Thursday 17 October 2024

சென்னை எருக்கஞ்சேரி பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோ.சொக்கலிங்கம்(வயது 75) அவர்கள் 27.12.2005 அன்று மறைவு

கோ.சொக்கலிங்கம்

 சென்னை எருக்கஞ்சேரி பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோ.சொக்கலிங்கம் (வயது 75) அவர்கள் 27.12.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். சென்னை மாவட்டத்தில் ஒரு அரும்பெரும் கழகக் கருவூலம் ஆவார். இளம் வயது முதல் இயக்கப் பணியில் இருந்தவர். அனைத்துப் போராட்டங்களிலும் குடும்பத்தோடு பங்கேற்றவர். அவரின் மறைவிற்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ‘விடுதலை’ இதழில் (27.12.2005) இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

இயக்க வரலாறான தன் வரலாறு (349) – திண்டுக்கல் திராவிடர் எழுச்சி மாநாடு!- கி.வீரமணி

2024 அக்டோபர் 16-30 2024 அய்யாவின் அடிச்சுவட்டில்

Wednesday 16 October 2024

சங்ககாலம் பொற்காலமா?

 

பிப்ரவரி 01-15

பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம்

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

 

சிறப்பிழந்த சேரமன்னர்கள்

சேரமன்னர்கள் பார்ப்பனியத்தில் ஊறித் திளைத்தனர். பார்ப்பனர்களுக்குத் தானங்களை வாரி இறைத்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக மகப்பேறு வேள்வி (புத்ரகாமேஷ்டி யாகம்) நடத்தி பிள்ளை பெற்றானாம். (பதிற்றுப்பத்து_74)

சொக்கிப்போன சோழ மன்னர்கள்!

சோழர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? கரிகால் சோழன் வேள்வித்தூண் (யூபம்) எழுப்பி வேள்வி முடித்தான். இராசசூயம் யாகம் நடத்தி இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி என இவன் அழைக்கப்பட்டான்.

பறைசாற்றப் பெற்ற பார்ப்பனத் திமிர்

ஒரு பார்ப்பனப் புலவன், சோழ இளவரசன் ஒருவனோடு சூதாடும் அளவுக்கு மிக நெருக்கமாக இருந்தான். சூதாடும்போது சினம் கொண்டு சூதாடு கருவியினை இளவரசன் வீசியதால் வெகுண்ட பார்ப்பனப் புலவன் இளவரசனைப் பார்த்து, நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் (புறம்: 43: 14) என எச்சரித்துள்ளான். புலவன் என்பதைவிட, பார்ப்பனன் என்னும் வர்ணதர்மச் சிறப்பையே அவன் பெரிதாகக் கருதியுள்ளான். இது, ஆரிய_பார்ப்பன மேலாண்மையை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பார்ப்பன மேலாண்மை பறைசாற்றப்பட்ட சங்ககாலம் தமிழர்களின் பொற்காலம் ஆகுமா?

பணிந்துபோன பாண்டியர்கள்

பாண்டியர்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன? பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், வேள்வி செய்வதில் மிகப் புகழ்பெற்ற புரோகிதப் பார்ப்பனர்களைக் கொண்டு வேள்விகள் பல செய்து பார்ப்பனப் பணியாளராக, இருந்துள்ளார். இதனால்தான் இவனுக்கு இந்த அடைமொழியைச் சங்கப் புலவர்கள் வழங்கியுள்ளனர்.

பல்யாக சாலை அமைத்து வேள்வி நடத்தப்பெற்ற காலம் தமிழர்களின் பொற்காலமா? யாருக்குப் பொற்காலம்? தமிழர்களுக்கா? இல்லை! பார்ப்பனர்களுக்கா? எண்ணிப்பார்த்தல் வேண்டும்!

தொழப்பட்டு வந்த தொன்ம (புராண)க் கடவுள்கள்

இந்து புராண இதிகாசங்களில் வரும் கடவுள்களைச் சங்ககாலத் தமிழர் தொழுது வந்தனர். அவர்களுள், சிவன் ஒருவன். ஆரியப் புராணங்களில் சொல்லப்பட்ட முக்கண்ணன். (அகம்: 181, கலி.2; 104; புறம்-_6.) முப்புரம் எரித்தவன்_(கலி_23, 26, 156; பரிபாடல்_522) உமையொருபாகன் _ (கலி_38; புறம்_17; பதிற்றுப்பத்து_1) நீலகண்டன்(நீலமணிமிடற்றொருவன் _ கலி_142; பரிபாலை, 8,9; புறம்: 55, 56, 57) இவை சிவனைப் பற்றியவை.

முருகன்: கந்தபுராணக் கருத்தில் ஆறுகார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன் _ (முருகு: 25)
திருமால்: பாம்பணையான் (கலி_105, 123; பரி_13) திருமகள் கணவன் _ (பரிபா_3; கலி.104; பரிபா_18;2, பெரும்பாண்: 29)

திருமாலின் 10 அவதாரங்களில் மச்சம், கல்கி இரண்டும் நீங்கலாக 8 அவதாரக் கதைகள் கூறப்பட்டுள்ளன. கூர்மாவதாரம்_பரிபாடல்_3; வராக அவதாரம்_பரி_2,3,4,13; நரசிம்மாவதாரம்_பரி_4. பலராமாவதாரம்_நற்றி_32 புறம்_56, கலி_26, 105; வாமனாவதாரம்_கலி_124; பரி_3, முல்லைப்பாட்டு_1; பெரும்பாண்:29) பரசுராமாவதாரம்_அகம்_220; இராமாவதாரம்_புறம்_328; கிருஷ்ணாவதாரம்_அகம்_39; கலி_103; பரி_3, 134; புறம்_174; 201; மதுரைக்காஞ்சி_558; மேற்கண்ட ஆரியக் கடவுளை வணங்கிய காலம் பொற்காலமா?
பகுதி (4) நுண்ணிய நோக்கில் பெண்ணியக் கருத்துகள்

யாருக்கு யார் உயிர்?

