Saturday 8 June 2024

சென்னை பெரியார் மய்யம்வி.பி.சிங் திறப்பு!


அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (303)
(கட்டுரையின் ஒரு பகுதி)

சென்னை பெரியார் மய்யம்
வி.பி.சிங் திறப்பு!
கி.வீரமணி

சென்னை, பெரியார் மய்யம், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் திறப்பு விழா 28.1.2001 அன்று சென்னை பெரியார் திடலில் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது. விழாவையொட்டி பெரியார் திடலிலும், வெளிப்புறத்திலும் கழகக் கொடிகள்!
புதிய கட்டடம் மிக்க பொலிவாக, கம்பீரமாகக் காட்சி அளித்தது. காலை முதலே கழகக் குடும்பத்தினரும், பொதுமக்களும் கட்டடத்தை வந்து பார்த்த வண்ணமாகவே இருந்தனர்.

மும்பையிலிருந்து விமானத்தின்மூலம் 9:10 மணிக்கு சென்னை வந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களை கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் வரவேற்றனர். கழகப் பொருளாளர் வி.பி.சிங் அவர்களுக்குச் சால்வை அணிவித்தார். மாநில மகளிரணிச் செயலாளர் க.பார்வதி சால்வை அணிவித்தார்.
சமூகநீதிக் கட்சியின் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், மதச்சார்பற்ற ஜனதா தலைவர் ஜி.ஏ.வடிவேலு ஆகியோரும் சால்வை அணிவித்தனர். கழக மகளிரணியினரும், தோழர்களும் பெரும் அளவில் திரண்டு கழகக் கொடி அசைத்து வரவேற்றனர். கருநாடக மாநிலக் கழகத் தோழர்களும் திரண்டிருந்தனர். அனைவருக்கும் தனித்தனியே கை கொடுத்து தன் அன்பினை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் வெளிப்படுத்தினார்.

காலை 11:00 மணியளவில் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களும் தலைவர்களும் பெரியார் திடலுக்கு வந்தனர். அவர்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் பூங்கொத்து அளித்து வரவேற்றேன்.
பின்னர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வி.பி.சிங் அவர்களும் தலைவர்களும் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியபின், புதிய கட்டடத்தின் முகப்பிற்கு வந்தனர். தலைவர்கள் புடைசூழ திறப்பு விழாவுக்கான கல்வெட்டினை மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் திறந்து வைத்து, அதன் பின்னர் ரிப்பனைக் கத்தரித்து மய்யத்தையும், மன்றத்தையும் திறந்து வைத்தார்.
“தந்தை பெரியார் வாழ்க’’ என்று மக்கள் உணர்ச்சி முழக்கமிட்டனர். தலைவர்கள் அனைவரும் மேடைக்கு வந்தனர். திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் 

முதலில் நான் அறிமுக உரையாற்றினேன். சென்னை -_ பெரியார் திடலில் 28.1.2001 அன்று நடைபெற்ற பெரியார் மய்யம், எம்.ஆர்.ராதா மன்றத் திறப்பு விழா நாள், இந்த இயக்கத்தினுடைய வரலாற்றில் இது ஒரு முக்கிய நாள். இந்த மன்றத்திற்கு 1962ஆம் ஆண்டிலே அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களாலே அடிக்கல் நாட்டப்பட்டது. பிறகு 1963ஆம் ஆண்டிலே அன்றைய சபாநாயகர் (எஸ்.செல்லபாண்டியன்) அவர்களாலே திறந்து வைக்கப்பட்டது இம்மன்றம்.
இந்த மன்றம் இன்றைக்குப் புதுப்பிக்கப்-பட்டிருக்-கின்றது. சென்னை _ வேப்பேரி என்பது நகரின் மய்யமான இடம். இந்த மன்றத்தைப் பொறுத்த வரையில் இதிலே எவ்வளவு பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை மட்டும் சுருக்கமாகச் சொல்லுகின்றேன். இதிலே அடித்தளம் உள்ளது. 7,800 சதுரஅடி கொண்டது. உணவகப் பகுதி 7,800 சதுர அடி கொண்டது. கீழே திருமணங்கள் நடைபெற்றால் ஒரு பகுதியில் 400 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து உணவு உட்கொள்ளலாம். இப்படிப்பட்ட வசதியை அடித்தளத்தில் செய்திருக்கின்றோம். திருமணங்களுக்கு இந்த மண்டபம் பயன்படும். மாநாடுகளுக்கு இந்த மண்டபம் பயன்படும்.
எல்.சி.டி. புரொஜெக்டர் என்ற நவீன வசதியை இங்கே அமைத்திருக்கின்றோம். நவீன வசதியுடன் எம்.ஆர்.ராதா மன்றம் 14 ஆயிரம் சதுர அடி கொண்டது.

