Saturday 30 November 2019

அறிவியலாளர்களை மதம் படுத்திய பாடு!

அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமிலையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என் வற்புறுத்தினார்கள்.

இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார்.

தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். தேவனின் செய்தியை திருச்சபையின் விண்கோள்கள் பூமி உருண்டையின் மீது பொழிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலகம்  உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள்.

‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.

பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் ‘உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலீயோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள்.

கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள்.

விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.

இன்று மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்துக்கொண்டு திருச்சபையின் பாதிரிகள் வாழும் உல்லாச வாழ்க்கைக்கு வசதிக்ள செய்தது அறிவியல்தான். விவிலியம் அல்ல.

கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.

எதிர்காலத்தில் திருச்சபை தமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலா இவர்கள் தங்களை வருத்திக்கொண்டார்கள்?

தேவனின் ஊழியர்களே சொல்லுங்கள். யார் பாவிகள், யார் சத்தான்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் நித்திரை கொண்டு, காலை எழுந்து உயர்தர ஒயினைக் குடித்து, வறுத்த முழுக்கோழியை முழுங்கி, பளபளக்கும் வெண்பட்டு அங்கியை உடுத்தி, மாருதி காரில் பவனி வந்து, தேவாலயத்தில் கூடியிருக்கும் மந்தைகள் முன்னால், புளித்த ஏப்பத்துடன், பாதிரி திருவாய் மலர்வார், ”கஷ்டத்தில் ஜீவிக்கின்ற கர்த்தரின் குழந்தைகளே சாத்தான்களிடமிருந்து விலகியிருங்கள்.”

எங்கள் விஞ்ஞானிகளின் கால் தூசிகூடப் பெறாத பாதிரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளாக நீங்கள் செய்துவரும் தேவ ஊழியம் இதுதானே!

‘திருமறையில் ஆதாரமில்லையே’ என்ற எந்த அறிவியல் உண்மைகளை மறுத்து விஞ்ஞானிகளை அழித்தீர்களோ அதே அறிவியலை உங்களுடைய வாழ்க்கையில் வெட்கமில்லாமல் பயன்படுத்தி வருகிறீர்களே. சுவிசேசப் பிரசங்கிகளே பதில் சொல்லுங்கள்.
Thanks Theevan Theevan ✊👍✊
- தமிழினியனின் முகநூல் பதிவு, 30.11.19

No comments:

Post a Comment