Friday, 10 July 2026

நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை


 நான் பாரதியாரைச் சந்தித்தால்...

கி.வீரமணி கட்டுரை

(பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981ஆம் ஆண்டில்,'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க) 

பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று 'குமுதம்' ஏடு என்னைக் கேட்கிறது. பாரதியார் நான் பிறப்பதற்கு முன்பே காலமான ஒரு கவிஞர், என்றலும் இது ஒரு இனிய கற்பனைதான். இன்றைக்கு பாரதியாரைப் பற்றி ஏற்பட்டிருக்கிற அய்யங்கள், அல்லது அவரது பாடல்களில் பல இடங்களில் குழப்பமாக இருக்கிறது என்று என்னைப் போன்ற பலர் கருதுகின்ற நிலை. இவைகளையெல்லாம் தெளிவுபடுத்துவதற்கு பாரதியாரைப் பார்த்து பல்வேறு கேள்விகளைக் கேட்கத்தான் முயற்சிப்பேன். நான் தந்தை பெரியாரின் தொண்டன். எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதோ, அல்லது எல்லோரும் நீச்சலடிக்கிறார்கள் என்பதற்காக அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்கிற அவசியமோ இல்லாதவன் நான். ஈரோட்டுக்குப் போனவர்கள் நன்றாக எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொள்பவர்கள் தான். எனவே பாரதியாருக்கு நூற்றாண்டு விழா என்ற காரணத்தினால், அவரை ஒரு தேசீயக் கவி என்று புகழ் பாடுகிற நேரத்தில், ஒரு மகாகவிக்கு அத்தகைய குழப்பங்கள் ஏன் இருக்க வேண்டும் என்பது புரியவில்லையே என்று மற்றவர்களை கேட்டுக் கொண்டிருப்பதை விட, அவரையே சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமானால் நிச்சயமாக கேட்கலாம் அல்லவா? என்னுடைய கருத்துப்படி, ஒருவரை தேசீயக் கவி என்று அழைக்கும் போது, அவருக்குத் தெளிவான, தொடர்பான. குழப்பமில்லாத, முரண்பாடு இல்லாத கருத்துகள், கேள்விகள் இருக்க வேண்டும். சுதந்திரத்துக்காகப் பாடினார் என்பது மட்டுமே பாரதியாருக்கு உள்ள மாபெரும் தகுதியாக ஆகிவிட முடியாது. தேசீயக் கவிஞர் என்று சொல்லும்போது தேசீயப் பார்வை, தேசம் முழுவதையும் ஒட்டிய பார்வை, மக்கள் அனைவரையும் சமத்துவமாக கருதக்கூடிய பார்வை என்பது வரவேண்டும். ஆனால் பாரதியாரின் பாடல்களில் அத்தகைய பார்வைகள் இல்லை என்பதை சற்று விளக்குகிறேன்.


எங்கள் ஆரிய பூமி. எங்கள் ஆரிய நாடு என்று பல இடங்களில் உரைக்கின்றார். 'ஆரிய நாட்டினர். ஆண்மையோடு இருந்தும் சீரிய முயற்சிகள் திரண்டு மிட்கோட்டுகர் வீரியம் ஒழிந்து வெம்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர்; பிச்சை வாழ்வதற்கு பிறருடைய ஆட்சியில் அச்சமுற்றிருப்போன் ஆரியன் அல்லன்' என்று பாரதியார் சொல்லுகிறார். இந்தியா முழுவதும் பிராமண தேசம் ஆகிவிட வேண்டும் என்று அவர் இன்னொரு இடத்தில் சொல்லியிருக்கிறார். 'ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்' என்று பாரதியார் பாடியிருக்கிறார். எனவே மொழி என்று வரும் பொழுது ஆரிய மைந்தன் இலக்கணம் அமைத்தான் என்று கூறி, தேசம் என்று வரும்பொழுது ஆரிய வேதம் ஆரிய நாடு என்று கூறி தன்னை ஒரு ஆரியன். வேதியன் என்றும் வேதியன் உயர்ந்தவன், ஆரியன் உயர்ந்தவன், இது ஆரியர்களுக்குரிய நாடு என்றும் அவர் திரும்பத் திரும்ப சொல்லியிருப்பது அவருக்கு தேசீயப் பார்வை இருக்கிறதா, ஆரியப் பார்வை உள்ளதா என்று பாரதியை துணிச்சலோடு, நேர்மையோடு கேட்பேன். நேர்மைத் திறமில்லாதவர்கள் தான், என்னவோ அவரைப் புகழ்கிறார்கள்; இது புகழ் பாட வேண்டிய நாமாவளிக் கட்டம், எனவே புரிந்தவர்கள், புரியாதவர்கள், விழாவுக்கு என்றே பாரதியாரை ஒரு நாள் புரட்டியவர்களெல்லாம் மாமேதைகளைப் போல, ஓடுகின்ற நீரிலே தாங்களும் ஓடவேண்டும் என்று நினைப்பதை போல நான் ஓட விரும்பவில்லை. பாரதியைப் பார்த்துத் துணிச்சலோடு, தந்தை பெரியார் தொண்டனாகிய நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.


சாதிகள் இல்லையடி பாப்பா என்று நீங்கள் பாடினீர்கள் என்று பெருமிதத்தோடு எல்லோரும்  மேடையிலே சொல்ல இன்றைக்குக் கேட்கிறோம். ஆனால் உங்களோடு நெருங்கிப் பழகிய நண்பர் என்று கருதக் கூடிய ஒருவர்-திரு பத்மநாபன் அவர்கள் அண்மையிலே சில மாதங்களுக்கு முன்னால் 'இந்து' பத்திரிகையிலே ஒரு விமரிசனக் குறிப்பு எழுதியிருக்கிறார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது "சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் எழுதவில்லை. சாதி பேதம் இல்லையடி பாப்பா என்றுதான் எழுதினார். பிறகு பாடபேதமாக. 'சாதிகள் இல்லையடி' என்று வந்துவிட்டது'' என்று குறிப்பிட்டிருக்கிறார் பத்மநாபன். இந்தக் கருத்தை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்குச் சாதி ஒழிப்பிலே உள்ள நம்பிக்கை என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.


சனாதன வகை தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும். சிலைகளும், சூரிய ஜோதியிலே காணப்படும். ஏழு வர்ணங்களைப் போலவே அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களே அல்லாமல் குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமக்கு அழிவுக்குக் கருவிகள் ஆகமாட்டா" என்று சாதியைப் பார்க்கக் கூடிய வெள்ளத்தை நீங்கள் அங்கே காட்டுகிறீர்கள். இன்னும் ஒரு செய்தி. சாதியைப் பற்றி உங்களுக்குத் தெளிவான திட்டவட்டமான கருத்துக்கள் இருக்குமேயானால் நீங்கள் இந்தப் பகுதியை உங்கள் கட்டுரையில் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள்.


நீங்கள் பதில் சொல்லா விட்டாலும் உங்களுக்காகப் பரிந்து கொண்டு சிலர் பதில் சொல்ல வருவார்கள். வருவார்கள். அது ஒரு ஒரு நல்ல  வாய்ப்பு தான். அதனால்தான் இவைகளை தெளிவாகக் கூற முன் வந்திருக்கிறேன்.


" "கீழ் ஜாதியாரை நல்ல  சமஸ்காரங்களால் பிராமணர்கள்  ஆக்கிவிட முடியும் என்பதற்கு நம்முடைய . வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராம்மண தேசமாகச் செய்துவிட்டால் நல்லதென்பது. என்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் மாமிச பட்சணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டு காயத்ரி மந்திரம் கற்பித்துவிட வேண்டும். பிறகு அவன் பிராம்மணனாகவே கருதப்படல் வேண்டும்’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். எல்லோரும் மனிதர்களாக வேண்டும் விரும்புகிறார்களே தவிர எல்லோரும் பிராம்மணனாக வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். விரும்பக்கூடாது.பூணூல் போடப்பட்டு விடுவதாலேயே எல்லோரும் உயர் ஜாதிக்காரர்களாக ஆகிவிட முடியும் என்று சொன்னால் நீண்ட காலத்துக்கு முன்னாலேயே ராமானுஜர் வெற்றி பெற்றிருப்பாரே? ராமானுஜர் தோல்வி அடைந்த இடத்திலேதான் நீங்களும் நிற்கிறீர்கள். ஏன்? நீங்களே கூட புதுவையில் கனகலிங்கம் என்ற ஒரு தாழ்த்தப்பட்ட சாதி நண்பருக்குப் பூணுால் போட்டு வைத்தீர்களே? கனகலிங்கம் அய்யர் ஆக்கப்பட்டாரா? கனகலிங்கம் பிராம்மண வகுப்பில்சேர்த்துக் கொள்ளப் பட்டாரா?  

