Thursday 12 December 2019

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரம், கருநாடகம், கேரளா பிரிந்த பிறகும் சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாதது ஏன்?

தந்தை பெரியார் எழுப்பிய கேள்வி முக்கியமான கேள்வி!

‘‘மொழிவாரி மாநிலம்'' சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

சென்னை, டிச.11 மொழிவாரி மாநிலம் உருவாக்கப் பட்டதைத் தொடர்ந்து, ஆந்திரர், மலையாளிகள், கன்னடர் பிரிந்த பிறகும், தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல், சென்னை மாநிலம் என்ற பெயர் நீடிப்பது ஏன்? என்று  தந்தை பெரியார் எழுப்பிய வினாவைச் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

1.11.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும்

தமிழ்நாடு பெயர் மாற்றமும்!''

கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

அதுபோல், என்றைக்கும் நம்மோடு இணைந்து போராட்டக் களமானாலும், பிரச்சாரக் களமானாலும் இணைந்திருக்கக்கூடிய அன்பிற்குரிய தோழர் முத் தரசன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அவர்களே,

இங்கே உரையாற்றிய நம்முடைய பேராசிரியர் முனைவர் காளிமுத்து அவர்களே,

பெருங்கவிக்கோ போன்ற தமிழறிஞர் பெருமக்களே, சான்றோர்களே, நண்பர்களே, கழகக் குடும்பத்தவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேறொரு திருமண நிகழ்ச்சிக்கு அண்ணா நகர் பகுதிக்குச் சென்றுவிட்டு வந்ததால், கொஞ்சம் காலதாம தமாக வந்ததற்கு நீங்கள் பொறுத்தருளவேண்டும் என்று கேட்டு,

என்னுடைய உரை என்பது மிக சுருக்கமான உரை யாக இருக்கும். இரண்டு பேர் இன்றைக்குத் தெளிவு படுத்திவிட்டார்கள். சில செய்திகளை தெளிவுபடுத்த வேண்டும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இருவருமே அழகாக விளக்கமாக பல்வேறு பழைய வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டக் கூடிய வகையில், சிறப்பாக இங்கே உரையாற்றி இருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து சில செய்திகள்.

சங்கரலிங்கனார் போன்றோரின் தியாகத்திற்கு நம்முடைய வீர வணக்கம்!

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதற்கு முன்பு சங்கரலிங்கனார் போன்றோரின் தியாகத்திற்கு நாம் வீர வணக்கம் செலுத்தவேண்டும். அப்படிப்பட்டவர் களுடைய தியாகத்திற்குப் பிறகுதான் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதற்காக, அவரைப் போன்ற தியாகிகளுக்கு நம்முடைய வீர வணக்கத்தை செலுத்தி என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன்.

வரலாற்றுப் பிழைகளை செய்யக்கூடிய அளவிலே, திட்டமிட்டு திரிபுவாதங்களை செய்யக்கூடிய நிலையில், இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் பல பேர். அதிலும் சிலர் முகவரியை முன்னாலே நிறுத்த முடியாதவர்கள்கூட இப்படி ஒரு வீண்வம்பு பேசினால் அதற்குப் பதில் சொல்வார்கள்; அதற்கு முன்னாலே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கின்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நான் யார் பெயரையும் உச்சரித்துப் பழக்கம் இல்லை.

கருத்துகள் தவறாக எடுத்து வைக்கின்றபொழுது, ‘‘எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்'' என்பதுதான் மிகவும் முக்கியம். யார்யார் என்பதில், மேலேயும் இருக்கு, கீழேயும் இருக்கு, விளம்பரம் தேடுகிறவர்களிலும் இருக்கு, தேடாதவர்களிலும் இருக்கிறது; ஆகையால், ஊடகங்களும் இங்கே வந்திருக்கின்றன. ஊடகங்கள்கூட இந்தத் தவறை சில நேரங்களில் தெரிந்தோ, தெரியா மலோ அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு விளக்கங்கள் சொல்லுகின்ற வகையில்தான் என்னுடைய உரை இருக்கும்.

ஜூலை மாதம், 1968, 18 ஆம் தேதிதான்

தமிழ்நாடு உதயமான நாள்

இந்த நாள் (நவம்பர் 1) என்பது இருக்கிறதே, இது தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு உரிய நாளா என்று சொன்னால், இல்லை. அதை சரியாகக் கொண்டாடவேண்டுமானால், பேரறிஞர் பெருந் தகை எப்படி ஜூலை மாதம், 1968, 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்களோ, அதுதான் தமிழ்நாடு உதயமான நாள். இந்த நாள் என்பது, மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாள்.

மொழி வழி மாநிலங்கள் பிரிந்த நாள் என்பதற் காக இந்த நாளைக் கொண்டாடலாம்.

இதுபோன்ற சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம். அதற்காகத்தான் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

சென்னை ராஜ்ஜியம் என்றுதான் பிரிந்தது. தொலைக் காட்சிகளில், பத்திரிகைகளில் ‘‘கதையல்ல, வரலாறு'' என்றெல்லாம் சொல்லக்கூடிய நிலையில்கூட, இரண்டு, மூன்று செய்திகளை தெரிந்தோ, தெரியாமலோ விட்டுவிடுகிறார்கள். அல்லது மாற்றிச் சொல்லுகிறார்கள்.

