பத்திரிகைகளை யெல்லாம் நடத்தியிருக்கிறார். அவருடைய காலம் 1854-1922 ஆம் ஆண்டுவரை.

நிறைய செய்திகளை அவர் எழுதியிருக்கிறார்.

செய்திகளை சுவையுடன் சொல்லுவது நரசிம்ம நாயுடுவினுடைய வேலை.

‘‘ஆரியர் திவ்ய தேச யாத்திரை''

நரசிம்ம நாயுடுவினுடைய புத்தகங்களில் ஒன்று, ‘‘ஆரியர் திவ்ய தேச யாத்திரை'' என்னும் ஒரு நூல். அதைப்பற்றி மிகத் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், நம்முடைய சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள், நரசிம்ம நாயுடுவைப்பற்றி ஆய்வு செய்தி ருக்கிறார்.

திவ்ய தேச யாத்திரை என்ற நூல். இது வடநாட்டு அனுபவம்பற்றியது. வடநாட்டைப்பற்றி சொல்லும் பொழுது, அந்தக் காலத்தில் அதற்குக் கொடுத்த தலைப்பு ‘‘ஆரியர் திவ்ய தேச யாத்திரை'' - அது ஆரியர் நாடு. அதேநேரத்தில், தென்னாட்டு அனுபவம்பற்றி தட்சண இந்திய சரித்திரம். இரண்டு நூல்களும் 1500 பக்கங்கள்.

அவர் இதற்கு ஒரு விளக்கம் சொல்லியிருக்கிறார்,

மெட்ராஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைப்பற்றி சொல்லும்பொழுது,

சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஹார்மேனியன் செயின்ட் மேரி கோவிலுக்கு மெட்ரி டயஸ் என்ற பெயர் இருந்தது. இது மெட்ராஸ் ஆகி, மதராஸ் ஆனது. இதுதான் மெட்ராஸ் பெயர் வந்ததற்குக் காரணம்.

பெரியாருக்கு வந்த கோபம், அகராதியைப் புரட்டிக் கொண்டிருந்தபொழுது,

சென்னை என்றால்

கதுப்பு என்று பொருள்!

மதுரைப் பேரகராதி 837 ஆம் பக்கத்தில், சென்னை என்றால் கதுப்பு என்று பொருள் கூறப் பட்டு இருக்கிறது.

கதுப்பு என்றால் என்ன?

401 ஆம் பக்கத்தில், கதுப்பு என்றால் மயிர் என்று பொருள் கூறப்பட்டு இருக்கிறது.

இதைப்பற்றி ‘விடுதலை'யில் அன்றைக்கே எழுதினார். இதற்காகவாவது சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை மாற்றவேண்டாமா? என்று சொன் னார்.

நான் அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவன்.

தமிழ்ப் பேரவையில் சென்னையைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அன்றைக்குத்தான் பெரியாருடைய தலையங்கம் ‘விடுதலை'யில் வருகிறது.

என்னுடைய பேராசிரியர் டாக்டர் ஆ.சிதம்பர நாதனார் அவர்களும், ஆராய்ச்சியாளர் ஜி.சுப்பிரமணிய பிள்ளை  ஆகியோர் எல்லாம் அமர்ந்து என்னுடைய உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிரிப்பு தாள முடியாமல், கைதட்டினர்.

ஆகவேதான், தட்சணப்பிரதேசத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பிரச்சாரம் செய்தார்.

அந்தக் காலகட்டத்தில்தான், நாங்கள் தந்தை பெரியாரை அண்ணாமலை நகருக்கு அனுப்பினோம்.

பெரியாரிடம் கேள்வி கேட்டனர்!

ம.பொ.சி. அவர்களோடு ஏன் நீங்கள் கலந்து கொள்ளவில்லை?

தேவிக்குளம், பீர்மேடு பிரச்சினையில் ஏன் நீங்கள் தீவிரமாக இல்லை?

என்று கேள்விகளை பெரியாரிடம் கடிதம் எழுதிக் கேட்டார்கள்.