அது நீங்கள் அடைந்த தோல்வியே தவிர வெற்றியல்லவே. எனவே இப்படிப்பட்ட ஒரு குழப்பமான சுருத்தைத் தாங்கள் சொல்ல வேண்டும்? அது மாத்திரமல்ல. 'முன்னாளில் அய்யர் எல்லாம் வேதம் சொல்வார். அதில் மூன்று மழை பெய்யுமடா மாதம்-இத்தாளில் பொய்மையில் பார்ப்பார் இவர் ஏதும் செய்து காசு பெறப் பார்ப்பார்' என்று நீங்கள் பாடலை புனைந்திருக்கிறீர்கள்.அய்யர் வேதம் ஓதினால் மழை பெய்யும் என்று கருதுகிறீர்களே? இதற்கு விஞ்ஞான பூர்வமாக ஆதாரம் ஏதேனும் உண்டா? நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு இருக்கிற அந்த உயர்ந்த ஜாதிக் கருத்து என்பது பல நேரங்களிலே உங்களை ஈர்த்திருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை.


"ஜாதிப் பிரிவுகளில் இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். நம்முடைய கிறிஸ்தவப் பாதிரிமார்களாலே நேர்ந்த அவமானம்தான் இது. இந்து மதம் அப்படி அல்ல. எல்லோரும் இதை வேதமாகக் கொள்ள வேண்டும். எல்லோரும் இந்துக்களாகிவிட வேண்டும். எல்லோரும் இந்த இடத்திலே இந்துக்கள் என்று சிறப்பாக நினைக்க வேண்டும்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம்தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்" என்று சொல்லுகிறீர்கள். முப்பது கோடியும் வாழ்வோம், வீழ்ந்திடில் முப்பது கோடி முழுவதும் வீழ்வோம்' என்று நீங்கள் ஓர் இடத்தில் கூறியிருக்கிறீர்கள்.முப்பது கோடியும் வாழ வேண்டும் என்று சொன்னால் எல்லோரையும் இந்துக்களாக்கிய பின்தான் முப்பது கோடியும் வாழ வேண்டும் என்று சொல்லுகிறீர்களா? அல்லது நீங்கள் பிறிதொரு இடத்தில் இந்துக்கள் இருபது கோடி என்று குறிப்பிட்டுள்ளீர்களே. அதன்படி பார்த்தால் முப்பது கோடி, இருபது கோடியாகக் குறைகிறது. உங்களுக்கு தேசீயப் பார்வை இருக்குமானால். உங்களுக்கு ஜாதி ஒழிப்புப் பார்வை இருக்குமேயானால், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நிலைக்குச் சென்றிருப்பீர்களா என்பது எங்களுக்குச் சந்தேகம், சில நேரங்களில் ஒரு கவிஞனுடைய கண்ணோட்டத்திலே மாறுபட்ட நிலைகள் இருக்கலாம். உதாரணமாக உங்களுடைய சீடராகப் பெருமையோடு தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு காலத்தில் சுப்பிரமணியர் துதியமுது பாடியவர்தான். ஆனால் சுப்பிரமணியர் துதியமுது பாடிய கனகசுப்புரத்தினம், தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, அவரை 'இல்லையென்போன் யாரடா; தில்லை சென்று பாரடா!' என்று கேட்டவர்களுக்கு 'இல்லையென்போன் நானடா, அத்தில்லை சென்று தானடா' என்று உறுதியாகச் சொன்னார்.


எனவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய நிலையை எடுத்துக் கொண்டால், பிற்காலத்தில் அவர் மாற்றமடைந்திருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும். அவர் போக்கில் வளர்ச்சியைக் காண முடியும்.    முரண்பாட்டைக் காண முடியாது. அதுபோல உங்களுடைய கால கட்டத்தில் பிற்காலத்தில் மாற்றப்பட்ட கருத்து. ஏற்கெனவே உங்களுக்கு இருந்த கருத்து. வளர்ச்சிப் போக்கில் உள்ள கருத்து என்று தெளிவான வரையறைகள், குறுக்குக் கோடுகள் இருக்கின்றனவா என்று அப்படிப்பட்ட குழப்பமில்லாத நிலை நாங்கள் தேடிப் பார்க்கிறோம். உங்கள் படைப்புக்களிலே காண முடியவில்லை . குழப்பங்களும் முரண்பாடுகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. இந்தக் குழப்பங்கள் எப்படியிருக்கின்றன. என்பதற்கு இன்னொரு உதாரணத்தைக் கூட நான் சுட்டிக்காட்டி உங்களிடம் கேட்கிறேன். உங்களைப் பாராட்டுகின்ற பலர், உங்களுடைய நூற்றாண்டு விழாவிலே பங்குகொள்கின்ற பலர், உங்களுடைய படத்துக்கு மாலை அணிவிக்கின்ற பலர் உங்களுடைய நால்களை அச்சிட்டு வியாபாரம் செய்யவேண்டும் என்று நினைக்கின்ற பலர் தெளிவாக இதைக் கேட்க மாட்டார்கள். பலர் போகாத அந்த இடத்திற்குத் துணையாக நான் போகிறேன். மற்றவர்கள் எனைத் தாக்குவார்களே. தூற்றுவார்களே என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தாக்க வேண்டும். தூற்ற வேண்டும். அதன் மூலம் சில உண்மைகள் வெளிப்படையாக, அப்பட்டமாகத் தெரிய வேண்டும் என்ற உணர்வோடு இதை நான் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.


ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதற்குப் பாராட்டு நீங்கள் தெரிவித்தீர்கள் என்பதற்காகத்தான் நம்முடைய அருமைப் பொதுவுடைமை நண்பர்கள் எல்லாம். 'பொதுவுடைமை இந்த உலகத்திலே கொள்கையாகக் கொள்வோம், புனிதமோடு அதை நாங்கள் காப்போம்' என்று சொன்ன புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை ஓகோ என்று புகழ்கிறார்கள். எப்படியிருந்தாலும், நீங்கள் அந்த ரஷ்யப் புரட்சியை அவ்வளவு பாராட்டியிருக்கிறீர்கள்.


'மாகாளி, பராசக்தி, உருஷ்ய நாட்டில் கடைக்கண் வைத்தாள். அங்கே ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி"

என்று பாடியிருக்கின்ற நீங்கள், மற்றொரு கருத்தையும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லியிருப்பதைப் படிக்கிறேன் கேளுங்கள்!


(1917'ம் ஆண்டு நவம்பர் 28'ம் தேதி செல்வம் என்ற தலைப்பிலே வெளியான உங்கள் கட்டுரையில் ஒரு பகுதிதான் இது.)


ரஷ்யாவைப் போல் புரட்சி இந்த நாட்டின் மண்ணில் ஏன் வெடிக்கவில்லை என்பதைப் பற்றி நீங்கள் ஒரு காரணத்தோடு ஆராய்கிறீர்கள். அன்றைக்கு மட்டும் அல்ல. இன்றைக்கும் அந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டிய கேள்விதான், மக்கள் மன்றத்திலே கேட்கப்பட்டு வருகின்ற கேள்வியும் ஆகும். நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்:


"முதலாவது காரணம் இந்து ஜன சமூக அமைப்பில், ஐரோப்பாவில் இருப்பதுபோல் அத்தனை அதிகமான தாரதம்மியம் இல்லை முதலாளி, தொழிலாளி,.செல்வன். ஏழை இவர்களுக்கிடையே ஐரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை ஏழைகளை அங்குள்ள செல்வர் அவமதிப்பது போலவே, நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது. ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நம் தேசத்தில் இருக்கும் அளவுக்கு அந்தக் கண்டத்தில் கிடையாது. கொலையாலும். கொள்ளையாலும். அன்பையும், சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் சொல்வோர், தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்றே நான் கருதுகிறேன். இதற்கு நாம் என்ன செய்வோம்? கொலையாளிகளை அழிக்க, கொலையைத்தானே கையாள நேருகிறது? அநியாயம் செய்வோரை அநியாயத்தால் தானே அடக்க நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை" என்று சொல்லியிருக்கிறீர்கள்.


(மீதி அடுத்த இதழ்)


நான் பாரதியாரைச் சந்தித்தால்...