ஆடவர்களுக்கு வினைபுரிதல் உயிர்; ஆனால், ஒளிபொருந்திய நெற்றியையுடைய இல்லத்திலேயே இருக்கும் பெண்டிருக்கு _ ஆடவர்தாம் உயிர்! என்ற பொருளில் அமைந்த சங்கப் பாடல் இது:

வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே! (குறுந்தொகை: 135) இந்தப் பாடல் வழி நாம் அறிவது யாது? ஆடவன் வெளியே சென்று அலுவல் பார்த்தல் வேண்டும். பெண் வீட்டைவிட்டு வெளிச் செல்லாது இல்லத்திலேயே இருத்தல் வேண்டும். அவளுக்கு உயிர் ஆடவன்; அதாவது கணவன்!. இதுதான் சங்ககாலப் பெண்ணின் நிலை! இன்னொரு கருத்து: தன் கணவன் சான்றோர் இகழும்படியாக ஒழுக்கக் கேடனாக இருப்பினும், தகைசான்ற ஒரு பெண் தன் கணவனைப் போற்றிப் புகழ்வதுதான் சால்புடையதாகும் என்னும் பொருள்பட, தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வனை ஏத்தி! _ (பரிபாடல்: 88_89) என்னும் சங்கப் பாடலின் உட்பொருள் எவருக்கும் விளங்காமல் போகாது! சங்ககால மங்கையின் பெருமை இதுதானா? இவ்வன்மை இருந்த காலம் பொன்னான காலமா? பெண்ணடிமைத்தனத்தின் நிலையினை இதிலிருந்து நாம் அறிகிறோம் அல்லவா?

ஒன்று உடன்கட்டை, இன்றேல் தலைமொட்டை:

மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால், மனைவிக்கு இந்த உரிமை கிடையாது! இதைவிட ஒரு கொடுமை: கணவன் இறந்தால் மனைவி அவனோடு சிதையில் படுத்து உயிர்விட வேண்டும். பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு இறந்த கணவன் சிதையில் தீப்பாய்ந்த கொடுமையினைப் புறநானூறு _(216) புகல்கிறது! புகழ்கிறது.

உடன்கட்டை ஏறி உயிர் துறக்காவிட்டால் கணவனை இழந்த மனைவி கொடிய கைம்பெண் (விதவை) ஆகவேண்டும். அதாவது, கைம்மை நோன்பு ஏற்க வேண்டுமாம்!

என்ன கொடுமை! எத்தனைக் கொடுமை!!

கைம்பெண்ணான பெண்ணின் தலையை முழுதும் மழித்து மொட்டைத் தலையாக்குவர். கொய்ம்மொழித் தலையொடு கைம்மையுற _(புறம்: 261:17) கைவளையல்கள் உடைத்து நொறுக்கப்பட்டது. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி (புறம்_250;4) (தொடி_வளையல்).
இச்செயல்களால் அந்தப் பெண்ணின் அழகு குலைக்கப்பட்டது; கலைக்கப்பட்டது. கைம்பெண்டிர் பாயில் படுத்து உறங்கக் கூடாது; பருக்கைக் கற்களில் படுத்துறங்க வேண்டும்; பரல்பெய் பள்ளி பாயின்றி வதியும். வெள்ளரி விதை போன்ற சத்தற்ற நீர்ச்சோறு; எள் துவையல்; புளி சேர்த்துச் சமைத்த வேளைக் கீரை; இவைதான் அவர்கட்குரிய உணவு, உறைவிடம் (புறநானூறு: 246) இந்தச் சங்ககாலம்தான் தங்க காலமாம்!

பகுதி (5) படம் பிடித்துக் காட்டப்படும் பரத்தமை ஒழுக்கம்
இப்படியா பெண்மையை இழிவுப்படுத்துவது?

பரத்தமை ஒழுக்கம் ஒரு தொழிலாகவும், பரத்தையிடம் தங்க, தலைவியை விட்டுப் பிரிதல் ஒரு துறையாகவும், அதுவே தலைவனின் ஒரு பண்பாகவும் இருந்து வந்துள்ளது.

யாரோ? இவர் யாரோ?

பரத்தையர் என்பவர் பொதுமகளிர் எனப்பட்டனர்; வள்ளுவர் இவர்களை வரைவின் மகளிர் எனக் கூறுகிறார். பரத்தையருள், ஒரு தலைவன் மட்டுமே சென்று சிற்றின்பம் நிலையிலுள்ளவர் இல்பரத்தையர் எனப்பட்டனர். (மதுரைக்காஞ்சி: 340, 359, 379, 382) இந்தக் காலத்தில் இவர்கள் சின்னவீடு என்றும் வைப்பாட்டி (Keeper) எனவும் அழைக்கப்படுவர். சேரிப்பரத்தையர் தம்மிடம் இன்பம் துய்க்கவரும் ஆடவரிடமிருந்து செல்வம் பெற்று வாழ்ந்தனர். இவர்கள் கொண்டி மகளிர் எனவும் அழைக்கப்பட்டனர். ஆற்றுநிலப் பகுதிகளில் எல்லாம் பரத்தையர் வாழ்ந்தனர். ஆற்றங்கரை நகரங்களில் அவர்தம் எண்ணிக்கை மிகுதி.

மருதத் திணையின் மதிப்புமிகு உரிப்பொருள்:

மருதத் திணையின் உரிப்பொருளாக உள்ளது. ஊடல் _ ஊடல் நிமித்தம் (வாயில்) தலைவன், தலைவியை நீங்கி பரத்தையிடம் சென்று அவளை நுகர்ந்து வீடு திரும்பும் போக்கினையே காரணமாகக் கொண்டு ஊடுதல் (பிணங்குதல்) தலைவியின் வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இதுபற்றி, கூச்சமோ நாணமோ எவரும் பட்டதாகத் தெரியவில்லை. இச்செய்திகளையே சங்க அகப்பொருள் இலக்கியங்கள் சிறப்பாகவும் பெருமையாகவும் கூறுகின்றன; மாண்புடன் பாடுகின்றன. பெண்ணிழிவும், பெண்ணடிமைத்தனமும் கொடிகட்டிப் பறந்தன.

உள்ளம் கவரும் ஊடற்காட்சிகள்:

பின்வரும் கூற்றுகள் எல்லாம் தலைவியுடையன. கொடியின் இயல்புடைய பரத்தையருடைய புழுகு (புனுகுப்பூனையின் மணப்பொருள்) முதலியவற்றிலே அளைந்த மயிர் முடியினின்றும் உதிர்ந்த பூந்தாதுப்பொடி நின் தோள்பட்டையில் கிடக்க, எம்மைத் தீண்டுதற்கு நீ யார்? திரும்பிப் போய்விடு  (கலித்தொகை: 88)

வலிந்து புகுந்து நெருங்கி கூடுதற்கு வரும் தலைவனிடம், எம் இல்லம் வாராதே! போய்விடு! பரத்தையிடம் இருந்துவந்த நீ என்னைத் தொடாதே!

