Monday 30 May 2016

முதலாவது சுயமரியாதை மகாநாடு ஊர்வலம்

24.2.1929 - குடிஅரசிலிருந்து...
ஊர்வலம்
தென்னிந்தியாவானது இதுவரை கண்டிராத காட்சியைச் செங்கற்பட்டில் கண்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குச் சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு ஊர்வலம் புறப்படு வதாக ஏற்பாடு செய்திருந்தாலும் குறிப்பிட்ட தலைவர்கள் எல்லாம் வந்து சேர 8.30 மணியாகிவிட்டது. சுமார் 100 மோட்டார் கார்களும் 20, 30 பஸ்களும் சரியாய் ஒன்பது மணிக்கு தியாகராய மண்டபத்தில் இருந்து ஜே! சப்தம் முழங்க ஊர்வலம் துவக்கப்பட்டது.
ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாயிருந்த கேப்டன் டி.சுந்தரராவ் அவர்களின் வண்டிமுதலில் வழிகாட்ட அடுத்தவண்டியில் மாநாட்டைக் திறக்கும் கனம் மந்திரி டாக்டர்.சுப்பராயன் அவர்களும் கனம் சேதுரத்தினமையர் அவர்களும் இண்டாவது வண்டியில் கனம் மந்திரி முத்தையா முதலியார் அவர்கள் கனம் பழையகோட்டை பட்டக்காரர் அவர்களும் மூன்றாவது வண்டியில் வரவேற்பு அக்கிராசனர் திரு ராவ்பகதூ£ர் எம். கிருஷ்ணசாமி அவர்களும் பிறகு வரிசையாக கோவை, திருச்சி, திருநெல்வேலி, வடஆற்காடு, தஞ்சை,
சேலம் முதலிய ஜில்லா போர்ட் தலைவர்களும் மதுரை, சேலம் முதலிய முனிசிபல் தலைவர்களும் மதுரை உத்தமபாளையம் சோமசுந்தர முதலியார் அவர்களும் தாலுகா போர்ட் தலைவர்களும் இவைகளின் அங்கத்தினர்களும் சட்டசபைப் பிரதிநிதிகளும் மற்றும் சென்னைப் பிரமுகர்களும் வெளி ஜில்லா பிரமுகர்களும் வரிசை வரிசையாக புறப்பட் டார்கள்.
வண்டிகள் சென்னை எல்லையை விட்டு தாண்டி யதும் மந்திரிகளுக்கும் ஈ.வெ.ராமசாமிக்கும் தலைவர் பாண்டி யருக்கும் மற்றும் பல பெரியோர்களுக்கும் வழி நெடுக வண்டிகளை நிறுத்தி நிறுத்தி ஊர் ஊருக்கு வளைவுகளும் பந்தல்களும் மேளதாளங்களும் ஏற்படுத்தி இருந்த இடங்களில் வரவேற்புப் பத்திரங்கள் வாசித்து கொடுத்தலும் மாலைகளும் சிற்றுண்டிகள்,
வழங்கலும் போட்டோ படங்கள் எடுப்பதுமான காட்சிகளே நடந்த வண்ணமாக இருந்தன. வழியில் மாநாட்டுத் தலைவர் திரு சவுந்திரபாண்டியரும் திருவாளர்கள் மகா நாட்டுக் கொடி உயர்த்தும் பி, டி, ராஜனும் பனகல்அரசர் படம் திறக்கும் கனம் கிருஷ்ண நாயரும் வந்து சேர்ந்து கொண் டார்கள் வண்டிகள் மணிக்கு 30 முதல் 40 மைல் வேகத்துக்குக் குறையாமல் பறந்தும் வழி நெடுக வரவேற்புகள் பெற்று செங்கல்பட்டு வந்து சேர 11-30 மணி ஆகிவிட்டது,
சாலையில் வழி நெடுக உள்ள ஆயிரக்கணக்கான தென்னனமரங்கள் சுண்ணாம்பு பூசி தலைப்பில் செம்மண் பூசி   இருந்த காட்சி வழி நெடுக காவல் சேவகர்கள் நிற்பது போலவே இருந்தது.
செங்கல்பட்டு வைபவம்
செங்கல்பட்டு முனிசிபல் எல்லைக்கு வந்ததும் பாண்டு நாதசுரம் நகார் அதிர்வேட்டுகள் ஜே சப்தங்கள் முதலியவை இடிகளை போல் ஒலிக்க ஆரம்பத்தில் சுமார் 10000 ஜனங் கள்போல் இருந்து கொடிகள் ஆட்டுவதாலும் வேஷ்டிகள் வீசுவதாலும் வரவேற்று பெரிய வண்டியில் தலைவர்களை ஒன்றாக உட்கார வைத்து மாலைகள் போட்டு உதிர் புஷ்பங் களை வண்டிகளிலிருந்து ஒவ்வொரு வரும் அள்ளி அள்ளி வீசி தலைவர்கள் புஷ்பக்குவியலுக்குள் மறைந்து திக்கு முக்காடும்படி இறைத்தார்கள்.
