Tuesday 9 July 2024

வணிகக் கட்டடங்களுக்கு பணி நிறைவு குறித்த தமிழ்நாடு அரசின் புதிய சட்டத் திருத்தம்

 



சென்னை, ஜூலை 2 தமிழ்நாட் டில் 300 சதுர மீட்டர் மற்றும் 14 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை என தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒருங்கி ணைந்த வளர்ச்சி கட்டட விதி களின் அடிப்படையில், கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும். இந்த விதிகளை திருத்த வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரி வந்தன. இதுதவிர, அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்று கடந்த மார்ச் மாதம், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என்றிருந்ததை அதிக பட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என திருத்தம் செய்யப்பட்டது. எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. அதேபோல், அதிக உயரமில்லாத கட்டடங்களை பொறுத்தவரை, அக்கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது வணிக கட்டடங்களுக்கும் இந்த சலு கையை அளித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 8 வீடுகள் அல்லது 750 சதுரமீட்டர் என்பதுடன், வணிக கட்டடங்கள் 300 சதுர மீட்டர் வரை மற்றும் உயரத்தில் 14 மீட்டர் என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 300 சதுரமீட்டர் வரை யும், உயரத்தில் 14 மீட்டருக்கு மிகாமலும் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கும் இனி பணி நிறைவு சான்றிதழ் பெறத் தேவை யில்லை.

Saturday 6 July 2024

சென்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் மானமிகு புலவர் காவிரிச்செல்வன் விபத்தில் நம்மைவிட்டு மறைந்தார்!


இயக்க வரலாறான தன் வரலாறு(241) : 

உண்மை இதழ்

அய்யாவின் அடிச்சுவட்டில் …

கி.வீரமணி

 25.12.1991 அன்று சென்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் மானமிகு புலவர் காவிரிச்செல்வன் அவர்கள் ஒரு விபத்தில் நம்மைவிட்டு மறைந்தார் என்கிற பேரிடியான செய்தி கேட்டு நாம் திடுக்குற்றோம்.

சீரிய எழுத்தாளர், சிறந்த செயல்வீரர், நேர்மையான பகுத்தறிவாளர், ஒரு நல்லாசிரியர். ஏராளமான பெரியார் பிஞ்சுகளை உருவாக்கிய பகுத்தறிவுப் பண்ணை அவர் என்றால் அது மிகையாகாது. அவர் நம் இயக்கத்திற்கு தோன்றாத் துணையாக இருந்தவர். ஆண்டு தவறாமல் அய்யா விழாவிலும், புரட்சிக்கவிஞர் விழாவிலும், மாணவர்களிடையே அவர்தம் தொண்டு பற்றியும், பகுத்தறிவுச் சுடர் கொளுத்தவும் அவர் முன்னின்று நடத்திய போட்டிகளும், பணிகளும் என்றென்றும் நம்மால் மறக்க இயலாத ஒன்றாகும்.

காவிரிச் செல்வன்

ஒரு சுயமரியாதை வீரனை இழப்பது அவர்கள் குடும்பத்திற்கும், இயக்கத்திற்கும் மாத்திரம் இழப்பு அல்ல; சமுதாயத்திற்கே பெரும் நட்டமாகும் என்று இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டோம்.

Friday 5 July 2024

விவேகானந்தர் மக்கள் பிரதிநிதிகளால் நிரம்பப் பெற்ற அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை!

 

சிந்தனை : விவேகானந்தர் விளித்த “சகோதர சகோதரிகளே!’’ – ஒரு விமர்சனம்

உண்மை இதழ்

கார்க்கி குமரேசன்

விவேகானந்தர் அமெரிக்கா _ சிகாகோ நகரில், ‘உலக மதங்களின் பாராளுமன்றம்’ (Parliament of World’s Religions) என்னும் நிகழ்வில் ஆற்றிய உரை இன்றளவிலும் வியந்தோங்கி நிறுத்தப்படுகிறது.

அவரது உரையை நுண்ணோக்கினால், அவர் உரை ஆற்றிய சமகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்துகொண்டால், அவ்வுரையில் வியக்க ஏதும் இல்லை என்பதும், முரண்களையும் பிற்போக்குத்தனங்களையும் உள்ளடக்கியது என்பதும் எளிதாக விளங்கும்.

பாராளுமன்றம்

“விவேகானந்தர் அமெரிக்க பாராளு-மன்றத்தில் உரையாற்றினார்’’ என்பது அவற்றில் குறிப்பிடத்தக்கது. அவர் மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த அவையில் உரையாற்றினார் என்றே பலர் கருதுகின்றனர். ‘பாராளுமன்றம்’ என்னும் சொல் நமக்கு அரசியல், அரசியல் அமைப்பு என்னும் பொருளிலேயே அறிந்துகொள்ளப்-பட்டதால் ஏற்பட்ட தவறான புரிதல்.

