Friday 20 September 2024

லக்னோவில் பெரியார் மேளா [18.09.1995]



 

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் 1995 – செப்டம்பர் 16, 17, 18 தேதிகளில் மிகப் பெரிய அளவில் “பெரியார் மேளா’’ நடத்தப்படுமென அம்மாநில பகுஜன் சமாஜ் அரசு அறிவித் தது. அதன்படி லக்னோவில் உள்ள சமூக மாற்றப் பூங்காவில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நாராயண குரு, சாகு மகராஜ், ஜோதிபாபுலே ஆகியோரின் சிலைகள் திறப்பும் நடைபெற்றது.

தலைநகர் லக்னோவில் கன்சிராம் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்ற கழகத் தோழர்களை அன்புடன் வரவேற் றார். ‘அய்யா’ படத்திற்கு மாலை அணிவித் தும் மரியாதை செலுத்தினார். நமது பெரியார் சமூகக் காப்பு அணியினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கழகத் தோழர்கள் கைகளில் கழகக் கொடிகளை ஏந்தி பேரணியாகப் புறப்பட்டனர். மக்கள் பிற பகுதிகளிலிருந்தும் ஊர்வலமாக வந்தனர். பேரணி ‘பேகம் அஸ்ரத்’ மகால் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் திடலை சென்றடைந்தது. பிற்பகல் 2:45 மணியளவில் ‘பெரியார் மேளா’ துவங்கியது. விழாவைத் தொடங்கி வைத்த ஆசிரியர் ஆங்கிலத்தில் உரை யாற்றுகையில், “தந்தை பெரியார் ஒரு பிறவிப் போராட்ட வீரர். தென்னகத்தில் பிறந்த தந்தை பெரியாரின் விழாவை இங்கு கொண்டாடுவதன் மூலம் ‘உண்மையான சமுதாய ஒருமைப்பாடு’ ஏற்பட்டிருக்கிறது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பிறவி ஏற்றத் தாழ்வை ஒழிக்கப் பாடுபட்டவர் பெரியார். காசியில் சம்பூர்ணானந்த் சிலையை பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் திறந்தபோது, தீட்டாகிவிட்டது என உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கங்கை நீரை ஊற்றிக் கழுவினர். அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தது திராவிடர் கழகம். வட நாடு அயோத்தி ராமனை மட்டுமே அறிந்திருந்தது. இப்போது ஈரோட்டு ராமசாமியையும், கன்சிராமையும் அறிந்திருப்பது வரவேற்கத்தக்கது’’ எனப் பல கருத்துகளை எடுத்துக் கூறினார். அந்த ஆங்கில உரையை ‘டாக்டர் பிரிஜ்லால் வர்மா’ ஹிந்தியில் மொழிபெயர்த்துக் கூறியதை மக்கள் உணர்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைக் காட்டினர்.

மாநில முதலமைச்சர் மாண்புமிகு மாயாவதி உரையாற்றுகையில், “எதிர்ப் புகளைக் கண்டு எங்கள் அரசாங்கம் அஞ்சாது, பெரியாருக்குச் சிலை வைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட் டோம். காந்திக்கும், நேருவுக்கும் விழா எடுக்கும்போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு ஏன் சிலை வைக்கக் கூடாது? எங்கள் அரசாங்கம் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

நிறைவுரையாற்றிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்சிராம் அவர்கள், “தந்தை பெரியார் சிலையை நிறுவுவதில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின்வாங்க மாட்டோம். பெரியார் அம்பேத்கரின் கொள்கைகள்தான் வெகுமக்களின் உரிமை களை ஈட்டித் தரமுடியும். அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை தேசத் துரோகி என்றவர்கள் இப்போது, “பாரத ரத்னா’’ என்று போற்றுகிறார்கள். அதேபோல், இப்போது ‘பெரியார் மேளா’வைத் தூற்றுபவர்கள் நாளை வேறு மாதிரி பேசுவார்கள். இது அவர்கள் வழக்கம். நான் சாவதற்குள் பெரியார் சிலையை அமைத்துவிட்டுத்தான் சாவேன்!’’ என்றார்.


No comments:

Post a Comment