வீதிகள் எல்லாம் மஞ்சள் வெல்வெட்டு விரிப்பு விரித்தது போலவே புஷ்பங்கள் வாரி இறைத்தகாட்சி காணப்பட்டது. சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் ஊர்வலம் வந்ததும் ஊர்வலம் நகருவதற்கு முடியாமல் ஜனங் கள் சுமார் 20, 30 ஆயிரம் பேர்கள் போல வழி நெடுக வந்து கூடி விட்டார்கள். சுமார் ஒரு மைல் செல்ல ஒன்றரை மணி நேரமாய் விட்டதென்றே சொல்லலாம். ஊர்வல ஆரம்பத்திலிருந்தும் மாநாட்டு பந்தல்வரை ஒன்றரை மைலுக்கும் ஒரே தொடர்ச்சியாக கம்பவங்கள் நட்டு அவற்றிற்கு கொடித் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
பந்தலலங்காரம்
மகாநாட்டு மைதானத்தின் முன் புறம் ரோட்டு ஓரத்தில் வாயிலில் போட்டிருந்த முதல் பிரவேச பந்தல் சலவைக்கல் கட்டடம் எனவே மதிக்கத்தக்க மாதிரி சுமார் 20 அடி உயரத்திற்கு மேலாகவே போட்டு ஆயிரம் கொடிகள் போல கட்டி. 100க்கணக்கான கலசங்கள் வைத்து பார்வைக்கு ஒரு பெரிய நவாப்பு அரண்மனை வாயிலாகவே காணப்பட்டது.
ஒவ்வொரு வரும் கையில் தொட்டுப் பார்த்த பிறகே அது துணிகளின் மீது வர்ணங்களால் தீட்டப்பட்டது என்.று அறிய முடிந்தது மைதானத்திற்குள்ளும் சுமார், 3,4 பர்லாங் சுற்றளவுக்கு வளைத்து வரிசையாக அலங்கரித்த கடைகளை எற்படுத்தி விட்டு விட்டு பொருள் கண்காட்சிகளும், தொழில்கண்காட்சி களும் ஒரு புறமும் ஆங்கிலமுறை ஓட்டல்கள் சிற்றுண்டிசாலைகள், விவசாயகண்காட்சிகள்,
யந்திர கண் காட்சிகள் ஒரு புறமும், மாநாடு சம்பந்தமான நிர்வாக கூட்டங்கள் வாசகசாலைகள் முதலியவை மத்தியிலும் இடை இடையே பெரிய பெரிய உருவச்சிலைகளும் பதுமைகளும் நிறுத்தப்பட்டும் சிறு சிறு நந்தவனங்களாக பிரித்து அலங்கரித்த புஷ்பச் செடிகளும் சுமார் 2000 தோரண விளக்குகள் வரை மைதானத்தை சுற்றிலும் மரங்களின் மீதும் கொடிகளின் மீதும் மரத்துக்கு மரம் கொடிக்கு கொடி தோரணங்களாக கட்டப் பட்டிருந்ததோடு, மகாநாட்டுப் பந்தலின் முன்புறம் பெரிய அரண்மனை மண்டபம் போல்கட்டப்பட்டு பெரிய பெரிய சிகரங்களும் குளோப்புகளும் கலசங்களும் வைத்து அவை களின் மேல் கொடிகள்.