சுப்பையா பிள்ளை

‘மதராஸ் மனதே' என்று தெலுங்கர்கள் தங்களுடைய உரிமையைக் கோரினார்கள். அந்த நேரத்திலே, தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், ஆச்சாரியார் அவர்களும், ம.பொ.சி. அவர்களும் அத்தனை பேரும் சேர்ந்து, நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர் லிங் சாலையில் ஒரு வீடு. அதற்குத் தமிழகம், தமிழ்நாடு,  தாயகம் என்பதுபோன்ற ஒரு பெயரை வைத்துக் கொண்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலா ளராக இருந்தவர் சுப்பையா பிள்ளை அவர்கள். சிறந்த தமிழின உணர்வாளர். தந்தை பெரியாருக்கு, அண்ணா விற்கு, மற்ற அனைத்துத் தலைவர்களுக்கும் மிகவும் வேண்டியவர்.

இன்னும் அந்த வீட்டிற்குச் சரியான அடையாளம் சொல்லவேண்டுமானால், வடபாதி மங்கலம் வி.எஸ். தியாகராஜ முதலியாரின் வீட்டிற்குப் பக்கத்து வீடு.

எல்லோரும் சந்திக்கவேண்டும் என்பதற்காக ஒரு பொது இடம் தேவைப்பட்டது. மீரான் சாகிப் தெரு என்றால், மற்றவர்களுக்குச் சங்கடம், அண்ணாவிற்குச் சங்கடம். இருவரும் பிரிந்து இருந்த காலகட்டம் அது.

ஆகையால், எல்லோரும் சந்திக்கக் கூடிய இடமாகத் தேர்வு செய்தார்கள். ஏ.சுப்பையா அவர்களுடைய வீட்டில் கூட்டம் போட  முடிவு செய்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற் றினார்கள்.

அந்தத் தீர்மானம் என்னவென்றால்,

சென்னையை எக்காரணம் கொண்டும் மற்றவர் களுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது. சென்னை என்பது தான் இந்த மாநிலத்தினுடைய தலைநகராக இருக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதில் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றார்கள்.

ஒரு தவறான செய்தி!

இது ஒரு செய்தி, பதிவு செய்யப்படவேண்டிய செய்தியாகும்.

அதற்கு அடுத்தபடியாக, ஒரு தவறான செய்தி என்னவென்றால், தமிழ்நாடு பெயர் மாற்றத்தைப்பற்றி பெரியார் அவர்களோ, மற்றவர்களோ கவலைப்படாமல் இருந்தார்கள். தேவிக்குளம், பீர்மேடு இவைகளைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள் என்கிற ஒரு தவறான தகவலை இன்றுவரையில் சிலர் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள்.

பெரியார், ம.பொ.சி.க்கு எழுதிய கடிதங்கள், ம.பொ.சி., பெரியாருக்கு எழுதிய கடிதங்கள்!

ம.பொ.சி. அவர்களுடைய பங்கு ஓரளவு இருந்தது. திருத்தணியைப் பெற்றுக்கொள்வது உள்பட. ஆனால், அய்யா அவர்கள், எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும் என்று ‘விடுதலை' ஆசிரியர் குருசாமி அவர்களின் மூலமாக முயன்று, எல்லோரும் சேர்ந்த நேரத்தில், ஒரு பிரச்சினை ஏற்பட்டதினால், ம.பொ.சி. அவர்கள் சரியான ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை. அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ‘விடுதலை'யில் செய்தியும் வெளிவந்திருக்கிறது. கடிதங்களும் இருக் கின்றன.

பெரியார், ம.பொ.சி.க்கு எழுதிய கடிதங்கள், ம.பொ.சி., பெரியாருக்கு எழுதிய கடிதங்கள் இவை அத்தனையும் மிகத் தெளிவாக இருக்கின்றன. ‘விடுதலை'யில் வெளியிட்டும் பல செய்திகள் வந்திருக்கின்றன.

தேவிக்குளம், பீர்மேடு போன்ற பிரச்சினைகளுக்காக நாம் போராடலாம்; எல்லைப் போராட்டத்தில் என்று சொன்னபொழுது, தந்தை பெரியார் ஒரு செய்தியை சொன்னார், அதுதான் மிகவும் முக்கியமானது.

காமராசருடைய ஆட்சி மிகத் தெளிவாக வேரூன்றி விட்டது என்று சொன்னவுடனே, இராஜாஜி அவர்கள், அந்த ஆட்சியை எப்படியாவது அகற்றவேண்டும் என்று முயற்சிக்கிறார். அவரால் அது முடியவில்லை. அதற்காக ஒரு குறுக்கு யோசனை திடீரென்று அவருக்கு வருகிறது.

அது என்னவென்றால், சென்னை ராஜ்ஜியம் பிரிந்த பிற்பாடு, இது சின்ன ராஜ்ஜியம், கேரளா, கருநாடகம், தமிழ்நாடு இவை அத்தனையும் சேர்ந்து தட்சணப் பிரதேசம் என்ற ஒரு பிரதேசத்தை, ஒரு மாநிலத்தை உருவாக்கலாம் என்று சொன்னார்கள்.

தந்தை பெரியார் எழுதிய

‘‘வரவேற்கிறேன்'' தலையங்கம்!

அதற்கு முன்பு தந்தை பெரியார் ‘விடுதலை'யில் எழுதினார். மாநிலத்தைப் பிரித்துவிட்டீர்கள். நான் வரவேற்கிறேன், மொழிவாரியாக.