1893 உலக மதங்களின் பாராளுமன்றம் – சிகாகோ

‘உலக மதங்களின் பாராளுமன்றம்’ என்பது 1893இல் சிகாகோ நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. கிறிஸ்டோபர் கொலம்பஸ்ஸின் அமெரிக்க வருகை(?)யின் 400ஆம் ஆண்டின் நினைவாக, சிகாகோ நகரின் வர்த்தக மேம்பாட்டிற்காக நடைபெற்ற மாபெரும் பொருட்காட்சி என்று அதைக் கொள்ளலாம். அந்நிகழ்வில் கேளிக்கை, கட்டுமானம், தொடர்வண்டி போக்குவரத்து, கட்டிடவியல், ஆயுதத் தளவாடங்கள் என்று பல்வேறு துறைகளுக்கான கூட்டங்களும், காட்சியகங்-களும் அமைக்கப்பட்டன. ‘உலக மதங்களின் பாராளுமன்றம்’ என்பது இவ்வாறு நடைபெற்ற கூட்டங்களுள் ஒன்று.

ஆக, விவேகானந்தர் மக்கள் பிரதிநிதிகளால் நிரம்பப் பெற்ற அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை. மாறாக, ஓர் அமைப்பு, தான் நடத்தும் ஒரு கூட்டத்திற்கு அழைத்ததன் பெயரில் சென்று உரையாற்றினார். அவரைப் போன்றே, பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

‘சகோதர சகேதரிகளே…!’ என்று அவர் விளித்தது, அந்நிகழ்வில் பங்கேற்றவர்களை ஈர்த்தது என்பதை மட்டும் பரப்புரை செய்தவர்கள், உரை முழுவதையும், பிற உரைகள் பற்றி அதிகம் விளம்பரம் செய்வதில்லை.

விவேகானந்தர் உரைகள்

அவ்வுரையில் அவர் கீதையை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். இந்து மதம் சகிப்புத்தன்மை உடையது என்கிறார். ஓர்மையின் விளைவாக ஏற்படும் பண்பாட்டு ஒழிப்பு பற்றி பேசுகிறார்.

அவரின் பேச்சு, இந்து சமயத்தை, பாதிக்கப்பட்டவர் நோக்கில் இருந்து பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் நோக்கியதாகவே பொருள் கொள்ள வேண்டி உள்ளது.

நம்முடைய திராவிட ஆசிரியர்கள் நமக்கு சிறப்பாக விளக்கிய, பார்ப்பனத் தந்திரங்களுள் முதன்மையான ‘உள்வாங்கிச் செரிப்பது’ என்பதைத்தான் விவேகானந்தரும் பேசுகிறார்.

என்ன வேறுபாடு என்றால், நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அந்தத் தந்திரத்தைப் புரிந்துகொள்ள, எதிர்கொள்ள, முறியடிக்க ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பேசுகிறோம். விவேகானந்தர் அந்தத் தந்திரக்காரர்கள் பக்கம் நின்று, பாதிப்பு ஏற்படுத்தியவர்களின் வெற்றியாக, சிறப்பாக அந்தத் தந்திரத்தை வியக்கிறார்.

“ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவில் பல்வேறு சமயங்கள் தோன்றி, வேத மதத்தின் அடிப்படையை ஆட்டம் காண வைத்தன. அவை பூகம்பத்தினால் ஏற்பட்ட ஆழிப் பேரலை, பின்னர் கடலினுள் சேர்வதைப் போல, ஆயிரம் மடங்கு வலுவுடன் தோன்றினாலும், அலை ஓய்ந்த பின் கடலினுள் இழுக்கப்-படுவதைப் போல _ அச்சமயங்கள் வேத மதத்தின் நம்பிக்கையினுள் உறிஞ்சப்பட்டு, உள்வாங்கப்பட்டு, செரிக்கப்பட்டன’’ என கவித்துவமாக, தத்துவார்த்தமாக அந்தத் தந்திரத்தை விவரிக்கிறார்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஆயிரக் கணக்கிலான அமெரிக்க பூர்வகுடிகளைக் கொன்று குவித்ததை இவ்வாறு விவரிக்கிறார் _ “கொன்று குவிக்கப்பட்ட அவ்வுடல்களைக் கொத்தித் தின்ன கழுகுகள் வந்தபோது, வானம் கரு மேகங்களால் சூழப்பட்டதைப் போன்று காட்சி அளித்தது.’’ பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும், அநீதிகளும், நடைபெற்ற கொலைகளும் கவித்துவ அழகியல் கொண்டு விவரிக்கப்படுவதை மனிதம் உடைய எந்த மனிதனும் இரசிப்பதில்லை.

