Saturday 14 December 2019

1922 முதலே தமிழ்நாடு என்ற பெயரை தந்தை பெரியார் பயன்படுத்தியுள்ளார்!

‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் - தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' சிறப்புக் கூட்டத்தில்
பேராசிரியர் ப.காளிமுத்து உரை
சென்னை, டிச.14 தந்தை பெரியார் ‘தமிழ்நாடு' என்ற பெயரை 1922 ஆம் ஆண்டு முதலே பயன்படுத்தி வருகிறார் என்றார் முனைவர் பேராசிரியர் ப.காளிமுத்து.
1.11.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் காளிமுத்து அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும்
தமிழ்நாடு பெயர் மாற்றமும்''
அன்பிற்குரிய தலைவர் அவர்களே, தோழர்களே  உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்வையாளனாக வந்த என்னை, உரையாற்றுமாறு பணித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றாலும், என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம் இருக்கிறது. என்றாலும், எனக்குத் தெரிந்த செய்திகளை மட்டும் உங்கள் முன் வைக்க நான் விரும்புகிறேன்.
1922 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை பெரியார் பயன்படுத்தி இருக்கிறார்
தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் என்று தெரிகிறது. பல இடங்களில், தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை அய்யா அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்.
ஓரிடத்தில், தமிழ்நாடு என்பது 12 மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். வஞ்சகமாக இதை ‘‘மதராஸ் மாநிலம்'' என்று மாற்றுவதற்கு முயற்சி செய் கிறார்கள் என்று கடுமையாக அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்.
இப்படி பல நேரங்களில் தந்தை பெரியார் தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை வலியுறுத்தி, தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி பல இடங்களில் அய்யா அவர்கள் பேசியிருக்கிறார்.
1938 ஆம் ஆண்டு ‘‘தமிழ்நாடு தமிழருக்கே'' என்ற முழக்கத்தை எல்லாம் அய்யா அவர்கள் முன்வைத்ததை எல்லாம் நாம் அறிவோம்.
அதற்குப் பின்னால், 1950 ஆம் ஆண்டிற்குப் பின்பும் அய்யா அவர்கள் அதனை வலியுறுத்தியிருக்கிறார். இதைப்பற்றியெல்லாம் நம்முடைய தலைவர்கள் இங்கே உரையாற்றுவார்கள்.
அதுபோலவே, மொழிவாரி மாநிலம் அமைப்பதற் கான செயல்பாடுகள் நடந்தபொழுது, தட்சணப்பிரதேசம் என்ற அமைப்பை அய்யா அவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார். இதெல்லாம் வரலாற்றில் பதிவான செய்திகள்.
இன்றைக்குத் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தை சூறையாட முயற்சி
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நான் உங் களுக்குச் சொல்ல வந்த செய்தி என்னவென்றால், இன் றைக்குத் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தை சூறையாடுவதற்கு இன்றைக்கு இருக்கின்ற பார்ப்பன அரசு கடுமையான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.
அன்பிற்குரிய நண்பர்களே, இங்கே வரலாறு படித்த நண்பர்கள் இருக்கலாம். 2000 ஆண்டுகளாக தமிழ கத்தை ஆண்ட அரசர்கள், மக்களுக்காக ஒரு பள்ளிக் கூடத்தைக்கூட கட்டி வைக்கவில்லை என்ற துயரமான வரலாற்றை நாம் படிக்க நேர்கிறபொழுது, மனம் மிகவும் வருந்துகிறது.
அத்தனை பள்ளிக்கூடங்களையும் பார்ப்பனர்களுக் காகவே நம்முடைய மன்னர்கள் கட்டி வைத்தார்கள். எந்த இடத்திலும், ஒரு பள்ளிக்கூடத்தைக்கூட அரசு கட்டி வைக்கவில்லை.
மன்னர்கள் காலத்தில் அரசு அலுவலர்களுக்குக்கூட தமிழ் தெரியவில்லை
இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுகளை வெளியிட்டவர்கள் பிற்கால சோழர்கள். பிற்கால  சோழர்கள் கல்வெட்டுகளைப் படித்துப் பார்த்த டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள், மிகுந்த வருத்தத்தோடு ஒரு செய்தியை பதிவு செய்கிறார்.
