Friday, 5 December 2025

திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!

சென்னை வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்றதாகவும் எழுதி இருக்கின்றனர். இக்கூட்டமே நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இக்கூட்டம் நடைபெற்ற நாளே நீதிக்கட்சி தோன்றிய நாள் (20.11.1916) ஆகும்.) அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் கீழ்க்காணும் பெருமக்கள் ஒரு சிலராவர். அப்பெயர்கள் வருமாறு:

திவான் பகதூர் பிட்டி. தியாகராயச் செட்டியார், 2. டாக்டர் டி.எம். நாயர், 3. திவான் பகதூர் பி. இராஜரத்தின முதலியார், 4. டாக்டர் சி.நடேச முதலியார், 5. திவான் பகதூர் பி.என். சிவஞான முதலியார். 6.திவான் பகதூர் பி. இராமராய நிங்கார் (பானகல் அரசர்) 7. திவான் பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை, 8. இராவ் பகதூர் நாராயணசாமி செட்டி, 9. இராவ் பகதூர் தணிகாசலம் செட்டி, 10. இராவ் பகதூர் எம்.சி. ராஜா, 11. டாக்டர் முகமது உசுமான் சாயுபு, 12. ஜே.எம்.நல்லசாமி பிள்ளை, 13. இராவ் பகதூர் வெங்கட்ட ரெட்டி நாயுடு, 14. இராவ் பகதூர் ஏ.பி. பாத்ரோ, 15. டி. எத்திராஜூலு முதலியார், 16.ந.கந்தசாமி செட்டியார், 17. ஜே.என். இராமநாதன், 18. கான்பகதூர் ஏ.கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், 19. திருமதி அலுமேலு மங்கைத் தாயாரம்மாள், 20. த.இராமசாமி முதலியார், 21. திவான் பகதூர் கருணாகர மேனன், 22. டி. வரதராஜூலு நாயுடு, 23. மதுரை வக்கீல் எல்.கே.துளசிராமன், 24. கே.அப்பாராவ் நாயுடுகாரு, 25. எஸ். முத்தையா முதலியார், 26. மூப்பில் நாயர் போன்ற முக்கியமானத் தலைவர்கள் அனைவரும் கூடி ‘South Indian Liberal Federation’ எனும் பெயரைத் தெரிவு செய்தனர். இதனைத் தான் சுருக்கமாக ‘SILF’ என்று கூறினர். இதைத் தமிழில் ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ என்று எழுதினர். இவ்வமைப்புக்கு நீதிக்கட்சிக்கு இராஜரத்தின முதலியார் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாகப் பானகல் அரசர் இராமராய நிங்கார், பிட்டி. தியாகராயர், கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். செயலாளர்களாக பி.எம். சிவஞான முதலியார், பி. நாராயணசாமி முதலியார், முகமது உஸ்மான், எம். கோவிந்தராஜூலு நாயுடு ஆகியோர் பணியாற்றினர். பொருளாளராக ஜி. நாராயணசாமி செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.

இப்படி அமைப்புக் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றி சென்னை மயிலாப்பூர் இராஜூ கிராமணியார் தோட்டத்தில் (இப்போது டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ‘சிட்டி செண்டர்’ உள்ள பகுதி) பிட்டி. தியாகராயர் பேசினார். இது குறித்துத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பில்,

‘1916ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஓய்வில் சென்னை ஹாமில்டன் வாராவதி அருகே இராஜூ கிராமணியார் தோட்டத்தில் யாழ்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம் மாநாட்டுக் கொட்டகை யிலேயே அன்று மாலை ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றி பி. தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்விதமே தியாகராயச் செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணர் அல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப் பற்றியும் பேசி, காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பிட்டி. தியாகராயர் ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றிப் பேசிய ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் கையொப்பமிடப்பட்டு பிராமணர் அல்லாதார் அறிக்கையொன்று 20.12.1916இல் வெளியிடப்பட்டது. இதனை முழுமையாக 22.12.1916 தேதியிட்ட இந்து வார வெளியீடு வெளியிட்டது.

அவ்வறிக்கை நீதிக்கட்சித் தோன்றுவதற்கான பின்னணியை எடுத்து விளக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிக்கையைத் திராவிட இயக்கத்தின் முதல் ஆவணம் என்று குறிப்பிடலாம். இதைப் போலவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்களை – அவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதற்குப் பிறகு ஈ.வெ. இராமசாமிப் பெரியார் ‘சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்?’ என்று விளக்கிப் பேசியதும் எழுதியதும் திராவிட இயக்கத்தின் இரண்டாவது ஆவணமாகும்.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் 1938 முதல் 1944 வரை இணைந்து பணியாற்றின. 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாநாட்டில் ‘அண்ணாதுரை தீர்மானத்தின்’ மூலமாக நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பெயர்கள் ‘திராவிடர் கழகம்’ என மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் இதற்கென்று சிறப்பாக 20.8.1944 எனத் தேதியிடப்பட்டு ஈரோட்டில் அச்சிடப்பட்ட ‘திராவிடநாடு’ வார இதழும், ‘குடிஅரசு’ இதழும் திராவிட இயக்கத்தின் மூன்றாவது ஆவணமாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் அறிக்கையை 17.9.1949இல் வெளியிட்டார். அந்த அறிக்கை திராவிட இயக்கத்தின் நான்காவது ஆவணமாகும். நீதிக்கட்சி (1916), சுயமரியாதை இயக்கம் (1925), திராவிடர் கழகம் (1944) ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ (1949) ஆகிய இவ்வமைப்புகள் தோன்றுவதற்கான காரண, காரிய, விளக்கங்கள் குறித்த அறிக்கைகள் திராவிட இயக்கத்தின் மூல ஆவணங்களாக விளங்கி வருகின்றன .

இதோடு முக்கிய இரு சொற்பொழிவுகளை அய்ந்தாவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும். அவ்விரு சொற்பொழிவுகளில் ஒரு சொற்பொழிவு மட்டுமே கிடைத்துள்ளது. அது 1919ஆம் ஆண்டு முதல் உலகப் போருக்குப் பின் ஆற்றிய உரையாகும். அதனைப் பிற்சேர்க்கை ஒன்றில் இணைத்து இருக்கிறோம். சென்னைச் சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் டாக்டர் டி.எம். நாயர் நிகழ்த்திய முதல் சொற்பொழிவு 1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது. டாக்டர் டி.எம்.நாயரின் ஆங்கிலப் பேச்சை சோமசுந்தரம் பிள்ளை தமிழில் எடுத்துரைத்தார். இச்சொற்பொழிவு கிடைக்கவில்லை.

(திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘நீதிக்கட்சி வரலாறு’ நூலிலிருந்து…)

 - விடுதலை நாளேடு, 20.11.25

பொது இடங்களில் ஒடுக்கப்பட்டோர் உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு! - நீதிக்கட்சி அரசாணை

 


அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவைகள் –  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.

உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.