விவேகானந்தர் விவரிப்புக்கும், கொலம்பஸ் விவரிப்புக்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

கொலம்பஸ்ஸின் அமெரிக்க வருகை(?)யின் 400ஆம் ஆண்டு நினைவாக நடைபெறும் நிகழ்வின் ஒரு பகுதிதான் விவேகானந்தர் கலந்துகொண்டது அல்லவா? அதனால் அந்த ஒற்றுமை ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.

அந்நிகழ்வின் ஒன்றுக்கும் மேற்பட்ட அமர்வுகளில் அவர் பேசுகிறார். அவரது உரைகளில் இந்து மதம், பார்ப்பன மதம், வேத மதம் ஆகியனவற்றை வேறுபாடின்றி ஒரே பொருளைக் குறிப்பதாய்ப் பயன்படுத்துகிறார்.

மற்றொரு குறிப்பிடத்தகுந்த பயன்பாடு என்னவென்றால், பாதிக்கப்பட்டவர் நோக்கில் பேசும்பொழுது இந்து, இந்தியர் என்று பொதுவாகப் பேசுகிறார். ஆனால், இந்து சமயத்தவர் மேன்மை, அறிவுத்திறன் எனும் நோக்கில் பேசும்பொழுது பார்ப்பனர் / பிராமணர் என்றே விளிக்கிறார்.

கிறித்துவ மதத்தை விமர்சிக்கும்போது, ஏழ்மை நிறைந்த இந்தியர்களுக்கு ரொட்டித் துண்டு தராமல் மதத்தைத் தருகிறீர்கள் என்கிறார்.

ஏன் அவர்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்? யார் அவர்களை தாழ்த்தப்பட்ட நிலையிலேயே வைத்திருப்பது? போன்ற கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. கேள்வியே அவரிடம் இல்லை.

இந்து மதத்தின் பெயரால் பார்ப்பனர் சுகவாழ்வுக்காக _ சூத்திரர்கள், சூத்திரர்-களாகவே வாழ வேண்டும், மடிய வேண்டும். அந்த இழிநிலையில் இருந்து அவர்கள் வெளியேறி மதமாற்றம் அடைவதே அவரது விமர்சனத்திற்குக் காரணம் என்றே பொருள் கொள்ள வேண்டி உள்ளது.

நாடார்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சி

1897ஆம் ஆண்டு, நாடார் சமூகத்தினர், கமுதி மீனாட்சி அம்மன் ஆலய நுழைவு (போராட்டம்!) முயற்சி மேற்கொண்டனர்.

அவர்கள் நுழைவால், ஆலயம் தீட்டாகி-விட்டது எனவும், அத்தீட்டை பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டு கழிக்க இரண்டாயிரத்து அய்ந்நூறு ரூபாய் வழங்க வேண்டும் எனவும், நாடார்கள் ஆலயத்தினுள் நுழைய நிரந்தர தடை விதிக்கக் கோரியும் வழக்குத் தொடுத்தவர் _ அன்றைய இராமநாதபுர சமஸ்தான மன்னர், திரு.பாஸ்கர சேதுபதி அவர்கள்.

அதன் தொடர்ச்சியாக, 1899ஆம் ஆண்டு, இரு தரப்பு ஒத்திசைவுடன், நாடார் சமூகத்தினர் கோயில் நுழைவு அனுமதிக்காக, முப்பதாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வதாகவும், அதன் அடிப்படையில் அய்ந்தாயிரம் முன் பணம் பெற்றுக் கொள்வதாகவும் கையொப்பம் இட்டார்.

இவ்வொத்திசைவின் அடிப்படையில், நீதிமன்றத் தீர்ப்பு நாடார்களுக்குச் சாதகமானதாக வந்தால், சட்டம்_ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்கிற கருத்து நிலவியதால், ஒத்திசைவை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

அதன் காரணமாக அவ்வொத்திசைவை ரத்து செய்தார், திரு.பாஸ்கர சேதுபதி.