சோழ மன்னர்கள் காலத்தில் அரசு அலுவலர் களுக்குக்கூட தமிழ் தெரியவில்லை என்கிற ஒரு துயரமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்.
ஆகவே, பிற்கால சோழர் ஆட்சி, பொற்கால ஆட்சி என்று சொல்வது பித்தலாட்டம்.
அதற்குப் பின்னால் வந்த நாயக்க மன்னர்களும், பாண்டியர்களும்கூட மக்களுக்காக எந்த ஒரு பள்ளியையும் நிறுவவில்லை.
நாயக்க மன்னர்களுக்குத் தமிழே தெரியவில்லை என்று தேவநேசன் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதி யிருக்கிறார். அவர்கள் முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.
History of the Nayakas of Mejura
மதுரையில் மட்டும் 10 ஆயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் படித்தார்கள்; அந்த 10 ஆயிரம் மாணவர்களும், பார்ப்பன மாணவர்கள். அந்த 10 ஆயிரம் மாணவர் களுக்கும் உடை, உணவு, உறைவிடம் அத்தனையும் இலவசமாக நாயக்க மன்னர்கள் வழங்கினார்கள். இதை சத்தியநாத அய்யரே எழுதியிருக்கிறார்.  பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ tலீமீ ழிணீஹ்ணீளீணீs ஷீயீ விமீழீuக்ஷீணீ என்ற புத்தகத்தில், அவரே குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தச் செய்தியை முதன்முதலாக வெளிக் கொண்டு வந்தது ராபர்ட் டி நொபலி என்ற கிறித்துவ பாதிரியார். அவர்தான் ரோமாபுரிக்குக் கடிதம் எழுதினார், மதுரை யில் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதைப்பற்றி.
ராபர்ட் டி நொபலி கடிதம் எழுதிய பிறகுதான், அந்த உண்மை உலகிற்குத் தெரிந்தது. சத்தியநாத அய்யர் அதை மறைக்கவில்லை, அந்த உண்மையை அப்படியே எழுதியிருக்கிறார்.
ஏனென்று சொன்னால், கல்வி என்பதும், உயர்கல்வி என்பதும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது என்று சத்தியநாத அய்யர் எழுதுகிறார்.
ஆக, இப்படி வரலாறு முழுக்க, மக்களுக்காக எந்தப் பள்ளிக்கூடத்தையும், நம்மை ஆண்ட முன்னோர்கள், நம்மை ஆண்ட அரசர்கள் யாரும் பள்ளிக்கூடம் கட்டி வைக்கவில்லை என்கிற செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
99.9 விழுக்காடு தற்குறிகளாக இருக்கின்ற
ஒரு சமூகத்தைப் பார்த்து ‘கல்வி சிறந்த தமிழ்நாடு'' என்று பாரதியார் பாடியது எப்படி?
இப்படி இருக்கிறபொழுது, பாரதியார் பாடினான், ‘கல்வி சிறந்த தமிழ்நாடு'' என்று. எந்தக் கருத்தில், அந்த ஆள் இப்படி பாடினான் என்று எனக்குத் தெரியவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தற்குறிகளாக இருந்திருக்கிறார்கள். எங்களுடைய பகுதி யில் முதன்முதலாக உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும், கல்லூரிக்கு வந்ததும் நான்தான். என்னுடைய அப்பா விற்கும், தாத்தாவிற்கும் படிக்கத் தெரியாது, கைரேகை தான்.
தாத்தாவிற்குப் படிக்கத் தெரியவில்லை, முப்பாட் டனுக்கும் படிக்கத் தெரியவில்லை. வரிசையாக எல் லோரும் கைரேகைதான். இப்படி இருக்கும்பொழுது, நூற்றுக்கு 99.9 விழுக்காடு தற்குறிகளாக இருக்கின்ற ஒரு சமூகத்தைப் பார்த்து, ‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு'' என்று பாரதியார் பாடியிருக்கிறான். அதைத்தான் எல்லா பள்ளிக்கூடங்களிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இது ஒரு பெரிய வேடிக்கையான செய்தியாகும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கக்கூடாது
ஆகவே, இந்த நூற்றாண்டில், இந்தக் காலத்தில் நாம் ஏமாந்துவிட்டால், எதிர்கால தலைமுறை அத்தனையும் பாழாய்ப் போய்விடும். நம்முடைய எதிர்கால குழந்தை களுக்காக நாம் அத்தனைத் தியாகங்களையும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், இந்தக் கல்விக் கொள்கையை ஆதரிக்கக்கூடாது. எதிர்த்து ஒழிக்க வேண்டிய தலையாய பணி நம்முடைய பணி என்பதைத் தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு பேராசிரியர் ப.காளிமுத்து அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை நாளேடு,14.12.19

No comments:

Post a Comment