பெரியார் புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறார்.  ‘‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?'' நூலில் அதனை இணைப்பாகக் கொடுத்திருக்கிறோம்.

அதில், ‘‘தமிழ்நாடு பெயர் மாற்றமும், தமிழர் உரிமைக் காப்பும்'' என்று எடுத்துச் சொல்கின்றபொழுது,

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தியது திராவிடர் கழகமே!

சென்னை மாநிலம் என்ற பெயர் கூடாது என்று பிற இயக்கங்கள் கூறுமுன் தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தியது திராவிடர் கழ கமே. பலருக்கும் தெரியாத ஒரு வரலாற்று உண்மை.

இதுகுறித்து 11.10.1955 அன்று பெரியார் வெளியிட்ட முக்கிய அறிக்கை.

மொழிவாரி நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கை யைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது.

பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர் நாடகமும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று-கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும் பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள்.

இரண்டு - அவர்கள் இருவருமே மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்கு தங்கள் நாடு அடிமை யாய் இருப்பதுபற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை.

ஆகவே,     இவ்விரு   துறையிலும்  நமக்கு எதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள்; எதிரிகள் என்றே சொல்லலாம்.

மூன்றாவது - இவர்கள் இருநாட்டவர்களும் பெய ரளவில் இரு நாட்டவர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை ராஜ்யம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார் கள்.

1. சென்னை

2. செங்கல்பட்டு

3. வட ஆர்க்காடு

4. சேலம்

5. கோவை

6. நீலகிரி

7. திருச்சி

8. மதுரை

9. ராமநாதபுரம்

10. திருநெல்வேலி

11. தஞ்சை

12. தென் ஆர்க்காடு

13. தென்கன்னடம்

14. மலபார்

அப்படி 14இல்  7 இல்  ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொரு ளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்துகொண்டு இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்று கூட சொல்வதற்கு இட மில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

இதை நான் ஆந்திரா பிரிந்ததுமுதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம் பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப்போகலாம் என்றே எனக்குத் தோன்றி விட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனிநாடாக ஆகிவிட்டால் நமது சமய, சமுதாய, தேசீய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்குப் பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன்.

பார்ப்பான் (ஆரியன்) வந்து நானும் தமிழன் தான் என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்!

நிற்க! இந்தப் பிரிவினை அமைப்பு  ஏற்பாட்டில்    எனக்கிருக்கும்  சகிக்க   முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும் மொழியி னுடையவும் இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கின்ற குறை பாட்டு ஆத்திரம்தான். நம்நாட்டுக்கு, சமுதாயத் திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர். அது தமிழல்ல என்பதானாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும் ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலி யுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கருநாடக, கேரள நாட்டுமக்கள்  அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்ததால் அதை வலியுறுத்துவதில்  எனக்கு  சிறிது சங்கடமிருந்தது அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும் திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து நானும் தமிழன் தான் என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.

இந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய் வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இப்போது மற்றொரு மாபெரும் தொல்லை நெஞ்சில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றி இருக்கிறது.

அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ் நாட்டை விட்டு ஆந்திரர், கருநாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புகூட, மீதி உள்ள யாருடைய ஆட்சேபனைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு  என்ற பெயர் கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும் வடநாட்டானும்  சூழ்ச்சி செய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரியவருகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழ னானாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டி ருக்கமாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவ னாக இருக்கிறேன்.

இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் மேல்சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன்.

மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புலவர்கள், பிரபுக் கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும், முயற்சிக்கும்படி அதுபோலவே வேண்டிக்கொள்ளு கிறேன்.

தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சிசெய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்கு ஆக இருக்கவேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என் பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். நம்நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால் பிறகு தமிழன் எதற்கு ஆக உயிர் வாழவேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டுவிடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும்  உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

- ஈ.வெ.ரா, 11.10.1955

14 மாவட்டங்கள் இருக்கின்றன சென்னை ராஜ்ஜியத்தில். அதில் தென் கன்னடம் - மலபார்; மலையாளிகளுடைய ஆதிக்கம் தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது.

அவரவர்கள் அவரவர்களுடைய பங்கை அனுபவிக்கவேண்டும். நம்முடைய நாட்டில் என்ன பழிமொழி தெரியுமா? அய்யா அடிக்கடி அந்தப் பழமொழியை மேடைகளில் சொல்வார்.

தாயும், பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும்,

வாயும், வயிறும் வேறு என்பதுதான் அந்தப் பழமொழி.

ஒரே ரத்தம்தான்; அண்ணன், தம்பியாக இருந்தாலும், பாகப் பிரிவினை என்று வரும்பொழுது. இதை சட்டப்பூர்வமாக அனுபவித் திருக்கின்றோம்.

நானும், இவரும் நண்பர்கள் என்று சொல்லி, அவருடைய பாக்கெட் டில் கை வைத்தால், எவ்வளவு நாளைக்குத்தான் அவர் பொறுத்துக் கொண்டிருப்பார்.

முதலில் அமைதியாக சொல்வார்; இரண்டாவது நட்பாக சொல்வார்.  பாக்கெட் என்னுடையது, கை உங்களுடையது என்பதை ஞாபகப்படுத் துவார் அல்லவா!