கி. வீரமணி


(சென்ற இதழ் தொடர்ச்சி)


லெனினே பரம் மூடர் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், புரட்சி வெடித்து ஜார் மன்னன் வீழ்ந்தான் என்று சொன்னால், அந்தப் புரட்சிக்குத் லெனின் தந்தையாக இருந்த காரணத்தினால் தான் ஜார் கட்சி கட கடவென்று சரிந்தது. மாகாளியின் தத்துவம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் மாவீரனான லெனின் இதைச் சொல்லும்போது தன்னைத்தானே உணராத பரம மூடர்கள் செய்கை என்கிறீர்கள், முன் வரியிலே இதைச் சொல்லி, லெனின் இதைச் செய்வது முற்றிலும் தவறான கொள்கை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இதற்கு 'ஈக்வேஷன்' என்ன? லெனின் பரம மூடன் என்பதே! பொதுவுடைமைக் கொள்கையை ஒரு பக்கத்தில் நீங்கள் பாராட்டிவிட்டு, மற்றபடி தானம் கொடுப்பதன் மூலமாக ஏழ்மைத்தனத்தை ஒழித்துவிட முடியும் என்று நீங்கள் சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது?


எந்த உண்மையான பொதுவுடைமைவாதியும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். தர்மகர்த்தா முறையாக வேண்டுமானால் கருதப்படலாம். ஆனால் வேத உணர்ச்சியிலே கூட, இங்கிருக்கிற பிறவி பேதம், ஜார் முதலாளித்துவ பேதத்தை விட ஆழமானது. எனவே ஐரோப்பாவில்தான் இங்குள்ளதைவிட அதிக பேதம் என்று நீங்கள்

சொல்லியிருப்பது மிக மிக அதிசயமான வினோதமான நிலையிலே இருக்கிறது.


அதே கட்டுரையில் நீங்கள் மேலும் சொல்லியிருக்கிறீர்கள் "லெனின் வழி சரியான வழி இல்லை, காரணம் என்ன என்று சொன்னால், நாம் இந்தியாவில் இருக்கிறோமாதலால் இந்தியாவின் சாத்திய அசாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவில் உள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும், ஐரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும். குரோதமும் பூண்டோர் அல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டும் என்றால், நியாயம் ஆகாது. அதற்கு நம் தேசத்தில் உள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள்"என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.


இதைச் செய்யாமல் எப்படி இங்கே பொதுவுடைமை வரும்? இதை எந்த உண்மையான பொதுவுடைமைவாதியால் ஏற்றுக்

கொள்ள முடியும்? 


இந்தியாவிலே இருக்கிற நிலச்சுவான்கள் அங்கேயிருக்கிற நிலச்சுவான்களைவிட நல்லவர்கள் என்று சொன்னால், நிலச்சுவான் முறை இருக்க. வேண்டும் என்று நீங்கள் வாதாடுகிறீர்கள்: என்றுதானே பொருள்?


ஒரு பக்கத்திலே ஜாதி முறை நல்லது என்று வாதாடுகிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே எல்லோரும் இந்துக்களாக வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் அதையும் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே இந்த தேசம் ஆரிய நாடு என்று சொல்லுகிறீர்கள், அதையும் உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்னொரு நேரத்தில் எல்லோருக்கும். பிராம்மணர்களைப் போல் பூணூல் போடப்பட்டு, சந்தியாவந்தனம் சொல்லித்தரப்பட்டு பிராம்மண தேசமாக ஆகவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.. இவைகளெல்லாம் முற்போக்கு என்பதற்கு நிச்சயமாக வழிகாட்டுகின்ற முறையாக இருக்க முடியாது.


ஒரு தேசீயக் கவிஞன் பார்வையில் இத்துணை குழப்பங்கள். இருக்கக் கூடாது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தால் அத்தகையவர்கள் ஒரு தேசீயக் கவியாக இருக்க முடியாது. மற்றவர்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறர்கள் என்பதற்காக அந்த இடத்திற்கு போய் எல்லோரும்பாராட்ட வேண்டும் என்பது அல்ல. இவைகளெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாத பகுதி என்பதைப் போல் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் ஏன்? இதற்கு உங்களுடைய நியாயமான பதில் என்ன? ஒருவேளை நீங்கள் இந்தப் பழமையான கருத்துகளில் ஊறித் திளைத்த காரணத்தினால், உங்களுக்கு ஏற்பட்ட சுற்றுச் சார்வு காரணமாக இந்த நிலை இருக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக. பல நேரங்களில் சில கருத்துக்கள் உங்களிடம் வெடித்திருக்கின்றன என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.


‘ஆயிரம்.தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகள்’ என்று நீங்கள் சொல்லியிருப்பது என்பது எங்களுக்குத் தெரியாதது அல்ல. மூட பக்தி என்ற பெயராலே நம்முடைய நாட்டில் எவ்வளவு நேரம். காலம் வீணாகிறது என்பதைப் பற்றியும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அதை நாங்கள் மறுக்கவில்லை. ஒப்புக்கொள்கிறோம். "மூட பக்தியிலே சில தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நட்சத்திரம், லக்கினம் முதலியவை பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாசப் பொருத்தம், பக்ஷப் பொருத்தம். திதிப் பொருத்தம், நாள் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. க்ஷவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள், வியாபாரங்கள். சடங்குகள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்க்கும் செயலில் கால விரயத்திற்கும், பொருள் விரயத்திற்கும். வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும்.

காரியங்களுக்கும் பொருந்தாது. தடையாக முட்டு கொண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுணம் பார்ப்பதால் காரிய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது.நாட்பொருத்தம் லக்னப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே காரிய நஷ்டமின்றி. மேற்படி லக்கினப் பொருத்தம் பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது."


இப்படியெல்லாம் சிலவற்றை நீங்கள் கண்டித்திருக்கிறீர்கள், அதை வரவேற்கிறேம். ஆனால் உங்களுக்கு நூற்றண்டு விழாவில் கொண்டாடுகிறவர்கள் கூட நாள் பார்த்து சகுனம் பார்த்து, நேரம் பார்த்து அதிலேகூட உங்களைக் கைவிட்டுத்தான் காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நீங்கள் எங்கோ சில இடங்களில் முற்போக்கு முத்திரைகளைப் பதிப்பித்திருக்கிறீர்களே. அவைகூட நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறதா என்பது முக்கியம் அல்ல. சாதி இல்லை என்று நீங்கள் கூறிய நேரத்தில் பறையருக்கும், இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்று பாடினீர்கள். அந்த விடுதலை இசைத்தட்டிலே மட்டும்தான் ஒலிக்கிறது. நாட்டிலே காண முடிகிறதா என்று கேள்வி கேட்கும்போது, இந்த நிலைக்கு ஆசைப்பட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அதிலேகூட உங்களுக்கு முரண்பாடும் குழப்பமுமாக இருந்திருக்கிறது.


உங்களுடைய உயர்ஜாதித் தனம் என்பது உங்களை அறியாமல் உங்களுடைய ரத்தத்திலே கலந்துவிட்ட. காரணத்தினாலோ என்னவோ உங்களுடைய புரட்சிக்குக்கூட ஒரு புதிய பார்வையையும்: புதிய கோணத்தையும் கொடுத்திருக்கிறதே தவிர. உங்களுடைய தேசீயப் பார்வையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. எனவே உங்களை நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறேன்.


என்ன பதிலை நீங்கள் சொல்லப் போகிறீர்களோ, உங்கள் சீடர்கள் மூலமாக சொல்லுங்கள். எதிர்பார்க் கிறேன். மீண்டும் சில கேள்விகளைக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.


பேட்டி என்.பி.

குமுதம் வார ஏடு, 1981


Wednesday, 18 March 2026

இராமாயணம் ஒரு கட்டுக்கதை!

சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு, பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது 'இருக் வேதத்தில் (இருக வேதம் (57) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள். மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும் முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம் 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு தொகுப்பு | பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு. இந்திய வரலாறு-பக்கம் 118). ("விடுதலை" அசுரன் மலர் 2006, பக்கம் 16] உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு. அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது.
அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம் என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம், வால்மீகியும் கம்பரும், பக்கம் 15)

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறு வது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமா யணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் 'இரகு வம்சம்' என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது.

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூ கனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என் றாலும், பார்ப்பனர்கள் புராணங்களை யும். வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ர.பார்த்தசாரதி, சென்னை

விடுதலை நாளேடு 18.8.2012

Friday, 5 December 2025

திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!