தட்சணப்பிரதேசத்தை வைத்து தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியை ஒழிக்கவேண்டும்; தமிழ்நாட் டையே அழிக்கவேண்டும். தமிழ்நாட்டை, தட்சணப் பிரதேசத்தோடு இணைக்கவேண்டும் என்று சொன்ன காரணத்தினால்தான், எதிர்க்கவேண்டியதில் எது மிகப்பெரிய ஆபத்து என்று நினைத்த நேரத்தில், அதை செய்தாலே இவை எல்லாம் தானாகவே வரும் என்பதினால்தான், அதையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று நான் கேட்டேன். அவர் அதை இணைப்பதற்குத் தயாராக இல்லை. இதோ கடிதப் போக்குவரத்து இருக்கிறது என்று பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

எனவேதான், மிகப்பெரிய அளவிற்கு தட்சணப் பிரதேச ஒழிப்பு என்பதை தெளிவாகச் செய்தார்கள்.

செயல்களால் பரிமளிக்கச்

செய்யவேண்டும்

அண்ணா அவர்கள் இந்தக் கருத்தையெல்லாம் மனதில் வாங்கி வைத்துக் கொண்டதினால்தான், ஆட்சிக்கு வந்தவுடன், பெரியார் எதை எதை யெல்லாம் விரும்பினாரோ, சுயமரியாதைத் திரு மணத்திற்கு சட்ட வடிவம் கொடுக்கவேண்டும்; ஆட்சி பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்ட ஆட்சி என்பது இருக்கிறதே, அதை வெறும் வார்த் தைகளால் அண்ணா அவர்கள் அலங்கரிக்க விரும்ப வில்லை. செயல்களால் பரிமளிக்கச் செய்யவேண்டும் என்று அவர் கருதினார்.

மாயூரத்தில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட

திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம்!

இதனைத் தொடர்ந்து 24.11.1956 இல் மாயூரத்தில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் சென்னை இராஜ்யம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார் தந்தை பெரியார்.

‘‘தமிழ்நாடு என பெயர் வைக்கவேண்டும்; மொழி வழி ராஜ்ய பிரிவினைக்குப் பின் அந்தந்த ராஜ்ய மக்களின் தாய்மொழியின் பெயரால் தங்களது ராஜ்யங்களுக்குப் பெயர் வைத்திருக்கும்போது, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்காமல் சென்னை ராஜ்யம் என்று பெயர் வைத்திருப்பதைக் கண்டு வருந்துவதுடன், சென்னை ராஜ்யம் என்றிருப்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயர் வைக்கும்படி தமிழ்நாட்டு சர்க்காரை இம்மாபெரும் மாநாடு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறது.''

தந்தை பெரியார் அவர்களும் இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்து விளக்கமாகப் பேசினார்கள்.

தொடர்ந்து திராவிடர் கழகத்தால் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. 1967 இல் தந்தை பெரியாரின் தலைமாணாக்கரான அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்றபின் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் அடைந்தது.

மொழி வழி மாநிலப் பிரிவு என்பதை நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடலாம்

எனவேதான் மொழி வழி மாநிலப் பிரிவு என்பதை நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடலாம். அல்லது வரலாற்றுக் குறிப்பில் இருக்கலாம்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் என்று சொன் னால், பூபேஷ் குப்தா போன்றவர்கள் எல்லாம் வர வேற்றார்கள் என்பதெல்லாம் வரலாறு. அது மாநிலங் களவையிலும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆக, அந்தத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வரும்பொழுது, காங்கிரஸ்காரர்கள் எதிர்த்த நேரத்தில், ‘விடுதலை'யில் தெளிவாக எழுதினார்கள்.

‘‘நீண்ட நாள்களுக்கு முன்பாகவே, உங்களுடைய கட்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்றுதானே பெயர் இருக்கிறது; இப்படி இருக்கும்பொழுது நீங்கள் ஏன் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வந்ததை எதிர்க்கிறீர்கள்'' என்றார்கள்.

அந்த வாய்ப்பு வரலாற்றில், அண்ணா அவர்களால் தான் நடத்தப்படவேண்டும் என்று வரலாற்றுக் கட்டாயமாகி, அந்தப் பெருமை வந்திருக்கக்கூடிய அளவில் வந்திருக்கிறது.

எனவேதான், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத் திற்குத் தொடர்ந்து அவர்களை வலியுறுத்தக் கூடிய அதேநேரத்தில், தெளிவாக சொல்கிறார் தந்தை பெரியார்.