பால்கனி பகுதி மேலே இருக்கிறது. அதிலே 250 பேர் அமரக்கூடிய வசதியான இருக்கைகள் கொண்ட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 5,500 சதுரஅடியாகும். அதேபோல இதற்கெல்லாம் தனியாக இயங்கக் கூடிய அலுவலகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதி 930 சதுர அடி கொண்டது.
அதோடு இந்த மன்றத்திற்குப் பின்னாலே நவீன சமையலறை அமைக்கப்பட்டிருக்கின்றது. நவீன சமையலறைக் கருவிகள் பொருத்தப்பட்ட சமையல் கூடமாகப் பின்னாலே அமைக்கப்-பட்டிருக்கின்றது. சென்னையிலே திருமணம் நடத்தக்கூடியவர்களுக்கு ஒரு வசதிக் குறைவு இருக்கிறது. சில திருமண மண்டபங்களிலே காய்கறி சமையலுக்கு மாத்திரம்தான் அனுமதி உண்டு. புலால் வகை சமையலுக்கு அங்கு அனுமதி கிடையாது. கறி, பிரியாணி செய்யக் கூடியவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லக்-கூடிய திருமண மண்டபங்கள் உண்டு. புலால் உணவு சமைப்பவர்களுக்கு மண்டபம் இல்லை என்று கொடுக்க மறுக்கிறார்கள்.

பெரியார் திடலில் உள்ள இம் மண்டபத்தில் சைவ, அசைவ உணவு இவை இரண்டிற்கும் வாய்ப்புண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஒரு பக்கம் தனியாக சைவ உணவு தயாரிக்கும் இடம் இருக்கிறது. இன்னொரு பக்கம் அசைவ உணவுக் கூடம் என்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது இது 3000 சதுர அடி கொண்டது.
இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மண்டபத்தை சிறப்பாக அமைத்து இரவு, பகல் என்று பாராமல் உழைத்த தோழர்கள் இங்கே பாராட்டப்பட்டார்கள். இதிலே எங்களுக்கு என்ன மகிழ்ச்சி என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய மண்டபம் மாற்றப்பட்டிருக்கிறது. காலத்தை ஒட்டி இதிலே வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அய்யா மூப்பனார் அவர்கள் மற்றும் இங்கு வந்திருக்கின்ற தலைவர்கள் எல்லாம் நாங்கள் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கின்ற காரணத்தால் இந்த மன்றத் திறப்பு விழா என்று சொன்னாலும், இது மக்களுக்கு அர்ப்பணிப்பு விழா என்ற அளவிலே இந்த நிகழ்ச்சி இன்றைக்கு மகிழ்ச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. இது மக்களுடைய சொத்து என்பதைத் தெளிவாக உணர்ந்தவர்கள் நாங்கள். இதைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள்.
ஆனால், இந்தக் கட்டடத்தைக் கட்டி முடித்தது பெரியார் _ மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியினுடைய பேராசிரியர்கள் என்பதைப் பெருமையோடு சொல்லுகின்றோம்.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லுகின்றோம். நகரத்திலேயே ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இவ்வளவு குறைவான வாடகை உள்ள நடுத்தரமான மன்றம் வேறு இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த வாடகை இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பெருமைக்கு என்ன காரணம் என்று சொன்னால் இது ஒரு கூட்டுக் குழு மனப்பான்மையோடு சிறப்பாக எல்லோரும் பங்களித்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்த நேரத்திலே நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களே! நீங்கள் என்றும் எங்களுடன் இருக்கக்கூடியவர்கள். உங்களிடமிருந்து வஞ்சகர்கள் பதவியைப் பறித்துக்கொள்ளலாம். பதவி இல்லாததையே நீங்கள் ஒரு மகிழ்வாக எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். எதைப் பெறுவதாக இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல விலையைக் கொடுத்தாக வேண்டும். மண்டல் அறிக்கையை அமல்படுத்தி நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கின்ற நற்காரியத்தைச் செய்திருக்கின்றீர்கள். ஒரு நல்ல விலையைக் கொடுத்திருக்கின்றீர்கள்.
மக்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டார்கள். மக்களுடைய இதயங்களில் உங்களுடைய சமூகநீதிச் சாதனையால் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்களுடைய செயல் சரித்திரப் பொன்னேட்டில் பொறிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயரை முழங்கிய முதல் இந்தியப் பிரதமர் நீங்கள் என்ற பெருமை என்றைக்கும் அழிக்க முடியாத, எல்லோர் மனதிலும் இடம் பெறக்கூடிய ஒன்றாகும். பெரியார் பெயரை உச்சரித்த பின்தான் மண்டல் கமிஷனை அமல்படுத்தினீர்கள்.
பெரியார் ஒருபோதும் நாடாளு மன்றத்திற்குள் நுழைந்ததில்லை. நீங்கள் பெரியாரை நாடாளுமன்றத்திற்குள் அழைத்துச் சென்றிருக்கின்றீர்கள். நாடாளுமன்றக் குறிப்பில் பெரியார் இருக்கிறார். உங்களை இந்த விழாவிற்கு அழைத்தது மிகுந்த பொருத்தமான ஒன்று என்பதை இந்த நேரத்திலே எல்லோர் சார்பாகவும் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்ந்து சமூகநீதிக் கட்சித் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், பிரபல திரைப்பட இயக்குநர் வேலு.பிரபாகரன், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஜி.ஏ.வடிவேலு, நடிகவேள் ராதா அவர்களின் மகன் எம்.ஆர்.ராதாரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஆர்.நல்லகண்ணு, மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக, மேனாள் பிரதமர் வி.பி.சிங் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவரது ஆங்கில உரையைத் தமிழாக்கித் தந்தார்.
(நினைவுகள் நீளும்…)


அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (304)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் நவம்பர் 16-30 2022

மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய உரை…
– கி.வீரமணி

“இந்த அரங்கத்திற்கு, மிகச் சிறந்த கலைஞரான எம்.ஆர்.ராதாவின் பெயர் வைக்கப்
பட்டுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பவதையே கடமையாகக் கொண்டிருந்த அவருடைய பெயர் இந்த அரங்கத்திற்கு வைக்கப்பட்டிருப்பது பொருத்தமானதே ஆகும்.
தந்தை பெரியார் தமது வாழ்நாளெல்லாம் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர். சமூகச் சீர்திருத்-தங்களுக்காகவும் சமூக நீதிக்காகவும் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் அவர் துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். அவர் அனுபவித்த துன்பங்களாலும் அவர் செய்த தியாகங்களாலும் இன்று சமூக நீதித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக, ஒரு சிறந்த முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. நம்முடைய சமுதாயம் பலவகையான பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் உடையதாகும்.
இந்த உன்னதமான சமுதாயத்தில் சிலர்
மதிக்கப்படுகின்றனர். சிலர் வெறுக்கப்படு-கின்றனர்.

எங்கெல்லாம் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அரசியல், பொருளாதாரம், சமுதாயம் உள்பட எல்லா நிலைகளிலும் மக்களாட்சித் தத்துவம் சிதைந்து போகிறது. தந்தை பெரியார் சமுதாயத்தில் ஏகபோக நிலைக்கு எதிராகப் போராடினார். இன்று நம் தோழரான திரு.வீரமணி இந்தப் போராட்டத்தை தொடருவது மட்டுமல்லாமல், ஒத்த கொள்கையுடையவர்களின் துணையுடன் அந்தப் போராட்டத்தின் எல்லையை விரிவுபடுத்தியும் இருக்கிறார். மக்கள் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இதன் காரணம் என்ன? அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டுள்ளனர். இந்தச் சங்கிலிகள் அவர்களுடைய கைகளிலோ, கால்களிலோ கட்டப்படவில்லை; அவர்களுடைய மூளையில், மனதில் கட்டப்பட்டுள்ளது. வாழ்க்கையிலுள்ள துன்பங்களுக்கு முற்பிறப்பில் ஒருவர் செய்த பாவச் செயல்களே காரணம் என்னும் மூடநம்பிக்கை உள்பட கருமம், முற்பிறப்பு, அடுத்த பிறவி போன்ற பல மூடநம்பிக்கைகளாலான சங்கிலிகளால் அவர்களுடைய மூளை கட்டப்பட்டுள்ளது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் இப்படிப்பட்ட பாரபட்சங்களும் சுரண்டல்களும் இயற்கையானவை அல்ல. அவை மனிதனால் ஏற்படுத்தப்பட்டவைகளே.