சென்னை வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்றதாகவும் எழுதி இருக்கின்றனர். இக்கூட்டமே நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இக்கூட்டம் நடைபெற்ற நாளே நீதிக்கட்சி தோன்றிய நாள் (20.11.1916) ஆகும்.) அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் கீழ்க்காணும் பெருமக்கள் ஒரு சிலராவர். அப்பெயர்கள் வருமாறு:

திவான் பகதூர் பிட்டி. தியாகராயச் செட்டியார், 2. டாக்டர் டி.எம். நாயர், 3. திவான் பகதூர் பி. இராஜரத்தின முதலியார், 4. டாக்டர் சி.நடேச முதலியார், 5. திவான் பகதூர் பி.என். சிவஞான முதலியார். 6.திவான் பகதூர் பி. இராமராய நிங்கார் (பானகல் அரசர்) 7. திவான் பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை, 8. இராவ் பகதூர் நாராயணசாமி செட்டி, 9. இராவ் பகதூர் தணிகாசலம் செட்டி, 10. இராவ் பகதூர் எம்.சி. ராஜா, 11. டாக்டர் முகமது உசுமான் சாயுபு, 12. ஜே.எம்.நல்லசாமி பிள்ளை, 13. இராவ் பகதூர் வெங்கட்ட ரெட்டி நாயுடு, 14. இராவ் பகதூர் ஏ.பி. பாத்ரோ, 15. டி. எத்திராஜூலு முதலியார், 16.ந.கந்தசாமி செட்டியார், 17. ஜே.என். இராமநாதன், 18. கான்பகதூர் ஏ.கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், 19. திருமதி அலுமேலு மங்கைத் தாயாரம்மாள், 20. த.இராமசாமி முதலியார், 21. திவான் பகதூர் கருணாகர மேனன், 22. டி. வரதராஜூலு நாயுடு, 23. மதுரை வக்கீல் எல்.கே.துளசிராமன், 24. கே.அப்பாராவ் நாயுடுகாரு, 25. எஸ். முத்தையா முதலியார், 26. மூப்பில் நாயர் போன்ற முக்கியமானத் தலைவர்கள் அனைவரும் கூடி ‘South Indian Liberal Federation’ எனும் பெயரைத் தெரிவு செய்தனர். இதனைத் தான் சுருக்கமாக ‘SILF’ என்று கூறினர். இதைத் தமிழில் ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ என்று எழுதினர். இவ்வமைப்புக்கு நீதிக்கட்சிக்கு இராஜரத்தின முதலியார் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாகப் பானகல் அரசர் இராமராய நிங்கார், பிட்டி. தியாகராயர், கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். செயலாளர்களாக பி.எம். சிவஞான முதலியார், பி. நாராயணசாமி முதலியார், முகமது உஸ்மான், எம். கோவிந்தராஜூலு நாயுடு ஆகியோர் பணியாற்றினர். பொருளாளராக ஜி. நாராயணசாமி செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.

இப்படி அமைப்புக் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றி சென்னை மயிலாப்பூர் இராஜூ கிராமணியார் தோட்டத்தில் (இப்போது டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ‘சிட்டி செண்டர்’ உள்ள பகுதி) பிட்டி. தியாகராயர் பேசினார். இது குறித்துத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பில்,

‘1916ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஓய்வில் சென்னை ஹாமில்டன் வாராவதி அருகே இராஜூ கிராமணியார் தோட்டத்தில் யாழ்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம் மாநாட்டுக் கொட்டகை யிலேயே அன்று மாலை ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றி பி. தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்விதமே தியாகராயச் செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணர் அல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப் பற்றியும் பேசி, காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பிட்டி. தியாகராயர் ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றிப் பேசிய ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் கையொப்பமிடப்பட்டு பிராமணர் அல்லாதார் அறிக்கையொன்று 20.12.1916இல் வெளியிடப்பட்டது. இதனை முழுமையாக 22.12.1916 தேதியிட்ட இந்து வார வெளியீடு வெளியிட்டது.

அவ்வறிக்கை நீதிக்கட்சித் தோன்றுவதற்கான பின்னணியை எடுத்து விளக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிக்கையைத் திராவிட இயக்கத்தின் முதல் ஆவணம் என்று குறிப்பிடலாம். இதைப் போலவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்களை – அவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதற்குப் பிறகு ஈ.வெ. இராமசாமிப் பெரியார் ‘சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்?’ என்று விளக்கிப் பேசியதும் எழுதியதும் திராவிட இயக்கத்தின் இரண்டாவது ஆவணமாகும்.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் 1938 முதல் 1944 வரை இணைந்து பணியாற்றின. 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாநாட்டில் ‘அண்ணாதுரை தீர்மானத்தின்’ மூலமாக நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பெயர்கள் ‘திராவிடர் கழகம்’ என மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் இதற்கென்று சிறப்பாக 20.8.1944 எனத் தேதியிடப்பட்டு ஈரோட்டில் அச்சிடப்பட்ட ‘திராவிடநாடு’ வார இதழும், ‘குடிஅரசு’ இதழும் திராவிட இயக்கத்தின் மூன்றாவது ஆவணமாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் அறிக்கையை 17.9.1949இல் வெளியிட்டார். அந்த அறிக்கை திராவிட இயக்கத்தின் நான்காவது ஆவணமாகும். நீதிக்கட்சி (1916), சுயமரியாதை இயக்கம் (1925), திராவிடர் கழகம் (1944) ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ (1949) ஆகிய இவ்வமைப்புகள் தோன்றுவதற்கான காரண, காரிய, விளக்கங்கள் குறித்த அறிக்கைகள் திராவிட இயக்கத்தின் மூல ஆவணங்களாக விளங்கி வருகின்றன .

இதோடு முக்கிய இரு சொற்பொழிவுகளை அய்ந்தாவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும். அவ்விரு சொற்பொழிவுகளில் ஒரு சொற்பொழிவு மட்டுமே கிடைத்துள்ளது. அது 1919ஆம் ஆண்டு முதல் உலகப் போருக்குப் பின் ஆற்றிய உரையாகும். அதனைப் பிற்சேர்க்கை ஒன்றில் இணைத்து இருக்கிறோம். சென்னைச் சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் டாக்டர் டி.எம். நாயர் நிகழ்த்திய முதல் சொற்பொழிவு 1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது. டாக்டர் டி.எம்.நாயரின் ஆங்கிலப் பேச்சை சோமசுந்தரம் பிள்ளை தமிழில் எடுத்துரைத்தார். இச்சொற்பொழிவு கிடைக்கவில்லை.

(திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘நீதிக்கட்சி வரலாறு’ நூலிலிருந்து…)

 - விடுதலை நாளேடு, 20.11.25

பொது இடங்களில் ஒடுக்கப்பட்டோர் உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு! - நீதிக்கட்சி அரசாணை

 


அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவைகள் –  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.

உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.

1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன்: (இரட்டை மலை)

  1. (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(a) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(b) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)

P.L. மூர்,

அரசாங்கச் செயலாளர்.

ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு,

நகராட்சிகள், கார்ப்பரேஷன், சென்னை

பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள்,

தொழில் கமிஷனர்,

சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள எல்லா இலாக்காக்கள்,

அரசாங்க செய்தி ஸ்தாபனம்,

இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டன.

சட்டக்குழு அலுவலகம்

25.6.24

தீர்மானம்

திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை சீனிவாசன்)  உள்துறை அரசாங்க அலுவலகம்.

  1. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித்தாள்களிலும், மாவட்ட செய்தித்தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது.

(a) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் நடந்து போய்வருவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும்,

(b) கிணறு, குளம், பொது அலுவ லகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லாப் பொது இடங்களிலும், ஜாதி இந்துக்களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.

- விடுதலை நாளேடு,20.11.25

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சரித்திரச் சாதனை! ‘ஏதுமற்ற’ இடத்திலிருந்து 69% இடஒதுக்கீடு வரை கொண்டுவந்தது நீதிக்கட்சி அரசும், அதன் நீட்சிகளான ஆட்சிகளுமே! அடித்தளமிட்ட ஆளுமைகளுக்கு வீரவணக்கம்!

 


ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

“ஜஸ்டிஸ் பார்ட்டி” என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட “நீதிக்கட்சி’’ 1916ஆம் ஆண்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கமாகத் (Non-Brahmin Movement) தொடங்கப்பட்ட ‘தென்னிந்திய நல  உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Association) என்ற அமைப்பு, திராவிடர்களின் வாழ்வுரிமையின் முக்கிய அம்சமான, கல்வி, உத்தியோகம் ஆகியவற்றை – ஆரியப் பார்ப்பனர்கள் தங்களது ஏகபோக உரிமையாக ஆக்கிக் கொண்டதிலிருந்து, அவர்களது மீட்சிக்காகவே உருவானது. இவ்வியக்கத்தை சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார் போன்ற வர்கள் சென்னையில்,  பல பார்ப்பனரல்லாதார் பிரமு கர்கள், கல்வி அறிஞர்களை அழைத்துக் கூட்டம் நடத்தி விவாதித்து உருவாக்கினர். அரசியல் ரீதியாக உரிமைப் போருக்கு வழிவகுத்தனர்.