அன்றும் இன்றும்; நாளை மாறும்

ஒரு நீதிமன்ற வழக்கில், ஒரு சாரார் தரப்பில் முழு நியாயம் இருந்தும், சட்டப்படி அவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் சாத்தியக் கூறுகள் இருந்தாலும், எதிர் தரப்பினர் சட்டம்_ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள், சமூக அமைதியைக் குலைப்பார்கள் என்கிற காரணத்தில், அநியாயமான, அறமற்ற தீர்ப்புகள் வழங்குவது, ஏதோ 2019இல் பாபர் மசூதி தீர்ப்பில், முதன்முறையாக நிகழ்வது அன்று; காலங்காலமாக நிகழ்ந்து வருவது, அதுவும் பெரும்பான்மை இந்துக்கள் நம்பிக்கை, நலன் என்கிற பெயரில் பார்ப்பனர் நலனுக்காகவே நிகழ்த்தப்படும் அநீதி.

நாடார்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்கள் சார்ந்ததாகச் சொல்லப்படும் இந்து மதத்தில், அம்மதத்தின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பின்னர் அவர்களையே கருவியாகக் கொண்டு பிற மதத்தினரை ஒடுக்குவதும், தோற்றுவிக்கப்பட்ட கடவுளர் பெயரால் அதை கட்டமைப்பதும், பார்ப்பனிய தந்திரங்களுள் குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவ்வழக்கில் இரு தரப்பு சாட்சியங்களையும் கேட்ட நீதிபதி, நாடார்கள் கமுதி கோவிலினுள் நுழைய அனுமதி இல்லை என்றே தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில், இந்து மதக் கோட்பாடு பிறப்பின் அடிப்படையில் நான்கு வருணங்களாக மக்களைப் பிரிக்கிறது. வெவ்வேறு விலங்கினங்கள் படைக்கப் பட்டதைப் போல வெவ்வேறு விதமான மக்கள் வருணத்தின் அடிப்படையில் படைக்கப் பட்டார்கள் என்று இந்து மதம் நம்புவதாகக் குறிப்பிடுகிறார்.

கமுதி ஆலய நுழைவு வழக்கில், வாதி தரப்பு சாட்சியாக அதாவது, திரு.பாஸ்கர சேதுபதி தரப்பு சாட்சியாக, நாடார்களுக்கு எதிரான சாட்சியாக, இந்து மத கோட்பாடுகள் என்ன என்பதை நீதிபதிக்கு தெளிவுபடுத்திய சாட்சியாக, நீதிபதியால் பெருமளவுக்கு நம்பப்பட்ட சாட்சியாக, விளங்கியவர், தமிழ்த் தாத்தா என்று கொண்டாடப்பட்ட திரு.உ.வே.சா என்று அறியப்பட்ட திரு.உ.வே.சாமிநாதய்யர்!

தொடர்பும் தொடர்பு எல்லைக்கு அப்பாலும்

இவ்வாறு இந்து மதத்தினர் என்று கூறப்படும் நாடார் சமூகத்தினர், கோயிலுள் நுழைந்தால் தீட்டு ஏற்பட்டு விட்டது என்றும், அதை போக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அபராதம் விதித்து, அவர்கள் கோயிலினுள் நுழைய நிரந்தர தடை ஏற்படுத்தி அவர்களை இழிவுபடுத்திய திரு. பாஸ்கர சேதுபதிதான் விவேகானந்தர் சிகாகோ செல்ல பொருளுதவி செய்தவர்!

‘சகோதர சகோதரிகளே!’ என்று விளித்து பிற மதத்தவரையும் ஈர்த்தார் என்று கருதப்பட்ட விவேகானந்தர் இந்தியா திரும்பிய பின், திரு.பாஸ்கர சேதுபதி பாராட்டு விழா ஏற்படுத்தியதை ‘முரண்பாடு’ என்று எளிதாகக் கடக்க முடியாது. ‘கயமைத்தனம்’ என்றே கண்டிக்க வேண்டும்!

எந்த நிலக்கிழாரும், மன்னரும் தாங்கள் கொண்டு இருக்கும் பொருட்செல்வம், தோற்றுவிக்கப்பட்ட கடவுளரால், விண்ணைப் பிளந்து கொடுக்கப்பட்டதல்ல; உழைக்கும் மக்கள் உருவாக்கிக் கொடுத்ததே அச்செல்வம்.

அவ்வாறு பெற்ற செல்வத்தில் இருந்து, பொருளுதவி பெற்று, வெளிநாடு சென்று, அந்நாட்டினரை ‘சகோதர சகோதரிகளே!’ என்றழைத்து அறிவார்ந்து விளங்கும் விவேகானந்தருக்கு, அப்பொருளை ஏற்படுத்திய அம்மக்கள் ‘சகோதர சகோதரிகள்’ கூட அல்ல, வழிபடும் இடத்தில் கடவுளை வழிபடக்கூட தகுதியற்றவர்கள் என்று இழிநிலைக்கு ஆளாவதை அறியாது, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார் என்றால் அவரின் அறிவால் என்ன பயன்?