தன்னுடைய துன்பங்கள் அனைத்திற்கும் முற்பிறப்பில் தான் செய்த செயல்களே காரணம் என்றும், வேறு யாரும் அதற்குப் பொறுப்பல்ல என்றும் மனிதன் எண்ணுகின்றான். இந்த நாட்டில் மக்கள் அந்த அளவிற்கு மூளைச் சலவை செய்யப்பட்டு விட்டனர். இந்த மனோவியல் ரீதியிலான அடிமைத்தனச் சங்கிலிகளை நாம் அணிந்திருக்கும் நகைகள்
என்பது போன்றே நாம் எண்ணத் துவங்கி-விட்டோம்.

இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட ஒரு புரட்சி வந்தாக வேண்டும். அந்தப் புரட்சி கூட நமக்குள் இருந்துதான் வர வேண்டும். அது மக்களால் மட்டுமே, நம்மால் மட்டுமே செய்யப்படக் கூடியது. தந்தை பெரியாரின் முக்கியப் பங்களிப்பு என்னவென்றால், அவர் தமது சுயமரியாதை இயக்கத்தின் மூலமாக இந்தப் புரட்சியை மக்களின் மனங்களில் உருவாக்கிவிட்டார். மனிதனுக்குச் சுயமரியாதை இல்லாமற்போனால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. ஓர் இயந்திரமாகத்தான் இருக்க முடியும். அதனுடைய முகத்தில் துப்பினாலும் கூட அது எந்த அவமானத்தையும் உணராது. அதைப்போலவே, பல நூற்றாண்டுகளாக எந்த ஒரு சுயமரியாதையும் இல்லாமல் மக்கள் இயந்திரங்களைப் போல் வாழ்ந்து வந்தார்கள்.

தந்தை பெரியாரின் சமூக நீதி இலக்கை நாம் அடைந்தால் மட்டும்தான் நாம் அரசியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைய முடியும். சுயமரியாதையின் அடிப்படையில்தான் இந்தச் சமூக மாற்றம் நடைபெற முடியும். அதைத்தான் தந்தை பெரியார் செய்தார்; அதைத்தான் திரு.வீரமணியும் அவரது தொண்டர்களும் இப்போது செய்துகொண்டு இருக்கிறார்கள்.
மண்டல் ஆணையப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக நாம் வளர்ச்சியடையவும் ஏற்றம் பெறவும் பல வழிகள் திறந்துள்ளன.

நாம் பின்தங்கியவர்கள் ஆக்கப்பட்டதினால் நம் வாய்ப்புகள் நம்மிடமிருந்து பறிக்கப்-படலாமா என்ற கேள்வியை நாம் எழுப்பினோம். இப்போது நாம் ஒரு எரிமலையின் உச்சியில் அமர்ந்துள்ளோம். நம் நாட்டின் மக்களில் கிட்டதட்ட 80 விழுக்காடு பேர் தம் உரிமைகளுக்காகப் போராடுகின்றனர். எரிமலையின் வாய் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தாலும், அது எந்த நேரமும் வெடித்துச் சிதறும் நிலையில் தான் உள்ளது.

தந்தை பெரியார் மற்றும்
அண்ணல் அம்பேத்கரின் கருத்துரு
நான் அவர்களுடைய விருப்பங்களை நிறை
வேற்றியுள்ளேன். ஆயிரக்கணக்கான ஆண்டு
களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருந்த லட்சியங்களையும் கனவுகளையும் என் உத்தரவுகளின் மூலம் நனவாக்கியுள்ளேன். எனவே, இனி அவற்றை யாராலும் அகற்றிவிட முடியாது.

