Tuesday 3 July 2018

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு


சென்னை, ஜூலை 3- சட்டப் பேரவையில் தொழி லாளர், வேலை வாய்ப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் கபில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின் போது விபத்து ஏற்பட்டு பணியிடத்தில் மரணம் அடையும்போது வழங்கப்பட்டு வரும் ரூ.5 லட்சம் உதவித் தொகை, பணியின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைபவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.கட்டுமானத் தொழி லாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகி றது.

இந்த வாரியத்தில் பதிவு செய்துள்ள60 வயது பூர்த்தியடையாத தொழிலாளிநோய் மற்றும் உடல் பலமின்மை காரணமாக முடக்கம் ஏற்பட்டால் அவரும் ஓய்வூதியம் பெற தகுதியானவர் ஆவார்.மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்து விட்டால் அவரது கணவர், மனைவிக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 400 லிருந்து 500 ஆக உயர்த்தப் படுகிறது.தொழிலாளர் நலவாரியத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் அவரது பணிக் காலத்தில் இறக்க நேர்ந்தால் அவரது ஈமச்சடங்கு செலவிற்காக வழங்கப்பட்டு வரும் ரூ. 2000 லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

 

வேலைவாய்ப்பு துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. மேலும் 13 மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவுகள் இயங்கி வருகின்றன.இந்த ஆண்டு முதல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், சிவகங்கை, நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், திருண்ணாமலை, திண்டுக் கல், இராமநாதபுரம், தேனி, விருதுநகர், திருவள்ளூர் ஆகிய 18 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையை மேம் படுத்தும் வகையில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 3.7.18

No comments:

Post a Comment