முன்னோடிகள்

அதற்கு முன்பாகவே, இதனை 1912லேயே பல முக்கிய பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்கள் இதற்குரிய தொடக்கப் பணியை ஆரம்பித்தார்கள். திருவல்லிக்கேணியில், வசதி வாய்ப்பற்ற பார்ப்ப னரல்லாத திராவிட, ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ‘திராவிடன் இல்லம்’ என்ற விடுதியை அமைத்து, அவர்களுக்கு அடைக்கலம் தந்து, கல்விக் கண்ணைத் திறந்தவரான டாக்டர் சி.நடேசனார், பின்னர் நீதிக்கட்சி உதயத்திற்கு முக்கிய முன்னோடியாவார்! மிகப் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத மக்களுக்கு அறிவு கொளுத்தி, விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, “பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை” (The Non-Brahmin Manifesto) எழுதினர்.

அனைத்திலும் பார்ப்பனர் ஆதிக்கம்

அதில் மக்கள் தொகையில் 100க்கு மூன்று சதம் கூட முழுமையாக இல்லாத ஆரியப் பார்ப்பனர்கள் கல்வி, உத்தியோகங்களைக் கைப்பற்றி வெள்ளைக்கா ரர்களுக்கு “நல்ல வேலைக்காரர்களாகி”, அவர்களைத் தம் வயப்படுத்தி, முந்திக் கொண்டு ஆங்கிலத்தைக் கற்று விட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி பதவிகளைத் தாங்களே ஆக்ரமித்து ‘ராஜ்ய பாரத்தை’ உண்மையாக நடத்தினர்.

இதை விளக்கித்தான் ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ தக்க புள்ளி விவரங்களைத் தந்தது!

1919ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாண்டேகு செம்ஸ்போர்டு குழு அறிக்கைப்படி – இந்தியாவின் மாகாணங்களில் இரட்டை ஆட்சி (Dyarchy) நடத்திட ஒப்புக் கொண்டு மே 1920இல் மாகாண சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்தியது.

வென்றது நீதிக்கட்சி

அதில் நீதிக்கட்சி போட்டி போட்டு, வென்று, ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது.

அதன் தலைவர் வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி.தியாகராயரை பிரதம அமைச்சர் பதவியேற்கக் கவர்னர் அழைத்தார்!

அவரோ, தான் பதவியேற்காமல், கடலூர் சுப்பராயலு (ரெட்டியாரை) அப்பொறுப்பை ஏற்கும்படி செய்து, அந்நாளைய அரசியல் அதிசயமானார்! என்னே அவரது பெருந்தன்மையின் உச்சம் (majurity)!

மொத்தம் மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

  1. கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்)
  2. பானகல் அரசர் இராமராய நிங்கார்
  3. சர். கே.வி. ரெட்டி (நாயுடு)

சுப்பராயலு அவர்கள் இடத்திற்குப் பின்னர் ஏ.பி.பாத்ரோ நியமிக்கப்பட்டார். அவர்  கருநாடகப் பகுதியைச் சேர்ந்தவர்.

அவ்வியக்கம், திராவிடர்களின் பறிக்கப்பட்ட கல்வி உரிமை, உத்தியோக உரிமை முதலியவற்றிற்கு சீரிய ஏற்பாடுகளை விரைந்து செய்து மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான விடியலைத் தரத் தொடங்கின!

சமூகப் புரட்சியாளர் பானகல் அரசர்

திராவிடர் கழகம்

பதவியேற்ற சில மாதங்களில் முதல மைச்சர் கடலூர் சுப்பராயலு (ரெட்டி) அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுப் பதவி விலகிட, பானகல்அரசர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்தார்.

(இவர் 1912–லேயே மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்து Central Legislative Assembly-யிலேயே தீண்டாமை ஒழிப்புக்குத் தீவிரமாகக் குரல் கொடுத்தார். மானக்ஜி தாதாபாய் அவர்களின் மனிதநேய குரலுக்குத் (தாதாபாய் நவ்ரோஜி அல்ல) துணையாக நின்று, தீண்டாமை ஒழிப்பு மசோதாவிற்குத் இந்தியாவின் சட்டமன்றத்தில் கால் கோள் இட்ட மனித உரிமைப் போராளி (பானகல் அரசர்) என்பது பலரும் அறிந்திராத அரிய உண்மையாகும்).

அவர்தான் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்று மளமளவென்று, உரிமைகளைக் கிள்ளி அல்ல, அள்ளித் தந்து வரலாற்றின் புதிய பொன்னேட்டைத் திராவிடர் எழுச்சியில் முத்திரை பதித்த நம் அனைவரின் மகத்தான நன்றிக்குரியவர்.

இவருக்குக் கட்சித் தலைவர் சர். பிட்டி தியாகராயர் முழு ஆதரவு தந்து இவரை முடுக்கி விடச் செய்தார்.

அதுபோலவே டக்டர் சி.நடேசனார் போன்ற தலைவர்களும்!

வகுப்புவாரி ஆணை வரலாறு

அந்த ஆட்சி 17 ஆண்டுகள் நேரடியாகவும், ஆதரவு தந்த ஆட்சியாகவும் 1920 முதல் 1937 வரை நீடித்து புதிய திராவிடர் எழுச்சியினை வரலாற்றுக் கல்வெட்டாகப் பதித்தது.

பதவியேற்ற ஓராண்டிலேயே வகுப்பு வாரி உரிமை (கம்யூனல் ஜி.ஓ. – Communal G.O.) ஆணையை 16 செப்டம்பர் 1921இல் (Order No. 613) “அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதவர்களின் வகுப்புவாரி முறையில், பிரதிநிதித்துவம் போதிய அளவில் இருக்க வேண்டும்” (Adequate Proportional Representation) என்று அந்த அரசு ஆணை போடப்பட்டது.

ஆனால் அன்று அரசுச் செயலகத்தில் முக்கிய கேந்திரப் பதவி அதிகாரிகளாக உயர் ஜாதிப் பார்ப்ப னர்களே பெரிதும் நிரம்பி இருந்த காரணத்தால், இந்த ஆணையைச் செயல்படுத்த விடாமல் பலவாறு கேள்விகள், திருத்தங்கள் – முதலியவற்றை எழுப்பினர். தங்களது சூழ்ச்சியைப் பயன்படுத்தி அந்த ஆணையை செயலுக்கு வராமலே தடுப்பதில் பெரிய பார்ப்பனர்கள் தங்களது அதிகாரத்தை முழு வீச்சில் பயன்படுத்தினர்.

எத்தனைத் தடைகள்?

பல மேல் அதிகாரிகள், வெள்ளைக்கார மேல் அதிகாரிகளைக் குழப்பியும், தம் வயப்படுத்தியும் அந்தச் சமூக நீதி ஆணை – கைக்கெட்டியது வாய்க்கெட்டா நிலையை உருவாக்கி மகிழ்ச்சி அடைந்தனர்!

1921ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு மற்றொரு புது ஆணை Second Commual G.O. No. 658 dated 15.8.1922 வெளியிடப்பட்டது. 12 அம்ச ரோஸ்டர் சிஸ்டத்தை உள் அடிக்கற்றையாகப் போட்டு போதிய விளக்கத்தை தந்தும், மீண்டும் அந்நாளைய ‘‘அக்கிரகார நந்திகள்’’ – தங்களது ‘‘Red Tape Juggary’’ – தங்களது ‘‘சிவப்பு நாடா’’ வித்தக ஜால விளையாட்டு மூலம் செயல்பட விடவே இல்லை – சில வெள்ளைக்கார மேல் அதிகாரிகள் பார்ப்பனரது ஆசைக்கும், எண்ணத்துக்கும் துணை போய் பலியாகி, திராவிட இனத்தை வஞ்சித்தனர்.

ஆர்.ஏ.கிரஹாம் (R.A.Graham) என்பவர் இந்த துரோகத்திற்கு ஆரிய – பார்ப்பன மேலான் மக்களுக்குப் பெரிதும் வயப்பட்டவர் ஆனார். ஜி.ஜி.டாட்டன்ஹாம் என்பவர் பார்ப்பனர் நலத்திற்கு, குறிப்பாக ஓய்வு பெற்ற பார்ப்பனர் பென்ஷனைப் பாதிக்கும் என்று அவாளுக்குப் பரிந்து வாதாடி, இந்த ஆணை மறுபடியும் “ஊறுகாய் ஜாடி”க்கு அனுப்பப்படுவதற்கான காரணஸ்தரானார்!

முத்தையா (முதலியார்) சாதனை!