தமிழ்நாட்டில் மலையாளிகளுடைய

ஆதிக்கம் அதிகம்!

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மலையாளி களுடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று காமராசர் அவர் களுடைய ஆட்சியை ஆதரித்துக்கொண்டே, கடுமையாக ‘விடுதலை' யில் எழுதுகிறார்.

அந்தக் காலகட்டத்தில், இந்த இரண்டு மாவட்டமும் பிரிகிறது. தனியே தமிழ் மாநிலங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு ஸ்டேட், சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரில் வரக்கூடிய சூழல் வந்தவுடன், அதனை வரவேற்கிறேன் என்று பெரியார் அவர்கள் எழுதியவுடன்,

மிக சாமர்த்தியமாக இராஜகோபாலாச்சாரியார் மேலே ஏற்பாடு செய்துவிட்டு, தட்சிணப்பிரதேசத்தை உருவாக்கலாம் என்று சொன்னால், தமிழ்நாடு போய்விடும்; தட்சிணப்பிரதேசத்தில் யார் முதலமைச்சராக இருப்பார்கள்? கேரளத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்; கருநாடகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் முதலமைச்சராக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

- தொடரும்

- விடுதலை நாளேடு 11 12 19

தட்சணப்பிரதேச ஆபத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் தந்தை பெரியார்

‘‘மொழிவாரி மாநிலம்'' சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

சென்னை, டிச.12 தட்சணப்பிரதேச ஆபத்தை முதன் முதலில் சுட்டிக்காட்டியவர் தந்தை பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

1.11.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தமிழ்நாட்டு மக்களுக்கு முதன்முதலாக எடுத்துச் சொன்ன தலைவர் தந்தை பெரியார்!

இந்த தட்சணப்பிரதேச ஆபத்தை, தமிழ்நாட்டு மக்களுக்கு முதன்முதலாக எடுத்துச் சொன்ன தலைவர் தந்தை பெரியார்; எடுத்துச் சொன்ன ஏடு ‘விடுதலை' ஏடு.

தமிழர்களை ஒழிப்பது என்பது மற்றொரு பக்கம்; முதலில் காமராசர் ஆட்சியை ஒழிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

இதில் பிரச்சினை வந்தவுடன், தேவிகுளம், பீர்மேடு என்பது சின்னக் கோடு போன்று ஆனது.

அதுவரையில் இணைந்து போராடலாம் என்று ஒப்புக்கொண்டு எல்லோரும் ஒன்று சேர்கிறார்கள். அப்போது பெரியார் அய்யா சொல்லி அனுப்பினார்.

தட்சிசணப்பிரதேசத்தை, நம்முடைய போராட்டத்தில் முக்கியமாக, முதன்மையாகப் போடவேண்டும். தேவிக் குளம், பீர்மேடு என்பதை அதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், முக்கியமான பிரச்சினை என்னவென்றால், தட்சணப்பிரதேசம் ஆபத்தானது. அதனைக் கருவி லேயே அழிக்கவேண்டும் என்று அந்த யோசனையை சொன்னார்.

ம.பொ.சி. பின்வாங்கி விட்டார்!

எனக்கு அது முக்கியமல்ல, தேவிக்குளம், பீர்மேடு, திருத்தணிதான் முக்கியம் என்று ம.பொ.சி. சொல்லி, பின்வாங்கி விட்டார்.

பெரியார், தட்சணப்பிரதேச எதிர்ப்புப்பற்றி கடுமை யாகப் பேசினார். இவை அத்தனைக்கும் ஆதாரமாக கடிதப் போக்குவரத்துகள் கையில் இருக்கின்றன. யாருக்காவது சந்தேகம் இருந்தால், அதனை நாங்கள் தெளிவுபடுத்தத் தயாராக இருக்கிறோம்.

அடுத்தபடியாக, ஏ.சுப்பையா பிள்ளை அவர்கள் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எல்லோரும் சேர்ந்து ராஜாஜி உள்பட சென்னையைக் காப்பாற்றி விட்டார்கள்.

‘மதராஸ் மனதே' என்று குரல் கொடுத்தார்களே தெலுங்கர்கள் அதனைத் தோற்கடித்தார்கள். சென்னை தான் இதனுடைய தலைநகரம் என்று வந்தவுடன், சென்னை ராஜ்ஜியம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று கொண்டுவரக் கூடிய அளவிற்கு வந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பொழுதுபோக்கு என்னவென்றால், தமிழ் அகராதியைப் புரட்டிக் கொண் டிருப்பார். அவருடைய படுக்கையில் தமிழ் அகராதி இருக்கும். மதுரை தமிழ்ப் பேரகராதியைப் படித்துவிட்டு, தலையங்கம் ஒன்றை ‘விடுதலை'யில் எழுதினார்.

சென்னை மாநிலம் என்ற பெயர்  கூடாது; தமிழ்நாடு என்றுதான் பெயர் வைக்கவேண்டும் என்றார்.

கோவை மாநாட்டுத் தீர்மானங்கள்!

02.12.1956 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மலையாளிகளின் ஆதிக்கத்தையும், கன் னடத் தெலுங்கர்களின் ஆதிக்கத்தையும் கண்டித்து தமிழர்கள் வரவேண்டும் என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதைக் கீழ்க்கண்ட மாநாட் டுத் தீர்மானங்கள் விளக்குகின்றன.