சூத்திரன் என்கிற வார்த்தையை சொல்லாதே!

திராவிடம் என்று சொல்கிறீர்களே என்பார்கள்; திராவிடம் என்பது பண்பாட்டு அடிப்படையில். அது வெறும் நாட்டு அடிப்படையில் அல்ல. சூத்திரன் என்கிற வார்த்தையை சொல்லாதே- அதைவிட நல்ல வார்த்தை - நாகரிகமான வார்த்தை - வரலாற்றுப் பெருமையான வார்த் தையை சொல்லவேண்டுமா - திராவிடன் என்பதுதான்.

நான் தமிழன் என்றுதான் கூற விரும்புகிறேன் என்று அய்யா சொல்லுகிறார். ஆனால், தமிழன் என்றால், பார்ப்பானும் உள்ளே புகுந்து விடுகிறானே, அது ஆபத்து ஆயிற்றே! ஆகவே, திராவிடன் என்று சொன்னால், கிட்டே வர மாட்டான். ஆகையால்தான், சரியானது மொழிவழி மாநிலம், திராவிட நாகரிகம், திராவிட மொழி, திராவிடப் பண்பாடு என்பது.

இன ரீதியான பெயர் என்பதைவிட,

தத்துவ ரீதியானது!

அதுமட்டுமல்ல, இன்னும் தெளிவாகப் பார்த்தீர் களேயானால், சமஸ்கிருதம் படித்திருந்தால்கூட, தமிழர்களை ஏற்பதற்குப் பார்ப்பனர்கள் தயாராக இருப்பதில்லை. ஆகவேதான் நண்பர்களே, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கின்ற நேரத்தில், இது வெறும் இன ரீதியான பெயர் என்பதைவிட, தத்துவ ரீதியாக இருக்கக்கூடியது.

திராவிடம் என்பது இருக்கிறதே, தமிழை உள்ள டக்கியது மட்டுமல்ல; தமிழுக்கே மாற்றுப் பெயர். இன உணர்வுக்கு, சமத்துவத்தைக் குறிக்கும்பொழுது, நம்மு டைய தத்துவத்தை சொல்லும்பொழுது, இதுதான் எளிது.

ஆரியம் - திராவிடம் என்று பிரிக்கவேண்டும்.

உதாரணத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மற்றவர் கள் எல்லாம் சேர்ந்து, ‘‘வெள்ளைக்காரன் கால்டுவெல் இவர்களுக்குப் பெயர் வைத்துப் போய்விட்டான்; வெள்ளைக்காரன் வேண்டுமென்றே பிரிப்பதற்காக வைத்தான். இவர்கள் இன்றைக்கும் அதைத் தூக்கி வைத்துக்கொண்டு பேசுகிறார்கள் என்று இன் றைக்கும் திட்டமிட்டு எழுதுகிறார்கள்.

கால்டுவெல் திராவிடம் என்று பெயர் வைக்க வில்லை. பெரியாரும் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாங் களும் சொல்லியிருக்கிறோம். இந்த மேடை யிலும் வலியுறுத்துகிறோம்.

மனுதர்மத்தில்

திராவிடம் என்ற சொல் இருக்கிறது!

மனுதர்மம் நூலை வாங்கிப் பாருங்கள். அந்த நூலில், 10 ஆவது அத்தியாயத்தில் தெளிவாக இருக்கிறது. ‘‘திராவிடம்'' என்ற சொல் இருக்கிறது.

பல நாடுகள், பல அமைப்புகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் என்று வரும்பொழுது ‘‘திராவிடம்'' என்பது இருக்கிறது; திராவிட தேசம் என்று இருக்கிறது.

அதேபோன்று பாகவதத்தில் திராவிட தேசம் என்று இருக்கிறது.

ஆய்வாளர் தொ.பரமசிவன்!