திராவிடர் கழகம்

ஊறுகாய் ஜாடியி லிருந்து வெளியே கொண்டு வந்து அதற்கு மீண்டும் உயிர் ஊட்டி ‘‘புதுப் பிறப்பாக’’ 1928இல் நீதிக்கட்சி ஆதரவுடன் செயல்பட்ட  டாக்டர் சுப்பராயன், சுயேச்சை அமைச்சரவையின் அமைச்சரான முத்தையா முதலியாரால்தான் G.O./071/4.11.1927, and 1129/15.12.1928 ஆகியவை செயலாக்கத்திற்கு வந்தன.

நீதிக்கட்சி, திராவிடர் ஆட்சியின் பெருத்த விளைச்சல் – சமூகநீதிச் சரித்திரமாகத் தொடங்கியது இதிலிருந்துதான்.

இந்த வகுப்புரிமைப் படிக்கட்டு மூலம்தான் ஒடுக்கப்பட்ட நம் மக்கள் கல்வி, உத்தியோகம் மற்றும் அதன் காரணமாக வாழ்வாதாரம் பெற்று புலம் பெயர்ந்து அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா, அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முன்பு கூலிகளாகச் சென்ற அதே சமூகம் அதே நாடுகளுக்கு நல்ல ஊதியத்துடன் இன்று மதிப்புறு பணி வாய்ப்புகளோடு செல்வது வியக்கத்தக்கது.

இந்த வகுப்புரிமையை ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் அன்று 1928இல் தொடங்கிய சதிச் செயலில் 1950இல் அவர்களுக்கு – “சுயராஜ்ய இந்தியாவின்” அரசமைப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி, பொய் உரிமையை முன்வைத்து நடத்தப்பட்ட செண்பகம் – துரைராஜன் வழக்கு மூலம் வெற்றி பெற்றனர்.

முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும் –

76 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும்!

தந்தை பெரியார் களம் கண்டு வகுப்புரிமைக் கிளர்ச்சியை 1950-1951இல் மக்களைத் திரட்டி நடத்தி பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் வந்து வகுப்புரிமை வேறு சமூகநீதி வடிவத்துடன செயலுக்கு வந்தது – திராவிடம் வென்றது! அந்த முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடங்கி அந்த நீதிக்கட்சி விதைத்து பெரும் விளைச்சலாகி 69 சதவிகித இடஒதுக்கீடு என்று பெரியார் மண்ணில், பூத்துக் குலுங்க 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு என்று இரும்பு வேலி அதனை எந்த மாடும் மேயாதபடி காத்தது.

பெரியார் தொண்டர்கள், திராவிடர் கழகத்தின் அயராத முயற்சியால் மூன்று பார்ப்பனர் தலைமையினாலும் தடுக்க இயலாது தலைவணங்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தால் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு வெற்றி பெற்றது.

76 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத் தின்படி சட்டமானது. ஒன்றிய – மத்திய அரசில் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு முன்பு கிடைக்காத இடஒதுக்கீடு, மண்டல் பரிந்துரை மூலம் இந்தியா முழுமையிலும் உள்ள ஓ.பி.சி.(OBC)யினருக்குக் கிடைத்தது.

திராவிட மாடலே எல்லாம்!

இதை இன்றும் கண்காணித்து நிலைக்க வைக்கும் அரசாக, தமிழ்நாடு மாநிலமாகிய, பெரியார் மண்ணில் திமுக அரசுகளும் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆட்சிகளும் முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ஆட்சியிலும் கூட – முன்பு ஓமந்தூரார் ஆட்சி, காமராசர் ஆட்சி என்ற நிலைமையிலும் அனைத்துமே சமூக நீதியைச் செயல்படுத்திய ஆட்சிகளாக அமைந்ததற்குக் காரணம் நீதிக்கட்சி ஏற்படுத்திய தாக்கம்தானே!

மகளிருக்கு வாக்குரிமை (1922), தேவதாசி ஒழிப்புச் சட்டம், குழந்தைத் திருமணச் தடைச் சட்டம், ஆதி திராவிட மக்களின் கல்வி உரிமை, சமத்துவ உரிமை, அதிகாரப் பங்களிப்பு, இழிவு ஒழிப்புச் சட்டம், கோயில் பார்ப்பனர் சர்வ கொள்கைகளைத் தடுத்த – பானகல் அரசின் இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம்.

இவை ஒவ்வொன்றையும் தங்களுக்குத் தரப்பட்ட குறுகிய அதிகார எல்லைக்குள்ளயே இவ்வியக்கம் சாதித்துக் காட்டியது.

நீதிக்கட்சியின் நீட்சியே தி.மு.க. ஆட்சி!

1956இல் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்து இரண்டு பொதுத் தேர்தல்களில் 1956, 1962 – பத்தே ஆண்டுகளில் 1967இல் ‘‘சென்னை ராஜ்யத்தில்’’ அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்து அரிய சாதனை செய்தபோது, அவரிடம் செய்தி யாளர் கேட்ட கேள்விக்கு, “இது பழைய நீதிக்கட்சி ஆட்சியின் நீட்சிதான். ஜஸ்டிஸ் கட்சியின் பேரன் ஆட்சி” என்று பொருத்தமாகப் பதிலைச் சொல்லி வியக்க வைத்தார்!

பிறகு கலைஞர் ஆட்சி, இன்று மு.க.ஸ்டாலின் ஆட்சி! (இடையிடையே அதிமுக ஆட்சி –
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி என்றாலும், எல்லாம் இந்த எல்லையைத் தாண்ட முடியாதவைகள்.) அதற்குப் பிறகு அது அடமானக் கட்சியாகியது அரசியல் கொடுமை!

அறிஞர் அண்ணாவின் ஆட்சி ஓராண்டு தான் என்றாலும் அதன் முப்பெரும் சாதனைகளாக பல நூறாண்டு நிலைத்து நிற்கும் சமூக கலாச்சார அரசியல் புரட்சியை அமைதி வழியில் சாதித்தார்.

இப்போது உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி நீதிக்கட்சி, தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் – தாய்க்கழகமான திராவிடர் கழகம் – ஆகியவற்றின் அடிச்சுவட்டில் அந்த பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதிச் சுடரை ஏந்தி, அடுத்த பல தலைமுறைகளை ஆயத்தப்படுத்திடும் கொள்கை வழி நிற்கும் சரித்திரச் சாதனை அரசாகத் தொடர்ந்து இன எதிரிகளையும், கொள்கை எதிரிகளையும் கலங்கடித்துக் களத்தில் சளைக்காத ஓர் உரிமைப் போர் நடத்தும் சாதனை அரசாக திராவிட நாயகன், சமூக நீதிகாத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய தலைமையில் சிறப்பாக பீடு நடை போடுகின்றது. 2026–லும் மீண்டும் வெற்றி மகுடம் சூடி வரலாறு படைப்பது உறுதி.

பல தலைமுறைகளைக் காக்கும் தலைமுறை ஆட்சிதான் என்பதைத் தலை நிமிர்ந்து பெருமை பொங்க, முரசொலித்து, சமூக விடுதலைக் கொடி பறக்கப் பார் புகழும் ஆட்சி! ‘‘திராவிட மாடல் ஆட்சி’’ தனது பாட்டனாரின் தோளில் ஏறி நின்று இன்றும் சாதித்துக் கொண்டே தொடருகிறது!

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சிறப்புகள்!

படைக்கட்டும் புதியதோர் இணையற்ற இமாலயச் சாதனைகள்!!

- விடுதலை நாளேடு, 20.11.25

Saturday, 22 November 2025

பாம்புக்கு கால் உண்டா? - செ.ர. பார்த்தசாரதி




ஞாயிறு மலர்
‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்புக்கு தான் தெரியும்’ என்று சொல்லப்பட்டதாகும்.

‘புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்–நலமிக்க பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே. பாம்பறியும் பாம்பின் கால்.’

–  பழமொழி நானூறு, பாடல்-301

ஆசிரியர் – மாணவர் உரையாடல்

பள்ளிக்கூடத்தில் மாணவனை பார்த்து ஆசிரியர், பாம்பிற்கு கால் உண்டா? என்று கேட்க; மாணவன்: ‘பாம்பிற்கு கால் உண்டு அய்யா’ என்று விடையளித்தான். எப்படி என ஆசிரியர் வினவ, மாணவன்: ‘கால் இருந்தால் தான் பாம்பு, இல்லையென்றால் பம்பு என்று ஆகிவிடும் அய்யா!’ என்றான். ஆசிரியர் சிரித்து விட்டார்.

உண்மையில் பாம்பிற்கு கால் உண்டா என பார்ப்போம்!