பறக்க விட்டு காந்த விளக்குகளால் சுயமரியாதையே பிறப்புரிமை என்று எழுதப்பட்டு காந்த விளக்குக் கென்றே ஒரு தனி இஞ்சின் வேலை செய்ய சுமார் அதில் ஒரு ஆயிரம் விளக்குகள் மகாநாட்டுப் பந்தல் அலங்காரத்தில் முப்புறமும் மற்ற பக்கத்திலும் பல வர்ணங்களில் எரிய, அவ்வளவு பெரிய பந்தல் முழுதும் உட்புறத்திலும் மேம்புறத்திலும் நான்கு பக்கங் களிலும் ஓலைகள் தெரியாமல் துணிகள் கட்டி காகிதத் தோர ணங்களும், கொடிகளும்,
பொம்மைகளும் காகிதப்பூக்களும் கொண்டு அலங்கரித்து பெட்ரமேக்ஸ் காஸ் விளக்குகள் இருமருங்கிலும் தோரணங்கள் போலவ வரிசையாகத் தொங்கவிட்டு 4, 5 இடங்களில் லவுட்ஸ்பீக்கர் என்னும் ஒலிக் கருவி கட்டப்பட்டு மேடையில்  சுமார் 500 பேர்கள் மாத்திரம் கொள்ளும்படி நாற்காலிகளும் மேடையின் இருமருங்கிலும் பெண்களும் ஒரு புறம் வரவேற்பு அங்கத்தினர்களும் முன்புறம் பிரதிநிதிகளும் உட்காரத்தகுந்த மாதிரி அமைத்து இருந்ததானது பொதுஜன அன்பையும் பக்தியையும்பெற்ற ஒரு பெரிய சக்கரசவர்த்தி முடி சூட்டு வைபவக்காட்சி போலவே இருந்தது.
விஜயம் செய்தார்கள்
ஊர்வலம் பந்தலுக்குள் வருவதற்கு முன் பிரதிநிதிகள் பந்தலுக்குள்ளும் மேடைக்குள்ளும் நிறைந்துவிட்டார்கள். மகாநாட்டுக்கு ராமநாதபுரம் ராஜா வெங்கிட்டகிரி பழைய கோட்டை பட்டக்காரர் முதலிய ஜமீன்காரர்களும் சென்னை மாகாணத்து மூன்று மந்திரிகளும், மத்திய மாகாண மந்திரி திரு ராகவேந்திராவ் நாயுடுவும், நிர்வாகசபை இந்திய அங் கத்தினர்கள் திருவாளர்கள் கனம் கிருஷ்ண நாயர்,
கனம் மகமது உஸ்மான் ஆகியவர்களும், அரசாங்க காரியதரிசி திரு வெங்கிட்டநாராயணாவும்  ஸ்மால்காஸ் கோர்ட் சீப் ஜட்ஜி தணிகாசலமும், சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தியாக ராயர் குமார் பி. டி. குமாரசாமியும் மற்றும் திருவாளர்கள் எ.டி.பன்னீர்செல்வம், குமாரசாமி செட்டியார், டபுள்யு.பி.ஏ. சவுந்திரபாண்டிய நாடார், சி.எஸ். இரத்தினசபாபதி, டி.எம். நாராயணசாமி பிள்ளைகாரர் கே. கிருஷ்ணசாமி நாயுடு,
என். எல்லப்பச்செட்டியார் எம்.கே.கிருஷ்ணசாமி நெல்லூர் ராமச் சந்திர ரெட்டியார் முதலிய  10 ஜில்லா போர்ட் பிரசிடெண்டுகளும் திருவாளர்கள் எ. ராமசாமி, பத்மநாப முதலியார், ஆர்.எஸ்.நாயுடு, சோலை நாடார், அப்துல் ரசாக் சாயபு, தம்மண்ண செட்டியார், வேதாசலம், எம்.கோவிந்தராஜூலு முதலிய சுமார் முப்பது முனிசிபல் சேர்மென்களும் திருவாளர் ஷண்முகம் பிள்ளை,  ராஜம்நாயுடு, ரங்கசாமி ரெட்டியார்,
உமாமகேஸ்வரன், அய்.குமாரசாமி, முதலிய 20,30 தாலுகா போர்டு தலைவர்களும் சுமார் 1000 பேர்களுக்கு மேல்பட்ட ஜில்லா, தாலுகா போர்டு, முனிசிபல் மெம்பர்களும், சற்றேக்குறைய எல்லா சட்டசபை அங்கத்தினர்களும் திரு க.நமசிவாய முதலியார் முதலிய நூற்றுக்கணக்கான பண்டிதர்களும், திருவாளர்கள் உத்தம பாளையம் சோமசுந்தர முதலியார் போன்ற 500 மிராசுதார்களும், முத்து நாடார், ஆரியா, கண்ணப்பர்,
முருகப்பா தாவுத்க்ஷா போன்ற நூற்றுக்கணக்கான பத்திராதிபர்களும் சிறீமதி நாயகம் போன்ற 600, 700 பெண்மணிகளும் அனேக பிரமுகர்களும் செட்டிநாட்டிலிருந்து வை.யுசு.ஷண்முகம், சொ.முருகப்பா, அருணாசலம் முதலிய நாட்டுக்கோட்டை கனவான்களும், திருவாளர்கள் பண்டிட் அகந்தகம், சாமி சகஜானந்தர்,