‘சகோதரி சகோதரிகளே’ என்று விவேகானந்தர் அழைத்தது, பெரும்பான்மை இந்தியர்களான சூத்திரர்களுக்குப் பொருந்தாது என்றும், இந்து மதக் கட்டமைப்பின் அடிப்படையான ஜாதிகளின் படிநிலைகளையும் கொடுமைகளையும் அறியாத வெளிநாட்டினருக்கு மட்டுமே பொருந்துவது என்றே கொள்ள முடிகிறது.

சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்!

 

இயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்!

பிப்ரவரி 16-29 2020

அய்யாவின் அடிச்சுவட்டில் …

கி.வீரமணி

16.7.1992 அன்று கடிதம் ஒன்று வந்தது. அதில் “சி.பி.எஸ்.ஈ மார்க் ஊழலை வெளிக்கொணர்ந்த சீரிய செயல்’’ என்று எனக்கு டாக்டர் ஆர்.எஸ்.சிறீதர் அவர்கள் கீழ்க்கண்ட கடிதம் எழுதியிருந்தார்கள்.

சி.பி.எஸ்.ஈ. மார்க் ஊழலை வெளிக்கொணர்ந்த சீரிய செயல்

பொதுச்செயலாளருக்கு ஒரு டாக்டரின் கடிதம்

Dr.R.S.Sridhar, M.B.B.S.,
General Physician and Film Maker,
P.42, 6th Avenue, Anna Nagar, Madras – 600 040
Telephone: 614409  Date: 9.7.1992

பெருமதிப்பிற்குரிய திரு.வீரமணி அவர்கட்கு, வணக்கம்.

தங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. எனினும் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனது தாய் வழிப் பாட்டனார் திரு.துரைசாமி (கவுண்டர்) தனது இன்வாழ்வை தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஈந்தவர். வடஆர்க்காடு பெரியார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.

அமெரிக்காவில் சில ஆண்டுகள் இருந்து விட்டுத் திரும்பியுள்ள எனக்கு சி.பி.எஸ்.ஈ. மார்க் ஊழலை வெளிக் கொணருவதில் தாங்கள் செய்துவரும் சிறப்பான பணி, என் மனதை பேருவகை கொள்ளச் செய்தது.

தங்களுக்கு ஒரு (முக்கியமான) வேண்டுகோள்:

ஜூலை 8 அன்று நடந்த வழக்கு மன்ற விவாதத்தில் சி.பி.எஸ்.ஈ. தேவையின்றி அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை ஏற்றியதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால், சி.பி.எஸ்.ஈ. வழக்குரைஞர்கள் சி.பி.எஸ்.ஈ. மதிப்பெண்களை ஏற்றியதால், கல்லூரி நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர்களைச் சேர்த்திட வேண்டும் என்று கூறியது. சி.பி.எஸ்.ஈ.யின் தவறுக்காக, தமிழ்நாடு மாநில கல்வி அமைப்பு மாணவர்களைப் பலிகடா ஆக்கும் செயலாகும் இது. சி.பி.எஸ்.ஈ.யின் தவறுக்கு சி.பி.எஸ்.ஈ. மட்டுமே பொறுப்பேற்றிட வேண்டும்! இதனால் சி.பி.எஸ்.ஈ. மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு பொறுப்பு சி.பி.எஸ்.ஈ. தானே தவிர, தமிழ்நாடு மாணவர்களல்லர். பிளஸ் டூ.வில் தமிழ்நாட்டு அரசு கல்வி அமைப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அங்கீகரித்து அவர்களை அம்மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியில் சேர்த்திட வேண்டும்! இதைத் தடுக்க முயலும் சி.பி.எஸ்.ஈ.யின் சூழ்ச்சியினைத் தாங்கள் உறுதியாகத் தடுக்க வேண்டும்!