என்னை மன்னிப்பாயா! மன்னித்து என்னை ஏற்றுக்கொள்! _ என்றான் தலைவன். சினம் தணிந்த அந்தத் தலைவி தலைவனுடன் கூடினாள் (கலி: 90)

ஏய்! என்னை ஏமாற்றாதே!

தலைவன் பொய்கூற, தலைவி கூறுகிறார்: பரத்தை தன் கைவிரல் நகத்தால் காமவெறியில் கீறிய கீறல் வடுவாக உள்ளது! எனக்கா தெரியாது? ஏமாற்றாதே போய்விடு (கலி: 91).
வழிதப்பி வந்துவிட்டாயா? ஏடா, மணம் கமழும் கருங்கூந்தல் பரத்தை இல்லம் செல்கிறாய் நீ! இப்பொழுது வழிதவறி வந்துள்ளாயா? இங்கே வாராதே! அவளிடமே போ! போ!!

மறக்க முடியுமா?

மாட்டிக் கொண்டேன் வசமாக உன்னிடம்! மறக்க முடியுமா மாதரசி உன்னை! அருள்புரிவாய் கருணைக்கடலே! அமிழ்தல்லவோ உன் உடலே!! (கலி:91)

சொல்லடா, வாய் திறந்து!

தலைவனிடம் தலைவி: எப்படி நீ இங்கு வந்தாய்?

தலைவன்: குதிரை ஏறி உன்னிடம் வந்தேன்?

தலைவி: எந்தக் குதிரை அந்தக் குதிரை? பரத்தைக் குதிரையா? அந்தக் குதிரைதான் உன் மார்பில் கீறியதோ? பிறாண்டியதோ? சொல்லடா வாய் திறந்து! (கலி: 96)

இவ்வாறான வேண்டத்தகாத பண்பாட்டுத் தவறான பரத்தமை ஒழுக்கம் பரவிக் கிடந்த சங்ககாலம்தான் பொற்காலமா?
பகுதி (6) பெயர் போன பெருங்குடி மக்கள் கூட்டம்!

பல வகைகள்

ஏழையரும் செல்வர்களும், அரசர்களும், புலவர்களும் குடிப்பழக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டனர். குடிக்கின்ற கள் பலவகைகளாக இருந்தன. தென்னங்கள், பனங்கள் (பெரும்பாணாற்றுப்படை:245) அரிசிக்கள் அல்லது நறும்பிழி, (பெரும்பாண்:275) தேக்கள் தேறல்_(மலைபடுகடாம்:171) மட்டு (பட்டினப்பாலை 894), மகிழ்_(பொருநராற்றுப்படை:84), மகிழ்ப்பழம் (பொருநர்_111), தினைக்கள்_(அகநானூறு:284), மாங்கள்(அகம்:27)

இவையன்றி, யவன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேனாட்டுக் கள்ளும் வழக்கத்தில் இருந்தது. பொன்கலத்தில் ஊற்றி _இளம்பெண்கள் ஊற்றித்தர களிப்புடன் அரசர்கள் உண்பர். (புறநானூறு:24; மதுரைக்காஞ்சி_778)

அவ்வையார் அருந்தியகள்

அவ்வையார் போன்ற பெண்பாற் புலவர்களும் புரவலர்களும் குடிப்பழக்கம் உடையவராக விளங்கினர். சிறிது கள் கிடைத்தால் எமக்குக் கொடுப்பான் அரசன்: நிறையக் கிடைத்தால் நாங்கள் பாடி மகிழ அரசன் மகிழ்ந்து கள் உண்பான் என்ற கருத்தில், சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரிய கள் பெறினே யாம்பாடத் தாம் உவந்து ஈயும் மன்னே! _ (புறநானூறு)

இது அதியமானை அவ்வையார் புகழ்ந்து பாடியது. கள் அருந்துவதில் ஆடவர் _ பெண்டிர் எனப் பாகுபாடற்ற நிலை இருந்திருக்கிறது. இந்த நிலையுள்ள காலம் பொற்காலம் என்பது பொருந்துமா?

பகுதி (7) பகுத்தறிவுக்கு மாறாகப் பரவிக் கிடந்த மூடநம்பிக்கைகள்

குருட்டு நம்பிக்கைகளின் கூடாரம்:

ஒரு சமுதாயம் பகுத்தறிவு மனப்பாங்கோடு, சிந்தித்துச் செயல்பட்டு வாழ்வதுதான் அதற்குச் சிறப்புத் தருவதாகும். சங்ககாலச் சமுதாயம் அப்படிப்பட்டதா? அகம், புறம் அதாவது, காதல்-_மோதல் (போர்) இவற்றினையே அடிப்படையாக, கருப்பொருளாகக் கொண்டது ஆகும். இத்தகு வாழ்வில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, ஏன்? புறம்பாக பழமைக் கண்மூடிப் பழக்கவழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள் கோலோச்சி நின்றன. பெரியாரியல் பார்வையில், சுருங்கக் கூறின், மூடநம்பிக்கைச் சேற்றில் முங்கிக் கிடந்தது. இது உண்மையா? வீண் பழியா? பார்ப்போமே?

கண்ணால் அல்லது பொறிகளால் காணாமலும் அறிவால் ஆய்ந்து பாராமலும், காரணகாரியத் தொடர்பு பற்றிக் கவலைப்படாமல் எதனையும் மடத்தனமாக நம்புவதும், ஏற்றுக்கொள்வதும் மூடநம்பிக்கைகளாகும். சங்ககாலத் தமிழர்கள் பகுத்தறிவுக்கு விடைகொடுத்துவிட்டு மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தனர்.

பேய்கள்-பிசாசுகள்:

பேய்கள் இருப்பதாக சங்ககாலத் தமிழர் நம்பினர். போர்க்களம், சுடுகாடு, பொது மன்றங்கள், மரங்கள் முதலான இடங்களில் வாழ்வதாகவும் _ (பதிற்றுப்பத்து 24, 69) நள்ளிரவில் நடுத்தெருவில் அவை திரிவதாகவும் (புறம்:354; 386) பிணத்தின் புண்ணைத் தோண்டித் தின்னும் என்றும் (புறம்:370); பேய், பூதம் முதலான பெயரால் அவை அமையும் என்றும் அவர்கள் நம்பினர்.
கண்ணுபடப் போகுதய்யா!