1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன்: (இரட்டை மலை)

  1. (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(a) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(b) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)

P.L. மூர்,

அரசாங்கச் செயலாளர்.

ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு,

நகராட்சிகள், கார்ப்பரேஷன், சென்னை

பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள்,

தொழில் கமிஷனர்,

சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள எல்லா இலாக்காக்கள்,

அரசாங்க செய்தி ஸ்தாபனம்,

இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டன.

சட்டக்குழு அலுவலகம்

25.6.24

தீர்மானம்

திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை சீனிவாசன்)  உள்துறை அரசாங்க அலுவலகம்.

  1. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித்தாள்களிலும், மாவட்ட செய்தித்தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது.

(a) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் நடந்து போய்வருவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும்,

(b) கிணறு, குளம், பொது அலுவ லகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லாப் பொது இடங்களிலும், ஜாதி இந்துக்களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.

- விடுதலை நாளேடு,20.11.25

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சரித்திரச் சாதனை! ‘ஏதுமற்ற’ இடத்திலிருந்து 69% இடஒதுக்கீடு வரை கொண்டுவந்தது நீதிக்கட்சி அரசும், அதன் நீட்சிகளான ஆட்சிகளுமே! அடித்தளமிட்ட ஆளுமைகளுக்கு வீரவணக்கம்!

 


ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

“ஜஸ்டிஸ் பார்ட்டி” என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட “நீதிக்கட்சி’’ 1916ஆம் ஆண்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கமாகத் (Non-Brahmin Movement) தொடங்கப்பட்ட ‘தென்னிந்திய நல  உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Association) என்ற அமைப்பு, திராவிடர்களின் வாழ்வுரிமையின் முக்கிய அம்சமான, கல்வி, உத்தியோகம் ஆகியவற்றை – ஆரியப் பார்ப்பனர்கள் தங்களது ஏகபோக உரிமையாக ஆக்கிக் கொண்டதிலிருந்து, அவர்களது மீட்சிக்காகவே உருவானது. இவ்வியக்கத்தை சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார் போன்ற வர்கள் சென்னையில்,  பல பார்ப்பனரல்லாதார் பிரமு கர்கள், கல்வி அறிஞர்களை அழைத்துக் கூட்டம் நடத்தி விவாதித்து உருவாக்கினர். அரசியல் ரீதியாக உரிமைப் போருக்கு வழிவகுத்தனர்.

முன்னோடிகள்

அதற்கு முன்பாகவே, இதனை 1912லேயே பல முக்கிய பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்கள் இதற்குரிய தொடக்கப் பணியை ஆரம்பித்தார்கள். திருவல்லிக்கேணியில், வசதி வாய்ப்பற்ற பார்ப்ப னரல்லாத திராவிட, ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ‘திராவிடன் இல்லம்’ என்ற விடுதியை அமைத்து, அவர்களுக்கு அடைக்கலம் தந்து, கல்விக் கண்ணைத் திறந்தவரான டாக்டர் சி.நடேசனார், பின்னர் நீதிக்கட்சி உதயத்திற்கு முக்கிய முன்னோடியாவார்! மிகப் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத மக்களுக்கு அறிவு கொளுத்தி, விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, “பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை” (The Non-Brahmin Manifesto) எழுதினர்.

அனைத்திலும் பார்ப்பனர் ஆதிக்கம்

அதில் மக்கள் தொகையில் 100க்கு மூன்று சதம் கூட முழுமையாக இல்லாத ஆரியப் பார்ப்பனர்கள் கல்வி, உத்தியோகங்களைக் கைப்பற்றி வெள்ளைக்கா ரர்களுக்கு “நல்ல வேலைக்காரர்களாகி”, அவர்களைத் தம் வயப்படுத்தி, முந்திக் கொண்டு ஆங்கிலத்தைக் கற்று விட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி பதவிகளைத் தாங்களே ஆக்ரமித்து ‘ராஜ்ய பாரத்தை’ உண்மையாக நடத்தினர்.

இதை விளக்கித்தான் ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ தக்க புள்ளி விவரங்களைத் தந்தது!

1919ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாண்டேகு செம்ஸ்போர்டு குழு அறிக்கைப்படி – இந்தியாவின் மாகாணங்களில் இரட்டை ஆட்சி (Dyarchy) நடத்திட ஒப்புக் கொண்டு மே 1920இல் மாகாண சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்தியது.

வென்றது நீதிக்கட்சி

அதில் நீதிக்கட்சி போட்டி போட்டு, வென்று, ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது.

அதன் தலைவர் வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி.தியாகராயரை பிரதம அமைச்சர் பதவியேற்கக் கவர்னர் அழைத்தார்!

அவரோ, தான் பதவியேற்காமல், கடலூர் சுப்பராயலு (ரெட்டியாரை) அப்பொறுப்பை ஏற்கும்படி செய்து, அந்நாளைய அரசியல் அதிசயமானார்! என்னே அவரது பெருந்தன்மையின் உச்சம் (majurity)!

மொத்தம் மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

  1. கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்)
  2. பானகல் அரசர் இராமராய நிங்கார்
  3. சர். கே.வி. ரெட்டி (நாயுடு)

சுப்பராயலு அவர்கள் இடத்திற்குப் பின்னர் ஏ.பி.பாத்ரோ நியமிக்கப்பட்டார். அவர்  கருநாடகப் பகுதியைச் சேர்ந்தவர்.

அவ்வியக்கம், திராவிடர்களின் பறிக்கப்பட்ட கல்வி உரிமை, உத்தியோக உரிமை முதலியவற்றிற்கு சீரிய ஏற்பாடுகளை விரைந்து செய்து மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான விடியலைத் தரத் தொடங்கின!

சமூகப் புரட்சியாளர் பானகல் அரசர்

திராவிடர் கழகம்

பதவியேற்ற சில மாதங்களில் முதல மைச்சர் கடலூர் சுப்பராயலு (ரெட்டி) அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுப் பதவி விலகிட, பானகல்அரசர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்தார்.

(இவர் 1912–லேயே மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்து Central Legislative Assembly-யிலேயே தீண்டாமை ஒழிப்புக்குத் தீவிரமாகக் குரல் கொடுத்தார். மானக்ஜி தாதாபாய் அவர்களின் மனிதநேய குரலுக்குத் (தாதாபாய் நவ்ரோஜி அல்ல) துணையாக நின்று, தீண்டாமை ஒழிப்பு மசோதாவிற்குத் இந்தியாவின் சட்டமன்றத்தில் கால் கோள் இட்ட மனித உரிமைப் போராளி (பானகல் அரசர்) என்பது பலரும் அறிந்திராத அரிய உண்மையாகும்).

அவர்தான் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்று மளமளவென்று, உரிமைகளைக் கிள்ளி அல்ல, அள்ளித் தந்து வரலாற்றின் புதிய பொன்னேட்டைத் திராவிடர் எழுச்சியில் முத்திரை பதித்த நம் அனைவரின் மகத்தான நன்றிக்குரியவர்.

இவருக்குக் கட்சித் தலைவர் சர். பிட்டி தியாகராயர் முழு ஆதரவு தந்து இவரை முடுக்கி விடச் செய்தார்.

அதுபோலவே டக்டர் சி.நடேசனார் போன்ற தலைவர்களும்!

வகுப்புவாரி ஆணை வரலாறு

அந்த ஆட்சி 17 ஆண்டுகள் நேரடியாகவும், ஆதரவு தந்த ஆட்சியாகவும் 1920 முதல் 1937 வரை நீடித்து புதிய திராவிடர் எழுச்சியினை வரலாற்றுக் கல்வெட்டாகப் பதித்தது.

பதவியேற்ற ஓராண்டிலேயே வகுப்பு வாரி உரிமை (கம்யூனல் ஜி.ஓ. – Communal G.O.) ஆணையை 16 செப்டம்பர் 1921இல் (Order No. 613) “அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதவர்களின் வகுப்புவாரி முறையில், பிரதிநிதித்துவம் போதிய அளவில் இருக்க வேண்டும்” (Adequate Proportional Representation) என்று அந்த அரசு ஆணை போடப்பட்டது.

ஆனால் அன்று அரசுச் செயலகத்தில் முக்கிய கேந்திரப் பதவி அதிகாரிகளாக உயர் ஜாதிப் பார்ப்ப னர்களே பெரிதும் நிரம்பி இருந்த காரணத்தால், இந்த ஆணையைச் செயல்படுத்த விடாமல் பலவாறு கேள்விகள், திருத்தங்கள் – முதலியவற்றை எழுப்பினர். தங்களது சூழ்ச்சியைப் பயன்படுத்தி அந்த ஆணையை செயலுக்கு வராமலே தடுப்பதில் பெரிய பார்ப்பனர்கள் தங்களது அதிகாரத்தை முழு வீச்சில் பயன்படுத்தினர்.

எத்தனைத் தடைகள்?

பல மேல் அதிகாரிகள், வெள்ளைக்கார மேல் அதிகாரிகளைக் குழப்பியும், தம் வயப்படுத்தியும் அந்தச் சமூக நீதி ஆணை – கைக்கெட்டியது வாய்க்கெட்டா நிலையை உருவாக்கி மகிழ்ச்சி அடைந்தனர்!

1921ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு மற்றொரு புது ஆணை Second Commual G.O. No. 658 dated 15.8.1922 வெளியிடப்பட்டது. 12 அம்ச ரோஸ்டர் சிஸ்டத்தை உள் அடிக்கற்றையாகப் போட்டு போதிய விளக்கத்தை தந்தும், மீண்டும் அந்நாளைய ‘‘அக்கிரகார நந்திகள்’’ – தங்களது ‘‘Red Tape Juggary’’ – தங்களது ‘‘சிவப்பு நாடா’’ வித்தக ஜால விளையாட்டு மூலம் செயல்பட விடவே இல்லை – சில வெள்ளைக்கார மேல் அதிகாரிகள் பார்ப்பனரது ஆசைக்கும், எண்ணத்துக்கும் துணை போய் பலியாகி, திராவிட இனத்தை வஞ்சித்தனர்.

ஆர்.ஏ.கிரஹாம் (R.A.Graham) என்பவர் இந்த துரோகத்திற்கு ஆரிய – பார்ப்பன மேலான் மக்களுக்குப் பெரிதும் வயப்பட்டவர் ஆனார். ஜி.ஜி.டாட்டன்ஹாம் என்பவர் பார்ப்பனர் நலத்திற்கு, குறிப்பாக ஓய்வு பெற்ற பார்ப்பனர் பென்ஷனைப் பாதிக்கும் என்று அவாளுக்குப் பரிந்து வாதாடி, இந்த ஆணை மறுபடியும் “ஊறுகாய் ஜாடி”க்கு அனுப்பப்படுவதற்கான காரணஸ்தரானார்!

முத்தையா (முதலியார்) சாதனை!

திராவிடர் கழகம்

ஊறுகாய் ஜாடியி லிருந்து வெளியே கொண்டு வந்து அதற்கு மீண்டும் உயிர் ஊட்டி ‘‘புதுப் பிறப்பாக’’ 1928இல் நீதிக்கட்சி ஆதரவுடன் செயல்பட்ட  டாக்டர் சுப்பராயன், சுயேச்சை அமைச்சரவையின் அமைச்சரான முத்தையா முதலியாரால்தான் G.O./071/4.11.1927, and 1129/15.12.1928 ஆகியவை செயலாக்கத்திற்கு வந்தன.

நீதிக்கட்சி, திராவிடர் ஆட்சியின் பெருத்த விளைச்சல் – சமூகநீதிச் சரித்திரமாகத் தொடங்கியது இதிலிருந்துதான்.

இந்த வகுப்புரிமைப் படிக்கட்டு மூலம்தான் ஒடுக்கப்பட்ட நம் மக்கள் கல்வி, உத்தியோகம் மற்றும் அதன் காரணமாக வாழ்வாதாரம் பெற்று புலம் பெயர்ந்து அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா, அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முன்பு கூலிகளாகச் சென்ற அதே சமூகம் அதே நாடுகளுக்கு நல்ல ஊதியத்துடன் இன்று மதிப்புறு பணி வாய்ப்புகளோடு செல்வது வியக்கத்தக்கது.

இந்த வகுப்புரிமையை ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் அன்று 1928இல் தொடங்கிய சதிச் செயலில் 1950இல் அவர்களுக்கு – “சுயராஜ்ய இந்தியாவின்” அரசமைப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி, பொய் உரிமையை முன்வைத்து நடத்தப்பட்ட செண்பகம் – துரைராஜன் வழக்கு மூலம் வெற்றி பெற்றனர்.

முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும் –

76 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும்!

தந்தை பெரியார் களம் கண்டு வகுப்புரிமைக் கிளர்ச்சியை 1950-1951இல் மக்களைத் திரட்டி நடத்தி பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் வந்து வகுப்புரிமை வேறு சமூகநீதி வடிவத்துடன செயலுக்கு வந்தது – திராவிடம் வென்றது! அந்த முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடங்கி அந்த நீதிக்கட்சி விதைத்து பெரும் விளைச்சலாகி 69 சதவிகித இடஒதுக்கீடு என்று பெரியார் மண்ணில், பூத்துக் குலுங்க 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு என்று இரும்பு வேலி அதனை எந்த மாடும் மேயாதபடி காத்தது.

பெரியார் தொண்டர்கள், திராவிடர் கழகத்தின் அயராத முயற்சியால் மூன்று பார்ப்பனர் தலைமையினாலும் தடுக்க இயலாது தலைவணங்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தால் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு வெற்றி பெற்றது.

76 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத் தின்படி சட்டமானது. ஒன்றிய – மத்திய அரசில் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு முன்பு கிடைக்காத இடஒதுக்கீடு, மண்டல் பரிந்துரை மூலம் இந்தியா முழுமையிலும் உள்ள ஓ.பி.சி.(OBC)யினருக்குக் கிடைத்தது.