மேலும் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் அந்தந்த மாநில மொழியினை இரண்டாம் மொழியாக அனைத்துப் பள்ளிகளும் கற்பிக்க வேண்டும், அனைத்து மாணவர்களும் (சி.பி.எஸ்.ஈ., மெட்ரிகுலேசன் மாணவர்கள் உள்பட) கற்றாக வேண்டும் என்று சட்டம் இருப்பது போன்று தமிழ்நாடு அரசும், தமிழ் மொழியினை அனைத்து மாணவர்களும் தமிழ்நாட்டில் கற்றாக வேண்டும், தமிழ் மொழியினை குறைந்த பட்சம் இரண்டாம் மொழியாகப் பயின்றிருந்தால்தான் தமிழகக் கல்லூரிகளில் அனுமதி தரப்படும் என்று அறிவிக்க வேண்டும். இதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இதை அரசு செய்யாவிட்டால் இதற்காகத் திராவிடர் கழகம் போராட வேண்டும். ஆந்திரரும், கன்னடரும் ஏற்கெனவே சட்டமாக வைத்திருப்பதை தமிழ்நாடும் பின்பற்றுவதில் தடை என்ன?

தங்களது திராவிடப் பணிக்கும், செயல் மேன்மைக்கும் என் வாழ்த்து!

அன்பன்,

ஆர்.எஸ்.சிறீதர். 

18.7.1992 அன்று “சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளே கூடாது’’ என்கிற கிளர்ச்சி வெடிக்கும்! வெடிக்கும்! என்று முக்கிய அறிக்கை ஒன்று ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில், பொய்யான தகவல்களைக் கூறியும், மிரட்டும் பாணியிலும் எழுதிய பார்ப்பன ஏடு, இன்று திடீரென்று ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’வான “இந்து’’ ஏட்டில் அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு முடிவுகளைத் தொகுத்து நீதிமன்றத்திற்கு அளித்ததில் ஏதோ மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக பெரிய புழுதிப் புரளியை பார்ப்பனர்களுக்கு உரிய மிரட்டல் தன்மையோடு உண்மைக்கு மாறாக அசல் புரட்டு வேலையைச் செய்துள்ளது.

முதலில் கூடுதல் மதிப்பெண்களே போடவில்லை என்று சி.பி.எஸ்.ஈ தரப்பில் கூறப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில், ஆம்! மதிப்பெண்கள் போடப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு, அதற்குப் பல பெயர்களும் வியாக்கியானங்களும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டன.

‘மார்க் மாடரேஷன்’ (Mark Moderation), ‘ஸ்டாண்டர்டிசேஷன்’  (Standardisation) என்றெல்லாம் கூறப்பட்டது.

இதுபற்றி விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களது உள்நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. இன்னொரு நுழைவுத் தேர்வு வேறு யாரோ தனியார் ஏஜென்சியால் நடத்தப்பட வேண்டுமாம். இப்படி பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்குப் போட்ட ஒவ்வொருவரும் கேட்டால் நிலைமை என்னவாகும்? என்று ‘இந்து’ ஏட்டின் செய்தியை சுட்டிக்காட்டி அந்த அறிக்கையில் விளக்கியிருந்தோம்.

அப்படிப்பட்ட சி.பி.எஸ்.ஈ.தான் இன்று ‘நீட்’ தேர்வு நடத்துகிறது என்பதிலிருந்து ‘நீட்’ தேர்வு எப்படிப்பட்ட மோசடித் தேர்வு என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியின் முதல்வர் 

Thursday 4 July 2024

வில்லிவாக்கம் அ.குணசீலன்- கு. தங்கமணி இணையரின் மகள் கு.அறிவுமணி இணையேற்பு

 


2024 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜுலை1-15-2024

வில்லிவாக்கம் அ.குணசீலன்- கு. தங்கமணி இணையரின் மகள் கு.அறிவுமணி மற்றும் சூளைமேடு பாலன்- சரோஜா இணையரின் மகன் பார்த்திபன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு 22.5.2005 அன்று ஞாயிறு காலை 7 மணிக்கு சென்னை அரும்பாக்கம் ஏ.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் நடந்தது. 25.5.2005 புதன்கிழமை காலை 9.45 மணிக்கு, எமது இணையர் மோகனா அம்மாள் அவர்களுடன் மணமக்களின் இல்லத்திற்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

Wednesday 3 July 2024

கொடுங்கையூர் ரா.தனலட்சுமி _ கோ.தங்கமணி அவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழா!

 

இயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி. வீரமணி


கழகத்தோழர் கொடுங்கையூர் ரா.தனலட்சுமி –

கோ.தங்கமணி வாழ்க்கை இணையேற்பு ஒளிப்படம்

29.4.1990 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கொடுங்கையூர் ரா.தனலட்சுமி _ கோ.தங்கமணி அவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழாவுக்குக் தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவில் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கினார்.

 பெரியார் திடலில் ரா.தனலட்சுமி – கோ.தங்கமணி வாழ்க்கை ஒப்பந்த விழா ஆசிரியர் தலைமையில் நடைபெறும் காட்சி


வியப்பே வியக்கும் வீரமணி!