தமிழ் நாட்டிற்கு மலையாள கவர்னர் கூடாது

சென்னை மாநிலத்திற்கு கவர்னராக மலையாள பிரமுகராகிய ஏ.ஜெ.ஜான் நியமனத்தை எதிர்த்து மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது. தமிழ்நாடு கவர் னர் பதவிக்கு தமிழரை நியமிக்கும்படி மத்திய சர்க் காரை கேட்டுக் கொள்கிறது.

சர்க்காருக்கு எச்சரிக்கை

சென்னை மாநிலம் என்ற பிரிவால் அமைக்கப் பட்ட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயரை அளிக்கும்படி சர்க்காருக்கு மாநாடு எச்சரிக்கிறது.

கேரள, கன்னட அதிகாரிகளை அவர்கள் நாட் டிற்கே திருப்பி அனுப்புக. சென்னை மாநிலத்திலுள்ள கேரள (மலையாள), கன்னட அதிகாரிகளை அவர்கள் நாட்டிற்கு மாற்றி அனுப்புவதோடு அவர் கள் உத்தியோகம் வகிக்கும் இடங்களில் தமிழ் அதிகாரிகளை நியமிக்கும்படி சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது. சென்னை மாநிலத்தில் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வரும்படி சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

கோவையில் 02.12.1956 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற கோவை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாநிலங்கள் பிரிந்தபொழுதே முதல் குரல் பெரியாருடைய குரல். இது வரலாற்றில் சரியாகப் பதிவாகவில்லை. தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர் தந்தை பெரியார்தான் என்ற தகவல் பல பேருக்குத் தெரியாது.

மெட்ராஸ் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?

மெட்ராஸ் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதற்கு இதுவரையில் யாரும் எவ்விதமான ஆதாரமும் காட்டவே இல்லை. சென்னை நகர சபை வரலாற்றுச் சுருக்க வெளியீட்டிலுங் கூட மெட்ராஸ் என்ற பெயரின் காரணம் புதிராகவே இருக்கிறது என்று தந்தை பெரியார் எழுதிய அறிக் கையில் இருக்கிறது.

அண்மையில் நான் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதில் ஆ.க.பெருமாள் என்று சொல்லக் கூடிய நண்பர் ஒருவர், தமிழறிஞர் பெருமகன் என்று ஒரு தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்.

நரசிம்ம நாயுடு

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் அந்த நூல் வெளிவந்திருக்கிறது. அதில் பல அறிஞர்களைப்பற்றி செய்திகளைத் தொகுத்திருக்கிறார்.

அதில் நரசிம்ம நாயுடு என்பவர், பத்திரிகைகளை யெல்லாம் நடத்தியிருக்கிறார். அவருடைய காலம் 1854-1922 ஆம் ஆண்டுவரை.

நிறைய செய்திகளை அவர் எழுதியிருக்கிறார்.

செய்திகளை சுவையுடன் சொல்லுவது நரசிம்ம நாயுடுவினுடைய வேலை.

‘‘ஆரியர் திவ்ய தேச யாத்திரை''

நரசிம்ம நாயுடுவினுடைய புத்தகங்களில் ஒன்று, ‘‘ஆரியர் திவ்ய தேச யாத்திரை'' என்னும் ஒரு நூல். அதைப்பற்றி மிகத் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், நம்முடைய சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள், நரசிம்ம நாயுடுவைப்பற்றி ஆய்வு செய்தி ருக்கிறார்.

திவ்ய தேச யாத்திரை என்ற நூல். இது வடநாட்டு அனுபவம்பற்றியது. வடநாட்டைப்பற்றி சொல்லும் பொழுது, அந்தக் காலத்தில் அதற்குக் கொடுத்த தலைப்பு ‘‘ஆரியர் திவ்ய தேச யாத்திரை'' - அது ஆரியர் நாடு. அதேநேரத்தில், தென்னாட்டு அனுபவம்பற்றி தட்சண இந்திய சரித்திரம். இரண்டு நூல்களும் 1500 பக்கங்கள்.

அவர் இதற்கு ஒரு விளக்கம் சொல்லியிருக்கிறார்,

மெட்ராஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைப்பற்றி சொல்லும்பொழுது,

சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஹார்மேனியன் செயின்ட் மேரி கோவிலுக்கு மெட்ரி டயஸ் என்ற பெயர் இருந்தது. இது மெட்ராஸ் ஆகி, மதராஸ் ஆனது. இதுதான் மெட்ராஸ் பெயர் வந்ததற்குக் காரணம்.

பெரியாருக்கு வந்த கோபம், அகராதியைப் புரட்டிக் கொண்டிருந்தபொழுது,

சென்னை என்றால்

கதுப்பு என்று பொருள்!

மதுரைப் பேரகராதி 837 ஆம் பக்கத்தில், சென்னை என்றால் கதுப்பு என்று பொருள் கூறப் பட்டு இருக்கிறது.

கதுப்பு என்றால் என்ன?

401 ஆம் பக்கத்தில், கதுப்பு என்றால் மயிர் என்று பொருள் கூறப்பட்டு இருக்கிறது.

இதைப்பற்றி ‘விடுதலை'யில் அன்றைக்கே எழுதினார். இதற்காகவாவது சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை மாற்றவேண்டாமா? என்று சொன் னார்.

நான் அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவன்.

தமிழ்ப் பேரவையில் சென்னையைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அன்றைக்குத்தான் பெரியாருடைய தலையங்கம் ‘விடுதலை'யில் வருகிறது.