இப்போதெல்லாம் அனைத்துக் கட்சிகளும் மண்டல் ஆணைய உத்தரவுகளைக் குறித்துப் பேசுகின்றன. நீங்கள் ஏன் இப்போது என்னிடம் மண்டல் ஆணையம் குறித்துக் கேட்க வேண்டும்? இனி புதிதாக ஆட்சிக்கு வருபவர்களைக் கொண்டு நீங்களே அதைச் செய்துகொள்ள முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இனி அதிகாரத்திற்கு வருபவர்கள் தேவையானதைச் செய்வார்கள். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தி விட்டோம். இந்தப் பணியை நாங்கள் வெற்றிகரமாகச் செய்திருக்கிறோம். அது ஒரு போர்க்களமாக இருந்தது. நாம் அதில் வெற்றிபெற்றுள்ளோம். அதைக்குறித்து மேற்கொண்டு நாம் எதுவும் எண்ண வேண்டியது இல்லை; அடுத்த அடியைத்தான் நாம் எடுத்து வைக்க வேண்டும். அடுத்த கட்டம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான், சரியான முறையில் மக்களுக்கு அறிவூட்டுவது அவசியமாகும்.
ஆகவே, சராசரி மனிதர்கள் இந்த வகையான கல்வியைப் பெற இயலாத நிலையில் உள்ளனர். கல்வியின் வணிக மயமாக்கல், பண வசதி உடையவர்களுக்கு மட்டுமே இந்த வகைக் கல்வியைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இந்த வகைக் கல்வியைப் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நான் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியபோது என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தனித்திறமை பெற்ற மக்களின் தலைவிதி இனி என்னவாகும்? என்பதே அது. தனித்திறமை பெற்ற ஏழை மக்கள் இப்படிப்பட்ட கல்வியைப் பெற முடியாது என்று என்னிடம் வாதிட்டனர். ஆனால் இன்றும் கூட அப்படிப்பட்ட கல்விக்கான கட்டணம் மிகவும் அதிகமாக ஆகிவிட்டதால் தனித்திறமை பெற்ற ஏழை மக்கள் இப்படிப்பட்ட கல்வியைப் பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே, நாம் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது மிகவும், அவசியமாகும். கல்வி மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. கல்வியானது குறைந்த செலவில் கிடைக்கக் கூடியதாகும்போது தான், விரும்பும் கல்வியைப் பெற அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்; அத்துடன் சமுதாயத்தில் சமத்துவமும் நிலவும்.
குறிக்கோளுள்ள வாழ்வை நடத்த கல்வி
பயனுள்ளதாக அமையவேண்டும், இப்போதுள்ள
கல்வி முறை அதற்கேற்றதாக இல்லை.

எனவே,இப்போது நாம் பெறுகின்ற கல்வி உண்மையான கல்விதானா என்று நாம் சந்தேகப்பட வேண்டியதாகிறது.
கல்வி மற்றும் மக்கட்பணியின் அடிப்படைக் கருத்து, மனித மனத்தையும் இதயத்தையும் பயன்படுத்துவதுதான்.
ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது, எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை வைத்து நாம் அவனை மதிப்பது இல்லை. அவனிடம் ஒரு பங்களா மற்றும் கார் இருந்தால் அவன் ஒரு பெரிய மனிதன் ஆகிவிடுகிறான். ஆனால், ஒரு மனிதனிடம் உள்ள விழுமியங்களையும், பண்பையும் வைத்துத்தான் தந்தை பெரியார் அவனை மதிப்பிடுகிறார். அவரைப் பொறுத்த வரையில் ஒரு மனிதனின் சொத்து அல்லது சமூக அந்தஸ்தை வைத்து அவனை மதிப்பிட முடியாது; அவனுடைய மனிதத்தன்மை மற்றும் மனிதனை மனிதனாக நடத்தும் பண்பை வைத்துத்தான் மதிப்பிட முடியும்.

தந்தை பெரியாரின் லட்சியங்களை உலகம் முழுவதும் பரப்புவதற்காக நம் தோழர் திரு.கி.வீரமணி எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் அவர் தமது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று தமது உரையில் வி.பி.சிங் குறிப்பிட்டார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் இறுதியாக நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை கழக உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொகுத்து வழங்கினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment