Thursday 28 January 2021

திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை துவக்க விழா


திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை துவக்க விழாவில் ஆசிரியர் உரையாற்றும் காட்சி

4.7.1992 அன்று திண்டுக்கல்லில் “திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை’’ மாநில மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் நான் உரையாற்றும்போது, “திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை’’ என்பதை நாம் துவக்கியிருக்கிறோம். அதேநேரத்தில் பல்வேறு பகுதிகளிலே இந்த அமைப்பைத் துவக்கி நல்ல ஒரு துவக்கத்தை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். திராவிடர் தொழிலாளர் கழகம், இதில் முற்றிலும் மாறுபட்டு நிற்கக்கூடிய திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த படிப்பறிவில்லாத பாட்டி கூட தந்தை பெரியார் அவர்களின் கொள்கை பற்றிப் பேசும்; அதன்படி நடக்கும்.

 திராவிடர் தொழிலாளர் சங்கம் பேரணியாக வரும் காட்சி.

அதே நேரத்தில் நமது தொழிற்சங்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போன்ற பிரச்சினைகளில் அலட்சியம் காட்டும் என்று  யாரும் தவறாகப் பிரச்சாரம் செய்ய வேண்டாம். அப்பிரச்சினையில் எந்தத் தொழில் சங்கப் பார்வைக்கும் நமது அமைப்பு பின்தங்கியது அல்ல என்பதை மாநாட்டில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் ஓய்வூதியம்  (Pension) அளிக்கப்பட வேண்டும் என்கிற திண்டுக்கல் மாநாட்டுத் தீர்மானம் பொருளாதாரப் பிரச்சினைகளில் எந்த அளவு அடிப்படைக்கே செல்லுகிறது என்பதற்கான அத்தாட்சியாகும் என்பதை சுட்டிக் காட்டினேன்.

விவசாயத்தை ஒரு தொழிலாக (Industry) அறிவிக்க வேண்டும் என்கிற தீர்மானமும், லாபத்திலும் நிருவாகத்திலும் தொழிலாளர்களுக்குப் பங்கு அளிக்க வேண்டும் என்கிற தீர்மானமும், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானமும், நெசவாளர்கள் பற்றிய விரிவான தீர்மானமும் எவ்வளவு கவலையோடு திராவிடர் தொழிலாளர்கள் பிரச்சினைகளை நமது இயக்கம் அணுகுகிறது என்பதற்கான ஏற்றமிகு எடுத்துக்காட்டாகும் என்று மாநாட்டில் எடுத்துரைத்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.2.20

No comments:

Post a Comment