கண்ணேறு எனப்படும் நம்பிக்கையுடையவர்களாக அவர்கள் வாழ்ந்தனர். ஒருவர் பார்வை மற்றவர்க்குத் துன்பம் செய்யும் என்றும் நம்பினர்.

மூட்டைமூட்டையாக பிற மூடநம்பிக்கைகள்:

1.    திங்களைப் பாம்பு விழுங்குவதே கிரகணம்;
2.    நாளும் கோளும் நன்மை தீமை செய்யும்;
3.    பாம்புகள் மாணிக்கங்களை உமிழும்.
4.    சகுனம் பார்த்துத்தான் எச்செயலையும் செய்தல் வேண்டும்.
5.    கனவில் காணும் காட்சிகளும் கெட்ட நிமித்தங்கள் ஆகும்.
6.    பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு; (நற்றிணை: 189, 323, அகம் 151.)
7.    காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர்;
8.    இடக்கண் துடித்தால் நன்மை; வலக்கண் துடித்தால் தீமை வரும்.
9.    இம்மை _ மறுமையில் நம்பிக்கை;
10.    குறி கேட்டல்.
11.    தெய்வம் எவர் மீதிலேனும் வெளிப்பட்டுத் தோன்றித்தான் கூற வேண்டியதைக் கூறும்.

இவைபோன்ற, இவற்றிற்கும் மேலான பல மூடநம்பிக்கைகளைச் சங்ககால மக்கள் கொண்டிருந்தனர் என சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் என்று கூறுதல் எப்படிப் பொருந்தும்?

இத்தனையும் இருக்கலாம்!

சங்கத்தமிழர், வீரவாழ்வில் சிறந்து விளங்கியிருக்கலாம்; வெற்றிகள் பல கண்டிருக்கலாம்; வள்ளல்கள் வாரி வாரி வழங்கியிருக்கலாம்; பாவலர்கள் அழகிய, சீரிய பாக்களைப் பாடியிருக்கலாம்; பல நல்ல கருத்துகளை எடுத்துரைத்திருக்கலாம்; களவியல் _கற்பியல் என்னும் அகத்திணை வாழ்வை நடத்தியிருக்கலாம்; எழிற்கலைகளில்(Fine Arts) ஏற்றம் பெற்றிருக்கலாம். முத்தமிழ்த் துறைகளில் கரை கண்டிருக்கலாம்; வணிகத்தால் வளம் பல பெற்றிருக்கலாம்! இவற்றால் இவையிருந்த காலத்தை நாம் பொற்காலம் என்று சொல்லலாமா?

இல்லை என்பது ஏன்?

இத்தனை இருந்தும், பொருளியல் வாழ்வில் வர்க்கபேதம்; சமுதாய வாழ்வில் வர்ணபேதம்; ஆரியத்தின் தாக்கம், பெண்ணடிமைத்தனம்; பரத்தமை ஒழுக்கம், அமைதி தவழாத போர்ப்பண்பு, கரைகாணாத கள் குடி; முற்றிப்போன மூடநம்பிக்கைகள் இவை எல்லாம் வேரூன்றிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் ஆகுமா? அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

Friday 11 October 2024

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)

தொழிலாளர் நலச் சட்டங்கள் - 4

கே.ஜி. சுப்பிரமணியன்

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946

ஒரு தொழிற் துவக்கிய பிறகு முறையாகத் தொழிற்சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட பின் அந்தத் தொழிற்சங்கமானது அதல் தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிலையாணைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்குமிடையே பலப் பிரச்சினைகள், குறிப்பாக வேலை நிபந்தனைகள் பற்றி அடிக்கடி இருதரப்பிலும் தொழில் தகராறுகள் ஏற்படும். அப்படிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கு ஆணை சட்டம் பெரிதும் பயன்படுகிறது. பம்பாய் தொழிற் தகராறுகள் சட்டம் 1938-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பின்னர் 1943, 1944, 1945-ஆம் ஆண்டுகளில் முத்தரப்பு அமைப்பாகிய இந்தியத் தொழிலாளார் மாநாடுகளில் விவாதித்து தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் 1946-ஆம் ஆண்டு நிலையானைகள் சட்டம் இயற்றப்பட்டது.

சட்டத்தின் நோக்கங்கள்

தொழிற்சாலை நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு எடுத் துக் கொள்வதற்குரிய நிபந்தனைக ளைத் தெளிவுபடுத்துவதற்கும் ஏற்க னவே அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் மேற்கண்ட நிபந்தனைகளைத் தெரி யப்படுத்துவதும் இச்சட்டத்தின் நோக்கமாகும்.

2. வேலை நீக்கம், தொழிலாளர்கள் செய்யும் தவறான செயல்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் இவைகள் பற்றிய விளக்கம்.

3.நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் எல்வா தொழிலாளர்களுக்கும் ஒரு மாதிரி வேலை நிலைகளை உருவாக் குதல்

4. நிர்வாகம் தொழியாளர்கள் இருவர்களின் உரிமைகளையும் பொறுப்புக்களையும் விளக்குதல்,

தொழில் நிறுவனம்

1. 1948-ஆம் ஆண்டின் தொழிற் சட்டத்தின் பிரிவு (ளம்) குறிப்பிட்டுள்ள தொழிற் சாலைகள்,

2. 1800-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே சட்டப் பிரிவு 2(4)கீழ் வருகிற இரயில்வே நிறுவனங்கள்

3. பொது மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்.

4 சரங்கங்கள், பாலங்கள், எண்ணெய்க் கிணறுகள்.

5. உள்துறை நீர்வழிப் போக்கு ரத்துக் கழகங்கள்.

6. துறைமுகங்கள், கப்பல் துறைகள், கப்பல் தங்குமிடங்கள்.

7. மலைத் தோட்டங்கள்.

8. கால்வாய்கள், மற்றும் கட்டிடம் கட்டும் நிறுவனங்கள்.

9. மின் உற்பத்தி மற்றும் அதைப் பங்கீடு செய்யும் நிறுவனங்கள்.