என்னுடைய பேராசிரியர் டாக்டர் ஆ.சிதம்பர நாதனார் அவர்களும், ஆராய்ச்சியாளர் ஜி.சுப்பிரமணிய பிள்ளை  ஆகியோர் எல்லாம் அமர்ந்து என்னுடைய உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிரிப்பு தாள முடியாமல், கைதட்டினர்.

ஆகவேதான், தட்சணப்பிரதேசத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பிரச்சாரம் செய்தார்.

அந்தக் காலகட்டத்தில்தான், நாங்கள் தந்தை பெரியாரை அண்ணாமலை நகருக்கு அனுப்பினோம்.

பெரியாரிடம் கேள்வி கேட்டனர்!

ம.பொ.சி. அவர்களோடு ஏன் நீங்கள் கலந்து கொள்ளவில்லை?

தேவிக்குளம், பீர்மேடு பிரச்சினையில் ஏன் நீங்கள் தீவிரமாக இல்லை?

என்று கேள்விகளை பெரியாரிடம் கடிதம் எழுதிக் கேட்டார்கள்.

தட்சணப்பிரதேசத்தை வைத்து தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியை ஒழிக்கவேண்டும்; தமிழ்நாட் டையே அழிக்கவேண்டும். தமிழ்நாட்டை, தட்சணப் பிரதேசத்தோடு இணைக்கவேண்டும் என்று சொன்ன காரணத்தினால்தான், எதிர்க்கவேண்டியதில் எது மிகப்பெரிய ஆபத்து என்று நினைத்த நேரத்தில், அதை செய்தாலே இவை எல்லாம் தானாகவே வரும் என்பதினால்தான், அதையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று நான் கேட்டேன். அவர் அதை இணைப்பதற்குத் தயாராக இல்லை. இதோ கடிதப் போக்குவரத்து இருக்கிறது என்று பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

எனவேதான், மிகப்பெரிய அளவிற்கு தட்சணப் பிரதேச ஒழிப்பு என்பதை தெளிவாகச் செய்தார்கள்.

செயல்களால் பரிமளிக்கச்

செய்யவேண்டும்

அண்ணா அவர்கள் இந்தக் கருத்தையெல்லாம் மனதில் வாங்கி வைத்துக் கொண்டதினால்தான், ஆட்சிக்கு வந்தவுடன், பெரியார் எதை எதை யெல்லாம் விரும்பினாரோ, சுயமரியாதைத் திரு மணத்திற்கு சட்ட வடிவம் கொடுக்கவேண்டும்; ஆட்சி பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்ட ஆட்சி என்பது இருக்கிறதே, அதை வெறும் வார்த் தைகளால் அண்ணா அவர்கள் அலங்கரிக்க விரும்ப வில்லை. செயல்களால் பரிமளிக்கச் செய்யவேண்டும் என்று அவர் கருதினார்.

மாயூரத்தில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட

திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம்!

இதனைத் தொடர்ந்து 24.11.1956 இல் மாயூரத்தில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் சென்னை இராஜ்யம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார் தந்தை பெரியார்.

‘‘தமிழ்நாடு என பெயர் வைக்கவேண்டும்; மொழி வழி ராஜ்ய பிரிவினைக்குப் பின் அந்தந்த ராஜ்ய மக்களின் தாய்மொழியின் பெயரால் தங்களது ராஜ்யங்களுக்குப் பெயர் வைத்திருக்கும்போது, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்காமல் சென்னை ராஜ்யம் என்று பெயர் வைத்திருப்பதைக் கண்டு வருந்துவதுடன், சென்னை ராஜ்யம் என்றிருப்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயர் வைக்கும்படி தமிழ்நாட்டு சர்க்காரை இம்மாபெரும் மாநாடு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறது.''

தந்தை பெரியார் அவர்களும் இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்து விளக்கமாகப் பேசினார்கள்.

தொடர்ந்து திராவிடர் கழகத்தால் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. 1967 இல் தந்தை பெரியாரின் தலைமாணாக்கரான அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்றபின் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் அடைந்தது.

மொழி வழி மாநிலப் பிரிவு என்பதை நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடலாம்

எனவேதான் மொழி வழி மாநிலப் பிரிவு என்பதை நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடலாம். அல்லது வரலாற்றுக் குறிப்பில் இருக்கலாம்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் என்று சொன் னால், பூபேஷ் குப்தா போன்றவர்கள் எல்லாம் வர வேற்றார்கள் என்பதெல்லாம் வரலாறு. அது மாநிலங் களவையிலும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆக, அந்தத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வரும்பொழுது, காங்கிரஸ்காரர்கள் எதிர்த்த நேரத்தில், ‘விடுதலை'யில் தெளிவாக எழுதினார்கள்.

‘‘நீண்ட நாள்களுக்கு முன்பாகவே, உங்களுடைய கட்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்றுதானே பெயர் இருக்கிறது; இப்படி இருக்கும்பொழுது நீங்கள் ஏன் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வந்ததை எதிர்க்கிறீர்கள்'' என்றார்கள்.

அந்த வாய்ப்பு வரலாற்றில், அண்ணா அவர்களால் தான் நடத்தப்படவேண்டும் என்று வரலாற்றுக் கட்டாயமாகி, அந்தப் பெருமை வந்திருக்கக்கூடிய அளவில் வந்திருக்கிறது.