திராவிட மாடலே எல்லாம்!

இதை இன்றும் கண்காணித்து நிலைக்க வைக்கும் அரசாக, தமிழ்நாடு மாநிலமாகிய, பெரியார் மண்ணில் திமுக அரசுகளும் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆட்சிகளும் முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ஆட்சியிலும் கூட – முன்பு ஓமந்தூரார் ஆட்சி, காமராசர் ஆட்சி என்ற நிலைமையிலும் அனைத்துமே சமூக நீதியைச் செயல்படுத்திய ஆட்சிகளாக அமைந்ததற்குக் காரணம் நீதிக்கட்சி ஏற்படுத்திய தாக்கம்தானே!

மகளிருக்கு வாக்குரிமை (1922), தேவதாசி ஒழிப்புச் சட்டம், குழந்தைத் திருமணச் தடைச் சட்டம், ஆதி திராவிட மக்களின் கல்வி உரிமை, சமத்துவ உரிமை, அதிகாரப் பங்களிப்பு, இழிவு ஒழிப்புச் சட்டம், கோயில் பார்ப்பனர் சர்வ கொள்கைகளைத் தடுத்த – பானகல் அரசின் இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம்.

இவை ஒவ்வொன்றையும் தங்களுக்குத் தரப்பட்ட குறுகிய அதிகார எல்லைக்குள்ளயே இவ்வியக்கம் சாதித்துக் காட்டியது.

நீதிக்கட்சியின் நீட்சியே தி.மு.க. ஆட்சி!

1956இல் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்து இரண்டு பொதுத் தேர்தல்களில் 1956, 1962 – பத்தே ஆண்டுகளில் 1967இல் ‘‘சென்னை ராஜ்யத்தில்’’ அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்து அரிய சாதனை செய்தபோது, அவரிடம் செய்தி யாளர் கேட்ட கேள்விக்கு, “இது பழைய நீதிக்கட்சி ஆட்சியின் நீட்சிதான். ஜஸ்டிஸ் கட்சியின் பேரன் ஆட்சி” என்று பொருத்தமாகப் பதிலைச் சொல்லி வியக்க வைத்தார்!

பிறகு கலைஞர் ஆட்சி, இன்று மு.க.ஸ்டாலின் ஆட்சி! (இடையிடையே அதிமுக ஆட்சி –
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி என்றாலும், எல்லாம் இந்த எல்லையைத் தாண்ட முடியாதவைகள்.) அதற்குப் பிறகு அது அடமானக் கட்சியாகியது அரசியல் கொடுமை!

அறிஞர் அண்ணாவின் ஆட்சி ஓராண்டு தான் என்றாலும் அதன் முப்பெரும் சாதனைகளாக பல நூறாண்டு நிலைத்து நிற்கும் சமூக கலாச்சார அரசியல் புரட்சியை அமைதி வழியில் சாதித்தார்.

இப்போது உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி நீதிக்கட்சி, தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் – தாய்க்கழகமான திராவிடர் கழகம் – ஆகியவற்றின் அடிச்சுவட்டில் அந்த பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதிச் சுடரை ஏந்தி, அடுத்த பல தலைமுறைகளை ஆயத்தப்படுத்திடும் கொள்கை வழி நிற்கும் சரித்திரச் சாதனை அரசாகத் தொடர்ந்து இன எதிரிகளையும், கொள்கை எதிரிகளையும் கலங்கடித்துக் களத்தில் சளைக்காத ஓர் உரிமைப் போர் நடத்தும் சாதனை அரசாக திராவிட நாயகன், சமூக நீதிகாத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய தலைமையில் சிறப்பாக பீடு நடை போடுகின்றது. 2026–லும் மீண்டும் வெற்றி மகுடம் சூடி வரலாறு படைப்பது உறுதி.

பல தலைமுறைகளைக் காக்கும் தலைமுறை ஆட்சிதான் என்பதைத் தலை நிமிர்ந்து பெருமை பொங்க, முரசொலித்து, சமூக விடுதலைக் கொடி பறக்கப் பார் புகழும் ஆட்சி! ‘‘திராவிட மாடல் ஆட்சி’’ தனது பாட்டனாரின் தோளில் ஏறி நின்று இன்றும் சாதித்துக் கொண்டே தொடருகிறது!

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சிறப்புகள்!

படைக்கட்டும் புதியதோர் இணையற்ற இமாலயச் சாதனைகள்!!

- விடுதலை நாளேடு, 20.11.25

Saturday, 22 November 2025

பாம்புக்கு கால் உண்டா? - செ.ர. பார்த்தசாரதி




ஞாயிறு மலர்
‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்புக்கு தான் தெரியும்’ என்று சொல்லப்பட்டதாகும்.

‘புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்–நலமிக்க பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே. பாம்பறியும் பாம்பின் கால்.’

–  பழமொழி நானூறு, பாடல்-301

ஆசிரியர் – மாணவர் உரையாடல்

பள்ளிக்கூடத்தில் மாணவனை பார்த்து ஆசிரியர், பாம்பிற்கு கால் உண்டா? என்று கேட்க; மாணவன்: ‘பாம்பிற்கு கால் உண்டு அய்யா’ என்று விடையளித்தான். எப்படி என ஆசிரியர் வினவ, மாணவன்: ‘கால் இருந்தால் தான் பாம்பு, இல்லையென்றால் பம்பு என்று ஆகிவிடும் அய்யா!’ என்றான். ஆசிரியர் சிரித்து விட்டார்.

உண்மையில் பாம்பிற்கு கால் உண்டா என பார்ப்போம்!

ஞாயிறு மலர்

யூத – கிறிஸ்தவ வேதத்தில் பாம்பு

யூதர்களின் வேத நூலான ‘தனக்’ (எபிரேய பைபிள்) மற்றும் கிறிஸ்தவர்களின் வேத நூலான பழைய ஏற்பாட்டிலும் ( கிறிஸ்தவர்களின் பைபிள், பழைய ஏற்பாடு – புதிய ஏற்பாடு என இரு பகுதிகளை கொண்டது)

‘யெகோவா’ கடவுளால் பாம்பு படைக்கப் பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாம்பு படைக்கப்பட்ட போது, கால்களுடன் இருந்ததாம்.

பழைய ஏற்பாடு, ஆதியாகமம்: மூன்றாம் அத்தியாயத்தில் “யெகோவா கடவுளால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை வஞ்சனையாக, அந்தப் பாம்பு, ஏவாளையும் ஆதாமையும் (ஆதம்-ஈவள்) உண்ண வைத்ததால், யெகோவா கடவுள், பாம்பை ‘மண்ணைத் தின்று மண்ணிலேயே ஊர்ந்து வாழ்வாயாக” என்று சபித்து விட்டதாக கூறுகிறது.

ஞாயிறு மலர்

பழைய ஏற்பாட்டில் (பைபிள்) பாம்பை கால்களுடன் படைத்ததாக எங்கும் கூறப் படவில்லை.

‘இனி மண்ணிலே ஊர்ந்து வாழ்வாயாக’ என்று சபித்து விட்டதாக கூறப்பட்டு இருப்பதால், ‘முதலில் கால் இருந்திருக்கும்; பிறகு சபிக்கப்பட்டவுடன் மண்ணில் ஊர்ந்து செல்ல தொடங்கி இருக்கும்’ என்று சொல்கின்றனர்.

ஆனால் உண்மையில் 11.3 கோடி (113 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன், பாம்பு நான்கு கால்களுடன் இருந்ததாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஆதாரமாக நான்கு கால்களுடன் கூடிய பாம்பின் ‘புதை படிவம்’ பிரேசில் நாட்டில் கிடைத்துள்ளது. அந்த புதை படிவ பாம்பிற்கு ‘டெட்ராபோடோபிஸ் ஆம்ப்ளெக்டஸ் ‘ என்று பெயரிட்டுள்ளனர்.

ஞாயிறு மலர்

பாம்பின் பரிணாமம்

ஊர்வனவற்றின் ஒரு பிரிவுதான் பாம்பு வகைகளாகும்.

பல்லி இனத்தின் மூதாதையான, பல்லி போன்ற (squamate order) ஓர் உயிரினத்தில் இருந்து ‘உரு மலர்ச்சி'(பரிணாம வளர்ச்சி) பெற்று தோன்றியதே, பாம்பு இனமாகும்.

தற்காலத்தில்  நடமாடிக் கொண்டிருக்கும், மலைப்பாம்பின் வாலின் அடிப்பகுதிக்கு அருகில், தசைகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் இடுப்பு எலும்பு மற்றும் தொடை எலும்பின் (femur) சிறிய எச்சங்கள் உள்ளன. இந்த எலும்புகளுடன் இணைந்த, வெளிப்புறமாகத் தெரியும் சிறிய, நகம் போன்ற முட்கள் (spurs) இருக்கின்றன.. இவை நடப்பதற்கு பயன்படாது, ஆனால் இனப்பெருக்கத்தின் போது துணையைப் பிடித்துக் கொள்ள உதவுகிறது. இந்த எச்ச பகுதி, மலைப்பாம்பு இனத்திற்கு தொடக்கத்தில் கால்கள் இருந்ததற்கான சான்றுகளாகும்.

ஆகையால், “நான்கு கால்களுடன் நடமாடிக்கொண்டு வந்த பாம்பினம், கால்கள் சிறியதாகவும் உடல் நீளமாகவும் இருந்ததால்; கால்கள் பயன்படாமல் போய், கால்கள் இல்லாத தகவமைப்பை பாம்புகள் பெற்று செதில்களால் ஊர்ந்து இருக்க வேண்டும்’’ என்று உறுதியாகிறது.

- செ.ர.பார்த்தசாரதி

- விடுதலை ஞாயிறு மலர், 22.11.2025


Tuesday, 28 October 2025

ஜாதிப்பெயர் ஒழிப்பு’ பெரியார் பாதையில் ‘திராவிடமாடல்’ அரசின் பயணம்

 


கட்டுரை, ஞாயிறு மலர்

ாதிப்பெயரை ஒழிப் பதில் தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்த அரசாணை,  நீதிக்கட்சி, தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் நீண்டகாலப் போராட்டத்தின் தொடர்ச்சியாகும். சமூக சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இவை ஆற்றிய பணிகள் மகத்தானவை.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை நீக்கி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிக்கும் பெயர்களை அகற்றவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையானது,  தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த ஜாதி ஒழிப்பு சமத்துவச் சிந்தனையின் விளைவு
ஆகும்.

தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பையே தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டார். அவர் தொடங்கிய நூற்றாண்டை கடந்த சுயமரியாதை இயக்கம், பின்னாளில் உருவான திராவிடர் கழகம் ஆகியவை ஜாதி ஒழிப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தன.

பெரியாரின் ஜாதி ஒழிப்பு உத்தி:

பெரியார், மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களைச் சேர்ப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில் மக்கள் தங்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவர், தான் காங்கிரசில் சேருவதற்கு முன்பே 1917 இல் ஈரோடு நகரமன்றத் தலைவராக இருந்தபோது, ‘கொங்குப் பறத்தெரு’ என்பதை ‘திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றியதன் மூலம், தெருப் பெயர்களில் இருந்த ஜாதிப் பெயர்களை ஒழிக்கும் பணியைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பல இடங்கள் பெயர் மாற்றம் பெற்றன. எடுத்துகாட்டாக மதுரைப் புதூரில் உள்ள ‘காலனி தெரு’ என்பதை ‘திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றியதைக் கூறலாம்

கடவுள், மதம், சாஸ்திர மறுப்பு: ஜாதி முறைக்கு அடிப்படையாய் இருக்கும் மதம், சாஸ்திரங்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.

சடங்குகள், மதகுருமார்கள் இன்றி நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்களை அறிமுகப்படுத்தி, ஜாதி மறுப்பு மற்றும் கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்கக் கோரி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்.

நீதிக்கட்சி (Justice Party)

1916-இல் பார்ப்பனர் அல்லாதோருக்காகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை (இட ஒதுக்கீடு) வலியுறுத்திப் போராடியது. இது பார்ப்பனர் அல்லாத சமூகத்தினருக்கு அரசியல் மற்றும் சமூக அதிகாரத்தைப் பெற முதல் அடித்தளமிட்டது.

தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் ஜாதி ஒழிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டமாகவும், புரட்சிகர இயக்கங்களின் விளைவாகவும் அமைந்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றியிருந்தபோது, தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் ஜாதி முறையை வேரறுத்து, சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சிகளை முன்னெடுத்தன. இதில் தந்தை பெரியார்  அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் ஜாதிப்பெயர்களை ஒழிப்பதற்கான புரட்சிகர போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மேலும், தமிழ்நாடு அரசின் சமீபத்திய அரசாணைகள் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றன.

‘ஆதி திராவிடர் காலனி’, ‘ஹரிஜன் குடியிருப்பு’, ‘வண்ணான்குளம்’ போன்ற ஜாதிப் பெயர்களைக் கொண்டுள்ள ஊர் மற்றும் குடியிருப்புப் பெயர்களை நீக்க வேண்டும். நீக்கப்பட்ட பெயர்களுக்குப் பதிலாக திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன்,
தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தமிழ் தலைவர்களின் பெயர்களையும், நீர்நிலை
களுக்குப் பூக்கள், மரங்கள் அல்லது இயற்கை அமைப்புகளின் பெயர்களையும் சூட்ட அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்த மாற்றங்களைச் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் ஜாதி அடிப்படை யிலான பிரிவினைகளை நீக்கியது. ரயில் நிலையங்கள், உணவகங்கள், பொது போக்கு வரத்து போன்ற இடங்களில் ‘பார்ப்பனர்களுக்கு மட்டும்’ என்ற பிரிவினைகள் அகற்றப்பட்டன.  மேலும், தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை 1929இல் நிறைவேற்றியது, இது ஜாதி அடிப்படையிலான பாலியல் சுரண்டலை எதிர்த்தது. கோயில்களில் பிராமணரல்லாதோரை பூசாரிகளாக நியமிக்கும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் ஜாதி மேலாதிக்கத்தை சவால் செய்து, சமூக சமத்துவத்தை நோக்கிய முதல் அடிகளாக அமைந்தன.  இருப்பினும், நீதிக்கட்சி பிரிட்டிஷ் ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டதால், சில விமர்சகர்கள் இதை ‘ஆங்கிலேயர்களின் கைப்பாவை’ என்று விமர்சித்தனர்.

