Monday 23 July 2018

தகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா?

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை!

புள்ளி விவரங்களுடன்  திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது


புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக் கல்லூரி யில் சேர்வதற்குத் தகுதி வேண்டும்; அதற் காகத்தான் நீட் தேர்வு என்று சொல் லுகிறார்கள்; அதேநேரத்தில், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சம் ரூபாய் கொடுத்து சேர்கிறார்களே, அப்பொழுது மட்டும் தகுதி திறமை பாதிக்கப்படாதா என்ற கேள்விக்கு என்ன பதில்? தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (16.7.2018) புள்ளி விவரங்களுடன் வெளி யிட்ட தகவல்கள் இதோ:
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப் பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலமாக நடைபெற்று வந்தது-.
நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதன் பின்னர், அதன்படியே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியபாடங்களில்போதுமானமதிப் பெண்களைப் பெறாத மாணவர்கள் மருத் துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
2017ஆம் ஆண்டில் நீட் தேர்வெழுதிய மாணவர்களில் மருத்துவக்கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 400 பேர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில்10-க்கும்குறைவானமதிப் பெண்களைபெற்றுள்ளனர். 110மாண வர்கள்மதிப்பெண்களையேபெறாதவர் களாகவும், தவறான விடைகளால் எதிர் மதிப்பெண்களைப் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பான்மையோர் தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாடங்களில் பூச்சியம் மதிப் பெண்கள் பெற்றவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு தகுதியில்லாமலேயேஅனுமதி அளிக்கப் பட்டதுஎப்படி?என்கிற கேள்வி தற் பொழுது எழுந்துள்ளது. நீட் தேர் வில் பாடங்களின் அடிப்படையில் மதிப் பெண்கள் பெறுவது குறித்து அக்கறை காட்டப்படவில்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாடவாரியாக குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று முதல் அறிவிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆய்வுத்தகவல்

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வின்படி,
2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வின்படி, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட  1,990 மாணவர்கள் பாட வாரியாகப் பெற்ற மதிப்பெண்களை ஆராய்ந்தபோது, 720 பேர் 150-க்கும் குறைவாக  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10-க்கும் குறைவான மதிப்பெண்களை, இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது இரண்டு பாடங்களிலும் பூச்சியம் மதிப் பெண்கள் பெற்றவர்களாக  530 பேர் உள் ளனர். வசதியான மாணவர்கள் மதிப்பெண் களைப் பற்றிய கவலையின்றி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அனுமதியைப் பெறுகிறார்கள். இதுபோன்று 530 பேரில் 507 மாணவர்கள்  தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான விடுதி, உணவு, நூலகம் உள்ளிட்ட இதர செலவினங்களுக்கான கட்டணங்களில்லாமல், கல்விக்கட்டணம் மட்டும் ரூ17 லட்சம் ஓராண்டில் பெறப் படுகிறது. மதிப்பெண்களைப்பற்றி கவலையின்றி வசதிபடைத்த மாணவர்கள் மருத்துவக்கல்விக்கான இடங்களை விலை கொடுத்து வாங்கிட முடிகிறது. நீட் தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில் என்று கூறப்பட்டாலும், அதற்கு எதிராகவே இது போன்ற நிலைகள் உள்ளன.
தனியார்வசமுள்ளஅக்கல்லூரிகளில்சரி பகுதி நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களாக உள்ளன. மருத்துவக் கல்விக்கான இறுதி ஆண்டுக்கான தேர்வை அவர்களே நடத்திக்கொள்கிறார்கள். இறுதியாண்டு  தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவர்களாக பதிவு செய்துகொண்டு பணியாற்றிட முடி கிறது.
அதிர்ச்சிகர பட்டியல்

கீழ்க்கண்ட மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மருத்துவக்கல்வியில் சேர அனுமதி வழங்கப்பட்டது
இயற்பியலில்  -2, வேதியியலில்  -4, உயிரியலில் 139 மதிப்பெண் பெற்றவர்கள் 5.3 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் -2, வேதியியலில் 0, உயிரியலில் 131 மதிப்பெண் பெற்றவர்கள் 5.4 லட்சத்தையும் தாண்டி தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 9, வேதியியலில்  -2, உயிரியலில் 113 மதிப்பெண் பெற்றவர்கள் 5.8 லட்சத் தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 5, வேதியியலில் 0, உயிரியலில் 110 மதிப்பெண் பெற்றவர்கள் 6 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 3, வேதியியலில் 10, உயிரியலில் 118 மதிப்பெண் பெற்றவர்கள் 6.2 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 54, வேதியியலில் 40, உயிரியலில் 15 மதிப்பெண் பெற்றவர்கள் 6.3 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள் ஆகியோருக்கு மருத்துவக் கல்வியில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2010இல் நீட் அறிமுகம்

நீட் தேர்வு குறித்து 2010ஆம் ஆண்டு டிசம்பரில் அரசால் நியமிக்கப்பட்ட குழுவான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு அரசிதழில் முதல்முறையாக வெளியிட்டது. மருத்துவம் (எம்பிபிஎஸ்) பயிலுவதற்கான மாணவர் சேர்க் கையில் நீட் தேர்வின் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்ச மதிப்பெண்களாக 50 விழுக் காடு பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் (அல்லது இடஒதுக்கீட்டுப்பிரிவினர் 40 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்) என்று கூறப்பட்டது.
2012இல் பாடவாரியாக இல்லாமல் மொத்த விழுக்காடு தகுதிக்கு நிர்ணயம்

