Wednesday 25 August 2021

ஆகமங்கள் ஆலயப் பிரவேச உரிமை


P.சிதம்பரம் பிள்ளை (1935)

நூலாசிரியர் அவர்கள் பல்வேறு நூல்களையும்   ஆகம வேத சாத்திரங்களையும் நுணுகி ஆராய்ந்தும், பல்வேறு நீதி மன்றத் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து கீழ்க்கண்ட முடிவுகளை அறிவித்துள்ளார்.
அத்தியாயம் 11
 ஆகமங்களின் அடிப்படையான கொள்கைகள் வருமாறு:
1. வைதீகப் பார்ப்பானைக்  கோவிலில் நுழையாமல் புறக்கனிப்பது மட்டுமின்றி, அவனை அன்னிய மதஸ்தன் என்ருங் கருத வேண்டும்.

2.கோவில் பூசாரியாவதற்குரிய  சோதனை தீட்சை ஒன்றுதான்; சாதியோ வகுபோ அல்ல.

3. தீட்சை பெறாத பிராமனன் கோவிலுக்குள் சமையற்காரன் போன்ர வேலைக்காரனாகக் கூட இருக்கமுடியாது; அவன் விக்கிரகத்தைத் தொடக் கூடாது; கர்ப்பக்கிரகத்துக்குல் பிரவேசிக்கக் கூடாது.

4.பிராமணனுக்குத் தீட்சை பெற அருகதையிருப்பது போலவே, ஒரு பறையனோ சண்டாளனோ தீட்சை பெறலாம்.

5.ஆகமப்படி கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கும். வழிபடுவதற்கும், சாதி, வர்ணம். வகுப்பு இவற்றைப் பற்றிக் கவனிக்க வேண்டியதில்லை. கடவுள் சன்னிதானத்தில் சாதி இந்துக்களும் சாதி இந்துக்கள் அல்லாதவர்களும் ஒன்றுதான். இதுதான் ஆகமங்களின் தத்துவம்.

6.ஆகமங்கள் ஒரு வகுப்பாருக்கு உயர்வும், மற்றொரு வகுப்பாருக்குத்தாழ்வும் கற்பித்ததில்லை.

சுருங்கச் சொல்லுமிடத்து, சகல கோவிலகளையும் எல்லா மக்களுக்கும் எவ்வித வித்தியாசமுமின்றி இந்த ஆகமங்கள் திறந்து விட்டன. எல்லா மக்களும் தீட்சை பெற்று வழிபட வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. இதைத் தவிர வேறு மாறுபாடான பொருள் கற்பிப்பது அசம்பாவிதமாகும்.
... 
‘தமிழர்களின் சரித்திரம்’ என்ர மிக ருசிகரமான புஸ்தகத்தில் (History of the Tamils by Mr.P.T.Srinivaasa Iyengar, Reader of Indian History to the Madras University)  திரு P.T. சீனிவாச ஐயங்கார் அவர்கள் ஆகமங்கள் குறித்து அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்.
“வைதீக சாஸ்திரங்கள் மக்களை நான்கு வருணங்களாகப் வகுத்து, நான்காவது வருணத்தைச் சேர்ந்தவர்களை வேத, வேதாந்தங்களைப் படிப்பதினின்று நீக்கவும் செய்தன. மக்களை நான்கு வர்னங்களாக வகுத்ததுனின்றும் வர்ணாசிரம தர்மங்கள் ஏற்பட்டு தர்மங்கள் வர்ணங்களுக்கிடையே வகுக்கப்பட்டன. இதன் முடிவு, பிராமணன் மட்டுமே சன்னியாசியாகலாமென்றும்  சன்னியாசத்தைப் பயின்றால் மட்டுமே மோட்சம் கிடைக்குமென்றும் ஏற்பட்டது.. அதாவது வைதீக முறைப்படி,  பிராமணர்கள் மட்டுமே மோட்சம் பெறலாமென்பதாகும். 
#ஆகமங்களோ   இந்தக் கோட்பாடுகளையெல்லாம் எதிர்த்து நின்றன.  ஒரு சண்டாளனும் கூட, ஆகமப்படி  விஷ்ணு அல்லது சிவனுடைய விக்கிரகத்தைப் பெற்று அதற்குப் பூசை செய்யலாம்.  தாழ்ந்த வகுப்புகளைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவன் கோவிலுக்குல் சென்று தரிசித்திருப்பதை பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. கண்ணப்ப நாயனார் காலகஸ்திக் கோவிலில் சிவனுக்கு இறைச்சியைக் கொடுத்தார்.  எட்டாவது நூற்றாண்டிலிருந்த பாணானாழ்வார் மிகக் கேவலமான வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வகுப்பார்கள் ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றியுள்ள தெரு வீதிகளில் கூட நடக்கக் கூடாது. ஆனால், அவரையும் ஆழ்வாராக்கிக் கோவிலில் வைத்துப் பூஜித்து வருகிறார்கள். #நான்கு சாதிப் பாகுபாட்டை ஆகமங்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், வேதத்தின் ஒரு பகுதியான வேதாந்தமோ சூத்திரர்கள் பயிலக்கூடாததாக இருந்தது.. கிரியைகள் மூலம் பரிசுத்தமடைய சூத்திரர்களுக்கு உரிமையில்லையாதலால், அவர்கள் வேதங்களைக் கேட்கவோ, படிக்கவோ கூடாதென பாதராயனார் எழுதியிருக்கிறார்.  ஆனால் இதற்கு நேர்மாறாக  ஆகமங்கள் எல்லாபேரும் படிக்கக் கூடிய விதத்தில் திறந்தனவாக இருந்தன. ஆகையால், இன்று கூட தீட்சை பெற்ற ஒரு பறையன் தான் பெற்ற உபதேசத்தை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கவும், அந்த பிராமணனுக்குக் குருவாக வரவும் முடியும்.

அதே புஸ்தகத்தில் திரு சீனிவாச ஐயங்கார் அவர்கள் அடியிற் வருமாறும் எழுதியுள்ளார்.

“வேதியர்கள் ஆகாமியர்களை மிகவும் இழிவாகக் கருதி வந்தார்கள். இது, முன் காலத்தில் ஆரியர்கள் இந்நாட்டிலிருந்த மக்களோடு காண்பித்த வெறுப்பின் தொடர்ச்சியாகும்.  இந்த வெறுப்பின் தொடர்ச்சியினால் இப்பொழுதும் கோவில் பூசாரிகளை இழிவான பிராமணர்கள என வேதாந்திகள் கருதுகிறார்கள்.  50 வருஷ காலத்திற்கு முன்னால் வரையிலும் ஒரு கோவிலுக்குள்ளும் பிரவேசிக்காத வேதியர்கள்  நான் அறிய இருந்து வந்தது. எனக்குத் தெரியும். வேதாந்தம் ஆகம வழியைப் பலமாகக் கண்டித்தது.

ஆகையினால் ஆகமங்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதமானவையாகும்.
- P.சிதம்பரம் பிள்ளை (1935)
- முத்துச்செல்வன் முகநூல் பதிவு, 25.8.21

No comments:

Post a Comment