ஆதிசங்கரர்தான், திருஞானசம்பந்தரை ‘‘திராவிட சிசு'' என்று சொன்னார் என்று சொல்வார்கள். அதற் குத் ஆய்வாளர் தொ.பரமசிவன் மிக அழகாக சொன்னார், மனோண்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களும் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அது என்னவென்றால், ‘‘திருஞானசம்பந்தரை ‘‘திராவிட சிசு'' என்று பெருமையாக சொல்லவில்லை ஆதிசங்கரர்; வெறுப்போடுதான் சொல்லியிருக்கிறார். திருஞானசம்பந்தர், தமிழில் பாடியிருக்கிறார் என்ப தற்காக, ‘‘திராவிட சிசு'' என்று வெறுப்பாக சொன் னதுதான், அது, பெருமையாக சொன்னதல்ல'' என்பதை ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரல்மூலம்தான்!

எனவேதான், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறும்பொழுது, தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரல்மூலம்தானே, தமிழ்நாடே பெரிதாயிற்று. அதை யாராவது மறுக்க முடியுமா?

‘‘எலி வலை எலிகளுக்கல்லாமல்,

நரிகளுக்கா?''

அய்யாவின் கொள்கைகளை எதிர்த்து எழுதக்கூடிய பிரபலமான பத்திரிகை, அதுவே இன்றைக்கு மாறியிருக் கிறது. அந்தப் பத்திரிகை ஒரு காலத்தில் என்ன செய்தி போட்டது தெரியுமா? ‘‘எலி வலை எலிகளுக்கே'' என்று. தமிழ்நாடு தமிழருக்கே என்று 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பின்போது சொன்னபொழுது, ‘ஆனந்தவிகடன்'' பத்தி ரிகை, ‘‘எலி வலை எலிகளுக்கே'' என்று கார்ட்டூன் போட்டது.

உடனே அழகிரி கேட்டார், ‘‘எலி வலை எலிகளுக்கல் லாமல், நரிகளுக்கா?'' என்று கேட்டார்.

ஆகவே நண்பர்களே, அரசமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாகவே இருக்கிறது. 29 ஆவது பிரிவு - அடிப்படைக் கட்டுமானத்தின் பிரிவு.

அவரவர்களுடைய கலாச்சாரம்,

அவரவர்களுடைய பண்பாடு,

அவரவர்களுடைய மொழி

இவை எல்லாம் காப்பாற்றப்படுவது என்பதோ, போராடு வது என்பதோ அவரவர்களுடைய அடிப்படை உரிமை.

வேட்டி கட்டியவுடன் தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்!

இதை மாற்றி, இதை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தள்ளி, ஒன்றுமில்லாமல் ஆக்கி, அடையாளம் இல்லாமல் ஆக் கலாம் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. வேட்டி கட்டியவுடன் தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்.

மாமல்லபுரத்தில் நடந்தது; அடுத்தபடியாக ஜல்லிக்கட்டில் யாரை அழைத்துக் கொண்டு வரலாம் என்று நினைத்தால், ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி வீரத்தைக் காட்டுமே தவிர, அது வேறு எதையுமே குறிப்பிடாது.

ஆகவே, தமிழ்நாட்டில் எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்த மயக்க மருந்தையும் கொடுத்து நீங்கள் விலைக்கு வாங்க முடியாது. காரணம், பெரியாருடைய மண், அஸ்திவாரம் பலமாக இருக்கக்கூடிய மண்ணாகும். இது தேயக்கூடிய மண்ணல்ல.

ஆபத்து வருவதை தொலைநோக்கோடு பார்க்கக்கூடிய இயக்கம் இந்த இயக்கம்

தட்சணப்பிரதேச ஆபத்தையே அவர்கள் தொலைநோக் கோடு பார்ப்பார்கள்; ஆபத்து வருவதை தொலைநோக்கோடு பார்க்கக்கூடிய இயக்கம் இந்த இயக்கம். அதுமட்டுமல்ல, அரசியலுக்குப் போகாமல்.

அரசியலுக்குப் போன நண்பர்கள், இவர்கள் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து, அவர் களுக்காக நாங்கள் எங்களுடைய தோள்களைக் கொடுப்பது, அவர்களுக்காக ஒருங்கிணைப்பது - இதுபோன்ற வேலை களில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

இன்று காலையில்கூட குஜராத்தை சார்ந்த ஒரு செய்தி யாளர் பேசும்பொழுது சொன்னார், இனிமேல் உங்களுக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற வேலையைவிட, அகில இந்திய அளவிலும், மற்ற இடங்களிலும்தான் வேலை அதிகம். ஆகவே, அங்கே பெரியார் தேவைப்படுகிறார்; அம்பேத்கர் தேவைப்படுகிறார்.