இந்திய மருத்துவக்கவுன்சில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில்  வெளியிட்ட அறிவிப்பில், பாடவாரியாக 50 விழுக்காடு, இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு என்பதை மொத்த மதிப்பெண்களில் பெறுகின்ற 50 விழுக்காடு மற்றும் 40 விழுக்காடாக மாற்றியது. பாடவாரியாக குறைந்த பட்ச மதிப்பெண் என்பதையும் நீக்கிவிட்டது.
2013இல் நீட் தேர்வு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில் 18.7.2013 அன்று அப்போதைய தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விக்ரம்ஜித் சென், அனில் ஆர்.தவே ஆகிய இரண்டு நீதி பதிகள் இடம்பெற்றனர். அனில் ஆர்.தவே தவிர இரண்டு நீதிபதிகளும் நீட் தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டநிலையில் பெரும்பான்மை நீதிபதி களின் கருத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகப் பிறப் பிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நீட் தேர்வு செல்லாமல் இருந்தது. நீட் தேர்-வு அரசமைப்புச்சட்டத்துக்கு விரோமானது என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
2016இல் கட்டாயம் என தீர்ப்பளித்த நீதிபதி அனில் ஆர்.தாவே

2013ஆம் ஆண்டில் மூவர் கொண்ட அமர்வில் இடம்பெற்று நீட் தேர்வை ஆதரித்து எழுதியவரான நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையில்,  2016ஆம் ஆண்டில் நீட் தேர்வு குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான அய்வர் கொண்ட அமர்வு நீட் தேர்வைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டது.
நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய நீதிபதி அனில் ஆர்.தவே கூறும்போது, மருத்துவ மாணவர் சேர்க் கையில் தனியார் கல்லூரிகள் கொள்ளை லாபம் பெறுகின்றன'' என்று குற்றம் சாற்றியிருந்தார்.
தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆய்வுத் தகவல்
நீட் தேர்வைக் கட்டாயமாக்கியபின்னர் தற்பொழுது தி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வின்படி, நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள், பூச்சியம் மற்றும் எதிர்மதிப்பெண்கள் பெற்று பூச்சியத்துக்கும் கீழ் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
எம்சிஅய் ஆட்சி மன்றக் குழு மேனாள் தலைவர் கே.கே.தல்வார்

2012 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன் சில் ஆட்சிமன்றக் குழுத்தலைவராக இருந்தவரான கே.கே.தல்வார் கூறியதாவது:
முதலில் நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. பின்னர் கட்டாயம் என்பதால் ஏற்கவேண்டிய நிலைக்கு உள்ளாயின. ஓராண்டுக்கு மேலாகியும்  நீட் தேர்வில் விழுக்காட்டின்படி மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருக்கும்நிலையில், பாடவாரியாக குறைந்த பட்ச மதிப்பெண்கள் பெற்றிட வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில்  விதிகளில்  தேவையான திருத்தங்களைச் செய்வதை எதுவும் தடுத்திட முடியாது என்றார்.
தகுதிநிலைகள் நீர்த்துப்போகச் செய்வதைத் தடுத்திட, தேவையான திருத்தங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் செய்யாமல் இருப்பது குறித்து கேட்கும்போது, தற்போதைய முறையின்படி, 2017ஆம் ஆண்டில் 60ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு 6.5 லட்சம் மாணவர்கள் தகுதி பெறுகிறார்கள். சரிபாதி இடங்கள் தனியார் கல்லூரிகள் கட்டணங்களை சார்ந்து உள்ளன. தகுதியான மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் கல்லூரிகளில் சேர்வதில்லை. 2017ஆம் ஆண்டில் 6 லட்சம் பேர் மருத்துவக்கல்வி சேர்க்கையில் 380 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றனர். 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள்  4 லட்சம் தொடங்கி 5 லட்சம் வரை தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நீட் தேர்வும், தமிழ்நாடும்

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. மேலும், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கூடாது என்பதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறையும் தொடர்ச்சியாக பின்பற்று வந்தது.
இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில், சிபிஎஸ்இ நடத்துகின்ற நீட்தேர்வின்படி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்தது. உச்சநீதிமன்றமும் நீட் தேர்வை கட்டாயமாக்கியது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இரு சட்ட வரைவுகளை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியது. மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்ட அச்சட்ட வரைவுகள் முதலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பப்படவே இல்லை என்கிற தகவல் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி வெளியுலகுக்கு தெரிய வந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னால், தமிழக அரசுக்கு அச்சட்டவரைவுகள் காரணமேதும் கூறப் படாமலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக (with held) தமிழக அரசுக்கு தகவல் வந்தததாக சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்தார்.
ஒரே தேர்வு என்று கூறப்பட்ட தேர்வான நீட் தேர்வில் கேள்வித்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறானதாக இருந்தன. இந்த ஆண்டில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 196  மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்கப்பட வேண்டும். தரவரிசை பட்டியல் அதன் அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவானது.
நீட் உயிரிழப்புகள்

நீட் தேர்வால் மாணவர்கள் அரியலூர் குழுமூர் அனிதா, பெருவளூர் பிரதீபா, திருச்சி சுபசிறீ ஆகிய மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களில் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, சிவகங்கை சிங்கம்புணரி கண்ணன் ஆகியோரும் உயிரிழந்தார்கள்.
தொடரும் போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் வரை போராட்டம் ஓயாது என்று சமூகநீதிக்கான போராளிகள் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு, 17.7.18

No comments:

Post a Comment