கோவை வீரய்யா, மதுரை பிள்ளை சிவராஜ் முதலிய கொடுமைப் படுத்தப்பட்ட வகுப்பு 400, 500 பிரதிநிதிகளும், திருநெல்வேலி, மதுரை, திருச்சி தஞ்சை, தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கல் பட்டு, சேலம்,
கோவை முதலிய தமிழ் ஜில்லாக்களிலிருந்து ஜில்லாவுக்கு 400, 500 பிரதிநிதிகளுக்கு குறையாமல் சில ஜில்லாக்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் பல ஜில்லாக்களிலிருத்தும் ஸ்த்ரீகள் பிரதிநிதிகளாக சுமார் 600, 700 சீமாட்டிகளும் தொழிலாளிகளில் பல பாகங்களிலிருத்தும் சாமியுல் நடேச முதலியார் காளியப்பன் போன்ற சுமார் ஆயிரம் தொழிலாளிகளும் புதுச்சேரியிலிருந்து திரு ராஜகோபால் தலைமையில் 40, 50 பிரதிநிதிகளும், திருவாங்கூரிலிருந்து 40, 50 பிரதிநிதிகளும்,
வெளிமாகாணப் பிரதிநிதிகள்
மைசூரிலிருத்து மைசூர் சட்டசபை மெம்பர் திரு நீலகிரி சஞ்சீவப்பா தலைமையில் 20, 30 பிரதிநிதிகளும் மற்றும் லாகூர், பம்பாய், கல்கத்தா மத்திய மாகாணம் முதலிய இடங்களிலிருந்து பல பிரதிநிதிகளும் மலேயா நாட்டிலிருந்து சரோஜினி ஓட்டல் சொந்தக்கார் திரு எஸ். ராஜூ அவர்கள் தலைமையில் 10, 20 பிரதிநிதிகளும் மற்றும் ஆந்திராவிலிருந்து திரு. சி.வி.ரெங்கம்,
செட்டியார் கதருடனும் பல பிரதிநிதிகளுடனும் மற்றும் ஒத்து ழையாமையில் ஈடுபட்டு ஒரு வருஷம், இரண்டு வருஷம், மூன்று நான்கு, அய்ந்து தடவை சிறை சென்றவர்களும் ஒத்து ழையாமையை ஒழிக்க ஏற்பட்ட சுயராஜ்யக்கட்சியை சேர்ந் தவர்களும் காங்கிரஸ் மிதவாதம்-அமிதவாதம்-பெசண்ட் கோஷ்டி-ஜஸ்டிஸ் கட்சி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வர்களும் முழு சுதந்திரம் வேண்டுபவர்களும், பார்ப்பனர்களும், மகமதியர்களும், கிறிஸ்தவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், சைவசமாஜக்காரர்களும்,
வைணவ சமயக்கார்களும் பவுத்த சமயத்தார்களும் ஆரியசமாஜிகளும் பிரம்மஞான சங்கக்காரர் களும் ,வெள்ளைக்காரமாதுகளும் பத்திராதிபர்களும் மேல் கண்ட துறைகளில் ஈடுபட்டு. பிரச்சாரம் செய்யும் தொண் டர்களும், பண்டிதர்களும், புராணபிரச்சாரகர்களும், சன்யாசி களும், சாமியார்களும், கோவில் டிரஸ்டிகளும் இந்து ரிலிஜி யஸ்போர்ட் தலைவர்கள் கமிஷனர்கள், தேவஸ்தான கமிட்டித் தலைவர்கள் அங்கத்தினர்கள் டிரஸ்ட்டிகள் குருமார்கள், அர்ச்சகர்கள் - சர்க்கார் நிர்வாக அதிகாரிகள்,
சர்க்கார் காரிய தரிசிகள் உத்தியோகத்திருக்கும் ஜில்லா ஜட்ஜி, சப்-ஜட்ஜிகள் ஸ்மால்கோர்ட் ஜட்ஜிகள் கலெக்டர்கள் டிப்டி கலெக்டர்கள் மற்றும் மாதம் 1000, 2000 ரூபாய் பெறும் உத்தியோகஸ்தர்கள் சில்லறை உத்தியோகஸ்தர்கள் ராஜாக்கள், ஜமீன்தாரர்களும், குடியானவர்களும் கூலிக்காரர்களும் பெண்களில் மாங்கல்ய ஸ்திரீகள் என்பவர்களும் தாசிகள் என்பவர்களும் மற்றும் எல்லாப் பிரிவுக்காரர்களும் பிரதிநிதிகளாய் வந்திருந்தது இதில் முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கதாகும்.
-விடுதலை,20,2,16

No comments:

Post a Comment