அம்பேத்கரையே இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களால் விழுங்க முடியாத ஒன்று என்று கருதினால், அது பெரியார் தத்துவம்தான். ஆகவே அங்கே வாருங்கள் என்று சொன்னார்.

தமிழ்நாடு என்பது நம்முடைய வீட்டு முகவரி; பண்பாடு என்பது நம்முடைய மனிதநேயம்!

எனவே, உலகளாவிய அளவிற்கு பெரியார் உலக மயமா னாலும், நம்முடைய வீட்டு முகவரி நமக்கு. ஏனென்றால், கடிதம் எழுதினால், வீட்டின் முகவரிக்குத்தானே போட வேண்டும். நான் உலக மனிதன் என்று சொன்னால், கடிதம் உலக மனிதன் என்று எழுத முடியாதல்லவா? வீட்டு முகவரி என்னவென்று சொல்லவேண்டும் அல்லவா? அதுபோன்றதுதான், தமிழ்நாடு என்பது நம்முடைய வீட்டு முகவரி; பண்பாடு என்பது நம்முடைய மனிதநேயம். தேவையான பண்பாடு என்பதும், அதை அடைவதற்கான வழிமுறை என்பதுதான் சுயமரியாதை.

எனவே, இரண்டு நிகழ்வுகள் - தமிழ்நாடு என்று பெயர் வைத்த அண்ணாவிற்கு நாம் அனைவரும் தலைதாழ்ந்து வணக்கத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே, தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான நாள் என்றால், அது ஜூலை 18, 1968.

வரலாற்றில் குழப்பம் வரவேண்டிய

அவசியமில்லை

மொழிவழி மாநிலங்கள் சங்கரலிங்கனார் போன்றவர்க ளுடைய தியாகத்தால் மலர்ந்தது என்று சொன்னால், அது நவம்பர் 1 என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். வரலாற்றில் குழப்பம் வரவேண்டிய அவசியமில்லை என்பதைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 - விடுதலை நாளேடு 12 12 19

Tuesday 10 December 2019

பண்டைய நூல்கள் எவற்றிலும் 'ஹிந்து' என்ற சொல் காணப்படவில்லை

சிந்தன் கிரீஷ் மோடி

(சதுர்வேதி பத்ரிநாதினால் எழுதப்பட்டு துளசி பத்ரிநாதால் தொகுத்து 24-11-2019 அன்றைய இந்து ஆங்கில நாளிதழில்வெளியிடப்பட்ட "தர்மம்: இந்து மதமும் இந்தியாவில் உள்ள மதங்களும்' என்ற நூலின் ஆய்வுரை தமிழாக்கம் செய்யப்பட்டு இங்கே அளிக்கப்படுகிறது. )

 

உண்மையை அறிந்து கொள்ளும் உங்களது திறமை கருத்து தெரிவிக்கும் கட்டுரைகளையும், தொலைக் காட்சி விவாதங்களையும் சார்ந்து இருப்பதானால், இந்தியா இரண்டு முகாம்களாக பிளவு பட்டிருப்பதாக உங்களுக்குத் தோன்றக் கூடும். மதச்சார்பின்மை கோட்பாட்டின் சாவுக்கு வருந்தும் மக்கள் ஒரு புறம்; இந்து ராஷ்டிராவின் தொடக்க விழாவைக் கொண்டாடும் மக்கள் மற்றொரு பக்கம். பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமஜென்ம பூமி இயக்கத்தின் வளர்ச்சி , மதங்களுக் கிடையேயான சமகால உறவுகளை குறிப்பிடத் தக்க வழிகளில் வடிவமைத்துள்ளன.  ஓர் ஹிந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருப்பதன் பொருள் என்ன என்ற கோட்பாட்டின் மய்யமாக எந்த வழியிலும் அயோத்தியா இருக்கவில்லை என்பது நினைவில் இருத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