 

வியப்பே வியக்கும் வீரமணி!- புரட்சிக்கனல்

டிசம்பர் 1-15 2018

 

வியப்பே வியந்து போகும் வியப்பிற்குரியவர் வீரமணி என்பது வழக்கமாக மிகைப்படுத்திப் பேசும் பாராட்டுரை அல்ல. நூற்றுக்கு நூறு துல்லியமான மைக்ரோ தராசின் மதிப்பீடு! மதிப்பிற்குரிய எழுத்தாளர் சோலை அவர்கள் சொல்லியதுபோல “இமயம் இவரின் இடுப்பளவே!’’

இவரின் வாழ்வே சாதனை வாழ்வுதான்! அதுவும் சோதனைகளைத் தாங்கி, தாக்குதல்களை எதிர்கொண்டு சாதிக்கப்-பட்டவை.

கி.வீரமணி அவர்களே சொல்வதுபோல, தந்தை பெரியார் காலத்திய எதிரிகள் நாணயமான எதிரிகள்! ஆனால், இவர் காலத்து எதிரிகளோ அசல்  ………………. (எவ்வளவு கேவலமாக நிரப்பிக்கொள்ள முடியுமோ அவ்வளவு கேவலமாக உங்கள் விருப்பப்படி நிரப்பிக் கொள்ளுங்கள்!) அப்படிப்பட்ட எதிரிகள் அதிகார, பதவி பலங்கொண்டு, சூழ்ச்சி, வஞ்சகம், கீழறுப்பு, மோசடி என்று அனைத்து அற்பச் செயல்கள் மூலமும் ஆதிக்கம் நிலைநாட்ட முற்படும் சூழலில், நேர்மையாக, சட்டப்படி, அதிகாரப் பலமோ, பதவிப் பலமோ இல்லாமல், போராடி சாதிப்பது என்பது எத்தகு சாதனை என்பதை எழுத்தால் உணர்த்த முடியாது என்பதால் உள்ளத்தால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

இதோ அவரின் சாதனைகள் சலித்-தெடுக்கப்பட்ட பட்டியல்:

*           பத்து வயதிலே பொது வாழ்வுக்கு வந்து மூடநம்பிக்கைக்கும், பார்ப்பன ஆதிக்கத்திற்கும் எதிராய் முழங்கியவர்.

*           “தட்டுத்தடங்கலின்றி சரளமாக, பார்ப்பன ஆதிக்கத்தையும், ஏமாற்றுப் புராணப் புளுகையும், ஆபாசங்களையும், கடவுளையும் கிழி கிழி என்று கிழிப்பதை வாய்பிளந்து கொண்டு நானும் பார்த்தேன் -_ கேட்டேன்!’’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் வியந்து பாராட்டப்-பட்டவர்.

*           “திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’’ என்று அண்ணாவால் புகழப்பட்டவர்.

*           பதினொரு வயதிலே பெரியாரைச் சந்தித்து இயக்கப் பணி ஆற்றியவர்.

*           மாணவர் பருவத்திலே ‘முழக்கம்’, ‘புதுமை’ என்ற கையெழுத்து ஏடுகளை நடத்தியவர்.

*           பதினொரு வயதில் திருமணத்தில் வாழ்த்துரை வழங்கியவர்.

*           பன்னிரண்டு வயதில் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்.

*           பதிமூன்று வயதில் மாநாட்டுக் கொடி ஏற்றியவர்!

*           பதினான்கு வயதில் படத் திறப்பாளர்!

*           21 வயதில் கலைஞர் வரவேற்புரையாற்ற, 11 வயதுச் சிறுவனாய் திருவாரூரில் சிறப்புரை ஆற்றிய பெருமைக்குரியவர்.

*           பதினொரு வயதிலே பல இடங்களுக்கும் சிறப்புப் பேச்சாளராய்ச் சென்றவர்.

*           அய்யா _- அண்ணா கருத்து வேறுபாடு களைய 14 வயதில் அண்ணாவிடம் தூது சென்ற சிறுவன் என்ற வரலாற்றுச் சாதனைக்குரியவர்.

*           பதினாறு வயதிலே மாநாட்டுப் பொறுப்பாளராய் மாநாடு நடத்தியவர் (1950)

*           11 வயதில் பத்திரிகை தலையங்கத்தில் பாராட்டப்பட்டவர்.

*           ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்துக் கொண்டே உயர் மதிப்பெண்கள் பெற்றவர்.

*           வறுமையை வென்று வாகை சூடியவர்.