ஞாயிறு மலர்

யூத – கிறிஸ்தவ வேதத்தில் பாம்பு

யூதர்களின் வேத நூலான ‘தனக்’ (எபிரேய பைபிள்) மற்றும் கிறிஸ்தவர்களின் வேத நூலான பழைய ஏற்பாட்டிலும் ( கிறிஸ்தவர்களின் பைபிள், பழைய ஏற்பாடு – புதிய ஏற்பாடு என இரு பகுதிகளை கொண்டது)

‘யெகோவா’ கடவுளால் பாம்பு படைக்கப் பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாம்பு படைக்கப்பட்ட போது, கால்களுடன் இருந்ததாம்.

பழைய ஏற்பாடு, ஆதியாகமம்: மூன்றாம் அத்தியாயத்தில் “யெகோவா கடவுளால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை வஞ்சனையாக, அந்தப் பாம்பு, ஏவாளையும் ஆதாமையும் (ஆதம்-ஈவள்) உண்ண வைத்ததால், யெகோவா கடவுள், பாம்பை ‘மண்ணைத் தின்று மண்ணிலேயே ஊர்ந்து வாழ்வாயாக” என்று சபித்து விட்டதாக கூறுகிறது.

ஞாயிறு மலர்

பழைய ஏற்பாட்டில் (பைபிள்) பாம்பை கால்களுடன் படைத்ததாக எங்கும் கூறப் படவில்லை.

‘இனி மண்ணிலே ஊர்ந்து வாழ்வாயாக’ என்று சபித்து விட்டதாக கூறப்பட்டு இருப்பதால், ‘முதலில் கால் இருந்திருக்கும்; பிறகு சபிக்கப்பட்டவுடன் மண்ணில் ஊர்ந்து செல்ல தொடங்கி இருக்கும்’ என்று சொல்கின்றனர்.

ஆனால் உண்மையில் 11.3 கோடி (113 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன், பாம்பு நான்கு கால்களுடன் இருந்ததாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஆதாரமாக நான்கு கால்களுடன் கூடிய பாம்பின் ‘புதை படிவம்’ பிரேசில் நாட்டில் கிடைத்துள்ளது. அந்த புதை படிவ பாம்பிற்கு ‘டெட்ராபோடோபிஸ் ஆம்ப்ளெக்டஸ் ‘ என்று பெயரிட்டுள்ளனர்.

ஞாயிறு மலர்

பாம்பின் பரிணாமம்

ஊர்வனவற்றின் ஒரு பிரிவுதான் பாம்பு வகைகளாகும்.

பல்லி இனத்தின் மூதாதையான, பல்லி போன்ற (squamate order) ஓர் உயிரினத்தில் இருந்து ‘உரு மலர்ச்சி'(பரிணாம வளர்ச்சி) பெற்று தோன்றியதே, பாம்பு இனமாகும்.

தற்காலத்தில்  நடமாடிக் கொண்டிருக்கும், மலைப்பாம்பின் வாலின் அடிப்பகுதிக்கு அருகில், தசைகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் இடுப்பு எலும்பு மற்றும் தொடை எலும்பின் (femur) சிறிய எச்சங்கள் உள்ளன. இந்த எலும்புகளுடன் இணைந்த, வெளிப்புறமாகத் தெரியும் சிறிய, நகம் போன்ற முட்கள் (spurs) இருக்கின்றன.. இவை நடப்பதற்கு பயன்படாது, ஆனால் இனப்பெருக்கத்தின் போது துணையைப் பிடித்துக் கொள்ள உதவுகிறது. இந்த எச்ச பகுதி, மலைப்பாம்பு இனத்திற்கு தொடக்கத்தில் கால்கள் இருந்ததற்கான சான்றுகளாகும்.

ஆகையால், “நான்கு கால்களுடன் நடமாடிக்கொண்டு வந்த பாம்பினம், கால்கள் சிறியதாகவும் உடல் நீளமாகவும் இருந்ததால்; கால்கள் பயன்படாமல் போய், கால்கள் இல்லாத தகவமைப்பை பாம்புகள் பெற்று செதில்களால் ஊர்ந்து இருக்க வேண்டும்’’ என்று உறுதியாகிறது.

- செ.ர.பார்த்தசாரதி

- விடுதலை ஞாயிறு மலர், 22.11.2025


Tuesday, 28 October 2025

ஜாதிப்பெயர் ஒழிப்பு’ பெரியார் பாதையில் ‘திராவிடமாடல்’ அரசின் பயணம்

 


கட்டுரை, ஞாயிறு மலர்

ாதிப்பெயரை ஒழிப் பதில் தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்த அரசாணை,  நீதிக்கட்சி, தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் நீண்டகாலப் போராட்டத்தின் தொடர்ச்சியாகும். சமூக சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இவை ஆற்றிய பணிகள் மகத்தானவை.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை நீக்கி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிக்கும் பெயர்களை அகற்றவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையானது,  தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த ஜாதி ஒழிப்பு சமத்துவச் சிந்தனையின் விளைவு
ஆகும்.

தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பையே தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டார். அவர் தொடங்கிய நூற்றாண்டை கடந்த சுயமரியாதை இயக்கம், பின்னாளில் உருவான திராவிடர் கழகம் ஆகியவை ஜாதி ஒழிப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தன.

பெரியாரின் ஜாதி ஒழிப்பு உத்தி:

பெரியார், மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களைச் சேர்ப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில் மக்கள் தங்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவர், தான் காங்கிரசில் சேருவதற்கு முன்பே 1917 இல் ஈரோடு நகரமன்றத் தலைவராக இருந்தபோது, ‘கொங்குப் பறத்தெரு’ என்பதை ‘திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றியதன் மூலம், தெருப் பெயர்களில் இருந்த ஜாதிப் பெயர்களை ஒழிக்கும் பணியைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பல இடங்கள் பெயர் மாற்றம் பெற்றன. எடுத்துகாட்டாக மதுரைப் புதூரில் உள்ள ‘காலனி தெரு’ என்பதை ‘திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றியதைக் கூறலாம்

கடவுள், மதம், சாஸ்திர மறுப்பு: ஜாதி முறைக்கு அடிப்படையாய் இருக்கும் மதம், சாஸ்திரங்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.

சடங்குகள், மதகுருமார்கள் இன்றி நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்களை அறிமுகப்படுத்தி, ஜாதி மறுப்பு மற்றும் கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்கக் கோரி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்.

நீதிக்கட்சி (Justice Party)

1916-இல் பார்ப்பனர் அல்லாதோருக்காகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை (இட ஒதுக்கீடு) வலியுறுத்திப் போராடியது. இது பார்ப்பனர் அல்லாத சமூகத்தினருக்கு அரசியல் மற்றும் சமூக அதிகாரத்தைப் பெற முதல் அடித்தளமிட்டது.

தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் ஜாதி ஒழிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டமாகவும், புரட்சிகர இயக்கங்களின் விளைவாகவும் அமைந்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றியிருந்தபோது, தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் ஜாதி முறையை வேரறுத்து, சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சிகளை முன்னெடுத்தன. இதில் தந்தை பெரியார்  அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் ஜாதிப்பெயர்களை ஒழிப்பதற்கான புரட்சிகர போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மேலும், தமிழ்நாடு அரசின் சமீபத்திய அரசாணைகள் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றன.

‘ஆதி திராவிடர் காலனி’, ‘ஹரிஜன் குடியிருப்பு’, ‘வண்ணான்குளம்’ போன்ற ஜாதிப் பெயர்களைக் கொண்டுள்ள ஊர் மற்றும் குடியிருப்புப் பெயர்களை நீக்க வேண்டும். நீக்கப்பட்ட பெயர்களுக்குப் பதிலாக திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன்,
தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தமிழ் தலைவர்களின் பெயர்களையும், நீர்நிலை
களுக்குப் பூக்கள், மரங்கள் அல்லது இயற்கை அமைப்புகளின் பெயர்களையும் சூட்ட அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்த மாற்றங்களைச் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் ஜாதி அடிப்படை யிலான பிரிவினைகளை நீக்கியது. ரயில் நிலையங்கள், உணவகங்கள், பொது போக்கு வரத்து போன்ற இடங்களில் ‘பார்ப்பனர்களுக்கு மட்டும்’ என்ற பிரிவினைகள் அகற்றப்பட்டன.  மேலும், தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை 1929இல் நிறைவேற்றியது, இது ஜாதி அடிப்படையிலான பாலியல் சுரண்டலை எதிர்த்தது. கோயில்களில் பிராமணரல்லாதோரை பூசாரிகளாக நியமிக்கும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் ஜாதி மேலாதிக்கத்தை சவால் செய்து, சமூக சமத்துவத்தை நோக்கிய முதல் அடிகளாக அமைந்தன.  இருப்பினும், நீதிக்கட்சி பிரிட்டிஷ் ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டதால், சில விமர்சகர்கள் இதை ‘ஆங்கிலேயர்களின் கைப்பாவை’ என்று விமர்சித்தனர்.