சதுர்வேதி பத்திரிநாதின் "தர்மம்: இந்து மதமும் இந்தியாவில் உள்ள மற்ற மதங்களும்" என்ற நூல்,  இப்போது நாம் இருக்குமிடத்துக்கு நம்மை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தத்துவ நீரோட்டங்கள் மற்றும் கலாச்சார விவாதங்களில் ஆர்வமுள்ள வாசகர்களுக்கு சரியான காலத்தில் கிடைத்த ஒரு நிதியமாகும். "இந்திய தத்துவம் என்பது ஹிந்து தத்துவம் அல்ல. ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்ட ஏதோ ஒன்று இருந்து வருகிறது . . .  ஹிந்து என்பது ஒரு மதம் . . .  இந்தியாவின் நாகரிகம் உண்மையில் ஹிந்து மத நாகரிகம்தான் . . ." என்ற மாபெரும் தவறான கருத்து 16 ஆம் நூற்றாண்டு முதல் நிலவி வருகிறது.  பண்டைய நூல்கள் எவற்றிலும் ஹிந்து என்ற சொல் காணப்படவில்லை என்பதால்,  தர்மம் என்பது மதம் என்று தவறாக மொழிமாற்றம் செய்யப் பட்டது என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார்.

கடந்த கால தொடர்புகள்

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் ஹிந்து என்ற புதிய சொல்லை அராபியர்கள் வடிவமைத்தார்கள் என்றும், இந்தியாவின் பண்டைய சிந்தனையாளர்கள் தங்களை ஹிந்துவாக அடையாளப்படுத்திக் கொள்ள வில்லை என்றும்  பத்ரிநாத் கூறுகிறார்.  ஹிந்து என்ற பெயர் அளிக்கப்பட இயன்ற ஓர் ஒருங்கிணைந்த மத நம்பிக்கை நடைமுறையைத் தேடிக் கொண்டிருந்த 16 ஆம் நூற்றாண்டு கத்தோலிக்க கிறித்தவ மதத்தினால் உருவாக்கப் பட்டதுதான் ஹிந்து மதம் என்ற சொல் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் அவர்கள் எதிர் கொண்ட மதங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் நிலவும் பல்வேறுபட்ட வேறுபாடுகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. காலப் போக்கில் சொற்களின் பொருள்கள் மாறுபடக்கூடும் என்ற உண்மையையும், இன்று கோடிக்கணக்கான மக்கள் தங்களை ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் என்ற உண்மையையும் அவர் மறுக்கவில்லை.

பலமதங்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வதையும், தங்கள் பிரச்சினைகளை அவர்கள் பேசித் தீர்த்துக் கொள்வதையும் பத்திரிநாத் பலமாக ஆதரிப்பவர் என்றே தோன்றுகிறது. இந்த நூல் முழுக்க முழுக்க அதற்கான சான்றாகவே விளங்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி அன்னியர்களின் ஆட்சி என்று கருதப்பட்டதுபோல, இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி அன்னிய ஆட்சி  என்று கருதப்படவில்லை என்பதை  அவர் மிகத் தெளிவாக வகைப்படுத்திக் கூறு கிறார். இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் இந்தியர்களே என்பதை நிலைநாட்டுவதற்கு விரிவான குறிப்புகளை அவர் அளிக்கிறார்.

அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று தந்தைகளின் பெயர்களை மட்டுமே வலதுசாரி, இடது சாரி வரலாற்று விரிவுரையாளர்கள் குறிப்பிட்டிருக்கின் றனர் என்று கூறும் பத்ரிநாத் மிகுந்த கவனத்துடன் அவர்களது தாய்கள் மற்றும்  மனைவிகளின் பெயர் களையும் குறிப்பிடுகிறார்.  அவர்களில்  இந்துக்களாக இருந்த ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டபோது இஸ்லாம் மதத்திற்கு அவர்கள் மாற வேண்டியிருக்க வில்லை.