10. தொழில் நிறுவன உரிமையாள ரிடம் நிறுவனத்தின் வேலையை முடிப்பதற்குத் தேவையாக வேலை யாட்களை வேலைக்குச் சேர்ந்துக் கொள்ளும் ஒப்பந்தக்காரரின் நிறுவனங்கள்.

11. 1955-ஆம் ஆண்டு சட்டத்தின் பத்திரிகை நிருபர்கள் (லேவை அமைப்பு, நிபந்தனைகள் மற்றும் பல தரப்பட்ட அமைப்புகள்) சட்டம் செயல்படுத்தப்படும் பத்திரிகை நிறு வனங்கள்.

12: 50 பணியாட்களுக்கும் அதற்கு மேலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பீடி மற்றும் சுருட்டுத்தொழில் நிறுவனங்களையம் குறிக்கும்

"வேலையளிப்பவர்"  ஒரு தொழிற்சாலையில் உரிமையாளரா கவோ அல்லது முதலாளியாகவோ இருக்கின்றவரையும் அல்லது அரசு நிறுவனங்களைப் பொருத்தவரையில் அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரையோ அல்லது அப்படி அலுவலர் இல்லாத இடத்தில் அந்தத்துறையின் தொழில் நிறுவனத்தில் உரிமையாளரின் மேற்பார்வைப் பொறுப்பேற்றுள்ள யரையும் குறிக்கும்.

வேலையாள்: 1. ஒரு தொழில் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மேற் பார்வையாளர், எழுத்தர், தொழில் நுட்ப பணியாளர்களும் இச்சட்டத்தின் படி வேவையால் எனப்படுவர் 

2. மாதச் சம்பளம் ரூ.500/- மேல் பெறும் மேற்பார்வையாளர்களும் நிர்வாகிகளும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும், சிவில் சட்ட விதிகளுக்கு உட்பட்ட அரசு இலாக்காக்களிலும் துறைகளிலும் பாதுகாப்புத் துறைகளிலும் இரயில்வே சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டவர்களும் தொழிலாளாகளாக கருதப்படமாட்டார்கள்.

நிலையாணைகள்: தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிபந்தனைகள் பற்றிய விதிகள் தான் நிலையாணைகள் ஆகும். பணி நிபந்தனைகளின் தன்மை கீழ்க்கணடவாறு தெளிவாக்கப்பட்டுள்ளது.

1. தொழிலாளர்களின் வகைகள் நிரந்தரம், தற்காலிகம், வேலை கற்பவர், மாற்றாள் முதலியன

2. வேலைக்காலம் விடுமுறைகள் ஊதிய விகிதங்கள், ஊதியும் வழங்கும் நாட்கள்

3. ஷிட்டு வேலைமுறை

4.வேலைக்கு வருதல், தாமதமாக வருதல்

5. விடுப்பு எடுப்பது நிபந்தனைகள், முறைகள்,

6. ஆலையின் நுழை வாயிலில் வேலைக்குச் செல்லும்போதும் ஆலையிலிருந்து வேலை முடித்து வரும் வழியில் சோதனைகள் செய் தல்,

7. சில பகுதிகளை தற்காலிகமாக நிறுத்துதல், திறத்தல், இவைகள் 'சம்பந்தமாக எழுகின்ற பிரச்சினைகள்.

8. வேலை நீக்கம் - வேலையை விட்டுச் செல்லுதல்

9. தவறான செயல்களுக்கு காரணமான சூழ்நிலை, அதற்கான தண்டனைகள்,

10.தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்குப் பரிகாரம்,

11.அரசால் குறிப்பிடக் கூடிய இதர விசயங்கள்.

தொழிலாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள், அங்கு தொழிற்சங்கம் செயல்பட்டால் அதன் பெயரையும் தெரிவித்து இச்சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாக நிர்வாகம் தனது நிறுவனத்திற்கான நிலையாணைகளை தயாரித்து 5 நகல்களை சான்று அளிக்கும் அதிகாரிக்கு அனுப்பவேண்டும்.

சான்று அளிக்கும் முறை

நிர்வாகத்தினரிடமிருந்து பெற்ற 5 நகல்களில் ஒன்றை, அங்கு தொழிற் சங்கம் செயல்பட்டால் அதற்கு அனுப்பி வைப்பார். சங்கம் இல்லையெனில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நகல் ஒன்றை சான்றளிக்கும் அதிகாரி அனுப்பிவைப்பார். 15 நாட்களுக்குள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். ஏதாவது ஆட்சேபம் இருந்தால் சான்று அளிக்கும் அதிகாரி இருதரப்பினரது கருத்துக்களையும் அறிந்த பின்னர் மாதிரி நிலையாணைகளின் அடிப்படையில் உள்ளதா என அறிந்த பின்னர் தேவையான மாற்றங்களை செய்து நேர்மையான நிபந்தனைகளா மற்றும் நியாயமானதா என்று சீர்தூக்கிப் பார்த்து சான்று அளிப்பார். நிலையாணைகள் சான்றளித்த 7 நாட்களுக்குள் அதன் நகல்களை நிர்வாகம், மற்றும் தொழிற்சங் கங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

மேல் முறையீடு:

இத்தகைய சான்று அளித்ததினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் 30 நாட்க ளுக்குள் மேல்முறையீடு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு அதிகாரி சம்பந்தப்பட்ட அரசுகளினால் நியமிக்கப்படலாம். மேல் முறையீடு அதிகாரியின் முடிவு இறுதியானது. அவர் சான்றளிக்கும் அதிகாரியின் உத்தரவை உறு திப்படுத்தியோ அல்லது மாற்றங்கள் செய்தோ உத்தரவு இடுவார். இந்த உத்தரவு செய்த 7 நாட்களுக்குள் சான்று வழங்கும் அதிகாரிக்கும் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் மேல் முறையீடு அதிகாரி அனுப்பி வைப்பார்.

மேல் முறையீடு செய்யப்படாவிடில் சான்று அளிக்கும் அதிகாரிகள் உத்தரவு கிடைத்த 30 நாட்கள் முடிவடைந்த பிறகு சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கும். மேல் முறையீட்டு அதிகாரியின் உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குப் பிறகு அல்லது உத்தரவின் படி செயல்படத் தொடங்கும்.

சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் நகலை யாரும் நகல் பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு அதிகாரியிடமிருந்து பெறலாம்.