ஜாதிப் பட்டப் பெயர்களைக் கைவிடுதல்

சுயமரியாதை இயக்கம் மக்களின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குமாறு வலியுறுத்தியது, பலரும் இயக்க மாநாட்டுப் பந்தலிலேயே தங்களது ஜாதிப் பெயர்களைத் துறந்தனர்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு

தந்தை பெரியார் தலைமையிலான ‘சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு’ 1929 ஆம் ஆண்டு ‘பிப்ரவரி 17 மற்றும் 18’ ஆகிய தேதிகளில் ‘செங்கல்பட்டில்’ நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த மாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களில் ஒன்று, மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டம்’ அல்லது ஜாதிக் குறியீடுகளை நீக்க வேண்டும் என்பதாகும். ஜாதிய ஒடுக்குமுறையையும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்தத் தீர்மானத்தை  இராமச்சந்திர (சேர்வை) என்பவர் முன்மொழிந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனே, மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய ஊ.பு.அ.சவுந்தரபாண்டிய (நாடார்) மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பலர் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டங்களை மேடையிலேயே நீக்கி அறிவித்தனர். இதற்கு முன்னதாகவே, பெரியார் தனது பத்திரிகையான ‘குடிஅரசு’ ஆசிரியராக இருந்தபோது, தனது பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் என்ற ஜாதிப் பெயரை நீக்கி, ஈ.வெ.ராமசாமி என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தார். இந்தச் செயல்பாடு, ஜாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு வலுவான தொடக்கத்தை அளித்ததுடன், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதைக் கைவிடும் ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டது.  இன்றும் சமூகவலைதளங்களில் ஜாதிப்பெயரை போட்டுக்கொள்ளும் துடுக்குக்கார இளசுகள் தங்கள் பள்ளியிலோ அல்லது இதர ஆவணங்களிலோ ஜாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதில்லை. இதற்கு காரணம் சுயமரியாதை இயக்கம் விதைத்த ஆழமான கொள்கை ஆகும்

திராவிடர் கழகம் (Dravidar Kazhagam – DK):

1944 இல் நீதிக்கட்சியின் பெயரை மாற்றியமைத்து திராவிடர் கழகம் உருவானது.  இது பெரியாரின் தலைமையின் கீழ் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இயக்கமாகத் தொடர்ந்தது. 1952-1954 இல் இராஜாஜி கொண்டு வந்த ‘குலக்கல்வித் திட்டத்தை’ (ஜாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) கடுமையாக எதிர்த்து, இத்திட்டம் கைவிடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 1967 க்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் பெரியாரின் கருத்தை மய்யமாக கொண்டே இயங்கியது.   ‘குடிஅரசு’ போன்ற இதழ்கள் மூலம் இயக்கம் தனது கருத்துக்களை பரப்பியது, ஜாதி ஒழிப்பை சமூக மாற்றத்தின் அடிப்படையாக்கியது.

பெரியார், உணவகங்களில் ‘பார்ப்பனர் களுக்கு மட்டும்’ என்ற பெயர்ப்பலகைகளை அகற்ற போராட்டங்கள் நடத்தினார், இது ஜாதி பாகுபாட்டை நேரடியாக சவால் செய்தது. இயக்கம் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்தது, ஜாதி அடுக்குகளை உடைத்தது. இன்றும் இயக்கத்தின் கொள்கைகள் சமூக நீதியின் அடித்தளமாக உள்ளன.

தமிழ்நாடு அரசின் ஜாதிப்பெயர் ஒழிப்பு அரசாணைகள்

தமிழ்நாடு அரசு, ஜாதிப்பெயர்களை ஒழிப்பதற்கான 2025 அக்டோபர் 8ஆம் தேதி வெளியான அரசாணை, கிராமங்கள், தெருக்கள், பொது சொத்துக்களில் ஜாதி சார்ந்த பெயர்களை (‘ஆதி திராவிடர் காலனி’ போன்றவை) நீக்க உத்தரவிட்டது. நவம்பர் 19, 2025க்குள் இதை செயல்படுத்த வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை, பெரியாரின் ஜாதிப்பெயர் ஒழிப்பு இயக்கத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. இருப்பினும், சிலர் இதை திமுக அரசின் அரசியல் சூழ்ச்சி என்று விமர்சிக்கின்றனர். ஆனால், இது சமூக சமத்துவத்தை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாகும். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் ஆகியவை தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்பை ஒரு சமூக இயக்கமாக மாற்றின. இவை இட ஒதுக்கீடு, சமத்துவம், பெண் உரிமைகள்,  சுயமரியாதைத் திருமணங்கள் போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்தன. பெரியாரின் புரட்சிகர இயக்கம் ஜாதிப்பெயர்களை ஒழிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தது. எனவே இது இன்று அரசு அரசாணைகளில் எதிரொலிக்கிறது. இருப்பினும், இன்னும் ஆங்காங்கே ஜாதிப் பாகுபாடுகள் இன்னும் இருப்பதால், இந்த போராட்டம் தொடர வேண்டியது அவசியம். இவை தமிழ்நாட்டை சமூக நீதியின் முன்மாதிரியாக்கியுள்ளன.

தேவதாசி முறை
ஒழிப்பதும், ஜாதி ஒழிப்பும்

தேவதாசி முறை என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகங்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டதாக இருந்தது. இந்த அமைப்பு, பெண்களை கோவிலுக்கு “அர்ப்பணிப்பது” என்ற பெயரில் மதத்தின் பெயராலும், ஜாதி அமைப்பின், மேலாதிக்கத்தின் கீழும் அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் உட்படுத்தியது.

தேவதாசி முறை ஒழிப்பு என்பது சுரண்டல், அடிமைத்தனம், பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை விடுவிப்பதுடன் தொடர்புடையது. ஜாதி ஒழிப்பின் முக்கிய நோக்கமும் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும், பிறப்பின் அடிப்படையில் எவரும் உயர்ந்தவரோ  – தாழ்ந்தவரோ இல்லை என்பதையும் நிலைநாட்டுவதாகும். இரண்டு போராட்டங்களும் மனித மாண்பு மற்றும் சமத்துவத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டவை.