முஸ்லிம் ஆட்சியாளர்களின் ராணுவத்தினர் இந்தியர்கள் மீது இஸ்லாம் மதத்தைத் திணித்தனர் என்ற கண்ணோட்டமும் இந்நூலில் தீவிரமாக மறுக்கப் பட்டுள்ளது. இஸ்லாம் மதம் இந்தியாவில் பரவியதற்குக் காரணம், மக்களின் நோய்களைத் தீர்த்து வைக்கும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் முஸ்லிம் துறவிகளே என்று பத்திரிநாத் கூறுகிறார். சுஃபி மாயதத்துவத்தின் பால் இருந்த ஆன்மிக கவர்ச்சி மற்றும் தத்துவ தாகமும்தான் ஹிந்துக்களை இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு ஈர்த்தன. வேதாந்தத்தைப் போலவே இந்த தத்துவமும் அனைத்து உயிர்களும் ஒரே தன்மை கொண்டவை என்பதை வலியுறுத்துகிறது.

சமஸ்கிருத மொழியில் இருந்த  நூல்களை பெர்சிய மொழியில் மொழியாக்கம் செய்ததற்கு அல்பிருணி மற்றும் தாரா சுகோக்குக்கு நன்றி கூறவேண்டும். இஸ்லாம் மதத்தில் இருக்கும் மதிப்பு வாய்ந்த மதிப்பீடுகளை ஒரு மனிதராக மிக விரிவாக சாமி விவேகானந்தா பாராட்டியிருக்கும் காரணத்தால், ஒரு கோட்பாட்டுப் பெட்டகத்தில் அவரை அடக்குவது அவ்வளவு எளிதானது இல்லை. விவேகானந்தரை ஹிந்துத்துவக் கோட்பாட்டாளராகக் கருதுபவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

கிறித்துவ மதத்தின் வருகை

இந்தியாவிற்கு கிறித்துவ மதம் வந்தது, பெரும்பாலும் ஆங்கிலேய ஆட்சியுடன் இணைத்தே பேசப் பட்டு வருகிறது. யேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததற்குப் பிறகு அய்ந்து மாதங்களிலேயே தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு கிறித்தவ மதம் எவ்வாறு வந்து சேர்ந்தது என்று பேசுவதன் மூலம் அந்தத் தவறான கண்ணோட்டத்தையும் சரி செய்ய அவர் முயல்கிறார். இங்குள்ள சிரியன் கிறித்தவ மக்கள், அய்ரோப்பிய நாடுகளில் வாழும் கிறித்தவர்களை விட பழமை வாய்ந்தவர்கள்.

யேசு கிறிஸ்து பற்றிய அவரது அணுகுமுறை மிகுந்த மரியாதை கொண்டதாக இருந்த போதிலும், இந்திய கிறித்தவ தேவாலயங்களில் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறிய உயர் ஜாதியினர் மற்றும் கீழ் ஜாதியினருக்கு தனித் தனியான இடங்களைப் பிரித்து உருவாக்கியதன் மூலம் ஜாதி நடைமுறையை மறுபடியும் தொடர்ந்து நடைமுறைப் படுத்திய பாதிரிகளை அவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார். ஹிந்து கடவுள் வரிசையில் யேசு கிறித்துவும் ஈர்த்துக் கொள்ளப்பட்டதன் மூலம் ஆங்கிலக் கல்வியினால் பார்ப்பனர்கள் பயன் பெற்ற நிலையில், சூத்திரர்கள் தொடர்ந்து பாகுபாட்டுடனேயே நடத்தி வரப்பட்டனர்.

உண்மையைக் கூறுவதானால், ஜைனமதம், புத்தமதம் பற்றி பத்திரிநாத் வைத்திருந்த மரியாதையும் பற்றும்  இந்த நூலின் மிகமிக முக்கியமான பகுதியாக அமைந்திருக்கிறது. பாரம்பரியமாக தங்களுக்குக் கிடைத்த இந்திய தத்துவக் கருத்துகளை பரிசீலனை செய்து, கண்டித்து, எதிர்த்து, மேலும் அவற்றை முன்னேற்றமடையச் செய்த மகாவீரர் மற்றும் கவுதம புத்தர் இந்நூலில் விரிவாகவும், ஆழ்ந்தும் விவாதிக்கப் பட்டுள்ளனர். என்றாலும், படிப்பது கூட ஓர் எதிர்ப்புச் செயலே என்பதால், விமர்சனங்களும் அரசியல் தேவைகள், நெருக்கடிகளுக்கு விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியதாகவே இருக்கின்றன.

நன்றி: 'தி இந்து'  24-11-2019

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

- விடுதலை நாளேடு 7 12 19