நிலையாணைகளில் மாற்றம் செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கை

சான்று அளிக்கும் அலுவலர் சான்ற ளித்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பின் நிறுவனமோ அல்லது தொழிற் சங்கமோ அல்லது ஒரு தொழிலாளியோ மேற்கண்ட சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளில் மாற்றம் செய்ய விரும்பினால், சான்றளிக்கும் அலுவலருக்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு. சான்றளிக்கும் அலுவலர் ஏற்கனவே முறையாக என்னென்ன நடைமுறைகளை கடைப்பிடித்தாரோ அதே முறைகளைக் கடைப்பிடித்து நிலையாணைகளை மாறுதல் செய்யும் நடவடிக்கையில் செயல்படுவார். சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

நிலையாணைகளை நடைமுறைப் படுத்துவதில் நிறுவனத்தினருக்கோ அல்லது தொழிலாளருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். நீதிமன்றம் இரு தரப்பினரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும். இந்தத் தீர்ப்பு இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும்.

நிர்வாகத்தின் கடமை: நிலையா ணைகளை ஆங்கிலத்திலும் பெரும் பாலான தொழிலாளர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலும் நன்கு தெரியும்படி விளம்பரப் பலகையில் எழுதி அனைத்துத் தொழிலாளர்களும் நுழையும் இடத்தில் நிறுவனத்தினுள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

சான்றளிக்கும் அலுவலர்கள்: சென் னையில் தொழிலாளர் நலத் துணை ஆணையர்கள் 1ஆவது வட்டம் மற்றும் 2-ஆவது வட்டமும், தொழிலாளர் நல துணை ஆணையாளர் திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் பணிபுரிபவர்கள் தொழிற்சங்கப் பதிவாளராகவும் சான்றளிப்பவர்களாகவும் இயங்கி வருகின்றனர்.

தண்டனைகள்: ஒரு நிறுவனமானது' நிலை ஆணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றளிக்கும் அதிகாரிக்கு அனுப்பி சான்றினைப் பெறாவிட்டாலும், சான்று பெற்ற நிலையாணைகளை குறிப்பிட்டபடி விளம்பரப்படுத்தாமல் இருந்தாலும், சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலும் அதிகபட்ச தண்டனையாக ரூ.5000/- அய்யாயிரம் வரை அபராதமாக நிர்வாகத்தினர் மேல் விதிக்கலாம்.

- உண்மை இதழ் 16-30-6-1998

Wednesday 9 October 2024

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில…

 

டிசம்பர் 01-15

 

1.    1944 – திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என அண்ணாவின் பாராட்டு.

2.    1950 – இளம் பேச்சாளி பொதுமக்கள் பாராட்டு.

3.    1969 – குருவுக்கேற்ற சீடர்தான் வீரமணி என்ற தந்தை பெரியார் பாராட்டு.

4.    1993 – நாகையில் திராவிடர் பெண்கள் மாநாட்டில் இனமானப் போராளி பட்டம் அளிக்கப்பட்டது.

5.    1996 – தந்தை பெரியார் சமூக நீதி விருது தமிழக அரசு (ஜெ.ஜெயலலிதா) வழங்கியது.

6.    2000 – புதுதில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் பாரத் ஜோதி விருது வழங்கியது.

7.    2003 – மியான்மரில் பேரளிவாளர் விருது வழங்கியது.

8.    2003 – ஆக்சுபோர்டு தமிழ்ச் சங்கம், ஆக்சுபோர்டு தமிழ் விருது வழங்கி பாராட்டியது.

9.    2010 – விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் பெரியார் ஒளி விருது.

10.    2010 – கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது அளிக்கப்பட்டது.

11.    2011 – ஆந்திர மாநிலத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது வழங்கப்பட்டது.

12.    சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் சமூகத் துறையில் தொண்டாற்றியமைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

13.    2003 – காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

14.    மலேசிய திராவிடர் கழகம் கருத்துக்கனல் என்ற பட்டத்தை வழங்கியது.

15.    2009 – சென்னையில் முரசொலி அறக்கட்டளை 2008ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருதினை வழங்கியது.

16.    2009 – காஞ்சியில் தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.


சோறு போடாத சூரிய நமஸ்காரம் (சின்னஞ்சிறு கதை)

சின்னஞ்சிறு கதை

சோறு போடாத சூரிய நமஸ்காரம்

- செ. ர . பார்த்தசாரதி

சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருந்தார். இந்த தள்ளாத வயதிலும் சுவாமிநாதய்யர்.

"தாத்தா! தாத்தா!" என்று கூவிக் கொண்டு பேரன் அறிவொளி வந்தான்.

'சற்று பொறு'-என்று கையாலேயே சைகை காட்டிவிட்டு, விஞ்ஞானம் தந்த கண்ணாடியை மாட்டிக் கொண்டு சுலோகங்களை பார்த்துப் படித்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

அய்ந்து நிமிடம் காத்திருந்த அறி வொளிக்கு ஆத்திரம் வரவில்லை; சிரிப்புதான் வந்தது. இப்படி சில ஜென்மங்களும் இருக்கின்றனவே என்று.

சுயம்பிரகாசம் என்று அவனுக்கு தாத்தா இட்ட பெயரை; பகுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து அறிவொளி என்று பெயரை மாற்றிக் கொண்டான்.

சூரிய நமஸ்காரம் முடிந்தது

"என்ன அவசரம்? ஏன் இப்படிக் கத்தினே? சூரிய நமஸ்காரம் செய்யும்போது என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?" கோபித்தார்.

''பெரிய சூரிய நமஸ்காரம் ! பொழுது விடிஞ்சா இதே பூசைகள் தான் செய்ய நேரம் சரியா இருக்கு; இப்படியே போனா நாடு உருபட்டாபோலதான் வேலை எப்ப செய்யறது? எப்படி பணம் சம்பாதிக்கிறது?"

"உனக்கு பணம்தான் பெரிசு. எனக்குக் கடவுள்தான் பெரிசு. ஆசாரமான குடும்பத்தில பிறந்திட்டுக் கடவுளே இல்லேங்கிற உனக்கு இதெல்லாம் புரியாது..."