*           துணை வேந்தரை உரையால் உருகச் செய்தவர்.

*           பல்கலைக்கழகப் பரிசுகளை யாரும் பெறாத வகையில் பெற்று சாதனை புரிந்தவர்.

*           கார் வேண்டாம் என்று பேருந்தில் சென்றவர்.

*           அண்ணா பெறாத முழு உரிமையை அய்யாவிடம் பெற்றவர்.

*           மிசா கொடுமையில் மீண்டு வந்தவர்.

*           அய்யாவின் சரியான வாரிசாய் சரித்திரம் படைப்பவர்.

*           இயக்க வாழ்வே தன் வாழ்வு எனக் கொண்டவர்.

*           9,000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை விலக்கவும், பிற்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதம் ஆக உயரவும், நுழைவுத் தேர்வு நீக்கப்படவும் காரணமானவர்.

*           69 சதவீதம் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில் சேர்க்கச் செய்தவர்.

*           மண்டல் குழு பரிந்துரையை அமுல்படுத்தச் செய்து மத்திய அரசில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்தவர்.

*           ஜாதி ஒழிப்புக்கு பெரும்பயணம் மேற்-கொண்டு பிரச்சாரம் செய்தவர்.

*           ஜாதி, மதம், இனம், மொழியற்ற மணவுறவுகளை தன் குடும்பத்தில் நிகழ்த்தி, “யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’ என்ற பழந்தமிழர் உயர் வாழ்வை வாழ்ந்து காட்டுபவர்.

*           பொய் வழக்காட மறுத்த வழக்கறிஞர்.

*           மாற்றுக் கொள்கையாளரை மதிக்கும் மாண்பாளர்.

*           காட்சிக்கு எளியவர்! எல்லோரிடமும் எளிதில் பழகுபவர்.

*           எடைக்கு எடை தங்கம் பெற்று அதைப் பொதுப்பணிக்கு அளித்த உலகின் ஒரே தலைவர்.

*           “இந்தியா எங்கும் வழிகாட்ட வாருங்கள்’’ என்று தலைவர்களால் அழைக்கப்படுபவர்.

*           கீதையின் கீழ்த்தரத்தை கிழித்து தோரணமாய்த் தொங்கவிட்டவர்.

*           வாழ்வியல் சிந்தனைகளை வையகம் வியக்க, இரண்டாவது வள்ளுவமாய் வழங்கி வருபவர்.

*           75 ஆண்டுக் கால பொதுவாழ்விற்கு உரியவர்.

*           மூன்று முறை இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையில் 84 வயதிலும் ஓயாது உழைப்பவர்.

1. உலக சாதனைகள்!

*           11 வயதில் (29.-7.-1944)இல் மாநாட்டில் பேசிய சிறுவன்!

*           11 வயதில் திருமணத்தில் (11-.06.-1944) வாழ்த்துரை வழங்கிய சிறுவன்!

*           12 வயதில் பொதுக்கூட்டத்திற்கு (14.-04.-1945) தலைமை வகித்த சிறுவன்.

*           13 வயதில் (06.-01.-1946) மாநாட்டுக் கொடியேற்றிய சிறுவன்!

*           14 வயதில் (1947) அண்ணாவிடம் தூது சென்ற சிறுவன்!

*           14 வயதில் (21.-09.-1947) படத் திறப்பாளர்!

*           15 வயதில் (01.-05.-1948) மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய சிறுவன்!

2. உலகிலே அதிக நேரம் பேசியவர்!

3.  உலகிலேயே அதிக நேரம் பிரச்சாரப் பயணம் செய்தவர்!

4.  உலகிலே அதிகம் எழுதியவர்!

5.  மூன்ற முறை இதய அறுவை சிகிச்சைக்குப் பின், அதிக நேரம் பயணம், பேச்சு, நிர்வாகம், இயக்கச் செயல்பாடு என்று பலவற்றையும் செய்பவர் உலகில் இவர் ஒருவரே!

6.  உலகில் அதிக திருமணங்களை நடத்தி வைத்தவர்!

*           யார் இவர்?

*           அவர்தான் அய்யாவின் அசல் வாரிசான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்!

இத்தகு ஒருவரை, உலகில் நீங்கள் அறிந்ததுண்டா? உலகில்தான் வேறொருவர் உண்டா? அவரைப் பின்தொடர்வதன்றோ இளைஞர்களுக்கு அழகு! ஆதிக்கம் அழிக்கவும், சமத்துவம் கிடைக்கவும், ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற, உரிமை பெறவும் அதுதானே வழி! சிந்திப்பீர்; செயல்படுவீர்!