எனவேதான், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத் திற்குத் தொடர்ந்து அவர்களை வலியுறுத்தக் கூடிய அதேநேரத்தில், தெளிவாக சொல்கிறார் தந்தை பெரியார்.

சூத்திரன் என்கிற வார்த்தையை சொல்லாதே!

திராவிடம் என்று சொல்கிறீர்களே என்பார்கள்; திராவிடம் என்பது பண்பாட்டு அடிப்படையில். அது வெறும் நாட்டு அடிப்படையில் அல்ல. சூத்திரன் என்கிற வார்த்தையை சொல்லாதே- அதைவிட நல்ல வார்த்தை - நாகரிகமான வார்த்தை - வரலாற்றுப் பெருமையான வார்த் தையை சொல்லவேண்டுமா - திராவிடன் என்பதுதான்.

நான் தமிழன் என்றுதான் கூற விரும்புகிறேன் என்று அய்யா சொல்லுகிறார். ஆனால், தமிழன் என்றால், பார்ப்பானும் உள்ளே புகுந்து விடுகிறானே, அது ஆபத்து ஆயிற்றே! ஆகவே, திராவிடன் என்று சொன்னால், கிட்டே வர மாட்டான். ஆகையால்தான், சரியானது மொழிவழி மாநிலம், திராவிட நாகரிகம், திராவிட மொழி, திராவிடப் பண்பாடு என்பது.

இன ரீதியான பெயர் என்பதைவிட,

தத்துவ ரீதியானது!

அதுமட்டுமல்ல, இன்னும் தெளிவாகப் பார்த்தீர் களேயானால், சமஸ்கிருதம் படித்திருந்தால்கூட, தமிழர்களை ஏற்பதற்குப் பார்ப்பனர்கள் தயாராக இருப்பதில்லை. ஆகவேதான் நண்பர்களே, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கின்ற நேரத்தில், இது வெறும் இன ரீதியான பெயர் என்பதைவிட, தத்துவ ரீதியாக இருக்கக்கூடியது.

திராவிடம் என்பது இருக்கிறதே, தமிழை உள்ள டக்கியது மட்டுமல்ல; தமிழுக்கே மாற்றுப் பெயர். இன உணர்வுக்கு, சமத்துவத்தைக் குறிக்கும்பொழுது, நம்மு டைய தத்துவத்தை சொல்லும்பொழுது, இதுதான் எளிது.

ஆரியம் - திராவிடம் என்று பிரிக்கவேண்டும்.

உதாரணத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மற்றவர் கள் எல்லாம் சேர்ந்து, ‘‘வெள்ளைக்காரன் கால்டுவெல் இவர்களுக்குப் பெயர் வைத்துப் போய்விட்டான்; வெள்ளைக்காரன் வேண்டுமென்றே பிரிப்பதற்காக வைத்தான். இவர்கள் இன்றைக்கும் அதைத் தூக்கி வைத்துக்கொண்டு பேசுகிறார்கள் என்று இன் றைக்கும் திட்டமிட்டு எழுதுகிறார்கள்.

கால்டுவெல் திராவிடம் என்று பெயர் வைக்க வில்லை. பெரியாரும் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாங் களும் சொல்லியிருக்கிறோம். இந்த மேடை யிலும் வலியுறுத்துகிறோம்.

மனுதர்மத்தில்

திராவிடம் என்ற சொல் இருக்கிறது!

மனுதர்மம் நூலை வாங்கிப் பாருங்கள். அந்த நூலில், 10 ஆவது அத்தியாயத்தில் தெளிவாக இருக்கிறது. ‘‘திராவிடம்'' என்ற சொல் இருக்கிறது.

பல நாடுகள், பல அமைப்புகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் என்று வரும்பொழுது ‘‘திராவிடம்'' என்பது இருக்கிறது; திராவிட தேசம் என்று இருக்கிறது.

அதேபோன்று பாகவதத்தில் திராவிட தேசம் என்று இருக்கிறது.

ஆய்வாளர் தொ.பரமசிவன்!

ஆதிசங்கரர்தான், திருஞானசம்பந்தரை ‘‘திராவிட சிசு'' என்று சொன்னார் என்று சொல்வார்கள். அதற் குத் ஆய்வாளர் தொ.பரமசிவன் மிக அழகாக சொன்னார், மனோண்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களும் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அது என்னவென்றால், ‘‘திருஞானசம்பந்தரை ‘‘திராவிட சிசு'' என்று பெருமையாக சொல்லவில்லை ஆதிசங்கரர்; வெறுப்போடுதான் சொல்லியிருக்கிறார். திருஞானசம்பந்தர், தமிழில் பாடியிருக்கிறார் என்ப தற்காக, ‘‘திராவிட சிசு'' என்று வெறுப்பாக சொன் னதுதான், அது, பெருமையாக சொன்னதல்ல'' என்பதை ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரல்மூலம்தான்!

எனவேதான், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறும்பொழுது, தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரல்மூலம்தானே, தமிழ்நாடே பெரிதாயிற்று. அதை யாராவது மறுக்க முடியுமா?

‘‘எலி வலை எலிகளுக்கல்லாமல்,

நரிகளுக்கா?''