தேவதாசி முறை ஒழிப்புக்கான போராட்டத்தில், தந்தை பெரியார், டாக்டர். முத்துலட்சுமி (ரெட்டி), மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் போன்றவர்கள் முக்கியப் பங்காற்றினர். இவர்களில் பலர் ஜாதி ஒழிப்பு மற்றும் சுயமரியாதை இயக்கங்களின் முன்னோடிகளாகவும் இருந்தனர். சுயமரியாதை இயக்கம், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் நிலவும் மூடநம்பிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தன. தேவதாசி முறை, மதத்தின் சடங்கு நடைமுறையுடன் இணைந்திருந்ததால், அது ஜாதி ஒழிப்புக்கான ஒரு பகுதியாகவே கருதப்பட்டது.

1930இல் முத்துலட்சுமி (ரெட்டி) “தேவதாசி ஒழிப்பு மசோதா”வை மதராஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெரியார் அதற்கு தீவிர ஆதரவு அளித்தார். அவர் குடியரசு பத்திரிகையில் (30.03.1930) “தேவதாசி முறை தடுக்கவல்லது மட்டுமல்ல, அறவே ஒழிக்கும்” என்று எழுதினார். மதராஸ் தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு கடிதங்கள் எழுதி, முறையை ஒழிக்க அழுத்தம் கொடுத்தார்

1947 அக்டோபர் 9இல் “மதராஸ் தேவதாசி (அர்ப்பணம் தடுப்பு) சட்டம்” நிறைவேறியது. இது பெண்களுக்கு திருமண உரிமை அளித்து, கோயில் அர்ப்பணத்தை தடை செய்தது. பெரியார் இதை “பெண்கள் உரிமைகளுக்கான வெற்றி” என்று கொண்டாடினார்.   வந்தனா தேவி போன்றவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, 1927இல் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேறியது.  பெரியாரின் போராட்டம் வெறும் சட்டம் மட்டுமல்ல, சமூகத்தில் பாலின சமத்துவத்தையும்,ஜாதி ஒழிப்பையும் வலியுறுத்தியது. தந்தை பெரியாரின் பார்வை “பெண்களின் சுதந்திரம் இல்லாமல் சமூகம் முன்னேறாது” என்றது. இது தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த வரலாற்றில் இன்றவும் நிலைத்து நிற்கிறது. இதுமேலும் இது நிலைக்கும்.

-விடுதலை ஞாயிறு மலர், 18.10.25

Saturday, 25 October 2025

ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி

 ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி
கட்டுரை, ஞாயிறு மலர்
தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தேவை.

அவை

  1. எரிபொருள்
  2. வெப்பம்
  3. உயிர்வளி (ஆக்சிஜன்) என்பன.

இந்த மூன்று பொருள்கள் ஒன்று சேர்ந்தால் தான் தீ உண்டாகும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

எரிந்து கொண்டிருக்கும் பொருளை அணைக்க வேண்டுமானால். எரியும் பொருளின் வெப்பத்தை குறைக்க வேண்டும். அதற்காக தண்ணீர் அல்லது தண்ணீரால் நனைக்கப்பட்ட பொருள் கொண்டு அணைக்கலாம். (குளிர்விக்கும் முறை)

அடுத்தது உயிர்வளி எனப்படும் ஆக்சிஜன் கிடைப்பதை தடை செய்ய வேண்டும். தீயை மூட வேண்டும் அல்லது கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) எனப்படும் கரியமில வளியினை படரவிட்டு அணைக்க வேண்டும். (போர்வை முறை)

பெரிய அளவில் எரிந்து கொண்டிருக்கும் போது; தீ மேலும் பரவாமல் இருக்க, பக்கத்தில் உள்ள எரிபொருளை அப்புறப்படுத்த வேண்டும். (‘தீ’க்கு பட்டினி போடும் முறை)

  பூமியில் மட்டுமே தீ

நமது புவியில் மட்டுமே எளிதில் தீ உண்டாகும். மற்ற கோள்களிலோ விண்மீன்களிலோ, பால்வெளி மண்டலங் களிலோ (கேலக்சி) கூட தீ உண்டாகாது. நம் புவியில் மட்டுமே உயிர்வளி (ஆக்சிஜன் )உள்ளது. அதனால் இங்கு எளிதில் தீ உண்டாகின்றது

அதோடு மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் (காற்றில்) ஒரு குறிப்பிட்ட அளவில் உயிர்வளி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தீ உண்டாகும். நமது வளிமண்டலத்தில் 20.95% உயிர்வளி உள்ளது. இது தீ உண்டாக போதுமான அளவு ஆகும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தற்போது உள்ள இந்த விழுக்காட்டிற்கு, அதாவது 25%க்கு மேல் உயிர் வளி இருந்தால்  தற்போதுள்ள சாதாரண வெப்பநிலையிலேயே தானாகவே தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டுவிடும். 15%க்கு கீழ் உயிர்வளி குறைந்தால் தீ அணைந்து விடும். தீயை உண்டாக்க முடியாது.

வெப்பம் எப்படி உண்டாகிறது?

வெப்பம் உண்டாக உராய்வு மட்டுமே போதும். இரண்டு பொருள்கள் உராயும்போது வெப்பம் உண்டாகிறது. அதேபோல் பொருள்கள் வினை புரியும்போதும் உராய்வு ஏற்பட்டு வெப்பம் உண்டா கிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

மின் விளக்கு எரிகிறது என்று சொல்கிறோம் ஆனால் உண்மையில் மின்விளக்கு எரிவதில்லை. வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கிறது.

மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்கு போன்றவற்றை எரிய விட்டுக் கொண்டு இருந்த நாம், பழக்கத்தின் பேரில் மின் விளக்கையும் எரிகிறது என்கிறோம். ஒளிர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 ‘அக்னி பகவான்’
பெற்ற சாபமாம்

சிவபெருமான் இமய மலையின் உச்சியில், தன் மனைவி பார்வதியுடன் 100 தேவ ஆண்டுகள் உல்லாசமாக இருந்து, உடலுறவு இன்பத்தில் ஈடுபட்டு வந்தானாம்; இதனிடையே அக்னி பகவான் ‘புறா’ உருவம் கொண்டு அந்த இடத்திற்கு சென்று சிவபெருமானின் லீலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் சிவனின் விந்து நழுவி வீணானதாம். அதனால் பார்வதிதேவி தனக்கு குழந்தை பிறக்க விடாமல் செய்த அக்னி பகவானை “அக்னி(தீ)க்கு சயரோகம் (எலும்புருக்கி நோய்) பிடித்தது போல் உடன் புகையும் ஒரு பகுதியாக சேர்ந்து வரும்.”என்று சபித்து விட்டாளாம். அதனால் தான் தீ எரியும் போது புகையும் சேர்ந்து வருகிறதாம்.  காளிதாசர் இயற்றிய ‘’குமாரசம்பவம்’’ சருக்கம் – 10இல் இந்த கதை கூறப்பட்டுள்ளது.

உண்மையில் புகை எதனால் ஏற்படுகிறது

நீரை சூடு படுத்தும் போது நீரிலிருந்து நீராவி வெளி வருகிறது. இதுவும் ஒரு வகை புகை தான். நீரில் இருந்து வெளி வருவதால் அதை நாம் வேறுபடுத்தி நீராவி என்று சொல்கிறோம்.

 ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்று ஒரு சுற்றுலா இடம் உள்ளது. ஒகேனக்கல் என்பது கன்னட மொழி பெயர். ‘ஒகனே’ என்றால் புகை. அதாவது ‘புகையும் கல்’ என்று பொருள். கல்லின் மீது நீர் மோதி சூடாகி, புகை போன்ற ஒரு நீர்த்துளிகளை உண்டாக்குகிறது. இதைத்தான் புகை என்கின்றனர்.

நாம் நடைமுறையில் புகை என்று சொல்வதைப் பற்றி பார்ப்போம்.

பொருட்கள் எரியும் போது தொடர்வினை ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து எரிகிறது. இதனால் இந்த பொருளில் உள்ள கரி, நீர் ஆகியவை ஆவி வடிவில் வெளியேறுகின்றன. அதாவது கரித்துகள், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நீராவி கலந்த ஒரு பொருள் வெளியேறுகிறது இவைதான் கருநிற புகையாக தெரிகிறது.

பொருள் முழுமையாக எரிக்கப்பட்டால் புகை வருவதே தெரியாது. அரைகுறையாக எரிக்கப்படும் போது தான் புகை வருகிறது.

இந்த அறிவியல் உண்மை தெரியாத காலத்தில் மதத்தின் பெயரால் முட்டாள்தனமாக கருத்துகளை பரப்பியுள்ளனர். இதுபோன்ற கருத்துகளை மதவெறியர்கள் எப்படியாவது பாட புத்தகங்களில் சேர்த்துவிடலாம் என்று முயன்று வருகின்றனர்.

- விடுதலை ஞாயிறு மலர், 25.10.2025

Saturday, 27 September 2025

பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி

பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி

கட்டுரை, ஞாயிறு மலர்

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக சொல்லி; ‘மாயாஜால வித்தை’ (தந்திரக் காட்சி) காட்டுபவர்கள், கடைசியில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடாமலேயே மூட்டை கட்டி விடுவர்.

இது எதனால் என்றால் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்டால், கீரி பாம்பை கொன்று விடும் அதனால்.!

பாம்புகளின் வகைகள்

பாம்புகளில் நஞ்சு உள்ளவை நஞ்சு இல்லாதவை என இரண்டு வகை உள்ளது.  அதேபோல் நஞ்சு உள்ளவைகளிலும் இரண்டு வகைகள் உள்ளன. அவை:

1.. நீயூரோ டாக்சிக்’ (Neurotoxic) உள்ளவை.  2.‘ஈமோ டாக்சிக்’(Hemotoxic) உள்ளவை. என்பனவாகும்.

நியூரோ டாக்சிக் நஞ்சு உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சு இரத்தத்தைப் பாதித்து, திசு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நாகப்பாம்புகள், மாம்பாக்கள் மற்றும் கிரெய்ட்கள் ‘நியூரோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன, அதே நேரத்தில் ‘ராட்டில் ஸ்னேக்ஸ்’ மற்றும் ‘அட்டர்ஸ்’ போன்ற விரியன் பாம்புகள் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன.

கீரிப்பிள்ளையும் பாம்பும்

கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கும் சண்டை மூண்டால் கீரிப்பிள்ளையே வெல்லும்.   கீரிப்பிள்ளை விரைந்து செயல்படும் ஆற்றல் கொண்டது. இதனால் பாம்பிடம் சண்டை போட்டு, போக்கு காட்டி, பாம்பை சோர்வடைய வைக்கும். கீரிப்பிள்ளை தனது உடலில் இருக்கும் மயிர்களை சிலிர்க்க வைத்து பாம்புக்கு பெரிய உடலாக காண்பிக்கும்; இதனால் பாம்பின் கடி கீரிப்பிள்ளையின் உடல் மீது பதியாமல், மயிர் பகுதியிலேயே பதியும்.  அதோடு அதன் தோல் பகுதி மிகவும் கடினமானதால், கடியும் சரியாக பதியாது. கீரிப்பிள்ளை பாம்பின் தலையை சிதைத்தும்; கழுத்தை குதறியும் கொன்றுவிடும். கீரிப்பிள்ளையின் கடி மிக வலிமை வாய்ந்தது.  அப்படியே பாம்பின் கொத்து, கீரியின் உடம்பில் பட்டு நஞ்சு பாய்ந்தாலும் பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாது. காரணம் கீரிப்பிள்ளையின் உடம்பில் பாம்பின் நஞ்சுக்கான எதிர் புரதம் (Antibody), அதாவது மாறுபட்ட ‘அசிட்டோகோலின் ஏற்பி’ (Acetylcholine receptor) என்ற நச்சு முறிவு பொருள் (anti venom) உள்ளது. அதேபோல் கிளைக்கோ புரதம் ((Glycoprotein) என்கிற நஞ்சு எதிர்ப்பு பொருளும் உள்ளது. இந்தப் பொருள்கள் பாம்பின் நஞ்சை முறித்து விடும். இதனால் கீரிப்பிள்ளை பாம்பு கடியால் இறக்காது தப்பித்துவிடும்.   இதே போல் பாம்பு நஞ்சிற்கு எதிரான ‘புரதப் பொருள்’ உள்ள பல உயிரினங்கள் உள்ளன.

அதில் ஒன்று குதிரை. குதிரையின் காலில் பாம்பு கொத்திய பிறகு, குதிரையின் உடம்பில் பாம்பு நஞ்சுக்கு எதிரான புரதம் சுரந்து இரத்தத்தில் கலந்து விடும். இதனால் குதிரை பிழைத்து விடும்.

இதை பயன்படுத்தி குதிரையின் இரத்தத்திலிருந்து பாம்பு கடிக்கு ‘முறிவு மருந்து’ தயாரிக்கிறார்கள்.

 பாம்பு கடிக்கு மருந்து

பாம்பின் நஞ்சை சிறிய அளவில் மாற்றம் செய்து, ஊசி மூலம் குதிரைக்கு செலுத்துகிறார்கள். சில நாட்களில் குதிரையின் உடம்பில் ‘நஞ்சு முறிவு புரதம்’ சுரக்கிறது. குதிரையின் இரத்தத்தில் இருக்கக்கூடிய இந்த புரதத்தை பிரித்தெடுத்து, மனிதர்களுக்கு ஏற்படும் பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

அதேபோல், கோழியின் உடலில் சிறிய அளவில் பாம்பின் நஞ்சை செலுத்தி;, அது இடும் முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்கின்றனர். பாம்பு கடிக்கு மருந்து உயிரினத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ‘இறைச்சி உணவு’ கூடாது என்பவர்கள் (Non-Vegetarian); பாம்பு கடிக்கு பலியாக வேண்டியது தான்!

- விடுதலை ஞாயிறு மலர், 27.09.2025 

1. குதிரை மூலம் பாம்பு கடிக்கு நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் முறை

2. கோழி மூலம் பாம்பு கடிக்கு நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் முறை