Thursday 5 September 2019

மாட்டுக் கொட்டிலில் காந்தியாரை சந்திக்கச் செய்த சங்கராச்சாரியார்

அக்டோபர் - 1927 எட்டாம் தேதியன்று  தமிழகத்தை விட்டுத் திருவாங்கூர் சமஸ்தானத்திற்குள் நுழைந்த மகாத்மா காந்தி, 16.10.1927 ஆம் தேதியன்று பாலக்காட்டில் இருந்து காரில் கோயமுத்தூர் வந்து சேர்ந்தார். அவர் பாலக்காட்டில் சங்கராச்சாரிய சுவாமிகளைச் சந்தித்தார், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளை - காந்திஜி சந்தித்துப் பேசியது, வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். பாலக்காட்டைச் சேர்ந்த நல்லிச்சேரியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்றாலும் தமிழகத்திற்கு இது நெருங்கிய தொடர்புடைய நிகழ்ச்சி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ‘’ஸ்ரீ ஜகத்குரு திவ்விய சரித்திரம்‘’ என்ற நூலில் அதைத் தொகுத்தவரான இராமச் சந்திரபுரம் எஸ். சாம்பமூர்த்தி சாஸ்திரி இச் சந்திப்பைக் குறித்துக் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:


மதத்தலைவராக விளங்கும் ஸ்வாமிகளின் தெள்ளிய அறிவையும், பரந்த நோக்கத்தையும், எவரையும் ஏற்றுக் கொண்டு அருள் புரியும் தன்மையையும் பற்றி ‘ஹிந்து’ பத்திராதிபர் ஏ. ரெங்கசாமி அய்யங்கார், எஸ். சத்திய மூர்த்தி ஆகியோர் மூலம் காந்தியடிகள் முன்பே கேள்வியுற் றிருந்ததால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு ஸ்வாமிகளைச் சந்தித்து அவர்களுடன் பேச வேண்டுமென்ற தீர் மானத்தைச் செய்து கொண்டார். அதை யொட்டியே சரித்திரத்தில் முக்கியத் துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு 15.10.1927இல் நிகழ்ந்தது. பாலக் காட்டைச் சேர்ந்த நல்லிச்சேரியில் ஸ்வாமிகள் தங்கியிருந்த ஜாகையின் பின்புறம் அமைந்திருந்த மாட்டுக்கொட்டிலில் காந்தி யடிகளுக்கும் ஸ்வாமிகளுக்கும் சந்திப்பு ஏற்பட்டது. குறிப்பாக இரண்டொருவரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகை நிருபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. காந்தியடிகளும் ஸ்வாமிகளை நெருங்கியதும் இந்து முறைப் படி அவர்களை வணங்கினார். காஷாயக் கதராடை ஒன்றை அணிந்து தரையில் அமர்ந்திருந்த ஸ்வாமிகளின் ஒளி நிறைந்த திருமேனியில் காந்தியடிகளின் மனம் ஈடு பட்டு நிறைந்துவிட்டது அப்பொழுது சற்றுநேரம் மௌனம் நிலவியது. பின்னர் ஸ்வாமிகள் சமஸ்கிருதத்தில் இரண் டொரு வார்த்தைகள் கூறி, காந்தியடிகளை வரவேற்று உட்காரும்படி தெரிவித்தார். காந்தியடிகளும் கீழே அமர்ந்து, தமக்கு சமஸ்கிருதம் பேசுவதற்குப் பழக்கமில்லை யென்றும், இந்தியிலேயே பேச அனுமதிக்க வேண்டு மென்றும், ஆனால் கூடியவரையில் சமஸ்கிருத சொற் களைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்துக் கொண்டார். இந்தியில் பேசுவதை ஸ்வாமிகளும் புரிந்து கொள்ளக்கூடியவராதலால், இந்த ஏற்பாட்டின்படி ஸ்வாமி கள் சமஸ்கிருதத்திலும் காந்தியடிகள் இந்தியிலும் பேசத் தொடங்கினார்கள். கடவுள் நம்பிக்கையை அடிப்படை யாகக் கொண்டே ராஜ்யங்கள் அமைய வேண்டுமென்றும், ஆத்ம சிந்தனையைப் புறக்கணித்து மனித சக்தியை மாத்திரம் பயன் படுத்தி அமையும் எந்த இராஜ்யமும் சீக்கிரத்தில் அழிவுதான் அடையுமென்றும், இதன் உண்மையைக் காந்தியடிகள் - உலகிற்கு எடுத்துக் கூறுவதைத் தாம் மிகவும் பாராட்டுவதாகவும், ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும் பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்களென்றும் அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகு மென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்’’.

“தமிழ் நாட்டில் காந்தி”

(பக்கம்-574-576)

-அ.இராமசாமி

- விடுதலை ஞாயிறு மலர், 3. 8. 19

No comments:

Post a Comment