ஜாதிப் பட்டப் பெயர்களைக் கைவிடுதல்

சுயமரியாதை இயக்கம் மக்களின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குமாறு வலியுறுத்தியது, பலரும் இயக்க மாநாட்டுப் பந்தலிலேயே தங்களது ஜாதிப் பெயர்களைத் துறந்தனர்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு

தந்தை பெரியார் தலைமையிலான ‘சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு’ 1929 ஆம் ஆண்டு ‘பிப்ரவரி 17 மற்றும் 18’ ஆகிய தேதிகளில் ‘செங்கல்பட்டில்’ நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த மாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களில் ஒன்று, மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டம்’ அல்லது ஜாதிக் குறியீடுகளை நீக்க வேண்டும் என்பதாகும். ஜாதிய ஒடுக்குமுறையையும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்தத் தீர்மானத்தை  இராமச்சந்திர (சேர்வை) என்பவர் முன்மொழிந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனே, மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய ஊ.பு.அ.சவுந்தரபாண்டிய (நாடார்) மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பலர் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டங்களை மேடையிலேயே நீக்கி அறிவித்தனர். இதற்கு முன்னதாகவே, பெரியார் தனது பத்திரிகையான ‘குடிஅரசு’ ஆசிரியராக இருந்தபோது, தனது பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் என்ற ஜாதிப் பெயரை நீக்கி, ஈ.வெ.ராமசாமி என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தார். இந்தச் செயல்பாடு, ஜாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு வலுவான தொடக்கத்தை அளித்ததுடன், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதைக் கைவிடும் ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டது.  இன்றும் சமூகவலைதளங்களில் ஜாதிப்பெயரை போட்டுக்கொள்ளும் துடுக்குக்கார இளசுகள் தங்கள் பள்ளியிலோ அல்லது இதர ஆவணங்களிலோ ஜாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதில்லை. இதற்கு காரணம் சுயமரியாதை இயக்கம் விதைத்த ஆழமான கொள்கை ஆகும்

திராவிடர் கழகம் (Dravidar Kazhagam – DK):

1944 இல் நீதிக்கட்சியின் பெயரை மாற்றியமைத்து திராவிடர் கழகம் உருவானது.  இது பெரியாரின் தலைமையின் கீழ் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இயக்கமாகத் தொடர்ந்தது. 1952-1954 இல் இராஜாஜி கொண்டு வந்த ‘குலக்கல்வித் திட்டத்தை’ (ஜாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) கடுமையாக எதிர்த்து, இத்திட்டம் கைவிடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 1967 க்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் பெரியாரின் கருத்தை மய்யமாக கொண்டே இயங்கியது.   ‘குடிஅரசு’ போன்ற இதழ்கள் மூலம் இயக்கம் தனது கருத்துக்களை பரப்பியது, ஜாதி ஒழிப்பை சமூக மாற்றத்தின் அடிப்படையாக்கியது.

பெரியார், உணவகங்களில் ‘பார்ப்பனர் களுக்கு மட்டும்’ என்ற பெயர்ப்பலகைகளை அகற்ற போராட்டங்கள் நடத்தினார், இது ஜாதி பாகுபாட்டை நேரடியாக சவால் செய்தது. இயக்கம் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்தது, ஜாதி அடுக்குகளை உடைத்தது. இன்றும் இயக்கத்தின் கொள்கைகள் சமூக நீதியின் அடித்தளமாக உள்ளன.

தமிழ்நாடு அரசின் ஜாதிப்பெயர் ஒழிப்பு அரசாணைகள்

தமிழ்நாடு அரசு, ஜாதிப்பெயர்களை ஒழிப்பதற்கான 2025 அக்டோபர் 8ஆம் தேதி வெளியான அரசாணை, கிராமங்கள், தெருக்கள், பொது சொத்துக்களில் ஜாதி சார்ந்த பெயர்களை (‘ஆதி திராவிடர் காலனி’ போன்றவை) நீக்க உத்தரவிட்டது. நவம்பர் 19, 2025க்குள் இதை செயல்படுத்த வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை, பெரியாரின் ஜாதிப்பெயர் ஒழிப்பு இயக்கத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. இருப்பினும், சிலர் இதை திமுக அரசின் அரசியல் சூழ்ச்சி என்று விமர்சிக்கின்றனர். ஆனால், இது சமூக சமத்துவத்தை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாகும். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் ஆகியவை தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்பை ஒரு சமூக இயக்கமாக மாற்றின. இவை இட ஒதுக்கீடு, சமத்துவம், பெண் உரிமைகள்,  சுயமரியாதைத் திருமணங்கள் போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்தன. பெரியாரின் புரட்சிகர இயக்கம் ஜாதிப்பெயர்களை ஒழிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தது. எனவே இது இன்று அரசு அரசாணைகளில் எதிரொலிக்கிறது. இருப்பினும், இன்னும் ஆங்காங்கே ஜாதிப் பாகுபாடுகள் இன்னும் இருப்பதால், இந்த போராட்டம் தொடர வேண்டியது அவசியம். இவை தமிழ்நாட்டை சமூக நீதியின் முன்மாதிரியாக்கியுள்ளன.

தேவதாசி முறை
ஒழிப்பதும், ஜாதி ஒழிப்பும்

தேவதாசி முறை என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகங்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டதாக இருந்தது. இந்த அமைப்பு, பெண்களை கோவிலுக்கு “அர்ப்பணிப்பது” என்ற பெயரில் மதத்தின் பெயராலும், ஜாதி அமைப்பின், மேலாதிக்கத்தின் கீழும் அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் உட்படுத்தியது.

தேவதாசி முறை ஒழிப்பு என்பது சுரண்டல், அடிமைத்தனம், பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை விடுவிப்பதுடன் தொடர்புடையது. ஜாதி ஒழிப்பின் முக்கிய நோக்கமும் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும், பிறப்பின் அடிப்படையில் எவரும் உயர்ந்தவரோ  – தாழ்ந்தவரோ இல்லை என்பதையும் நிலைநாட்டுவதாகும். இரண்டு போராட்டங்களும் மனித மாண்பு மற்றும் சமத்துவத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டவை.

தேவதாசி முறை ஒழிப்புக்கான போராட்டத்தில், தந்தை பெரியார், டாக்டர். முத்துலட்சுமி (ரெட்டி), மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் போன்றவர்கள் முக்கியப் பங்காற்றினர். இவர்களில் பலர் ஜாதி ஒழிப்பு மற்றும் சுயமரியாதை இயக்கங்களின் முன்னோடிகளாகவும் இருந்தனர். சுயமரியாதை இயக்கம், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் நிலவும் மூடநம்பிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தன. தேவதாசி முறை, மதத்தின் சடங்கு நடைமுறையுடன் இணைந்திருந்ததால், அது ஜாதி ஒழிப்புக்கான ஒரு பகுதியாகவே கருதப்பட்டது.

1930இல் முத்துலட்சுமி (ரெட்டி) “தேவதாசி ஒழிப்பு மசோதா”வை மதராஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெரியார் அதற்கு தீவிர ஆதரவு அளித்தார். அவர் குடியரசு பத்திரிகையில் (30.03.1930) “தேவதாசி முறை தடுக்கவல்லது மட்டுமல்ல, அறவே ஒழிக்கும்” என்று எழுதினார். மதராஸ் தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு கடிதங்கள் எழுதி, முறையை ஒழிக்க அழுத்தம் கொடுத்தார்

1947 அக்டோபர் 9இல் “மதராஸ் தேவதாசி (அர்ப்பணம் தடுப்பு) சட்டம்” நிறைவேறியது. இது பெண்களுக்கு திருமண உரிமை அளித்து, கோயில் அர்ப்பணத்தை தடை செய்தது. பெரியார் இதை “பெண்கள் உரிமைகளுக்கான வெற்றி” என்று கொண்டாடினார்.   வந்தனா தேவி போன்றவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, 1927இல் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேறியது.  பெரியாரின் போராட்டம் வெறும் சட்டம் மட்டுமல்ல, சமூகத்தில் பாலின சமத்துவத்தையும்,ஜாதி ஒழிப்பையும் வலியுறுத்தியது. தந்தை பெரியாரின் பார்வை “பெண்களின் சுதந்திரம் இல்லாமல் சமூகம் முன்னேறாது” என்றது. இது தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த வரலாற்றில் இன்றவும் நிலைத்து நிற்கிறது. இதுமேலும் இது நிலைக்கும்.

-விடுதலை ஞாயிறு மலர், 18.10.25