அய்யாவின் கொள்கைகளை எதிர்த்து எழுதக்கூடிய பிரபலமான பத்திரிகை, அதுவே இன்றைக்கு மாறியிருக் கிறது. அந்தப் பத்திரிகை ஒரு காலத்தில் என்ன செய்தி போட்டது தெரியுமா? ‘‘எலி வலை எலிகளுக்கே'' என்று. தமிழ்நாடு தமிழருக்கே என்று 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பின்போது சொன்னபொழுது, ‘ஆனந்தவிகடன்'' பத்தி ரிகை, ‘‘எலி வலை எலிகளுக்கே'' என்று கார்ட்டூன் போட்டது.

உடனே அழகிரி கேட்டார், ‘‘எலி வலை எலிகளுக்கல் லாமல், நரிகளுக்கா?'' என்று கேட்டார்.

ஆகவே நண்பர்களே, அரசமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாகவே இருக்கிறது. 29 ஆவது பிரிவு - அடிப்படைக் கட்டுமானத்தின் பிரிவு.

அவரவர்களுடைய கலாச்சாரம்,

அவரவர்களுடைய பண்பாடு,

அவரவர்களுடைய மொழி

இவை எல்லாம் காப்பாற்றப்படுவது என்பதோ, போராடு வது என்பதோ அவரவர்களுடைய அடிப்படை உரிமை.

வேட்டி கட்டியவுடன் தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்!

இதை மாற்றி, இதை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தள்ளி, ஒன்றுமில்லாமல் ஆக்கி, அடையாளம் இல்லாமல் ஆக் கலாம் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. வேட்டி கட்டியவுடன் தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்.

மாமல்லபுரத்தில் நடந்தது; அடுத்தபடியாக ஜல்லிக்கட்டில் யாரை அழைத்துக் கொண்டு வரலாம் என்று நினைத்தால், ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி வீரத்தைக் காட்டுமே தவிர, அது வேறு எதையுமே குறிப்பிடாது.

ஆகவே, தமிழ்நாட்டில் எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்த மயக்க மருந்தையும் கொடுத்து நீங்கள் விலைக்கு வாங்க முடியாது. காரணம், பெரியாருடைய மண், அஸ்திவாரம் பலமாக இருக்கக்கூடிய மண்ணாகும். இது தேயக்கூடிய மண்ணல்ல.

ஆபத்து வருவதை தொலைநோக்கோடு பார்க்கக்கூடிய இயக்கம் இந்த இயக்கம்

தட்சணப்பிரதேச ஆபத்தையே அவர்கள் தொலைநோக் கோடு பார்ப்பார்கள்; ஆபத்து வருவதை தொலைநோக்கோடு பார்க்கக்கூடிய இயக்கம் இந்த இயக்கம். அதுமட்டுமல்ல, அரசியலுக்குப் போகாமல்.

அரசியலுக்குப் போன நண்பர்கள், இவர்கள் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து, அவர் களுக்காக நாங்கள் எங்களுடைய தோள்களைக் கொடுப்பது, அவர்களுக்காக ஒருங்கிணைப்பது - இதுபோன்ற வேலை களில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

இன்று காலையில்கூட குஜராத்தை சார்ந்த ஒரு செய்தி யாளர் பேசும்பொழுது சொன்னார், இனிமேல் உங்களுக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற வேலையைவிட, அகில இந்திய அளவிலும், மற்ற இடங்களிலும்தான் வேலை அதிகம். ஆகவே, அங்கே பெரியார் தேவைப்படுகிறார்; அம்பேத்கர் தேவைப்படுகிறார்.

அம்பேத்கரையே இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களால் விழுங்க முடியாத ஒன்று என்று கருதினால், அது பெரியார் தத்துவம்தான். ஆகவே அங்கே வாருங்கள் என்று சொன்னார்.

தமிழ்நாடு என்பது நம்முடைய வீட்டு முகவரி; பண்பாடு என்பது நம்முடைய மனிதநேயம்!

எனவே, உலகளாவிய அளவிற்கு பெரியார் உலக மயமா னாலும், நம்முடைய வீட்டு முகவரி நமக்கு. ஏனென்றால், கடிதம் எழுதினால், வீட்டின் முகவரிக்குத்தானே போட வேண்டும். நான் உலக மனிதன் என்று சொன்னால், கடிதம் உலக மனிதன் என்று எழுத முடியாதல்லவா? வீட்டு முகவரி என்னவென்று சொல்லவேண்டும் அல்லவா? அதுபோன்றதுதான், தமிழ்நாடு என்பது நம்முடைய வீட்டு முகவரி; பண்பாடு என்பது நம்முடைய மனிதநேயம். தேவையான பண்பாடு என்பதும், அதை அடைவதற்கான வழிமுறை என்பதுதான் சுயமரியாதை.

எனவே, இரண்டு நிகழ்வுகள் - தமிழ்நாடு என்று பெயர் வைத்த அண்ணாவிற்கு நாம் அனைவரும் தலைதாழ்ந்து வணக்கத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே, தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான நாள் என்றால், அது ஜூலை 18, 1968.

வரலாற்றில் குழப்பம் வரவேண்டிய

அவசியமில்லை

மொழிவழி மாநிலங்கள் சங்கரலிங்கனார் போன்றவர்க ளுடைய தியாகத்தால் மலர்ந்தது என்று சொன்னால், அது நவம்பர் 1 என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். வரலாற்றில் குழப்பம் வரவேண்டிய அவசியமில்லை என்பதைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 - விடுதலை நாளேடு 12 12 19

No comments:

Post a Comment