Friday 17 September 2021

காந்தியை திண்ணையில் அமர்த்தி சோறுபோட்ட சீனிவாச அய்யங்கார்

காந்தியார் 1926 ஆம் ஆண்டிற்கு முன்பு சென்னைக்கு வருகிறார். மயிலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டில் தங்குகிறார். பிரபல அட்வகேட் ஜெனரல், பிரபல வக்கீல், காங்கிரசு தேசிய தலைவர்.

பிறகு 1927 ஆம் ஆண்டிலும் காந்தியார் அங்கு வந்து தங்குகிறார். அப்பொழுது இந்த இடைவெளியில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன? காந்தியாரும் - பன்னீர் செல்வமும், அதேபோல, நம்முடைய கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த உமாமகேசுவர பிள்ளை போன்றவர்களும் சந்தித்து, அய்யா தமிழ்நாட்டில், பார்ப்பனர் - பார்ப்பனரல் லாதார் பிரச்சினை உச்சக்கட்டமாக இருக்கிறதே, நீங்கள் பெரியாரை அழைத்துப் பேசவேண்டாமா? சமாதானம் செய்ய வேண்டாமா? இந்தப் பிரச்சினையை பெரியார் தீர்க்கவேண்டும் என்று விரும்புகிறாரே, என்று அய்யாவின் சார்பில் காந்தியாரிடம் சொல்கிறார்கள்.

அதற்கு காந்தியார் என்ன சொல்கிறார் தெரியுமா? யாருக்காவது சந்தேகம் இருந்தால், காந்தி நிலையம் வெளியிட் டிருக்கிற, ‘‘தமிழ்நாட்டில் காந்தி’’ என்கிற நூல் ஆயிரம் பக்கம் இருக்கின்ற நூலில் இருக்கிறது, அதனை பாருங்கள்.

காந்தியினுடைய சுயமரியாதையை மீட்ட இயக்கம் - சுயமரியாதை இயக்கம்

காந்தியார் சொல்கிறார்,

‘‘இல்லை, இல்லை, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இப்பொழுது குறைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டிற்கு முன்பு நான் இங்கு வந்தபொழுது, சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் நான் உட்கார வைக்கப்பட்டேன். வீட்டின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இன்றைக்கு அப்படியில்லை, என்னுடைய மனைவி சீனிவாச அய்யங்கார் வீட்டு சமையலறை வரையில் செல்கிறார்; நானும் உள்ளே செல்கிறேன்’’ என்றார்.

சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி

அதற்கு என்ன காரணம்? சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி; சீனிவாச அய்யங்கார்களுக்கே மிரட்சி. அதனால் ஏற்பட்டது மிகப்பெரிய வாய்ப்பு. ஆகவேதான், இனிமேலும் காந்தியாரை திண்ணையில் உட்கார வைத்தால், நம்மை தோலை உரித்துவிடுவார்கள், வருணாசிரமத்தினுடைய உருவம் தெரிந்துவிடும் என்று.

காந்திக்கே வழி தந்த இயக்கம் - காந்தியினுடைய சுயமரியாதையை மீட்ட இயக்கம் - பெரியாருடைய இயக்கம் - சுயமரியாதை இயக்கம்.

4.2.17 மதுரை - வேன் அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் பேருரை

- விடுதலை, 7.2.17


No comments:

Post a Comment