"உங்க கடவுளை தூக்கி குப்பையிலே போடு, மாநகராட்சி குப்பைத் தொட்டியிலே பார்த்து போடு; அதுதான் இப்ப நல்லா நாறுது. பணம் வேண்டா; கடவுளிடம்தான் போக வேண்டுமானால்; அஞ்சா நெஞ்சன் அழகிரி சொன்னதுபோல நாலணா எலி பாஷாணத்தை தின்னுட்டு போகவேண்டியது தானே!"

"டேய், டேய் போதும்டா ! நிறுத்துடா உன் யோசனையை ! வந்ததை சொல்லு"

"இதோ பார் தாத்தா, புது மாதிரி கணிப்பி (கால்குலேட்டர்] இதை வாங்கித் தாங்க நாத்தா!'

"முதல்ல டேப்ரிக்கார்டர் வேணும்னே. வாங்கிக் கொடுத்தேன் அதற்கு மாதா மாதம் நாலு டேப்பு வாங்கி தரச்சொன்னாய். இப்ப கணிப்பி கேட்கிறாய். அப்புறம் பாட்டரி வேணும்பே!"

"அதெல்லாம் வாங்க வேண்டாம். தாத்தா !"

"வேற எப்படி இது வேலை செய்யும்?"

"பாட்டரி இல்லாமல் சூரிய வெளிச்சமோ, வேற விளக்கு வெளிச்சமோ பட்டாப் போதும், அந்த ஒளியை கிரகித்து சக்தியாக மாற்றி வேலை செய்யும்" மேலும் இதே போல் கார், மோட்டார்கூட ஓடுது. இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியப் போகிறது? இதெல்லாம் புது கண்டுபிடிப்பு தாத்தா!"

"அட போடா எல்லாம் பழைய கண்டு பிடிப்புத்தாண்டா. உயிரே இல்லாத அஃறிணைப் பொருள்களெல்லாம் சூரிய சக்தியைக் கொண்டு இயங்க முடியுங்கிற!"

"ஆமா!" என்றான் அழுத்தம் திருத்தமாக.

"அப்ப ஏன். உயிர் உள்ள - ஆறறிவு படைத்த மனிதனும் சூரிய நமஸ்காரம் பண்ணிச் சக்தியைப் பெறமுடியாது!"

அறிவொளி யோசித்தான்.

"பழைய மெஞ்ஞானம் தாண்டா இப்ப, விஞ்ஞானம்கிற பேராலே வளருது !"

"அப்பநீங்க ஒண்ணுபண்ணுங்க தாத்தா கணிப்பி, கார், மோட்டார் போன்றதற்கு எரிபொருள் சூரிய சக்தி பயன்படுவதுபோல்; நீங்களும் சாப்பிடாமல் சூரிய நமஸ்காரம் செய்யுங்க மெய்ஞானம் எப்படினு தெரிஞ்சுக்கிறேன்"

தாத்தா விழித்தார்!

- உண்மை இதழில் வெளிவந்த எனது சின்னஞ் சிறுகதை


Monday 7 October 2024

பார்ப்பான் பிச்சைக்காரன்!

"பழைய நாளில் பிராமணன் தான் பிச்சை எடுப்பான், மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்."
"பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு" என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது. பிராமண சந்நியாசிகள் அன்று பிச்சை வாங்குவார்கள். பிராம்மணர்கள் உஞ்சி விருத்தி செய்வார்கள். மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. ஏதாவது வேலை செய்து விட்டு, அதைக் கூலியாகக் பெற்றுக் கொள்கிறேன் என்பார்கள். இப்பொழுது இவன் செய்கின்ற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். (காஞ்சி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள், முதற் பகுதி - கலைமகள் - 1957-1958, பக்கம் 28)
- 8.10.19 எனது முகநூல் பக்கம்

Saturday 28 September 2024

காமராசரை கொலை செய்ய முயன்ற ஆர் எஸ் எஸ் கும்பல்!



07.11.1966ல் காமராசர் டில்லியில் தங்கி இருந்தபோது ஆர் எஸ் எஸ், சங் பரிவார், சாமியார் கும்பல் அவர் வீட்டை தீயிட்டு கொளுத்தி கொலை செய்ய முயற்சி செய்தது. அது குறித்த செய்திகள் வருமாறு ...

கலவரம் நடந்த நாளில் காமராசருடன் இருந்தவர் தரும் தகவல்:

"பார்லிமெண்டிலிருந்து வழக்கம்போல் இடைவேளை யின்போது காமராஜ் அவர்களின் இல்லமான ஜந்தர் மந்தர் ரோடு நாலாம் எண் பங்களாவிற்கு வந்தேன். பார்லிமெண்ட் வீதியிலிருந்து ஒரு பர்லாங் தூரமே காமராஜ் இல்லம். மணி ஒன்றரை இருக்கும். இந்தச் சமயத்தில்தான் காமராஜ் அவர்களைச் சாவகாசமாகப் பார்க்கவும் பேசவும் முடியும்.

பார்லிமெண்டுக்கு முன்புறம் பெருத்த கூட்டம் கோஷங்கள் செய்து கொண்டிருந்தது. சமீப காலத்தில் இது சாதாரண நிகழ்ச்சியாகி விட்ட விஷயம். (சென்ற பார்லிமெண்ட் கூட்டத்தின்போது ஊர்வலம் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம்.)

"ஏக ரகளையாமே!"

காமராஜ் அவர்களுடன் பகலுணவு அருந்தி விட்டுச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஓய்வெடுக்கச் சென்றதும், என் மனைவிக்குப் போன் செய்தேன். அவள்தான் எனக்கு முதலில் செய்தி தெரிவித்தாள். "பார்லிமெண்ட் வீதியில் ஏக ரகளையாமே. பி.டி.அய். ஆபீஸ், ஆகாஷ் வாணி பவன் எல்லாவற்றிலுமே நெருப்பு வைத்து விட்டார்களாம்," என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே வீட்டு வாசலில் ஒரு சிறு கூட்டம் தென்பட்டது. உடனே என் மனைவியிடம், "ரகளை இங்கேயே ணவந்துவிட்டது போலிருக்கிறது," என்று போனில் கூறிவிட்டு வெளியே வந்தேன்.

ஓவென்று இரைச்சலுடன் கூட்டம் உள்ளேவர முயல, காமராஜரின் உதவியாள் நிரஞ்சன்லாலும், சேவகர் பகதூர்சிங்கும் அவர்களை எதிர்த்தனர். வெறிகொண்ட கூட்டத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.கூட்டம் உள்ளே புகுந்துவிட்டது.

நான் போலீஸுக்குப் போன் செய்தேன். அதே சமயத்தில் பார்லிமெண்ட் வீதியில் துப்பாக்கிப் பிரயோகம். ஆகவே போலீஸ் போன் கிடைக்கவில்லை.

நிரஞ்சனின் எதிர்ப்பு

காம்பவுண்ட் கதவைத் தாண்டி வந்த கூட்டத்தைத் தனியாளாக நிரஞ்சன் எதிர்க்க, பகதூர்சிங் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார். கூட்டம் கற்களை வீச,பதிலுக்கு நிரஞ்சனும் கற்களை வீசினார். துப்பாக்கியில் ரவை தீர்ந்துவிட்டது. நிரஞ்சனுக்கும் நல்ல அடிப்பட்டுவிட்டது. பார்லிமெண்ட் வீதியிலிருந்து ஓடி வந்த கூட்டம் இங்கே சேர்ந்து கொண்டது.

பகதூர்சிங் வேறு வழியின்றி முன் அறையில் புகுந்து தாளிட்டுக் கொண்டார்.

காமராஜ் அவர்களுக்கு நான் விஷயத்தைச் சொல்லி நிரஞ்சனுடன் உள் அறை ஒன்றில் தாளிட்டுக்கொண்டோம்.

கூட்டம் வீட்டின் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது. கற்கள் சரமாரியாகப் பொழிந்தன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. உள்பக்கம் வலைக் கதவுகள் இருந்ததால் கற்கள் உள்ளே வரவில்லை.

இப்படி ஓர் ஆபத்தான நிலையில் இருப்பதை வெளியில் தெரிவித்து உதவிக்கு வழிதேடக்கூட முடியாத இக்கட்டான நிலை.

வெளியில் ஒரே கூச்சல், வாக்குவாதம் ஏதோ எரிவது போன்ற நாற்றம். அம்பியின் குரல் கேட்டது.

அம்பி (எனும் வரதராஜன்) காமராஜரின் உதவியாள். சமையல் முதல் எல்லாக் காரியங்களையும் கவனித்துக் கொள்ளும் இளைஞர். மெட்ரிக்குலேஷன் பாஸ் செய்துள்ள அம்பி கூறுவதைக் கேளுங்கள்

"என்ன விஷயம்" என்று பார்க்கச் சமையலறையிலிருந்து வந்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. வரவேற்பு அறையில் ஒரே அமர்க்களம். " காமராஜ் எங்கே?" என்று என்னைக் கேட்டார்கள். "வீட்டில் இல்லை” என்றேன். "சுடும்படி நீதானே சொன்னாய்? என்று கூறி என்னை அடித்தார்கள். நானோ நோஞ்சான். ஆனால் இந்தச் சமயத்தில் அடிக்குப் பயந்தால் பிரயோஜனம் இல்லை என்று நானும் பதிலுக்குக் கொடுத்தேன். ரௌடிகள் என்னைப் பிடித்துக்கொண்டார்கள். தலை, முகம், மூக்கு, தோள் என்று பார்க்காமல் ‘பொட்' ‘பொட்' டென்று அடிகள் போட்டனர். ரத்தம் வழிந்தது.

"கொன்றுவிடுங்கள்!"

ஒரு வெறியன் பெட்ரோல் தோய்த்த துணியை என் மேல் போட்டான். யாரோ நெருப்பு வைக்க வந்தார்கள். சடசடவென்று சட்டை, பனியனைக் கழற்றி எறிந்தேன்.

நான் வயிற்று வலிக்காகப் பல ஆபரேஷன்கள் செய்து கொண்டிருக் கிறேன். அந்த ஆபரேஷன் தழும்புகளைக் காட்டி, "ஏற்கனவே நான் அரை உயிர் ஆசாமி, என்னைக் கொல்வதானால் முழுதாகக் கொன்றுவிடுங்கள். தலைவர் வீட்டில் இல்லை. தயவு செய்து நம்புங்கள்!" என்று கத்தினேன்.

பேட்ரோல் டின்னுடன் ஒருவன் வந்தான். ஆனால் வேறு ஒருத்தன் அவனைத் தடுத்தான். விழுந்த அடிகளும் கிலியும் என்னை மயக்கமடையச் செய்தன."

ரங்கராஜன் மேலே கூறுகிறார்

உள்ளே நுழைந்த வெறியர்கள், கொளுத்தல் படலத்தைத் துவங்கினார்கள். ஏர்கண்டிஷன் கருவி உடைபடுவதையும் பல பொருள்கள் எரிவதையும் அறிந்தேன்.

காமராசர் என்னிடம், "வெளியே போய் அவர்களுக்குச் சமாதானம் கூறுகிறேன்!" என்றார். நான் "கூடவே கூடாது. வெறி பிடித்த நேரத்தில் நிதானத்துடன் கேட்க மாட்டார்கள்," என்று தடுத்தேன்.

வீட்டிலிருந்து எழுந்த புகை, பின்னால் இருந்த அய்ந்து அடுக்கு வித்தல்பாய் ஹவுஸில் இருந்தவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. அவர்கள் போலீஸுக்கு விஷயம் தெரிவிக்க, ஒரு பெரிய படை வந்தது. போராட்டக் காரர்களை விரட்டி அடித்தது.
வெளியே வந்த காமராசர் சரசரவென்று காரியத்தில் இறங்கினார். எரியும் பொருள்களின் மீது மணலை அள்ளி வீசினார். அந்த நேரத்திலும் அவரது கடமையுணர்வு என்னைச் சிலிர்க்கச் செய்தது. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் பின் பங்களாவுக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டார்.

எத்தனையோ பெரிய கலவரங்களை நான் பார்த்துள்ளேன். எத்தனையோ கலகங்களுக்கு மத்தியிலே அகப்பட்டுக் கொண்டிருக் கிறேன். அப்போதெல்லாம் கலவரமடையாத நான் அன்று அந்த அறையில் காமராசர் அவர்களுடன் இருந்தபோது கலங்கிப் போனேன்.

ஒரு பெரும் தலைவரின் உயிர் அல்லவா அப்போது ஆபத்தில் இருந்தது.

''குமுதம்' 1-12-66 இதழில் புதுடில்லியில் உள்ள 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிருபர் திரு. ரெங்கராஜன் எழுதியது)

-திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய "காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.